முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » உலகில் இன்று ஒரே முகாம்!
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - உலகில் இன்று ஒரே முகாம்!
- எஸ்.வி. ராஜதுரை
இராக்கிற்கு இந்தியத் துருப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்காவிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளதாக அறிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பேயி. வளர்ச்சியடைந்த எட்டு நாடுகளின் (ஜி-8) தலைவர்கள், பன்னிரண்டு வளரும் நாடுகளில் தலைவர்களுடன் பிரான்சில் நடத்திய உரையாடலுக்குப் பிறகு ஜூன் 2 அன்று பத்திரிகையாளர்களிடம் அவர் பேசினார். இராக் மீது படையெடுத்த அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் அடங்கிய முகாம்; அந்தப் படையெடுப்பை எதிர்த்த நாடுகள் அடங்கிய முகாம் ஆகிய இரண்டு முகாம்கள் இருப்பதாகவும் இந்தியா இந்த இரண்டு முகாம்களுடனும் சேர்ந்து நிற்பதாகவும் கூறினார். இந்தியாவின் கூட்டுசாராக் கொள்கையை இத்தகைய உச்சக் கட்டத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறார் நமது பிரதமர்!
உண்மையில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின் ஒடுங்கிப் போய்விட்ட இராக், ஈனக் குரலுடன் எதிர்ப்புக் காட்டிய ஒரு சில வலுவற்ற நாடுகள் ஆகியவற்றை விலக்கி வைத்துப் பார்த்தோமேயானால் உலகில் இரண்டு முகாம்களல்ல, ஒரே முகாம்தான் உள்ளது என்பது விளங்கும். இதைத் தெளிவுபடுத்திவிட்டது ஐ.நா. பாதுகாப்பு சபை. 1991-ம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பின் பொருளாதாரத் தடை மூலம் இராக் மக்கள் மீது சொல்லொணாத் துன்பங்கள் பன்னிரண்டு ஆண்டுகளாக இழைக்கப்பட்டு வந்தன. இப்போது அந்தப் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டுமென்று அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், 22.5.2003 அன்று பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகளில், 14 நாடுகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபையின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் ஒன்றான சிரியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அத்தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இராக் மீது நடத்தப்பட்ட போர், சர்வதேச சட்டங்களை மீறிய செயல்; ஐ.நா. சபையால் ஒப்புதல் தரப்படாத நியாயபூர்வமற்ற போர் என்று ஆர்ப்பரித்த பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகள் மேற்சொன்ன தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கையில், தங்கள் மனமாற்றத்திற்கான காரணத்தை உலக மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவும் அதன் ராணுவக் கூட்டாளிகளும்தான் இராக்கில் ஏகபோக அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றன. எண்ணெய் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய்; இராக்கிற்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துகள்; இராக் மக்களின் உணவுக்காக எண்ணெயை ஐ.நா. மூலம் விற்பனை செய்வதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி ஆகியன இராக் மத்திய வங்கியில் போடப்பட்டு, அந்த நாட்டை ஆக்கிரமித்துள்ள நாடுகளின் விருப்பத்தின்படி விநியோகிக்கப்படும். இராக்கில் அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கம், ஐ.நா.வின் சிறப்புத் தூதர் ஆகியோர் அடங்கிய பல்வேறு அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் பெறப்படும். ஆனால் இறுதி முடிவுகளை எடுப்பவர்கள் யார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள்தான்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம், சர்வதேச சட்டம், ஐ.நா. நெறிமுறைகள் ஆகியவற்றிற்கு இராக் மீதான போர் எதிரானதல்ல என்று நியாயப்படுத்தியுள்ளன - இரண்டு மாதங்களுக்கு முன் எதிர்ப்புக் காட்டிய நாடுகள். சென்ற மார்ச் 10 அன்று பிரெஞ்சுத் தொலைக்காட்சியில் தன் நாட்டு மக்களுக்குச் செய்தி விடுத்த அதிபர் சிராக், எத்தகைய சூழ்நிலைமையிலும் இராக் மீதான அமெரிக்காவின் போர் குறித்த தீர்மானம் ஐ.நா. அவையில் கொண்டு வரப்படுமானால் அதற்கு எதிராக பிரான்ஸ் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என முழங்கினார். ரஷியாவும் வீட்டோ செய்யும் என அதேநாளில் மாஸ்கோவில் ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் இகோர் ஐவனோவும் அறிவித்தார். இராக் மீதான தாக்குதல் தொடங்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு (மார்ச் 18-ல்) ஜெர்மன் அதிபர் ஜெரார்ட் ஷ்ரோடர், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லக் கூடிய ஒரு போரை நியாயப்படுத்துமளவிற்கு இராக் சர்வாதிகாரி சதாமிடமிருந்து அச்சுறுத்தல் ஏதுமில்லை எனக் கர்ச்சித்தார்.
