முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » இலங்கை: அழிவுக்குப் பின் உயிர்ப்பு
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - இலங்கை: அழிவுக்குப் பின் உயிர்ப்பு
- கண்ணன்
அண்மையில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. போராலும் இன - மதக் கலவரங்களாலும் படுகொலைகளையும் பெரும் அழிவையும் சந்தித்திருக்கும் கிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் சில நாள்கள் சிறு சந்திப்புகளிலும் நண்பர்களுடனான உரையாடலிலும் தொடர்ச்சியான பயணங்களிலும் கழிந்தன.
அமைதி உடன்படிக்கைக்குப் பின்னரும் கிழக்கில் மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்கள் பெருமளவிற்கு ராணுவ மயமாகவே உள்ளன. இளைஞர்கள் தெருவில் மண்டிபோட்டு கைஉயர்த்தி நிற்க வைக்கப்பட்டு ராணுவத்தால் சோதனை செய்யப்படுவதைப் பார்க்க முடிந்தது.
பாசி குடா என்ற புகழ்பெற்ற கடற்கரைச் சுற்றுலா மையம் கிழக்கின் போர்க்கால அழிவிற்கு ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த அந்த இடம், அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு திறந்து விடப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற போது மிக அற்புதமான அந்தக் கடற்கரையில் யாருமே இல்லை. அங்கிருந்த நட்சத்திர ஹோட்டல் உட்பட அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகிவிட்டன. ஆனால் கிழக்கின் பாதிப்பு, பொருண்மையான அழிவுகளுடன் நின்றுவிடவில்லை. கிழக்கில் நடந்துள்ள படுகொலைகள் யாழ்ப்பாணத்தை விட அதிகமானவை. யாழ்ப்பாணத்தில் நடப்பது எளிதில் உலகின் கவனத்தைப் பெறுகிறது. கிழக்கில் நடக்கும் படுகொலைகள் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் போய்விடுகின்றன என்றார் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த மூத்த அறிஞர் ஒருவர்.
கிழக்கில் ராணுவத்தின் இருப்பை இலங்கையில் நிலவும் இன முரண்பாட்டின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். அத்தோடு இந்த அமைதிக் காலத்தில் வலுப்பெற்று வரும் இன்னொரு முரண்பாடு எல்.டி.டி.ஈ.க்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலானது. தமிழகத்தைப் போல அங்கு இஸ்லாமியர்கள் தமிழ் அடையாளத்தினுள் இல்லை. குடியிருப்புகளும் இங்கு போல் அல்லாமல், எந்தக் கலப்புமற்று இஸ்லாமியர் தனியாகவும் தமிழர் தனியாகவும் வாழும் பிரதேசங்களாகவே உள்ளன. (இலங்கையில் முஸ்லிம்கள் என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது).
இஸ்லாமியர்கள் அங்கு எல்.டி.டி.ஈ. மீது நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 40,000 இஸ்லாமியரை எல்.டி.டி.ஈ. கெடு வைத்து வெளியேற்றியதை அவர்கள் தம் நெஞ்சில் கனலாக ஏந்தி நின்றனர். இந்தப் பின்னணியில் இஸ்லாமிய அமைப்புகள் சில, தீவிரவாதத்தை நோக்கிப் பயணப்படுவது தமிழ் இஸ்லாமிய மிதவாதிகள் மற்றும் நடுநிலையாளர்களால் கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர் ஒரு தனித் தேசிய இனமாக, சோனகர் என்ற அடையாளத்தின் கீழ் திரள்வது பற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன.
ஒரு நிரந்தர உடன்படிக்கை ஏற்படுவதற்கு இடையூறாக தமிழ் - இஸ்லாமிய முரண்பாடு அமையும் என்றும், இந்த முரண்பாட்டைச் சிங்களப் பேரினவாதம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அஞ்சப்படுகிறது. எல்.டி.டி.ஈ. அதிகாரம் ஏற்ற பின்னர் இஸ்லாமியருடன் இணைந்து செயல்படவே விரும்புவார்கள்; எனவே பழைய புண்களைக் கிளறி, பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டியதில்லை என்ற கருத்தும் ஒரு சாராரிடம் நிலவுகிறது.
