முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும்
- வேலு சரவணன்
இந்திய அளவில் குழந்தைகள் நாடகத் துறையைப் பொறுத்து, பேசப்படும் மிகச் சிலருள் ஒருவர் வேலு சரவணன். குழந்தைகளின் நுண்ணறிவுக்கும் படைப்பாற்றலுக்குமான பல்வேறு பயிலரங்குகளை நடத்தியுள்ளார். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். டில்லி சங்கீத நாடக அகாதமி நாடக விழாவில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பங்களித்தவர். ஸ்விட்ஸர்லாந்து ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்று நாடகங்கள் நிகழ்த்தியுள்ளார். நாடகக் கலையில் முதுகலைப் பட்டமும் சிறார் நாடகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ள வேலு சரவணன், ''ஆழி'' என்ற நாடகத் குழுவையும் உருவாக்கி நடத்தி வருகிறார். புதுவை அரசு, இவரது பங்களிப்புகளைப் போற்றி ''நேரு இலக்கிய விருது'' வழங்கி கௌரவித்துள்ளது. சென்ற மாதம், பாண்டிச்சேரியிலிருக்கும் வேலு சரவணன் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.
தீராநதி: முதலில், எப்படி ஒரு நாடகக்காரராக நீங்கள் உருவானீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.
வேலு சரவணன்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கம்பர்கோவில் என்ற கிராமம் எங்கள் ஊர். காவேரி டெல்டா பகுதியிலுள்ள நல்ல அழகான, செழிப்பான கிராமம். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா வழித் தாத்தா மாட்டுத் தரகு தொழில் செய்துவந்தார். அம்மா வழித் தாத்தா காமண்டி பண்டிகைகளில் லாவணி பாடல்கள் பாடுவதில் தேர்ந்தவர். இப்போது சிந்தித்துப் பார்க்கும் போது, நான் நாடகக்காரனாக அம்மா வழித் தாத்தா ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி கலைத்துறை ஈடுபாடுடையவர்கள் எவரும் எங்கள் குடும்பத்தில் கிடையாது. ஊரில் தொடக்கப் பள்ளி வகுப்புகளையும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியை புதுக்கோட்டையிலும் முடித்தேன். . மேல்நிலைப் பள்ளி படித்துக் கொண்டிருந்த போது என் தந்தை காலமானார். தொடர்ந்து எனக்குப் படிப்பதில் பெரிய விருப்பங்கள் இல்லை. ஆனால், ''அப்பா காலத்துக்குப் பிறகு அவர்கள் நொடிந்து போய்விட்டார்கள்'' என்று மற்றவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதுக்காகவாவது நான் படித்தாக வேண்டியதிருந்தது. எனவே அண்ணனின் நண்பர் ஒருவர், என்னை அழைத்துக் கொண்டு போய் அருப்புக்கோட்டை கல்லூரியில் சேர்த்தார். அங்கே நான் இளங்கலையில் இயற்பியல் தேர்வு செய்தேன்.
அருப்புக்கோட்டை கல்லூரியில்தான் முதன் முதலில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். மாணவர்கள் விடுதி காப்பாளர் தேவராஜ் நடிக்கக் கற்றுத் தந்தார். ''மூட்டா'' நடத்திய கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று நாடகங்கள் போடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு முதுகலைக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே வேறு ஏதாவதுதான் படித்தாக வேண்டும் என்னும் நிலையில் - ''தினத்தந்தி'' பத்திரிகையில் வெளியான ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு - வேலை வாய்ப்புடைய படிப்பு என்று, எங்கள் அண்ணன் என்னை பாண்டிச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். நான் அதற்கு விண்ணப்பித்தேன். சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் முதல் ''செட்'' மாணவன் நான். அங்கே நடிப்பு கற்றுவிட்டு திரைப்படத் துறைக்குப் போகலாம் என்ற ஆசை எனக்கு அப்போது இருந்தது. ஆனால் படித்து முடித்த போது திரைப்படம் மீதிருந்த விருப்பம் வடிந்து, அதனைவிட நாடகம் முக்கியம் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது.
