முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொருளாதாரக் கட்டுரைகள் » பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு
பொருளாதாரக் கட்டுரைகள் - பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு
முன்னேறிய வகுப்புகளுக்கு பொருளாதார அடிப்படையில் 14 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் பிரச்சினை இப்பொழுது மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இப் பிரச்சினை எழுப்பப்பட்ட விதம் அலாதியானது.
இவ்வாண்டின் பிற்பகுதியில் ராஜஸ்தான் உள்பட 4 வடமாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. ராஜஸ்தானில் - முன்னேறிய வகுப்பினர் தங்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்று கோரி கிளர்ச்சி செய்து வருகிறார்கள். அதையொட்டி ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் திடீரென முன்னேறிய வகுப்புகளுக்கு பொருளாதார அடிப்படையில் 14 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்தார். எனினும் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இப்புதிய முறையை செயல்படுத்துவது இயலக்கூடியது அல்ல.
தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் இப்புதிய இடஒதுக்கீட்டு முறையை அரசியல் ஆயுதமாக ராஜஸ்தான் முதல்வர் பிரயோகித்த போதிலும், அதைக் கண்டு பாஜக தளர்ந்துவிடவில்லை. இக்கோரிக்கைக்கு உடனடியாக ஆதரவு தெரிவித்ததுடன் இதற்காக தேசிய அளவில் கமிஷன் ஒன்றை நிறுவுவது என்றும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எனினும் இது சம்பந்தமான சட்டப் பிரச்சினைகள் குறித்து அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை நாடிப் பெற்ற பிறகு இதில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு வேடிக்கை கலந்திருக்கிறது. இடஒதுக்கீட்டு முறைக்காக அரசியல் சட்டத்தில் முதன்முதலாக திருத்தம் செய்வதற்கு முன்னின்று வழிகாட்டியதே தமிழகம் தான். 1950-ம் ஆண்டில் - அப்போதைய தமிழகம் உள்ளிட்ட கூட்டு சென்னை மாகாணத்தில் பிற்பட்ட வகுப்புகளுக்கென இடஒதுக்கீடு செய்யும் முறையை எதிர்த்து அது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று உயர் வகுப்புகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில், இந்த ஒதுக்கீடு முறையே செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. அதையொட்டி வகுப்புவாரி உரிமைக்காக பெரிய கிளர்ச்சி பரவலாக தமிழகத்தில் நடைபெற்றதையடுத்து, பிற்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு வகை செய்ய 1951-ல் அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவில் ஒரு புதிய ஷரத்தே இணைக்கப்பட்டது. இப் பிரச்சினையில் பிரதமர் நேருஜியே முன்னின்று வழிகாட்டினார்.
இதையடுத்து, வி.பி. சிங் ஆட்சியில், பிற்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு செய்வதற்காக மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டன. அதை எதிர்த்து வடபுலத்தில் உயர் வகுப்புகள் சார்பில் காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் பெரிய கிளர்ச்சியை நடத்தினர். இத்தகைய ஒதுக்கீடு முறையே சுமுதாயத்தை சின்னாபின்னப்படுத்திவிடுமென்ற காரணம் கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது முன்னேறிய வகுப்புகளுக்காக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்ப அதற்கு பாஜக ஆதரவு காட்டுகிறது.
இப் புதிய திட்டம் அவசியமானதே. ஏனெனில் முன்னேறிய வகுப்பினருக்கிடையே எவ்வளவோ ஏழைகள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களால் அதே வகுப்புகளைச் சேர்ந்த செல்வக் குடும்பங்களுடன் போட்டியிட முடியாது.
சமூகரீதியாகவும் கல்வி அடிப்படையிலும் முன்னேறிய வகுப்பாக இருந்தபோதிலும் சமூக நீதி பெறுவதற்கு இவர்களுக்கு ஏழ்மை தடையாக இருப்பதைப் போக்குவதற்கு இப் புதிய ஒதுக்கீடு முறை அவசியமாகிறது. இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, மிகவும் பிற்பட்டோர் இயக்கத் தலைவரான டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இப்புதிய திட்டம் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கு சமூக நீதி வழங்குவது அந்தளவில் வரவேற்புக்குரியதே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - பொருளாதாரக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - முன்னேறிய, அரசியல், ஒதுக்கீடு, வகுப்புகளுக்கு, முறையை, இடஒதுக்கீடு, பாஜக, ஆதரவு, பிற்பட்ட, இதில், காங்கிரஸ், பொருளாதார, அடிப்படையில், ராஜஸ்தான், இப்புதிய