முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » சின்னஞ்சிறிய விஷயம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - சின்னஞ்சிறிய விஷயம்
விதவைப் பெண்களைப் பற்றியும் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களைப் பற்றியும் உலவும் சமூகப் படிமம் தரமான ஒன்றல்ல.
கணவரை இழந்த தன் தங்கைக்குத் திருமணம் செய்யக் கடந்த பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் வெற்றி கிட்டாத நிலையில் மனக்கசப்புடன் பேசிக் கொண்டிருந்தார் நண்பர். கைகூடிவிட்டது என்கிற எண்ணத்தைத் தரக்கூடிய அளவுக்கு வெற்றி எல்லையை நெருங்கும் தருணத்தில் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் சரிந்த விஷயம் அவரை நிலை குலைய வைத்து விட்டிருந்தது. அவர் தோல்விக்குப் பெரிதும் காரணங்களாக இருந்தவர்கள் பெண்களே என்று அதிர்ச்சியுடன் சொன்னார். ஒரு பெண்ணுக்கு நடக்க இருக்கும் திருமணத்துக்கு மற்றொரு பெண்ணே தடையாவதை நினைத்தால் அதிர்ச்சியாக இருப்பதாகச் சொன்னார். தற்சமயம் உலகில் நிலவும் பெண்கள் பற்றிய பார்வை பெரிதும் ஆண்களால் உருவாக்கப் பட்டவையே என்றால், அப்பார்வைக்கு பெரிதும் இன்றும் வலிமை சேர்த்துக் கொண்டிருப்பவர்கள் பெண்களே என்று வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.
எங்கள் அலுவலகத்தில் திருமணமான இளம் பெண் ஒருத்தி தன் வளைகாப்புக்கு எல்லாரையும் தனித் தனியாக அழைத்ததும் எங்களோடு வேலை செய்யக் கூடிய மற்றொரு பெண்ணை நாசுக்காகத் தவிர்த்ததும் சட்டென நினைவுக்கு வந்தது. இருவருக்குமிடையே சீரான உறவு இல்லாமையால் தவிர்க்கப் பட்டிருக்கலாம் என்று அப்போது எண்ணியிருந்தேன். அழைக்கப்படாத அப்பெண் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர் என்பது காரணமாக இருந்திருக்கலாமோ என்று தாமதமாக அப்போது தோன்றியது. மாதச் சம்பளத்தன்று மதிய உணவை உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடுகிற பெண் அலுவலர்கள் எச்சரிக்கையாக அவரைத் தவிர்த்து விடுவதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.
இரண்டாவது, திருமணம் என்பதொன்றும் குற்றமல்ல, பாவமும் அல்ல. முதல் திருமணம் ஏதோ ஒரு காரணத்தால் தோல்வியில் முடிந்து விட்ட நிலையில் அல்லது முதல் கணவர் அகால மரணமடைந்த நிலையில் மட்டுமே இரண்டாவது திருமணம் தீர்வாக அமைகிறது. ஏப்ரல் தேர்வில் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைகிற மாணவர்கள் செப்டம்பர் தேர்வுக்கு அமர்வதைப் போன்ற சாதாரண விஷயமே இது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத பல நுட்பமான அவமானங்களை இத்தகையோர் காரணமில்லாமல் அனுபவிக்க காரணமாக இருப்பதும் மனத்தில் படிந்திருக்கும் பெண்களைப் பற்றிய பார்வை தான்.
ஒரு குடும்பத்தில் கணவனாக இருக்கும் ஆண் தனக்குத் தலைவலி என்றால் தைலத்தைத் தடவிக் கொண்டோ அல்லது மாத்திரையைப் போட்டுக் கொண்டோ படுத்து ஓய்வெடுக்க முடியும். அதே குடும்பத்தில் மனைவியாக இருக்கும் பெண் தைலத்தைத் தடவிக் கொள்ளலாம் அல்லது மாத்திரையைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஓய்வெடுத்துக் கொள்ள மட்டும் முடியாது. தலைவலிக்கு இறுக்கமாகத் துண்டு கட்டிக் கொண்டாவது சமையல் மற்றும் குடும்ப வேலைகைளைக் கவனிக்க வேண்டியுள்ளது. பெண்ணுக்கு வரும் த்லைவலி சகித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவும் ஆணுக்கு வரும் தலைவலி உடனடியாகக் குணப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவும் கருத வைக்கிற பார்வை கொடுமையானது. அதே குடும்பத்தில் வேறு யாராவது ஒரு பெண் " தைலத்தைத் தடவிக் கிட்டு வேலைய பார்ப்பியா, தூங்க வந்திட்டா வேலை நடந்திடுமோ ?" என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். இந்த வார்த்தை அச்சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணால் சொல்லப் பட்டாலும், அவர் மனத்தில் படிந்திருக்கும் பார்வை ஆண்களால் வகுக்கப்பட்ட பார்வை தான்.
