முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பனியர்களின் உணவுத் திருவிழா
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பனியர்களின் உணவுத் திருவிழா
- எஸ்.எம். செல்வராஜ்
இயற்கைக்குப் புறம்பான இன்றைய நாகரீக உலகால், மனிதனின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது. இந்த நிலையில் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் அறிவியல்பூர்வமான வாழ்வியலும், கலாச்சாரமும், நீலகிரிவால் பழங்குடி மக்களிடம் அமைந்துள்ளது. மண்ணையும், இயற்கையையும் மறந்து போன நவீன மனிதனுக்கு அதை உயர்த்துகின்றன பனியர் இன ஆதிவாசிகளின் திருவிழா.
தமிழ்நாட்டின் நுரையீரலாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உள்ளது. எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த சோலைகளும், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர்காடுகள், முட்புதர்க்காடுகள், சவானா காடுகள், புல்வெளிகள் என பலவகையான தன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இங்கிருந்துதான் காவேரி முதல் கபினி, பவானி, மாயார், பாண்டியார், புன்னம்புழா போன்ற நூற்றுக்கணக்கான ஜீவநதிகள் உற்பத்தியாகி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்களை வளம் கொழிக்கச் செய்கின்றன.
நீலதிரி ஆதிவாசிகளான பனியர், இருளர். காட்டு நாயக்கர், குரும்பர், முள்ளுக்குரும்பர், தொதவர், கோத்தர் ஆகியோர்களின் பாரம்பரிய பூமி என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையுடன் இசைந்த இவர்களின் வாழ்வும், இங்குள்ள வனச் செல்வத்தை சுழற்சி முறையில் பயன்படுத்திப் பேணிப் பாதுகாத்தனர். பிற மாநிலத்தின் வசதி படைத்த வந்தேறிகளாலும், வனத்துறையாலும் இவர்களின் பாரம்பரிய காடும், நிலமும் சூறையாடப்பட்டுள்ளன. காடுகளையும், தாய் மண்ணையும், இழந்து நலிவுற்று வாழும் இம்மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் தன்னை ஒரு நாகரீக மனிதனாக சொல்லும் இன்றைய மனிதனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வறுமை மிகுந்து வாழ்ந்தாலும் ஆதிவாசிகள் தங்களது கலாச்சார திருவிழாக்களை அதே பாரம்பரிய தன்மையுடன் கொண்டாடுகின்றனர்.
ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் கூடலூர் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும். அக்டோபர் மாதம்வரை தொடர்ந்து பெய்யும். மழை தொடங்கும் காலத்தில் ஆதிவாசிகளும் இதர விவசாயிகளும் இயற்கையான முறையில் கிழங்குகள், கேழ்வரகு, பாரம்பரிய நெல்லான மரநெல், கோதண்டம், கொடவள்ளி, மல்லிக் குருவை, செந்நெல், கந்தசாலா, சீரகசாலா போன்ற தானியங்களை விதைக்கத் தொடங்கி விடுவார்கள். அக்டோபர் மாதங்களில் பயிர்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி காற்றிலே கலந்து நறுமணம் கமழும், மலைத் தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும், ரீங்காரமிட்டு தேன் சேகரிக்கும்.
இந்த மாதங்களில்தான் ஆதிவாசிகள் விதவிதமான பூக்களின் தேன்களைச் சுவைப்பார்கள். இந்த இயற்கையின் செயல்பாட்டுக்கு ஏற்ப ஆதிவாசிகளும் இசைந்து பூக்களுக்கும், புது அரிசிக்கும் திருவிழா எடுத்து தங்கள் கடவுளுக்குப் படைப்பார்கள். இந்த விழா கடந்த நவம்பர் 26-ம் தேதி கூடலூருக்கு அருகில் உள்ள வேட்டைக்காரன் கோவிலில் நடைபெற்றது. கூடலூரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் நம்பால்கோட்டை பழங்குடி மக்களின் கடவுளான வேட்டைக்காரன்சாமி. நம்பாலக்கோட்டை கூடலூர் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இங்குதான் கூடலூரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் வாழ்ந்துள்ளனர். இதில் முதலாவது தலைவராக (மன்னர்) ஆதிவாசிகளே இருந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் உள்ள நிலம்பூர் அரசர்களுக்குக் கைவசமாகிறது. இதைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கடவுள் திரிக்கப்பட்டு ஆரிய கடவுள்களாக மாற்றப்படுகிறார். பழங்குடிகளின் வேட்டைக்கார சாமி சிவனின் அவதாரம் என்றும், பழங்குடி சாமிக்கான அடையாளங்கள் மாற்றப்படுகிறது. மன்னர்கள் வாழ்ந்த சிறிய அரண்மனையே இன்று கோவிலாக மாற்றப்பட்டு இருப்பதோடு, ஆதிவாசிகளோடு தோடர்பில்லாத பல கடவுள்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கோவில் நவீனமயப்படுத்தப்பட்டு இருந்தாலும், ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த ஒரு கல்லையே இன்றும் வணங்குகின்றனர்.
