முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » தயக்கம் எதற்காக?
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - தயக்கம் எதற்காக?
பிரதமர் வாஜ்பேயி சீனாவுக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து அந்நாட்டு உச்சநிலைத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் அதையொட்டி உருவாகியுள்ள உடன்படிக்கைகளும் சர்வதேச அரங்கில் மிகுந்த முக்கியத்துவத்தை அடைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இப் பயணம் முதலில் வியப்பையும் அடுத்து ஆவலையும் ஏற்படுத்தியது. இப்பொழுது, ஆசியாவிலேயே ஒரு புதிய திருப்பத்திற்கான அடையாளங்கள் தோன்றுவதாக மேற்கு நாடுகள் கருதுகின்றன.
தற்பொழுது அமெரிக்கா ஒருபுறத்தில் சீனாவுடன் கணிசமான அளவில் வர்த்தக உறவுகளையும் - அதேசமயத்தில் இந்தியாவுடன் பலமுனைகளிலும் புதிய புதிய உறவுகளையும் வளர்த்துக் கொண்டு வருகிறது. அதோடு முன்னேறிய ஜனநாயகமான அமெரிக்காவுக்கும் மாபெரும் ஜனநாயகமான பாரதத்துக்குமிடையே உறவுகள் மேன்மேலும் விரிவுபடுவது, சர்வதேச நலன்களுக்கு அவசியமென்று அவ்வப்போது அமெரிக்கா ஓயாமல் கூறி வருகிறது. அதுமட்டுமல்ல, தெற்கு ஆசியாவில் அமைதியும் உறுதிப்பாடும் நீடிக்குமாறு செய்வதில் இந்தியாவுக்குப் பெரிய பங்கு உண்டு என்ற புதிய கொள்கையை - கடந்த 4, 5 ஆண்டுகளாகவே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அதன் பிறகுதான் இந்தியாவுடன் நட்பும் பரிவும் கலந்த குரலில் சீனா பேச ஆரம்பித்தது என்பதை மறப்பதற்கில்லை. தற்பொழுது சீனாவுடன் எல்லைப் பிரச்சினை, வணிக உறவுகள், சிக்கிம் போன்றவற்றில் சுமுகமான உடன்பாடு காணப்பட்டிருப்பது உண்மையே. அதோடு பல துறைகளிலும் இரு நாடுகளுக்குமிடையே எதிர்காலத்தில் உறவுகள் விரிவடையவும் வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்காக அமெரிக்காவுடனான நமது உறவுகளில் எந்தத் தொய்வும் ஏற்படாதபடி பராமரிப்பதில் விழிப்புணர்வு அவசியம்.
பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளில் பல்வேறு ஆக்கபூர்வமான உடன்பாடுகள் உருவாகி இருந்தபோதிலும் - இந்தியாவைப் பொறுத்த அளவில் இரு முக்கிய பிரச்சினைகளில் போதிய அளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டதாகத் தோன்றவில்லை. தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகிற அணுஆயுத விரிவாக்கத் தடை ஒப்பந்த வரம்புக்கு அப்பாற்பட்ட நிலையில் - அணு ஆயுத நாடாக இந்தியா வடிவெடுத்துள்ளது. இப்பிரச்சினையில் கண்டும்காணாததும்போல சீனா சாமர்த்தியமாக நடந்து காட்டியிருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியதே.
அதேசமயத்தில் நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட பாரதம் - ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர அங்கம் வகிக்க விரும்புவதில் உள்ள நியாயத்தை அங்கீகரிக்கும் தோரணையில் சீனா நடந்து காட்டவில்லை. இது ஓரளவுக்கு ஏமாற்றத்தை அளிக்கக்கூடியது. இன்னும் சொல்வதென்றால் இக்கோரிக்கையை - இந்தியாவின் சார்பில் முன்னின்று எழுப்ப சீனா ஒருவகையில் கடமைப்பட்டிருக்கிறது. எப்படியென்றால் 1950-களில், சீனாவின் பிரதிநிதியாக மாவோவின் மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிக்கவே ஐ.நா. மறுத்தது.
சீனாவின் சார்பில் - பார்மோசாவில் அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி புரிந்துவந்த ஷியாங்கேஸேக் அரசின் பிரதிநிதியே ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார். கம்யூனிஸ்ட் சீனாவின் பிரதிநிதி ஐ.நா.வுக்குள் நுழைவதையே அமெரிக்கா முழுமூச்சுடன் எதிர்த்து வந்தது. இப்பிரச்சினையில் ஐ.நா. அரங்கில் அமெரிக்காவுடன் இந்தியப் பிரதிநிதிகள் பலமுறை பலமாக மோதியது உண்டு. பொம்மை ஆட்சி நடத்தி வரும் ஷியாங்கேஸேக்கின் பிரதிநிதி ஐ.நா.வில் அமர்ந்திருப்பதே கேலிக்கூத்து - என்று கூட இந்தியா வர்ணித்ததுண்டு. ஆனால் இப்பொழுதோ ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற இந்தியாவுக்கு எல்லாத் தகுதியும் உண்டு என்று கூறுவதற்குக்கூட சீனா தயங்குகிறது. இந்தத் தயக்கம் துர்பாக்கியவசமானது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தயக்கம் எதற்காக? - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - உண்டு, அமெரிக்கா, குழுவில், சீனாவின், பாதுகாப்புக், உறவுகள், வருகிறது, தற்பொழுது