முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்
- தொ. பராமசிவன்
திருவிழாக்கள் என்பது சமூக அசைவுகளில் ஒன்று ஆகும். திருவிழாக்கள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க இயலாது. சுடுவெயிலில் நடப்பவன் மரத்து நிழலில் தங்கி அடுத்து நடப்பதற்கான உடல், மன வலிமையினைச் சேர்த்துக் கொள்வது போலத் திருவிழா என்பது ஒரு ''சமூக இளைப்பாறுதல்'' நிகழ்வு ஆகும். ஆடுதல், பாடுதல் கூடிக் களித்தல் (மது அருந்துதல்) கூடி உண்ணுதல் ஆகிய அசைவுகளும் தொடர்ந்து வரும் அவற்றின் நினைவுகளும் ஒரு சமூகத்தைச் சோர்வின்றி இயங்கச் செய்கின்றன. இதுவே திருவிழாவின் பொருள் என்று சொல்லலாம். இன்று நாம் திருவிழா என்பதனைத் திருவள்ளுவர் ''சிறப்பு'' என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார். அதாவது '' பொது அல்லாத '' ஒரு சமூக நிகழ்வு என்று அதற்குப் பொருள். திருவிழா என்பது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரம் சார்ந்த ஒரு கொண்டாட்டமாகும். மணவிழா, பிறந்த நாள் விழா, மூத்தோர் வழிபாடு போன்ற வீட்டு விழாக்களுக்கு நாளும் நேரமும் தனித்தனியாகவே அமைந்துள்ளன. சமூகத் திருவிழாக்களுக்கு அவை ஒரே நேரத்தில் அமைய வேண்டும்.
உள்ளூர், சாதி, சடங்குகள், தெய்வங்கள் ஆகிய அளவுகோல்களை முன்னிறுத்தி நடைபெறும் திருவிழாக்களையே பொதுவாக நாம் திருவிழாக்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த எல்லைகளைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவதோடு ஒரே நிலப்பகுதியில் வாழும் மக்கள் திரள் கொண்டாடும் விழாக்களே உண்மையான திருவிழாக்களாகும். இந்தத் திருவிழாக்கள் அந்தந்த நிலப்பகுதியின் பருவநிலை சார்ந்தே பெரும்பாலும் அமைகின்றன. இந்தப் பருவ நிலைகள் என்பன குறிப்பிட்ட மொழி பேசும் அந்த மக்களின் நாட்காட்டி முறையின் படி வரையறுக்கப்பட்டதாகும்.
இந்த வகையில் தமிழர்களுக்குச் சாதியும், மதமும் கடந்த திருவிழாவாக இன்று எஞ்சி நிற்பது ''தைப்பொங்கல்'' திருவிழா மட்டுமேயாகும். ''தைப் பொங்கல்'' திருவிழாவும் இன்று நாள் (விண்மீன்) மாறியுள்ளது. ''மகரசங்கராந்தி'' என்ற பெயரில் ஆரியர்களின் சூரியக்கணக்கின்படி இத்திருவிழா தை மாதம் முதல் நாளில் தமிழர்களால் கொண்டாடப் பெறுகின்றது. ஆங்கிலேயர்களும் சூரியக் கணக்கினைப் பின்பற்றுபவர்கள் என்பதால் தைப்பொங்கல் அவர்களின் நாட்காட்டிப்படி எப்போதும் 14-ஆம் நாளில்தான் வருகின்றது. திராவிடர்கள் அல்லது பழந்தமிழர்கள் சந்திரக்கணக்கு நாட்காட்டி முறையினைக் கொண்டவராவர். ''திங்கள்'' என்ற தமிழ்ச் சொல் அதனால்தான் சந்திரனையும் குறிக்கின்றது. மாதத்தினையும் குறிக்கின்றது. சந்திரனுக்குரிய நாள் திங்கள் கிழமை என்றே பெயர் பெறுகின்றது. பழந்தமிழர்கள் ஒரு நாளினை அந்த நாளுக்குரிய விண்மீனைக் கொண்டே ''சித்திரை நாள்'', ''கார்த்திகை நாள்'' என்று அழைத்தனர். இன்றளவும் வேணாட்டு (திருவனந்தபுரத்து) அரச மரபினர், ''சித்திரைத் திருநாள்'' ''மூலம் திருநாள்'' என்றே பிறந்தநாளின் பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றனர். இன்றளவும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரும் குழந்தைகளின் பிறந்த நாளை நட்சத்திரத்தினை (நாள்மீனை)க் கொண்டே கொண்டாடுகின்றனர்.
பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு ஆரிய நாகரிகத் தாக்கம் காரணமாகத் தமிழர்கள் சில நேரங்களில் சூரியக்கணக்கு முறையினையும் சில நேரங்களில் சந்திரக் கணக்கு முறையினையும் பின்பற்றத் தொடங்கினார்கள். இதன் விளைவாகத் திங்கள் பிறப்பு நாள், ''மாதப் பிறப்பு'' நாளாக மாறிவிட்டது. பழந்தமிழர்களிடத்தில் முழு நிலவு நாளே மாதத்தின் தொடக்க நாளாக இருந்தது. ஆரியரின் சூரிய நாட்காட்டி முறையினைப் பின்பற்றியதால் அந்தத் திங்களுக்குரிய நாள் மீன் (நட்சத்திரம்) மாதத்தின் நடுவில் வருவதாயிற்று. கவிஞர் பாரதியார் தனது கட்டுரை ஒன்றில், அயன, விசுக்காலங்களைக் கணிப்பதில் 21 நாட்கள் பிழைபட்டுப் போனதாகவும் இதனால் திருவிழா நாட்கள் மாறி வருவதாகவும் இதனைத்திருத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் சந்திர நாட்காட்டி (சாந்த்ரமானம்) சூரிய நாட்காட்டி முறையாக (சௌரமானம்) மாற்றப்பட்டதால் வந்த குழப்பம் இதுவாகும்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் தன்னுடைய திருப்பாவை முதற்பாட்டில்,
''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்''
என்று மார்கழி முழு நிலவு நாளன்று பாவை நோன்பு தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் இன்று மார்கழி மாதத்தின் நடுவில்தான் முழுநிலவு நாள் வருகின்றது. ஆண்டாளின் கணக்குப்படி மார்கழி முழுநிலவு நாளில் தொடங்கிய பாவை நோன்பு தை முழுநிலவு நாளுக்கு முந்திய நாள் நிறைவடைகின்றது மறுநாள் முழு நிலவு நாளாகிய தைப்பூசம் நாளாகும். அன்று தான் ஆண்டாளின் கூற்றுப்படியே,
''பாற்சோறு மூடநெய் பெய்து
முழங்கை வழிவாரக் கூடியிருந்து''
குளிருகின்ற நாளாகும். அது பாவை நோன்பின் நிறைவான முப்பதாவது நாளாகும்.
இதுவே பழந்தமிழர்கள் கொண்டாடிய தைப்பொங்கல் திருநாள் ஆகும். தமிழ்நாட்டில் எல்லா ஆற்றக்கரைகளிலும் இன்றளவும் தைப்பூசப் துறைகளும், தைப்பூச மண்டபங்களும் காணப்படுவதே இதற்கு எடுத்துக்காட்டாகும். இவ்வகையான நிகழ்வுதான் கோயில் சார்ந்து கேரளத்தில் ''ஆறாட்டுத்'' திருவிழாவாகக் கொண்டாடப்பெறுகின்றது.
தைப்பூசம் போன்றே இன்றளவும் மாசி மாதத்துச் சிவராத்திரியும், பங்குனி மாதத்து உத்திரமும், சித்திரை மாதத்துச் சித்திரைத் திருவிழாவும், வைகாசி மாதத்து விசாகமும் முழுநிலவு நாட்களாகும்.
இந்த முழுநிலவு நாட்களே தமிழர்களின் திருவிழா நாட்களாகும். இந்தத் திருவிழா நாட்களை எல்லாம் ஆரியச் செல்வாக்கினால் உருவான பக்தி இயக்கம் தனதாக்கிக் கொண்டது. இவற்றுள், மாசி மாதத்துச் சிவராத்திரி முழு நிலவு நாளைத் தமிழகத்து மக்கள் இன்றளவும் நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக வைத்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் புவியியல் அமைப்பில் வட மேற்குப் பருவ மழையோடு தென்மேற்குப் பருவ மழையினையும் பெறுகின்ற நிலப்பகுதிகளாகும். எனவே இந்த மூன்று மாவட்டங்களிலும் மாசி மாதச் சிவராத்திரிக்குப் பதிலாகப் பங்குனி மாதத்து உத்திர நாளே நாட்டார் தெய்வ வழிபாட்டிற்குரிய நாளாக ஆகிவிடுகின்றது. திருஞானசம்பந்தரின் மயிலாப்பூர்ப் பதிகம் ''தைப்பூசம்,'' ''பங்குனி உத்திரம்'' ஆகிய இரண்டு நாட்களையும் பக்தி இயக்கம் தன்மயமாக்கிக் கொண்டதை உணர்த்துகின்ற சான்றாகும். இந்நாட்களில் குறிப்பிடத் தகுந்த மற்றொன்று, வைகாசி, மாதத்து விசாக நாள் ஆகும். அந்த நாள் புத்தர் பிறந்த நாளாகும். பின்னாளில் அது முருகனுக்கு (விசாகப் பெருமாளுக்கு) உரியதாகவும் ஆயிற்று. தென்கலை வைணவர்களுக்கு அது நம்மாழ்வார் பிறந்த நாளும் ஆகும்.