தீராநதி: நீங்கள் படித்த போது நாடகத்துறையில் யாரெல்லாம் இருந்தார்கள்?
வேலு சரவணன்: இந்திரா பார்த்தசாரதி இயக்குநராக இருந்தார். அவர் வர்ஸா (போலந்து) பல்கலைக்கழகத்தில் இருந்து நேரே வந்திருந்தார். உலக நாடகத் துறையைப் பொறுத்தவரைக்கும் முக்கியமானவர் அவர். எனவே பல்கலைக்கழகத்தில் அந்தத் துறைக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. மாணவர்களுக்கு இந்திரா பார்த்தசாரதி பெரிய ஒரு உத்வேகமாக இருந்தார். கடுமையான பயிற்சிகளும் உண்டு. பிரபஞ்சன், அ. ராமசாமி, வி. ஆறுமுகம், கே.ஏ. குணசேகரன், ராஜூ ஆகியோர் அப்போது அங்கே ஆசிரியர்களாக இருந்தார்கள். துறையின் பொற்காலம் அது. இப்போது அதன் நிலமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தமிழில் இயங்கிக் கொண்டிருக்கிற நாடகத்துக்கான ஒரே பள்ளி அது ஒன்றுதான் என்னும் நிலையில் இது நிச்சயம் கவலைக்கிடமானதுதான்.
நாடகத்துறையில் கடைசியில் தேர்வுக்காக மாணவர்கள் நாடகம் தயாரிக்க வேண்டும். நான் ''கடல்பூதம்'' என்ற நாட்டுப்புறக் கதையை நாடகமாக்கினேன். எனக்கு அது நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்திரா பார்த்தசாரதி என்னிடம், ''நீ ஒரு நல்ல குழந்தைகள் நாடகக்காரனாக வருவாய்'' என்று சொன்னார். அதன்பிறகு அந்த நாடகம் மிகவும் பிலபலமுமானது. கிட்டத்தட்ட இதுவரைக்கும் 3000 முறைக்கு மேல் அதனை அரங்கேற்றியிருக்கிறோம்.
தீராநதி: படிப்பு முடிந்ததும் வேலைக்கான வாய்ப்புகள் எப்படி இருந்தன?
வேலு சரவணன்: சுத்தமாக இல்லை. எனவே என்னுடைய நண்பன் ஒருவனுடன் சேர்ந்து நாடகங்கள் போட்டு, அதில் வந்த வருமானத்தைக் கொண்டு நாட்களை நகர்த்தி வந்தோம். பிறகு சென்னை சென்று, அங்கு ஆறு மாதங்கள் இருந்தேன். தொடர்ந்து சென்னையில் இருக்க முடியாது என்றானதும், மீண்டும் பாண்டிச்சேரி திரும்பி பள்ளிக் கூடங்களில் நாடகம் போடத் தொடங்கினேன். அப்போது புதுச்சேரி கல்வித்துறை இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ் எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் சென்று நாடகம் போடுவதற்கான வாய்ப்புகளை எனக்கு உருவாக்கித் தந்தார். எங்கள் நாடகக் குழுவுக்கு ''ஆழி'' என்கிற பெயரை வைத்தது அவர்தான். பன்னிரெண்டு மாணவர்கள் என்னிடம் சேர்ந்தார்கள். இது ஒரு நம்பிக்கையை எனக்குத் தந்தது. எனவே தொடர்ந்து பாண்டிச்சேரியிலேயே இருந்தேன்.
தீராநதி: உங்களைக் கவர்ந்த நாடகக்காரர் என்று யாரைக் குறிப்பிட விரும்புவீர்கள்? தமிழ் நாடகக் கலைஞர்களைப் பற்றி கேட்கிறோம்.