புது தானியத்துக்கு விழா எடுக்கும் பனியர் இன ஆதிவாசி மூப்பர்கள் பத்து நாட்களுக்கு முன்பு குளித்து சுத்தமாக இருப்பதோடு, நோம்பு விரதம் இருப்பார்கள். பத்தாவது நாள் கூடலூர் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பனியர்கள் குடும்பத்துடன் புத்தூர் வயல் என்ற இடத்தில் விடியற்காலையில் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். பனியர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை வயதான ஆண்கள் இசைக்க. அதற்கு ஏற்றவாறு பெண்கள் குழுவினர் வட்டமாக நடனமாடுவார்கள். ஹ,ஹா என தாளத்துக்கு ஏற்ப குரல் எழுப்பி, கைகளை மேலும், கீழுமாக தூக்கி, எல்லோரையும் கவரும் விதத்தில் மிக அருமையாக ஆடுவார்கள்.
''ஏன் வட்டமாக ஆடுகிறீர்கள்?'' என்று நடனமாடிய ஒரு பெண்மணியைக் கேட்டபோது ''பூமித்தாயை ஞாபகப்படுத்தும் விதமாக வட்டமாக ஆடுகிறோம்'' என்றதோடு, ''கடவுளை நாங்கள் இயற்கையில் இருந்து பிரித்தெடுத்துத் தனியாகப் பார்க்கவில்லை. எங்களுக்கு சுகமான வாழ்க்கைய இந்த இயற்கைதான் தருகிறது. ஆகவே ஆடிப்பாடி, விழா எடுக்கிறோம்'' என்றார்.
பனியர் இன மூப்பர்கள் புதிய தானியங்களை அறுவடை செய்து, மூன்று கட்டாகக் கட்டி, தலையில் தூக்கி வருகின்றனர். நான்குப் பக்கமும் மலைகள் சூழ்ந்த பசுமையான ஒரு இடத்தில் வட்டமாக அமைக்கப்பட்டு, நடுவில் கருமையான நிறத்தில் ஒரு கல் இருக்கிறது. இந்தக் கல்மீது நெல் கட்டுகளை வைத்து, பழங்காலத்து விளக்கைக் கையில் ஏந்தி, அந்த தீபத்தில் கடவுளை வணங்குகின்றனர். இதைத் தொடர்ந்து இரண்டு கட்டு புதிய தானியங்களை இரு மூப்பர்கள் தலையில் சுமந்து, ஸ்ரீமதுரை, மங்குழி என்ற இடங்களில் இருக்கும் இவர்களின் கோவில்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
எடுத்துச் சென்ற மூப்பர்கள் திரும்பி வரும்வரை அதே இடத்தில் இசையுடன் நடனம் பல மணி நேரம் நடைபெறுகிறது. மூப்பர்கள் திரும்பி வந்ததும், மீதி இருக்கும் ஒரு கட்டு தானியத்தை மூப்பர் ஒருவர் தலையில் சுமக்க இசை நடனத்துடன் ஊர்வலமாகப் புறப்படுகின்றனர் நம்பாலக்கோட்டை வேட்டைக்காரன் சாமி கோவிலுக்கு. இதுவரைக்கும் வேறு எந்த இனத்தின் கலப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க பனியர்களின் பாரம்பரிய கலாச்சார முறைப்படியே விழா நடக்கிறது.