திருவிழாக்கள் பொதுவாகத் தமிழ் நிலத்தின் மரபாகக் தெய்வங்களைச் சார்த்தியே நடைபெறுகின்றன. (விடுதலை நாள், மே நாள் போன்ற சமயச் சார்பற்ற திருவிழாக்களைத் தமிழ்ச் சமூகம் இன்னமும் பண்பாட்டு ரீதியாக உள்வாங்கவில்லை) தமிழ் நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தை மாதம் முதல் ஆடிமாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்திலுள்ள நிலப்பகுதியாகும். எனவே வேளாண் தொழில் சார்ந்த பணிகள் பெரும்பாலும் இல்லாத இந்த காலப்பகுதியே தமிழர்களின் திருவிழாக் காலமாகின்றது. தமிழகத்து நாட்டார் தெய்வங்கள் (குறிப்பாக தாய்த் தெய்வங்கள்) இந்தக் கால அளவில்தான் கொண்டாடப்படுகின்றன என்ற உண்மை கள ஆய்வாளர்களுக்குத் தெரியும்.
இந்த வரையறையினைத் தாண்டிய சில திருவிழாக்களும் தமிழ் நாட்டில் உண்டு. இன்று பரவலாகக் கொண்டாடப் பெறும் தீபாவளி நாள் என்பது விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்குப் பார்ப்பனர் வழியாகத் தமிழ்நாட்டுக்கு வந்த திருவிழா ஆகும். வடநாட்டில் இது சமண சமயத்தைச் சேர்ந்த திருநாள் ஆகின்றது. விசயநகர அரசு நாட்டார் பண்பாட்டோடு சமரசம் செய்து கொள்ள நேர்ந்த போது நவராத்திரித் திருவிழா (தசரா) வினைப் பெரிதுப்படுத்தியது. எருமைத்தலை அரக்கனை ஆயுதம் ஏந்திப் போரிட்டு அழித்த தாய்த் தெய்வத்தின் கன்னட நிலப்பகுதிக் கதை சிலப்பதிகார காலத்திலேயே தமிழகத்தில் அறிமுகமாகியிருந்தது. அந்தக் கதையினை விசயநகர அரசமரபு கொண்டாடத் தொடங்கிய போது ஆயுதம் ஏந்திய (தந்தைச் தெய்வச் சார்பு இல்லாத) தமிழகத்தின் தாய்த்தெய்வங்களும் புத்துயிர் பெற்றன.
இதன் விளைவாக வைதீகத்துக்கு மாற்றான திருவிழாக்களைத் தமிழ் நாட்டார் மரபு தனது வலிமையான பண்பாட்டுக் கருவியாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. அரசியல் வரலாறும், சமூக வரலாறும் மாற்றங்களைச் சந்திக்கின்ற போது அம்மாற்றங்களின் பண்பாட்டு வெளிப்பாடாக இந்தத் திருவிழாக்களே அமையும்.
நன்றி: தமிழர் கண்ணோட்டம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நாள், திருவிழா, ஆகும், நாட்காட்டி, திருவிழாக்கள், நாட்டார், முழுநிலவு, இன்றளவும், இன்று, நிலவு, நாளாக, திருநாள், சமூக, நாளாகும், தமிழ், என்பது, மாதத்து, திங்கள், முழு, பிறந்த, குறிப்பிட்ட, மாசி, இந்தத், தைப்பூசம், மாதத்துச், தெய்வங்கள், போது, விசயநகர, பருவ, பங்குனி, பாவை, தைப்பொங்கல், பக்தி, பழந்தமிழர்கள், ஆகிய, நாளில், அந்த, மார்கழி, தமிழர்களின், மாதத்தின், கொண்டே