இரண்டாம் திருமணத்தைப் பற்றிய பார்வையும் ஏறத்தாழ இதைப் போன்றதே ஆகும். ஓர் ஆண் தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்தை ஒட்டி இழந்து விடும் நிலையில் மற்றொரு திருமணத்தைச் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. மற்றவர்களின் கழிவிரக்கத்தால் தூண்டப் பட்டவர்கள் போல சிலர் முதல் மனைவி இறந்த ஒரே மாதத்தில் மறுமணம் முடித்துக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். சில இடங்களில் முதல் மனைவியின் தங்கையே மறுமணத்துக்குச் சம்மதித்து விடுகிறார். அயலிடத்தில் எடுப்பது என்றாலும் எப்படியோ எந்தச் சிரமமும் இல்லாமல் இவர்களுக்கு மணமகள் கிடைத்து விடுவது மிகப் பெரிய ஆச்சரியம். ஆண் தன் குடும்பப் பொறுப்பைப் பிசகின்றி நடத்திக் கொண்டு செல்லவும் பலவீனப்படுத்தும் சபலங்களுக்கு உள்ளாகி வாழ் நாளை வீணடித்து விடாமல் இருக்கவும் இப்படிப்பட்ட மறுமண ஏற்பாடு அவசியம் என்கிற எண்ணமும் பலரிடம் அழுத்தமாக உள்ளது. இதே சலுகைகளைப் பெண்களுக்கு வழங்குவதில் உள்ள மனத்தடையைத்தான் புரிந்து கொள்ள இயல்வதில்லை.
மறுமணம் என்கிற சங்கதி நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் உருண்டு விட்டன என்றாலும் அதைச் சகஜமாக ஏற்றுக் கொள்கிற மனநிலை இன்னும் நமக்கு வாய்க்கவில்லை என்பது தான் துக்கத்துக்குரிய விஷயம்.
சமூகத்தில் பெண்கள் நடத்தப் படும் விதமே பொதுவாக மனத்திருப்தி தருவதில்லை. பேருந்துகளிலும் ரயில் வண்டிகளிலும் பயணம் செய்கிற போது பெண்களைப் பற்றிச் சக பிரயாணிகளாக வரும் ஆண்களும் பெண்களும் உதிர்க்கிற வார்த்தைகள் காது கொடுத்துக் கேட்க இயலாத அளவுக்கு மனக் கூச்சம் அளிக்க வல்லவை. மொழி தெரியாத பெண்களைப் பற்றிய பேச்சு இன்னும் கூடுதலான கூச்சத்தைத் தரக் கூடியவையாக இருக்கும். விதவைப் பெண்களைப் பற்றியும் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களைப் பற்றியும் உலவும் படிமம் தரமான ஒன்றல்ல.
சமீபத்தில் ஜெய்ப்பூரில் கணவனுடைய மரணத்தை யொட்டி நடக்கவிருந்த எரியூட்டலின் போது அதே சிதையில் படுத்து உயிர் துறக்க இருந்த இளம் பெண் ஒருத்தியைத் தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் காப்பாற்ற இயன்றிருக்கிறது. சட்டபூர்வமாகத் தடுக்கப்பட்ட ஒரு விஷயத்தைச் செயல் படுத்துவதில் அந்த இளம் பெண் எடுத்த முடிவு ஒரு பக்கம் இருக்கட்டும், அதே பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த மற்ற பெண்களாலும் ஊரைச் சார்ந்த மற்ற பெண்களாலும் அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இயலாத அளவுக்கு மனத்தடை உருவாகக் காரணம் என்ன? மனைவியை இழந்தால் மறுமணத்துக்குத் தடை சொல்லாத மற்ற ஆண்கள், கணவனை இழந்தவளுக்கு வாழ்வு தர முன் வராவிட்டாலும் சாவத் துணிவதைத் தவறு என்று எடுத்துச் சொல்லித் தடுத்து நிறுத்த இயலாத அளவுக்கு மன அழுத்தம் உருவாகவும் காரணம் என்ன? இவர்கள்தாமே முதலாவதாக ஓடித் தடுத்திருக்க வேண்டியவர்கள். இவர்கள்தாமே அப்பெண்ணுக்கு மனத் துணிவை ஊட்டியிருக்க வேண்டியவர்கள். இக்காரியங்களைச் செய்ய அனுமதிக்காத அளவுக்கு மனத்தைப் பாறையாக்கிய உணர்வுகளுக்கு என்ன விதமான சமூக அர்த்தம் இருக்க முடியும்?
திருமணம் ஓர் எளிய தேவை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இத்தேவையைப் பெரும்பாலும் நிராகரிக்க முடிவதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் வகுத்திருந்த சமூக பேதங்களை யெல்லாம் நவீனயுகம் சுக்கு நூறாக நொறுக்கித் தூள், தூளாக்கிய பிறகும் பால்சார்ந்த வேறுபாடுகளையும் விதிகளையும் பாராட்டிக் கொண்டிருப்பது எந்த விதத்திலும் அழகல்ல. இது புரிந்து கொள்வதற்குச் சின்னஞ்சிறிய விஷயம் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக நமக்குச் சிறிய விஷயங்களைப் புரிந்து கொள்வதில் தான் சிரமம். நம்மை நாம் மிகப்பெரிய மனிதர்களாக நினைத்துக் கொள்வது தான் காரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சின்னஞ்சிறிய விஷயம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பெண்களைப், திருமணம், பெண், தான், அளவுக்கு, பார்வை, மறுமணம், பற்றியும், பற்றிய, செய்து, நிலையில், இருக்கும், புரிந்து, வரும், இயலாத, என்ன, தடவிக், மற்ற, காரணம், அல்லது, மற்றொரு, விஷயம், இளம், என்கிற, குடும்பத்தில், தைலத்தைத்