முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » காஷ்மீரில் புதிய சிந்தனை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - காஷ்மீரில் புதிய சிந்தனை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புதிய உறவுகளுக்கான போக்குகள் தலைதூக்கி இருப்பதால், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு சக்திகள் இடையிலும் புதிய சிந்தனை தோன்றியிருப்பதற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.
பல்வேறு வகையான பிரிவினைச் சக்திகளின் - கட்சிகளின் கதம்பக் கூட்டணியாகிய ஹூரியத் மாநாட்டில் பாகிஸ்தானை மூர்க்கமாக ஆதரித்து வந்துள்ள கட்சிகளின் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு வருகிறார்கள். நல்ல வேளையாக இந்தச் சமயத்தில் ஹூரியத் மாநாட்டு சக்திகள் சிலவற்றின் அனுதாபத்தைப் பெற்றவரும் - காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் பெருவாரியாக வசித்து வரும் முஸ்லிம்களிடையே செல்வாக்குள்ள தலைவருமான முப்தி முகம்மத் சய்யீத், ஜம்மு - காஷ்மீர் முதல்வராக இருந்துவருகிறார். பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் நேசக்கரம் நீட்டியதை சய்யீத் மனமார வரவேற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இந்திய ராணுவத்தின் முற்றுகைக்குள் காஷ்மீரிகள் அடங்கி ஒடுங்கி வாழ்ந்து வருவதாகப் பாகிஸ்தான் மக்களின் மனங்களில் ஒரு பொய்யான சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தவறான எண்ணத்தைப் போக்குவதற்கு வகை செய்ய, பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் மக்கள் வந்து செல்ல அனுமதிக்கலாம். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீரிகள் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையை நேரில் பார்த்தால், பாகிஸ்தானியர்கள் மனமாற்றம் அடைவது திண்ணம் என்றும் சய்யீத் கூறியிருக்கிறார்.
இச்சமயத்தில் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதுடன், அதன் எதிர்காலத்தை, அரசியல் அடிப்படையில் நிர்ணயிக்கும் நோக்கத்துடன், காஷ்மீரிகளின் கருத்தோட்டங்களைக் கண்டறிவதற்காக மத்திய அரசு நியமித்துள்ள, மத்திய உள்துறையின் முன்னாள் செயலாளரான வோரா, இப்பொழுது ஜம்முவில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்தை நடத்தி வருகிறார். காஷ்மீருக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் வாஜ்பேயியைச் சந்தித்து விட்டு அவருடைய ஆலோசனைகளுடன் ஜம்முவுக்கு வோரா வந்திருப்பது நினைவுகூரத் தக்கது.
இத்தருணத்தில் ஜம்மு-காஷ்மீர் தேசியச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான பேராசிரியர் பீம்சிங் ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார். ஹூரியத் தலைவர்களில் பலர் தங்களை இந்தியர்களாக நினைப்பவர்களே. அவர்களையும் வோரா பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று பீம்சிங் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, பயங்கரவாதிகளின் வன்முறைக் கொடுமைகளைப் பெரிய அளவில் அனுபவித்து இருப்பவர்களும் அவர்கள் தான் என்பதையும் பீம்சிங் நினைவுபடுத்தியிருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த முன் வருமாறு ஹூரியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது அவசியம் என்பதையும் பீம்சிங் வற்புறுத்தியிருக்கிறார்.
மாறிவிட்டிருக்கும் புதிய சூழ்நிலையில், பழைய ஆச்சரியங்களை எல்லாம் மறந்து விட்டு, ஜம்மு-காஷ்மீரில் எல்லாத் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு வோராவை மத்திய அரசு பணிக்க வேண்டும்.
ஜம்முவில் காங்கிரஸ•க்கு நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. அதைப் போலவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் சய்யீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சி - கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் அப்பால், பல்வேறு அரசியல் சிந்தனைப் போக்குள்ள உதிரிக் கட்சிகள் பல இருந்து வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் எந்தக் கட்சியையும் - அதன் பின்னணி எப்படியிருப்பினும் - ஒதுக்காமல், அனைத்துத் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினால் காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு ஈடுதரக் கூடிய விதத்தில் அரசியல் ரீதியான பரிகாரம் காண்பதில் சிரமம் இருக்காது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஷ்மீரில் புதிய சிந்தனை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஜம்மு, காஷ்மீர், பீம்சிங், ஹூரியத், காஷ்மீரில், பேச்சுவார்த்தை, வோரா, அரசியல், சய்யீத், பல்வேறு, மத்திய