முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஈழப் பிரச்சினையில் தேக்க நிலை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஈழப் பிரச்சினையில் தேக்க நிலை
இலங்கையில் ஈழப் புனரமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி புரிவதற்கான சர்வதேச மாநாடு டோக்கியோவில் அண்மையில் நடைபெற்று முடிவடைந்துவிட்டது. உள்நாட்டுப் போரில் சின்னாபின்னாமாகிச் சீரழிந்து கிடக்கும் ஈழப் பகுதிகளின் சீரமைப்புக்காக 200 கோடி டாலர் நிதியுதவி புரிய மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் பலவும் - சர்வதேச நிறுவனங்களும் முன்வந்துள்ளன. இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் - அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ரிச்சர்டு ஆர்மிடேஜ், ஜப்பானிய பிரதமர் - ஸ்ரீனிசிரோ கொய்சுமி, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே. மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பதன் மூலம் எடுப்பாகி இருப்பவர்கள் விடுதலைப் புலிகளே.
புலிகள் பங்கு பெறாத ஈழ சீரமைப்பு மாநாடு என்றால், அது ஒரு வகையில் ஆச்சரியம்தானே? புலிகள் மறுத்துவிட்டதற்குக் காரணம் என்ன தெரியுமா? ஈழப் புனரமைப்புப் பணிகளை - சட்டப்பூர்வமான அதிகாரத்துடன் பொறுப்பேற்பதற்காக, அரசியல் ரீதியாக இடைக்கால நிர்வாக அமைப்பைப் புலிகளின் பொறுப்பில் அரசு நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஈழ அபிவிருத்திக்காக - அரசின் சட்டத்துக்கு உட்பட்ட கட்டமைப்பு ஒன்றை உருவாக்கித் தர ரணில் அரசு முன்வந்தது. அதிகாரம் இல்லாத - வெறும் சேவை அமைப்பு போன்ற இந்த யோசனையை ஏற்க, புலிகள் தயாராக இல்லை.
பிரதமர் ரணிலைப் பொறுத்த அளவில் அவர் தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார். அரசியல் ரீதியான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை - புலிகள் தலைமையில் நிறுவுவது என்பது ரணிலின் சக்திக்கும் அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டது. இதில் ஒத்துழைக்க முடியாது என்று சர்வ அதிகாரங்களும் கொண்ட அதிபர் சந்திரிகா ஏற்கெனவே மறுத்துவிட்டார். அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட புலிகளின் கோரிக்கையை ஏற்க முயன்றால் ரணில் அரசையே அதிகாரத்திலிருந்து நீக்கத் தயங்கப் போவதில்லை என்றும் சந்திரிகா எச்சரித்திருக்கிறார்.
அப்படியிருக்க புலிகளின் கோரிக்கையை ஏற்பதில் ரணிலுக்கு உண்மையிலேயே சிரமம் இருக்கவே செய்கிறது. அரசியல் சட்டத்தில் அவசியமான திருத்தம் செய்யாமல், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த வழியில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கு முதலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பலம் ரணில் அரசுக்குத் தேவை. அது இப்பொழுது இல்லை.
அடுத்து, அந்தத் திருத்தத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் இது நடக்கக் கூடிய காரியம் அல்ல. எனவேதான் அரசுக்கு உட்பட்ட ஏஜென்சி போன்ற அபிவிருத்திக் கட்டமைப்பை, புலிகளுக்கு அமைத்துத் தர ரணில் முன்வந்திருக்கிறார். இந்த அமைப்பு ஈழப் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பை ஏற்பதுடன், இதில் புலிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று ரணில் உறுதியளித்தார்.
ஆயினும் புலிகள் கேட்பதற்கும் - ரணில் தருவதற்கும் இடையே அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருக்கவே செய்கிறது. இப்போதைய நிலையில் இதற்கு மேல் செய்ய என்னுடைய அரசுக்கு சக்தி இல்லை என்பதை ரணில் கூறாமல் கூறுகிறார். புலிகளைப் பொறுத்த அளவில் ரணிலின் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது எனக் கருதக்கூடும். தனி ஈழம் கோரி வந்த புலிகள் அதற்குப் பதில், பூரண மாநில சுயாட்சி உரிமையுடன் கூடிய ஈழத்துக்கு இறங்கி வந்திருக்கிறார்கள். அப்படியிருக்க அரசுக்கு உட்பட்ட ஏஜென்ஸி போன்ற அமைப்பில் இடம்பெறுவது தங்களுடைய நிலைப்பாட்டை நீர்த்து விடச் செய்யும் என்று புலிகள் அஞ்சக் கூடும். இந்த அச்சத்தில் அர்த்தம் இருந்தபோதிலும், ஈழம் முழுவதுமே இப்பொழுது புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருவது கண்கூடான உண்மை. அப்படியிருக்க அரசின் திட்டம் எதுவும் புலிகளின் அடித்தளத்தை அசைத்து விடப் போவதில்லை. எனவே பரிசோதனை நடவடிக்கை போல, ரணிலின் திட்டத்தை ஏற்பது குறித்து புலிகள் பரிசீலிப்பதில் தவறில்லை. அதன்மூலம் அமைதி முயற்சிகளில் இப்பொழுது ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் முட்டுக்கட்டையும் நீங்குவதற்கு வழிபிறக்கக் கூடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஈழப் பிரச்சினையில் தேக்க நிலை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - புலிகள், ரணில், புலிகளின், அரசியல், ஈழப், ரணிலின், அரசுக்கு, அப்படியிருக்க, கட்டமைப்பை, இப்பொழுது, இடைக்கால, புனரமைப்புப், கலந்து, பிரதமர், உட்பட்ட, இல்லை