முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » வீணாய் போகும் வெயில்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - வீணாய் போகும் வெயில்
வெள்ளைக்காரனைப் பார்த்து நாம் நிறைய விஷயங்களைக் காப்பி அடித்திருக்கிறோம். இன்னும் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு கிராமத்து இளைஞர்களும் பேண்ட் மாட்டிக் கொள்கின்றனர். ஷ• அணிகின்றனர். இந்த வேகாத வெயிலில் சென்னை போன்ற நகரங்களில் ஃபுல் கை ஷர்ட், கோட், டை சகிதம் பலர் மேலும் கீழும் அலைவதைக் காணலாம். பருவ நிலையைக் கணக்கில் கொள்ளாமல் இப்படித்தான் டிரஸ் அணிய வேண்டும் என்று நிர்ணயிக்கிற தனியார் நிறுவனங்கள் பல உண்டு. ஆனால் முக்கியமான ஒன்றை மட்டும் நாம் வெள்ளைக்காரனிடமிருந்து காப்பி அடிக்கவில்லை. அது தான் ஹேட் அணியும் பழக்கம்.
அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் குறிப்பாகத் திறந்த வெளியில் பணியாற்றுகிறவர்கள் தலையில் முண்டாசு கட்டுவர். அது தலைக்கு, குறிப்பாகக் கடும் கோடைக் காலத்தில் பாதுகாப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் முண்டாசு கட்டுவது படிப்படியாக மறைந்து வருகிறது. காற்றோட்டமான வேட்டிக்குப் பதில் குழாய் மாட்ட ஆரம்பித்த நாம் முண்டாசுக்குப் பதில் மேலை நாட்டுப் பாணியில் தொப்பி அணிய ஆரம்பித்திருந்தால் கோடையில் தலைக்கு நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்.
ஆடை அணிவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் வேறு முக்கியமான பாதக அம்சத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டை அல்லது பேண்ட் துணிகள் முற்றிலும் பருத்தியால் ஆனவையாக இருந்தன. ஆனால் கடந்த பல ஆண்டுகளில் ரேயான் மற்றும் பாலியஸ்டர் கலக்கப்பட்ட நூலினால் ஆன துணிகள் பெருகி விட்டன. நூற்றுக்கு நூறு பருத்தியால் ஆன துணிகளின் விலைகள் மிக அதிகமாக இருக்க, மேற்கூறிய கலப்பு இழைத் துணிகளின் விலை மலிவாக உள்ளது. இவை சுருக்கம் விழாதவை. எளிதில் துவைத்துக் காய வைத்து விடலாம். நீண்ட நாட்கள் உழைப்பவை. இந்த அம்சங்களின் விளைவாக கலப்பு இழைத் துணியால் ஆன சட்டை, பேண்ட்ஸ் அணிபவர்களே அதிகம். நூற்றுக்கு நூறு பருத்தியால் ஆன அதிக விலை கொண்ட துணிவகைகள், வசதி படைத்தவர்கள் அணிபவையாகி விட்டன.
தமிழகம், ஆந்திரம் போன்று கடும் வெயில் அடிக்கிற பிராந்தியத்தில் வசிப்பவர்கள் கலப்பு இழையால் ஆன துணிகளை அணியும் போது அவை வியர்வையை எளிதில் உறிஞ்சுவதில்லை. காற்றோட்டமாக இருப்பதும் கிடையாது. சொல்லப்போனால் வெப்ப மண்டலப் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு இந்த வகைத் துணிகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல.
இதெல்லாம் போதாது என கோடையில் நாக்கு வறண்டு போகும் போது பருகும் பான வகைகளிலும் ஃபேஷன் புகுந்து விட்டது. டிவியிலும் பத்திரிகைகளிலும் பெரிதாக விளம்பரப்படுத்தப் படும் பிரபல பிராண்ட் பானங்களைப் பருகுவதே அந்தஸ்தான ஃபேஷன் என்ற நினைப்பு புகுத்தப்பட்டுவிட்டது. இன்னமும் தெரு மூலைகளில் இளநீர் வியாபாரம் நடக்கிறது என்றாலும் இளநீர் அருந்துவது பட்டிக்காட்டுத்தனம் என்ற எண்ணம் வேரூன்றி அதைப் பருகுவது அடியோடு மறைந்து விட்டாலும் வியப்பில்லை.
தெரு முனைக் கடைகளில் ஆரஞ்சு, லெமன் போன்ற பெயர்களில் பாட்டில்களில் விற்கப்படும் இனிப்பூட்டப்பட்ட பானங்களில் உண்மையில் ஆரஞ்சு சத்தோ, லெமன் சத்தோ கிடையாது என்பது பலரும் அறியாத விஷயம். வேதியல் பொருட்களிலிருந்து ஆரஞ்சு, லெமன், கிரேப்ஸ் மணம், ருசி ஆகியவற்றைச் செயற்கையில் உண்டாக்க முடியும். அவ்வித எசன்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையே இந்த வகைப் பானங்கள்.