யாழ்ப்பாணம் நோக்கிய பயணம் மிகவும் கொடுமையானது. காரணம் மோசமான சாலைகளோ, ராணுவ மற்றும் எல்.டி.டி.ஈ. சோதனைகளோ, சுங்கச் சாவடிகளில் பல மணிநேரங்களைச் செலவிட வேண்டியிருப்பதோ அல்ல. சிங்களர்களின் குடியிருப்புப் பகுதிகளைத் தாண்டி, தமிழ்ப் பிரதேசத்தில் நுழைந்தபின் சுமார் நூறு கி.மீ. பாதையில் ஒரு குடியிருப்போ, வீடோ, ஆலயமோ இன்றி அழிக்கப்பட்டுள்ள காட்சி மிகப் பயங்கரமானது. அதுவும் ஆனையிறவுப் பகுதியில் யுத்தத்தின் ஷெல் வீச்சுகளால் தோப்பு தோப்பாக நூற்றுக்கணக்கான தென்னை, பனை மரங்கள் தலை இழந்து நிற்கின்றன. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் சீருடையும் பாதுகாப்புக் கவசங்களும் அணிந்து கண்ணிவெடிகளை அகற்றி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நகரினுள் கோட்டையைப் பிடிக்கும் யுத்தங்களில் பல பகுதிகள் வான்வழிக் குண்டு வீச்சுகளில் அழிந்துள்ளன. போரில் பல சிற்றூர்கள் முழுவதுமாக அழிந்துவிட்டன. இப்போது கண்டெடுக்கப்படும் புதை குழிகளிலிருந்து பல படுகொலைகளின் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. நான் சந்தித்த பெரியவர் ஒருவர், போரும் புனரமைப்பும் யாழ்ப்பாணத்தின் சரித்திரத்தின் பகுதி. மிகப் பழைமையான இந்நகரில் நீங்கள் புராதனச் சின்னங்களைப் பார்க்க முடியாது. ஏனெனில் அவை எங்கள் வரலாறு நெடுகிலும் நடந்துவரும் கைப்பற்றல்களிலும் மீட்புகளிலும் அழிந்துவிட்டன என்றார்.
இருப்பினும் இலங்கையின் கதை பேரழிவுடன் முற்றுப்பெறவில்லை. வியக்கத்தக்க வகையில் தமிழ்ப் பிரதேசங்கள் உயிர்ப்புப் பெற்று வருகின்றன. அழிக்கப்பட்ட ஒவ்வொரு சிற்றூரும் மறு நிர்மாணம் பெற்று வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலில் 25 நாள்கள் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. கோயிலும் அயல்வாழ் தமிழர்களின் உதவியுடன் புனர் நிர்மாணம் பெற்றுள்ளது. எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஒரு மாற்று தமிழீழ அரசாங்கம் திறம்பட நிர்மாணம் பெற்றுள்ளது. தமிழீழப் போக்குவரத்துக் கழகம், தமிழீழ நீதிமன்றம், தமிழீழ காவல்துறை, வங்கி என பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. நேரம் கூட, இலங்கையிலிருந்து அரை மணி வேறுபட்டு, இந்திய நேரப்படி இயங்குகிறது தமிழீழம்.
கொழும்பு - யாழ்ப்பாணம் பாதை திறக்கப்பட்ட பிறகு சிங்களரும் பெருமளவில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சில பௌத்த ஆலயங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்களை ஈர்த்து வருகிறது. அரசாலும் ஊடகங்களாலும் மறைக்கப்பட்ட போர்க்கால பேரழிவுகள் அவர்கள் நெஞ்சங்களை அதிர வைத்து சில புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
சிங்களர்களின் ஒரு தலைமுறை போரில் அழிந்துவிட்டது. ஒரு ராணுவ பிரிகேட் முகாமிற்கு முன்னர் பெரும் நினைவுச் சுவர் முழுவதிலும் போரில் இறந்தவர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இவ்வாறு ஒவ்வொரு பிரிகேடின் முகாமிலும் காணலாம் என்று நண்பர்கள் கூறினர். எல்.டி.டி.ஈ.யின் மாவீரர் துயிலும் நிலங்கள் கல்லறைகளால் நிரம்பி வழிகின்றன. யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றிய பின்னர் அங்குள்ள மாவீரர் துயிலும் நிலத்தின் கல்லறைகள் தகர்க்கப்பட்டு, நிலம் உழப்பட்டது. இப்போது அமைதிக் காலத்தில் மறு நிர்மாணம் பெற்றுள்ளது. மரணத்திற்குப் பின்னும் தொடர்கிறது போர்!
ஆனையிறவுப் பாதையை எல்.டி.டி.ஈ. கைப்பற்றியதும் கொழும்பு விமான நிலையத்தின் மீது தொடுத்த வெற்றிகரமான தாக்குதலும் இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளியது. யாழ்ப்பாணம் வாயில் வரை வந்த எல்.டி.டி.ஈ., அயல் அரசுகளின் நெருக்கடியால் அதைக் கைப்பற்றாமல் விட்டுவிட்டது. செப்.11க்கு பின்னர் எல்.டி.டி.ஈயின் அயல் வங்கிக் கணக்குகள் அமெரிக்க அரசால் முடக்கப்பட்டன. மேற்படி நிதர்சனங்களும் பரஸ்பரப் புரிதல்களும் சமாதானத்தை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்தும் என நம்பலாம். சிறுபான்மையினர் ஆதிக்கம் பற்றிய பயம் எவ்வாறு பேரழிவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு இலங்கை ஓர் உதாரணம்.
போர்க்காலப் பொருளாதாரத்தின் அனுகூலங்களை அனுபவித்துவரும் வர்க்கம், அமைதியையும் படுகொலை செய்து புதைக்குமா அல்லது தாற்காலிக அமைதி உடன்படிக்கை நீடித்து நிலைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலங்கை: அழிவுக்குப் பின் உயிர்ப்பு - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - யாழ்ப்பாணம், வருகின்றன, நிர்மாணம், கிழக்கில், பின்னர், தமிழீழ, போரில், இஸ்லாமிய, பெற்றுள்ளது, தமிழ், ராணுவ, அமைதி, பார்க்க, பிறகு, யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணத்தை, இலங்கையில்