முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » புதிய பாதையா? புதிய பாணியா?
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - புதிய பாதையா? புதிய பாணியா?
- எம். ராஜன்
தில்லி செங்கோட்டையில் பிரதமர் வாஜ்பேயி நிகழ்த்தியுள்ள சுதந்திர தினச் சிறப்புரை பல அம்சங்களிலும் எடுப்பானது. முதலில் தேர்தல்கள் நெருங்கியுள்ள சூழ்நிலையில், பாஜக தலைவரைப் போலவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரைப் போலவோ இந்த உரையை வாஜ்பேயி ஆற்றவில்லை. மாறாக, அரசியலுக்கு அப்பாற்பட்ட பரந்த மனோபாவம் கொண்ட பழுத்த தேசியத் தலைவர் போன்ற முத்திரை இந்த உரையில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
அமைதியை நோக்கிப் பயணம் செய்ய, இந்தியாவுடன் கைகோர்த்தபடி முன்னேறிச் செல்ல முன் வருமாறு பாகிஸ்தானுக்கு இதமான அழைப்பை நமது பிரதமர் விடுத்திருக்கிறார். அதே சமயத்தில், இத்தகைய அழைப்பை இந்தியாவின் பலவீனமாகத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கத் தயங்கவில்லை. இந்த உரையே அரசியல் மேதாவிலாசத்தின் அனுபவ முதிர்ச்சியின் வார்ப்படம் போல அமைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியாவின் பன்முகக் கலாசாரத்தையும் அதைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியபோது நம்ப முடியாத ஆச்சரியம் தலைதூக்கியது. பாரத சமுதாயத்தை - மதம், சாதி, வகுப்பு அடிப்படையில் பிரிக்க விரும்புகிறவர்கள் நாட்டுக்கே கேடு செய்பவர்கள் என்று எச்சரித்ததுடன் அவர் நிற்கவில்லை.
இந்தியா பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. அப்படியிருக்க, சமய அடிப்படையில் பாகுபாடுகளைக் காட்டுவது - பாரதத்தின் கலாசாரத்துக்கு மட்டுமன்றி, அதன் இயல்புக்கே மாறானதும் கூட என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். அடுத்த மூன்று மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நெருங்கியுள்ள சமயத்தில் இத்தகைய சமய சமரசப் பாணியில் பிரதமர் பேசியிருப்பது சங்கப் பரிவாரங்களுக்கு வியப்புடன் எரிச்சலையும்கூட ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் பிரதமர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
சங்கக் கலாசாரத்தில் ஊறி வளர்ந்த பின்னணி வாடை எதுவும் அவருடைய உரையில் தென்படவில்லை. இதேபாணி தொய்வில்லாமல் கிடைக்குமா என்பது வேறு விஷயம். ஆயினும் சுதந்திர தினம் போன்ற தருணங்களில் முழுக்க முழுக்க தேசியப் பார்வையுடன் நடந்துகாட்டவேண்டும் என்ற எண்ணமே பாராட்டப்படவேண்டிய ஒன்று. இத்தகைய மனப்பக்குவம் பெற்ற இன்னொரு தலைவரை, பாஜகவில் பார்ப்பது அரிது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரான் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில், பாரதத்தின் சமயச் சார்பற்ற நெறியை சித்திரித்துக் காட்டிய அதேபாணியை - அதே வாசகத்தை சுதந்திர தின உரையில் வாஜ்பேயி அனுசரித்திருக்கிறார். இதற்கு, கருத்துரிமைத் துணிச்சல் அத்தியாவசியம். இந்தியாவின் மதச்சார்பற்ற கோட்பாடு, அதன் பாரம்பரியத்தில் எடுப்பாக நிற்பது. இந்தியர்கள் எந்த மதத்தையும் அன்னியமாகக் கருதுவதில்லை என்று ஈரான் நாடாளுமன்ற உரையில் விளக்கி, மத்திய கிழக்கு நாடுகளின் பாராட்டை வாஜ்பேயி பெற்ற சம்பவம் நினைவு கூரத்தக்கது.
சென்ற ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடி பாணி இந்துத்துவா அரசியலை அரங்கேற்றி மாபெரும் வெற்றிகண்ட பாஜக, அதேபாணியை சங்கப் பரிவாரங்களின் ஒத்துழைப்புடன் இமாசலப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியதில் தோல்வியைத் தழுவியது. அந்தப் படிப்பினை மறக்கக்கூடியதல்ல. வெகு விரைவில் தேர்தல்களைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் முக்கியமானவை மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மூன்றும். அவற்றின் அரசியல் நிலவரம் குஜராத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. இம்மூன்றிலும் காங்கிரஸ் அமைப்பு பலத்தோடு அதிகார பலத்தையும் கொண்டிருக்கிறது என்பதை மறப்பதற்கில்லை. அப்படிப் பார்க்கும்போது வாஜ்பேயியின் இதமான புதிய பாணி வரவிருக்கும் தேர்தல்களில் அரங்கேற்றி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. எனவே, வாஜ்பேயியின் தில்லி செங்கோட்டை உரை, அவர் தேர்ந்தெடுத்துள்ள புதிய பாதையா அல்லது புதிய பாணியா? இக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதிய பாதையா? புதிய பாணியா? - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பிரதமர், உரையில், வாஜ்பேயி, இத்தகைய, இந்தியாவின், சுதந்திர, தில்லி