வேலு சரவணன்: செ. ராமானுஜத்தைச் சொல்லலாம். அவர் மிகச் சிறந்த நாடக இயக்குநர். ந. முத்துசாமி, மு. ராமசாமி போன்றவர்கள் மாதிரி அனுபவம், விருப்பு, கலைத்தேடல் சார்ந்த கலைஞர் இல்லை அவர். எங்களை மாதிரி நாடகத்தை முறையாகக் கற்று வந்தவர். இதனால் சென்னைக் கலைக்குழு, கூத்துப்பட்டறை, யதார்த்தா என்று எல்லா வகை நாடகப் பாணிகளிலும் அவரால் இயக்க முடியும். எப்படி நடிகனைப் பாத்திரமாக மாற்றுவது, நாடகத்தை வடிவமைப்பது என்பதை அவரிடம்தான் நான் கற்றுக் கொண்டேன்.
மற்றபடி அறுபதுகளில் நவீன நாடகம் அறிமுகமாகும் போது அதில் செயல்பட்ட எல்லா நாடகக் கலைஞர்களும் என்னைப் பாதித்திருக்கிறார்கள். அந்தவகையில் ஞாநியை முக்கியமானவர் என்று கருதுகிறேன். அவர் அரங்கேற்றிய பாதல் சர்க்காருடைய ''கமலா'' நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது நவீன நாடகம் பற்றிய விவாதங்களில் அவர் பெயர் ஏனோ தவிர்க்கப்படுகிறது. அவரது பங்களிப்பை அவ்வளவு சுலபமாக தவிர்த்து விட முடியாது. பாதல் சர்க்கார் தமிழகத்துக்கு வரக் காரணமாக இருந்தவர் அவர்தான். அவர் தன்னுடைய பாணி குறித்து தீர்மானமாக இருந்தார். அவருடைய பாணி, சென்னை நகரத்தின் நடுத்தர மக்களுடைய வடிவம். மற்ற நகரங்கள் பற்றி அவர் கவனம் செலுத்தவில்லை. என்றாலும், சென்னையுடன் சம்பந்தப்படாதவர்களாலும் அதனை ரசிக்க முடியும். அவர் நாடகங்களை புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்காது. பத்திரிகையாளராகவும் அவர் இருப்பது அந்த வகையில் அவருக்கு உதவுகிறது என்று நினைக்கிறேன்.
தீராநதி: ஒரு நடிகராக நடிப்புக்கான சக்தியை எங்கேயிருந்து பெறுகிறீர்கள்?
வேலு சரவணன்: சிறுவர்களிடமும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடமும் இருந்துதான். என் பையனிடமிருந்தும் மகளிடமிருந்தும் நான் நடிப்பை கற்றுக் கொள்கிறேன். நான் ஒரு குழந்தைப் பார்வையாளனாகவும் இருந்துதான் என் நாடகங்களை உருவாக்குகிறேன்.
தீராநதி: எங்கேயிருந்து நாடகத்துக்கான தளங்களை உருவாக்குகிறீர்கள்?