இந்த ஊர்வலம் வந்து சேர்வதற்கு முன்பாக ஊட்டி சோலூர் என்ற இடத்தில் வாழும் வேறு இனமான கோத்தர் என்ற ஆதிவாசி இன மக்கள் ஆண்களும், பெண்களுமாக ஒன்று கூடி பிரமாண்டமான இசைக் கருவிகளுடன் தங்கள் பாரம்பரிய உடையில் இசை முழங்குகின்றார்கள். பனியர்களின் புதிய தானிய ஊர்வலம் கோவிலுக்கு அருகில் வரும்போது இந்த ஊர்வலத்துக்கு முன்பாக கோத்தர்கள் குழு, இசையுடன் முன்னோக்கிச் செல்ல நம்பாலக்கோட்டையில் உள்ள வேட்டைக்காரன் சாமி கோவிலுக்குள் செல்கின்றனர். அங்கு ஒரு கல்லின்மீது புதிய தானியக் கதிர்களை வைத்து ஆதிவாசி முறைப்படி வழிபடுகின்றனர்.
இந்த நிலையில் எதிர்ப்பக்கமாக இருக்கும், ஒரு கோவில் கட்டிடத்திற்குள் இருந்து ஒரு அய்யர், கையில் ஒரு தூக்குச் செம்பில் தண்ணீருடன் வருகிறார். இவர் கூடவே வேறு சில அய்யர்களும் வருகின்றனர். அப்போது ஆதிவாசிகள் விலகிக் கொள்கின்றனர். செம்பில் உள்ள தண்ணீரை ஆதிவாசிகள் கொண்டு வந்த தானியக் கட்டு மீது அய்யர் தெளிக்கின்றார். இது ஏன் என்று கேட்டபோது தீட்டு போக என்கின்றனர். இதற்குப் பிறகு அந்தக் கட்டை தலையில் சுமந்துகொண்டு மூன்று முறை அருகில் இருக்கும் ஒரு கோவிலைச் சுற்றி, கடைசியாக பெரிய கோவிலுக்கு(அரண்மனை) எடுத்துச் செல்கின்றனர்.
அங்கு கோவிலின் உள்ளே புதிய தானியக் கட்டு கொண்டு செல்லப்படுகிறது. அய்யர்களின் மந்திர பூசை செய்யப்படுகிறது. கோத்தர்கள் மாத்திரம் கோவிலுக்கு வெளியே இசை முழங்க வட்டமாக ஆடுகின்றனர். பனியர் இன ஆதிவாசிகள் மூப்பன் உட்பட பலர் கோவிலைச் சுற்றிய பிறகு இருக்கும் ஓரமான பகுதிகளில் அமர்ந்துவிடுகின்றனர். இந்த விழாவை உன்னிப்பாகக் கவனிக்கும் நபருக்கு திடீரென பனியர் இன மக்கள் ஒதுங்கி இருப்பது (ஒதுக்கப்பட்டது) அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஏன் மக்கள் ஒதுங்கி இருக்கிறார்கள் எனக் கேட்டபோது. ''கோவிலில் கஞ்சி ஊற்றுவார்கள், அதை குடிக்கத்தான்'' என்கின்றனர் அப்பாவித்தனமாக ஆதிவாசிகள்.
பெரிய கோவிலில் பூசை முடிந்தபிறகு திருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும், புதிய தானியக் கட்டிலிருந்து கதிர்களை உருவி, அய்யர்கள் கொடுக்கின்றனர். இதை எல்லோரும், வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், புதிதாக விளையக்கூடிய தானிங்களை உண்ண வேண்டும் என்பது ஆதிவாசிகளின் கலாச்சாரமாகும். மேற்கண்ட திருவிழா, பல்வேறு உண்மைகளைப் புலப்படுத்துவதாக இருப்பதோ, இத்திருவிழாவுக்கு ஆதிவாசி அல்லாத பலர் இன்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
நன்றி: புதிய பார்வை
தேடல் தொடர்பான தகவல்கள்:
பனியர்களின் உணவுத் திருவிழா - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பாரம்பரிய, ஆதிவாசிகள், பனியர், உள்ள, மூப்பர்கள், வட்டமாக, இருக்கும், கோவிலுக்கு, தானியக், தலையில், இடத்தில், விழா, கட்டு, செல்கின்றனர், எடுத்துச், ஆதிவாசி, பனியர்களின், வருகின்றனர், வேறு, கேட்டபோது, மக்கள், பல்வேறு, கூடலூர், தொடர்ந்து, இவர்களின், மூன்று, ஆதிவாசிகளின், திருவிழா, தானியங்களை, தங்கள், பழங்குடி, பிறகு, இருந்து, கோவிலில், அருகில், வேட்டைக்காரன், சாமி