முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பாஜகவுக்கு படிப்பினை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பாஜகவுக்கு படிப்பினை
மக்களவையில் வாஜ்பேயி அரசினால் அவசரக் கோலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுவதைத் தடுப்பு மசோதா - கூட்டணியின் பலவீனத்தை மட்டுமன்றி நேசக்கட்சிகளின் கருத்துத் துணிவையும் வெளிப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக இம் மசோதாவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
முதலில் சமய உணர்வுடன் சம்பந்தப்பட்ட இத்தகைய மசோதாவை - கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் முன்கூட்டியே கலந்து பேசாமல் தலைதெறிக்கும் வேகத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அடுத்த மூன்று மாதத்திற்குள் 5 மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில், இந்துக்களின் பரிவை ஈர்ப்பதற்காகவே இந்த அவசர மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதாக இடதுசாரிகள் கூறும் புகாரை மத்திய அரசினால் மறுப்பது சிரமமே. அறநெறி அடிப்படையில் பசுவதைத் தடுப்பு உயர்ந்த கொள்கையாக இருக்கலாம். ஆனால் அதற்காக, தார்மிகக் கருத்துகளையெல்லாம் ஒரேவீச்சில் சட்டமாக்கிவிட முயல்வது நடைமுறைக்கு உகந்ததுதானா?
சங்கப் பரிவாரங்களின் உயிர்மூச்சு போன்ற பிரச்சினை - பசுவதைத் தடுப்பு. அதோடு பாஜகவிலுள்ள பலரும் உணர்வுபூர்வமாக இப் பிரச்சினையில் பிடிப்பு கொண்டவர்களே. 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்காகப் பிரசாரம் செய்யவும் வாக்குகளைத் திரட்டவும் சங்கப் பரிவாரங்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் வாஜ்பேயி அரசு, கூட்டணியில் இடம்பெற்றுள்ள நேசக்கட்சிகளைக்கூட கலந்துகொள்ளாமல் இம் மசோதாவைத் திடீரென மக்களவையில் கொண்டு வந்தது.
பிரதான கட்சியான காங்கிரசோ இப்பிரச்சினையில் திரிசங்கு நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்கள் சிலவற்றில் ஏற்கெனவே பசுவதைத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் கொள்கை அடிப்படையில் இம் மசோதாவை எதிர்க்க வழியில்லை. ஆகவே, பசுவதைத் தடுப்பு என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
அரசியல் சட்டத்தைத் திருத்தாமல் இதில் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. அப்படியிருக்க இந்த மசோதாவே அர்த்தமற்றது என்று காங்கிரஸ் சாமர்த்தியமாக சமாதானம் கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடத்துகிற கேரளம், இடதுசாரிகளின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் கணிசமான மக்கள் மாட்டு இறைச்சி உண்பவர்கள். உணவுப் பழக்கவழக்கங்களைச் சட்டத்தின் மூலம் ஒரேயடியாக மாற்ற முடியுமா - என்று எதிர்க்கட்சிகளின் ஒரு சாரார் கேள்வி எழுப்புவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும் இம் மசோதாவுக்கு மக்களவையில் பலத்த எதிர்ப்பு வந்திருப்பது - வாஜ்பேயி அரசின் கூட்டணிக் கட்சிகளிடமிருந்துதான்.
தென்னகக் கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க போன்றவை இந்த எதிர்ப்பில் முன்னணி இடத்தை வகித்தன. இந்த மசோதாவே சிறுபான்மையினருக்கு எதிரானது. சமுதாயத்தில் ஒரு பிரிவினரின் உரிமைகளை மறுப்பது. எனவே இதைச் சபையில் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது என்று இக்கட்சிகளைச் சேர்ந்தவர்களில் சில எம்.பிக்கள் முழக்கமும் எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் காங்கிரசோ இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே மௌனத்தைக் கடைப்பிடித்திருக்கிறது.
தென்னகக் கட்சிகள் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைத் திட்டத்தில் இடம்பெறாத ஒரு பிரச்சினை மீது எதற்காக இப்பொழுது சட்டம்? என்பதே அக் கேள்வி. அதையும்விட இது பாஜகவுக்கு ஒரு நல்ல படிப்பினை. எந்த நடவடிக்கையானாலும் - நேசக்கட்சிகள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் என்று பாஜக கருதுமானால், அந்தக் கணிப்பு எவ்வளவு தவறானது என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாஜகவுக்கு படிப்பினை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பசுவதைத், கொண்டு, தடுப்பு, அரசு, காங்கிரஸ், மசோதாவே, வாஜ்பேயி, மக்களவையில், மத்திய