வேலுசரவனன்: நீர் நிலைகளிலிருந்து நிலத்துக்கு குளிர்காற்று வருகிறது. உடனே குட்டிகளுடன் ஆடுகளும், கன்றுகளுடன் மாடுகளும் பஞ்சு முடியும் நீள் காதுகளும் கொண்ட கழுதைக் குட்டிகளோடு அவற்றின் தாய் தந்தைகளும் விளையாடி மகிழ்கின்றன. சூரியன் கடலுக்குள் போய்விட்ட பிறகும் இரவுகளில் காட்டுப்புறா கூடுகளில் குஞ்சுகள் விழித்திருக்கின்றன. புறாக்கள் புதிரான உலகின் கதைகளை பேசுகின்றன. குஞ்சுகள் கேள்விகள் கேட்கின்றன. பனியுடன் பொழுது விடியும்போது தாயோடும் தன்னையொத்த குட்டிகளோடும் கொஞ்சி, பதுங்கி, துள்ளிக் குதிக்கின்றன நாய்க்குட்டிகள். இவற்றின் செயல் கலையா, இயல்பா? வியப்பாய் இருக்கிறது. இந்த உயிர்களிடமெல்லாம் நடிப்புக்கலையின் அதிசயத்தை உணர முடிகிறது. குழந்தைகள் நாடகமும் அப்படித்தான். உலகக் காட்சிகள் பலவும் கற்பனையின் விந்தையான நிகழ்வாக மாற்றங்கொள்வதே குழந்தைகள் நாடகத்தின் இரகசியம். குழந்தைகளின் மனம் உலகைக் கற்கும் தருவாயில் கனவு மயமானது. அவ்வியல்பின் பின்னணியில் உருவாகும் குழந்தைகள் நாடகமும் குதூகலமும் கொண்டாட்டமும் கொண்டதாகத்தான் இருக்கும். மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் அதற்குப் பாத்திரங்கள்.
எனது எல்லா நாடகங்களுக்கும் என் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் கதைகளைத் தேர்வு செய்கிறேன். என் சொந்தக் கதை மற்றும் நான் கேட்ட கதைகள் என் நாடகங்களுக்கான கருவாகிறது. நான் குழந்தையாக இருந்தது போல்தான் இன்றைக்குள்ள குழந்தைகளும் இருக்கிறார்கள். எங்கள் தாத்தா ''கடல்பூதம்'' கதையைச் சொன்ன போது எனக்கிருந்த ஆச்சரியம் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இருக்கிறது. நான் கதைகளை மாற்றுவதில்லை. அப்படியே போடுவேன். காக்கா வடை திருடும் கதையை மாற்றி அறிவாளி மாதிரி சொல்பவர்களை ''மடையன்'' என்று சொல்லத்தான் நான் விரும்புவேன். இன்னும் பல நூற்றாண்டுகளிலும் உயிர் வாழப்போகும் அற்புதமான கதை அது. அந்தக் கதையை இவர்கள் யாராவது எழுத முடியுமா?
மேலும் நான் படித்த நாவல்கள் எனது நாடகங்களுக்கு மிகப்பெரிய ஒரு பலத்தைத் தருகின்றன. டால்ஸ்டாயின் ''புத்துயிர்ப்பு'' நாவலில்தான் முதன் முதலாக பெரிய ஒரு வாழ்க்கையை நான் பார்க்கிறேன். அடுத்ததாக ''நீலகண்டப் பறவையைத் தேடி'' நாவல் என்னை மிகவும் வசீகரித்தது, அதனைத் தொடர்ந்து வங்காள நாவல்களைத் தேடி படித்தேன். நான் படித்தவரைக்கும் குழந்தைகளைப் பற்றி மிக நன்றாக எழுதியவர் என்று ஆஸ்கார் வைல்டைத்தான் சொல்வேன். எழுத்தாளர்கள் கோணங்கியும் எஸ். ராமகிருஷ்ணனும் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு நண்பர்கள். அவர்கள் பேசி நான் நிறையக் கேட்டிருக்கிறேன். அந்த உரையாடல்களும் எனக்கு சக்தியைத் தந்தன.
நாடகப் பிரதிகள் வாசிப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. என் நாடகங்களுக்கும் நாடகத் தொடர்பு கிடையாது. இலக்கிய தொடர்புதான் உண்டு. ஆனால் கன்னட நாடகங்கள் எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக கிரிஸ்கர்னாட், சுப்பண்ணா நாடகங்கள்.
தீராநதி: உங்களுக்கு பிடித்த இலக்கியப் படைப்புகளை நாடகமாக்க முயற்சித்தீர்களா?
