முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » புரட்சி மணம் பரப்பிய தமிழ்த் தென்றல்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - புரட்சி மணம் பரப்பிய தமிழ்த் தென்றல்
- கா. செல்லப்பன்
புரட்சி மணம் பரப்பிய தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் வாழ்வு ஒரு சங்கமமாகத் திகழ்ந்தது. அவர் இயற்கையிலே இறைமையைக் கண்டார்; காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இணைக்க முயன்றார். இறுதியாக தமிழ்மொழியில் தணியாத காதல் கொண்ட அவர், ஒரு சிறந்த தேசியவாதியாகவும் உயர்ந்த உலகப் பொதுமை போற்றியவராகவும் வாழ்ந்தார்.
திரு.வி.க - இயற்கையின் அழகில் முருகனின் அருளைத் தரிசித்தார்; சோலையின் செழுமையில் திருமாலைக் கண்டார். அண்ட வெளியிலும் அகத்தின் உள்ளொளியிலும் ஆடலரசனின் ஆனந்தக் கூத்தைத் தரிசித்தார். இயற்கையை உடலாகவும், இறைமையை உயிராகவும் கண்ட அவர், எல்லா மனிதர்களையும் எல்லா மதங்களையும் ஒன்றாகவே உணர்ந்தார்.
சிவகாமியை இயற்கையோடும் பெண்மையோடும் இணைத்த திரு.வி.க, இயற்கை என்னும் பெண்மை, சிவம் என்னும் வெளியிலே இணைவதிலே படைப்பின் படிமத்தைப் பார்க்கிறார். இந்தத் தெய்வீகக் காதல், மனித மீட்சிக்காக, வாழ்வு இயக்கத்துக்காக நிகழ்வது. சிவகாமியிலே வளர்ச்சித் தத்துவத்தின் உருவகத்தைக் கண்ட அவர், காளியின் கூத்திலே புரட்சித் தத்துவத்தைக் கண்டார். கோணிச் செல்லும் உலகில் புரட்சியைக் கிளப்புவது கோரக் காளியின் கடன் என அவர் கூறும் போது சக்தியை, சமுதாய சக்தியாக மாற்றுகிறார். இதன் மனித வெளிப்பாடாகப் பெண்ணைக் கருதியதால், பெண்ணின் பெருமையைப் பெரிதாகப் பேசினார். இயற்கையெல்லாம் பெண்; இயக்கம் எல்லாம் பெண் - ஏன், நானே பெண் என்று தன்னையே பெண்ணாகப் பேசிய பெண்ணியச் சிந்தனை மிகவும் வியப்பளிக்கிறது.
திரு.வி.கவின் சமயம், ஒரு சமதர்ம, சன்மார்க்க சமூக நெறி. மகமதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும், புத்தர் தருமமும் அருகர் அஹ’ம்சையும், கிருஷ்ணன் நிஷ்காமியமும், குமரன் அழகும், தட்சிணாமூர்த்தியின் சாந்தமும் பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை என்ற திரு.வி.க. எல்லா மதங்களின் தனித்துவத்தை ஏற்று, அவற்றின் சங்கமத்தில் வாழ்வின் பூரணத்துவத்தைக் கண்பார். காந்தியத்தில் இந்த சமரசத்தின் அருள் வடிவத்தையும், மார்க்சியத்தில் பொதுமை அறத்தை நிலைநிறுத்தும் பொருளாதாரத்தையும் கண்டார்.
மார்க்சியம் சமதர்மத்தை அறிவுறுத்துவது; சமதர்மத்தில் சத் தானே சேரும். சத்தைக் கொண்ட சமதர்மமே சன்மார்க்கம் என்பது என்று சன்மார்க்கத்துக்கும் புதிய விளக்கம் தருகிறார். இங்கே சமதர்மமும் சமயங்களும் காந்தியும் கூறும் சத்தும் சங்கமிக்க வேண்டியதைச் சுட்டுகிறார். தேசியவாதியாகக் காந்தியத்தை ஏற்ற திரு.வி.க, தொழிலாளர்களின் தொண்டனாக மார்க்சியத்தை மதித்தார். அஹ’ம்சை வழியில் தேச விடுதலை மட்டுமன்றி தொழிலாளர் உயர்வுக்கும் முயன்று சிறை சென்றவர். அருளியலின் அடித்தளம் பொருளியல்; ஆனால் அருளியலாகப் பொருளியல் முழுமை பெற வேண்டும் என்பது அவர் கொள்கை.
இதே போல, தமிழ்க் காதலும் தேசப்பற்றும் இணைந்தே இருந்தன அவரிடம். தமிழ் மண்ணிலே தேசியம் தமிழுணர்வாகப் பெருக்கெடுத்தது. சுதந்திரம் என்ற அகவிழிப்பு, தாய்மொழி வழி தன்னை உணர்வதே என நம்பிய அவர் சுதந்திரக் கனலால் தமிழையும் புடம் போட்ட தங்கமாக்கினார். பழந்தமிழ்ச் சொற்களை வாழ்வுச் சந்தத்தோடு இணைத்து எழுதி, சுதந்திரக் காட்சியைப் பண்பாட்டு மீட்சியாக்கினார். அதேசமயத்தில் இந்திய ஒருமைக்கும் உலகப் பொதுமைக்கும் தமிழ் வழி உழைத்தார்.
இத்தகைய தாய்மொழி, தாயகப் பற்றுதான் பிறவாமை வேண்டிய மரபினை மறுத்து, மறுபடியும் இந்த மண்ணுக்கு வரவிழைபவராக அவரை ஆக்கியது. வீட்டின்பம் வேண்டா; ஓய்வில் விருப்பம் இல்லை. மனிதப் பிறவி வேண்டும். எனது தமிழ்மொழிக்கும் எனது அன்புச் சமயத்துக்கும் என் அருமைத் தாய்நாட்டுக்கும் இடையறாது பயன் கருதாப் பணி செய்தல் வேண்டும் என்ற அவர் கூற்று, வாழ்வுக்கு அவர் பாடிய வாழ்த்துப் பா. செந்தமிழ் என்றே பெயர் பெறும் அளவுக்கு எப்போதோ செம்மொழித் தகுதியைப் பெற்ற தமிழ், மக்கள் நாவில் வாழும் தகுதியையும் பெற்றிருப்பதால், அதைச் செம்மொழி என அறிவிக்கத் தயங்குபவர்களுக்கு மத்தியில் திரு.வி.க. திரும்பி வரமாட்டாரா என எண்ணத் தோன்றுகிறது.
இன்று முரண்பட்டவையாக நாம் கருதும் இயற்கை நெறி - இறைவழிபாடு, பல்வேறு சமயக் கோட்பாடுகள், ஆண்மை - பெண்மை, காந்தியம் - மார்க்சியம், மொழிப்பற்று - நாட்டுப்பற்று ஆகியவற்றின் இணைந்த தன்மையை வலியுறுத்திய திரு.வி.க, இன்றைய இந்தியாவுக்கு ஓர் இன்றியமையாத வழிகாட்டி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புரட்சி மணம் பரப்பிய தமிழ்த் தென்றல் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அவர், திரு, கண்டார், தமிழ், வேண்டும், பொதுமை, எல்லா, பெண்