ஆனால் இந்த மூன்று நாடுகளுமே தொடக்கத்திலிருந்தே இராக் மீது அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் படையெடுப்பதற்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்தன என்பதுதான் உண்மை. சென்ற ஆண்டு நவம்பரில் ஐ.நா. சபையின் ஆயுதப் பரிசோதகர்கள் இராக்கிற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவை இந்த நாடுகள்தான். அந்தத் தீர்மானத்திலேயே, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தன்னிச்சையாகப் போர் தொடுக்க ஏதுவாக சில நிபந்தனைகள் சேர்க்கப்பட்டிருந்தன. பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் இராக் மீதான போருக்கு சாத்தியப்பாடோ அவசியமோ இல்லை எனக் கூறவில்லை. ஐ.நா. ஆயுதப் பரிசோதகர்கள் தங்கள் பணியை முடிக்கக் கூடுதலான கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது வாதம். ஜெர்மனியோ, அமெரிக்க விமானப் படைகள் தங்குவதற்கு தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தது!
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் சதாம் உசேனிடம் உள்ளன. அவருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பு உண்டு என்று அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர்ந்து செய்து வந்த பிரசாரங்கள் முழுப் பொய் என்பதை, போரை எதிர்த்த மூன்று ஐரோப்பிய நாடுகளும் முன்கூட்டியே அறியும். அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பெல்டே, மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதை இப்போது பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டுள்ளார். இராக் மீதான படையெடுப்பு, சதாம் உசேனின் கொடுங்கோலாட்சியிலிருந்து அந்நாட்டு மக்களை விடுதலை செய்வதற்காகும் என்ற அமெரிக்காவின் வாதத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானமே முறியடித்துள்ளது. அதாவது, இராக்கில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, அந் நாட்டு மக்களின் எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஓர் அரசாங்கம் அமைக்கப்படும் வரை, அமெரிக்கா, அதன் கூட்டாளிகள் ஆகியோரின் ராணுவ ஆக்கிரமிப்பும் நிர்வாகமும் அங்கு நீடிக்கும் என்பதைத் தீர்மானம் ஏற்றுக் கொள்கிறது.
ஐ.நா. சபை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே, அமெரிக்காவின் கைப்பாவையாகச் சீரழிந்துவந்து கொண்டிருந்தது என்பதற்கான மற்றொரு சான்று இந்தத் தீர்மானம். 1991-ம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பின் இராக் ஆயுதக் கலைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற போர்வையில் அமெரிக்காவும் பிரிட்டனும் அந்நாட்டில் ராணுவத்தைக் குவித்து வைக்க அனுமதித்தது ஐ.நா. பாதுகாப்பு சபை. இராக்கில் கடந்த 12 ஆண்டுகளாகவே பகுதி பகுதியான ராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, தன் கூட்டணிகளின் ஒத்துழைப்போடு தற்போது நாடு முழுவதையும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. கடந்த 12 ஆண்டுகளாகத் திணிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை இப்போது அகற்றுவது குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆழமான, தீவிரமான விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை. ஐ.நா. சபை தனது விருப்பங்களையும் குறிக்கோள்களையும் நிறைவு செய்யும் அமைப்பாகச் செயல்படாவிட்டால் அதனால் ஏற்படும் அரசியல், பொருளாதார, ராணுவ விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று அமெரிக்கா மறைமுகமாக விடுக்கும் எச்சரிக்கைக்குக் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் பணிந்து போய்விட்டன.
முதலாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன் தகர்ந்து, மறைந்து போனதற்கு அமெரிக்காவே முதன்மையான காரணம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிறுவப்பட்ட ஐ.நா. சபையையும் செங்கல் செங்கலாகப் பெயர்த்து வருவதும் அமெரிக்காதான். இராக்கில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து முதலியவற்றில் எந்த நாட்டின் துருப்புகள் எந்தெந்த வகையில் ஈடுபடுத்தப்படும் என்பதை அமெரிக்க ராணுவத் தலைமையே தீர்மானிக்கும். அத் துருப்புகள் யாவும் அத் தலைமையின் கீழேயே செயல்பட்டாக வேண்டும். இந்தியத் துருப்புகள் அனுப்பப்பட்டாலும் இதுதான் நிலைமை. அமெரிக்காவின் சொற்படி நடப்பவர்களுக்கு மட்டுமே எண்ணெய் வழங்கப்படும். இதுதான் இன்று உலகிலுள்ள ஒரே முகாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலகில் இன்று ஒரே முகாம்! - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இராக், பாதுகாப்பு, அமெரிக்காவும், இரண்டு, பின், போர், இராக்கில், மீதான, வேண்டும், மூலம், அமெரிக்காவின், சர்வதேச, தீர்மானம், போருக்குப், அமெரிக்கா, நாடுகள், மீது, நாடுகளில், அன்று, நாடுகளும், மூன்று, தனது, துருப்புகள், கடந்த, ராணுவ, என்பதை, இல்லை, அடங்கிய, கொண்டு, இராக்கிற்கு, இப்போது, ஆண்டு, ஆகிய, சபையின், தீர்மானத்தை, பிரான்ஸ், முகாம், பொருளாதாரத்