வியர்வை உப்புக் கரிக்கும் என்பது பலரும் அறியாத விஷயம். வேண்டுமென்றால் நீங்கள் இதை சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். சாதாரணமாக வெயில் காலத்தில் அதிகம் வேர்க்கும். அதுவும் கடும் கோடையில் திறந்த வெளியில் பணியாற்றுகையில் நிறைய வியர்வை வெளிப்படும். அவ்வித நிலையில் வியர்வையுடன் உடலில் உள்ள மிக அவசியமான உப்புகளும் அதிக அளவில் இழக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெயில் தாங்காமல் உயிரிழப்பதற்கு இது ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. கடும் வெயிலினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் உப்புச் சத்து அடங்கிய பானங்களை நிறையப் பருக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நாட்களில் உப்பு சேர்க்கப்பட்ட நீர் மோர் குடிப்பார்கள். அது கோடைக் காலத்தில் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால் இந்த ஃபேஷன் யுகத்தில் யார் நீர் மோரை நாடப் போகிறார்கள்?
இந்த ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் கடும் வெயிலின் விளைவாக இதுவரை 1200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவே பூகம்பத்தின் விளைவாக இவ்வளவு பேர் உயிரிழந்திருந்தால் எங்கெங்கிருந்தோ உதவி விரைந்திருக்கும். ஆனால் வெயில் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தினமும் பத்திரிகைகளில் ஏதோ கிரிக்கெட் ஸ்கோர் போல வருகின்ற அளவில் தான் உள்ளது. ஆந்திரத்தைத் தொடர்ந்து, வருகிற வாரங்களில் பிகாரிலிருந்து வெயில் சாவு ஸ்கோர் வர ஆரம்பிக்கும்.
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெயில் சாவுகளுக்கும் ஃபேஷன் மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. இது சமூகவியல் நிபுணர்கள் ஆராய வேண்டிய விஷயம். ஆனால் ஒன்று, பருவ நிலைக்கு உகந்த வகையில் அமைந்த பாரம்பரிய வாழ்க்கை முறை மாறும்போது இப்படியான விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தில்லி, பஞ்சாப், இமாசலம் போன்ற வட மாநிலங்களில் குளிர்காலத்தில் கடும் குளிர் நிலவும். குளிர் காலத்தில் அணிவதற்கென்றே தனியே ஆடைகள் வைத்திருப்பர். ஆனால் கடும் கோடையில் எந்தவிதமான ஆடை அணிய வேண்டும் என்பதில் யாரும் அக்கறை காட்டுவதில்லை என்று சொல்ல வேண்டும்.
பொதுவில் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள், ஆண்டில் இரண்டு முறை கடும் வெயிலுக்கு இலக்காகின்றன. மே மாதத்தில் - அதாவது சித்திரை, வைகாசியில் - அக்கினி நட்சத்திரம். பிறகு செப்டம்பர் - புரட்டாசியில் - மீண்டும் கடும் வெயில். புரட்டாசி வெயிலில் பிரண்டை கூட காய்ந்து விடும் என்பார்கள். புரட்டாசியில் வெயில், பொன் உருகக் காயும் என்றும் கூறுவார்கள். பூகோள ரீதியில் இதற்கான காரணங்களை இங்கு விவரிக்க இயலாது. மே, செப்டம்பர் ஆகிய இரு மாதங்களிலும் சூரியன் நம் தலைக்கு நேர் மேலே அமைகிறது என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லலாம்.
வெப்ப மண்டல நாடு என்று சொல்லப்படும் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் வெயில் குறைவு. ஆனால் அந்த அமெரிக்காவில் தான் வெயிலை அதாவது சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் ஆராய்ச்சி முதலில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்கா உருவாக்கிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற பல கருவிகளும் சாதனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. ஆனால் இவை எல்லாம் பெரும் செலவு பிடிக்கக்கூடியவை. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கு ஆகும் செலவு கடந்த பல ஆண்டுகளில் பெரிதும் குறைந்துள்ளது என்றாலும் அது இன்னமும் கட்டுபடியாகாத அளவில் தான் உள்ளது.
ஆனால் அமெரிக்கா பின் பற்றிய பாதையைத் தான் பின்பற்றியாக வேண்டும் என்பதில்லை. நாம் புதிய முறையில் சிந்திக்க முற்பட வேண்டும். சூரிய ஒளியைக் குறைந்த செலவில் எளிய முறையில் மின்சாரமாக மாற்ற தீவிர முனைப்புக் காட்ட வேண்டும். இந்தியாவில் நிபுணர்களுக்குப் பஞ்சமில்லை. இதற்கென்றே பல நூறு கோடியை ஒதுக்கினாலும் தகும். இந்தியா நல்ல வெயில் அடிக்கிற நாடு. இந்த வெயில் அனைத்தும் - சூரிய ஆற்றல் அனைத்தும் ஆண்டு தோறும் வீணாகிக்கொண்டிருக்கிறது. இப்போது மக்களைச் சாகடிப்பதாக உள்ள வெயிலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவைக் காட்டிலும் நமக்குத்தான் அவசர அவசியம் உள்ளது.
நன்றி : (கட்டுரையாளர். தினமணி முன்னாள் செய்தி ஆசிரியர்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீணாய் போகும் வெயில் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வெயில், கடும், வேண்டும், காலத்தில், சூரிய, உள்ளது, தான், என்பது, மின்சாரமாக, நாம், ஃபேஷன், கோடையில், அளவில், விஷயம், நிபுணர்கள், காப்பி, ஒளியை, துணிகள், அமெரிக்கா, லெமன், பருத்தியால், கலப்பு, விளைவாக, அணிய, ஆரஞ்சு, தலைக்கு, நூறு