முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலை
காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரே வழி - பேச்சுவார்த்தையே என்று துருக்கித் தலைநகரில் பிரதமர் வாஜ்பேயி கூறியிருப்பது சர்வதேச சமூகத்தின் கவனத்தை வசீகரிக்கக் கூடியது. அதே சமயத்தில், அந்தப் பேச்சுவார்த்தை அர்த்தமுடையதாக இருக்க வேண்டுமானால் பயங்கரவாதத்துக்கான பயிற்சித் தளங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஒரு புறத்தில் காஷ்மீரில் பயங்கரவாத அட்டூழியங்களைப் பாகிஸ்தான் தூண்டிவிட்டபடியே இன்னொரு புறத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலாத காரியம். இதில் பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லையென்றால் அதற்கு இரு விதமாகப் பொருள்கொள்ள வேண்டியிருக்கும். ஒன்று இந்தியாவை அலைக்கழிப்பதற்கான, மிரட்டுவதற்கான உத்தியாகப் பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் கருதுகிறது; அல்லது பயங்கரவாத சக்திகளை ஒடுக்குவதற்கான சக்தி பாகிஸ்தான் அரசிடம் இல்லை. இரண்டில் உண்மை எதுவாக இருப்பினும் இத்தகைய நிலவரங்களில் பேச்சு வார்த்தைகளால் எந்தப் பலனும் விளையப் போவதில்லை.
ஆயினும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழலை உருவாக்க, காஷ்மீரில் தலைவிரித்தாடி வரும் பயங்கரவாத அட்டூழியங்களைக் கடுமையாகக் கண்டிக்கவாவது பாகிஸ்தான் முன்வர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, காஷ்மீரில் நடைபெற்று வருவது விடுதலைப் போராட்டம் என்ற கௌரவமான முத்திரையைக் குத்தப் பாகிஸ்தான் தயங்குவதில்லை. இப்படிச் செய்து கொண்டு சர்வதேச சமூகத்தை ஈர்ப்பதற்காக, காஷ்மீரை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று கூற பாகிஸ்தான் தலைவர்கள் தயங்குவதில்லை. ஆனால் ஜெனரல் முஷாரஃப் அந்த அளவுடனும் நிற்பதில்லை. காஷ்மீர்ப் பிரச்சினையைப் புதிய பார்வையுடன் அணுகவும் தயாராக இருப்பதாய் அவ்வப்போது பீற்றிக் கொள்ள அவர் தவறுவதில்லை.
2001 செப்டம்பர் 11-க்குப் பிறகு சர்வதேச சூழ்நிலையே புரட்சிகரமாக மாறிவிட்டது. அதைப் போலவே பல்வேறு நாடுகளுக்கிடையிலான உறவுகளும் மாறியுள்ளன. ஒசாமா பின்லேடனின் அல்காய்தா பயங்கரவாத இயக்கம் மனித சமூகத்துக்கே சவாலாகி இருக்கிறது. அதற்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் உலகளாவிய போருக்கு - ரஷியா, சீனா போன்ற பெரிய நாடுகள் ஆதரவு காட்டுகின்றன. அது மட்டுமல்ல, அந்தப் பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தானும் பங்கு கொண்டிருப்பதாக முஷாரஃப் பெருமைப்படவும் தயங்குவதில்லை. பயங்கரவாதம் எந்த உருவில் நடைபெற்ற போதிலும், அது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக முடியாது. அப்படியிருக்க காஷ்மீர்ப் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் நியாயம் கற்பிக்க முற்படும்பொழுது, எந்த நம்பிக்கையுடன் அதனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்?
பேச்சு வார்த்தைக்கு உகந்த ஆரோக்கிய சூழலை உருவாக்குவதற்குச் சில முன்னோடி நடவடிக்கைகளை வாஜ்பேயி பரிந்துரைத்திருக்கிறார். இருதரப்புக்குமே நன்மை பயக்கக்கூடிய வர்த்தக உறவுகள் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களின் மேம்பாட்டுக்கு, இருநாட்டு மக்களுக்கிடையே தொடர்பு வளர்வதற்கான வழிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் தற்பொழுது இருதரப்புக்குமிடையே நிலவி வரும் அவநம்பிக்கை மறைந்து பரஸ்பர நம்பிக்கை துளிர்க்க வழியேற்படும் - என்ற வாஜ்பேயியின் யோசனையைப் பாகிஸ்தான் பரிவுடன் பரிசீலிப்பது அவசியம். அதே சமயத்தில் இரு நாடுகளுமே மற்றொரு உண்மையை மறந்துவிடக் கூடாது. இரண்டுமே நிரந்தரமான அண்டை நாடுகள். இரண்டுக்குமிடையே நல்லுறவு நிலவுவது இரண்டின் அமைதியான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அவசியமாகும். அப்படியிருக்க இதில் மூன்றாவது நாடு தலையிட இடமே இல்லாதபடி பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் எல்லாப் பிரச்சினைகளிலும் உடன்பாடு காண்பதில் இருநாட்டு அரசுகளும் முனைவதே சரியான பரிகாரமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பாகிஸ்தான், பயங்கரவாத, எந்த, வரும், தயங்குவதில்லை, அதற்கு, சர்வதேச, காஷ்மீரில், காஷ்மீர்ப், வேண்டும்