வேலு சரவணன்: ஆமாம், முதலில் புஸ்கின், கோல் சயிங்கா போன்ற எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் கதைகளை நாடகமாக்க முயற்சித்தேன். முடியவில்லை. ஆனால் நிக்கலாய் நோசவுடைய ''குதூகலவேட்டை'' கதையை நாடகமாக்கிய போது, அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. போலந்து எழுத்தாளரான ஸ்லவோமீர் மிரோஜெக்கின் ''நடுக்கடலில்' என்ற கதையும் நாடகமாக மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. மூன்று பேர் கடலில் பயணம் செய்கிறார்கள். நடுக்கடலில் அவர்கள் இருக்கும் போது உணவு காலியாகிவிடுகிறது. ஒருவரை ஒருவர்தான் சாப்பிட்டாக வேண்டும் வேறு வழியில்லை. யாரை முதலில் சாப்பிடுவது என்று அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒருவன் பெரிய ஆஜானுபாகுவான ஆள். இன்னொருவன் நடுத்தரமானவன். மற்றவன் ஒல்லியானவன். பெரியவன் சொல்கிறான்: ''யாராவது ஒருவர் தன்னைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்'' கடைசியில் அவனும் நடுத்தரமானவனும் பேசிப் பேசி ஒல்லியானவனை ஒப்புக்கொள்ளச் செய்கிறார்கள். அவனும், ''நான் இருந்து இந்த உலகத்தில் என்ன செய்யப்போகிறேன்.'' என்று பேசத் தொடங்கிவிடுகிறான். இதை என் நண்பனுடன் சேர்ந்து செய்தேன்.
தீராநதி: ஒரு நாடக மனிதனுக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பு என்று எதனை சொல்வீர்கள்.
வேலு சரவணன்: நாடகம் கலை மட்டுமல்ல, மிகப்பெரிய அறிவியலும்கூட என்பது என் எண்ணம். எனவேதான் வாழ்க்கை அறிவுடன் தொழில் நுட்ப அறிவும் இணைந்திருக்கிற மனிதனால்தான் நாடகத்தில் வெற்றிகரமாக இயங்க முடிகிறது. அந்தவகையில் நாடகக் கலைஞன் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற மிகப்பெரிய ஒரு விஞ்ஞானி. அவன் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தின் வாழ்வியல் அம்சம். அவனுடைய பங்கு தொடர்ச்சியாக இருக்கும் போதுதான் மனித வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும். கூட்டுக் குடும்ப நிலை மாறி தனித்தனி தீவுகளாக மனிதர்கள் வாழும் நிலை நேரிட்டதால் மனிதனுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. கூட்டமாக வாழும் மகிழ்ச்சியை இழந்த மனிதன் தனிமையின் துயரங்களைச் சேகரித்து வருகிறான். மனித நாகரிகத்தின் தெளிவான கண்ணாடியாக விளங்கும் நாடகம் மனிதர்கள் கூட்டாக சங்கமிக்கிற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது வாழ்க்கை மீது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது.
தீராநதி: ஆனால் தமிழ்நாட்டில் முற்காலத்தில் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருந்த நாடகம் இப்போது அந்நியப்பட்டு விட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்வீர்களா?
வேலு சரவணன்: நிச்சயம் மாட்டேன். திரைப்படம், தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்களால் தாக்குற்ற போதும், எங்கோ ஓர் மூலையில் நாடகம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. கதைகூறல், கதையாடல் மரபு தொடங்கி இன்றுவரை நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது தமிழ் நாடகம். தொல்காப்பிய பெட்டகத்திலிருக்கும் மெய்ப்பாட்டியலையும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையையும் இதற்கு சான்றாகக் கூறலாம். அந்தப் பாரம்பரியத்தை அவ்வளவு சுலபத்தில் அழித்துவிட முடியாது. ஆனால் நவீன நாடகங்கள் நாடக வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும். அதே வேளையில், சென்னை சார்ந்த சபா நாடகங்கள் நாடகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. தொலைக்காட்சியுடனும் திரைப்படத்துடனும் எப்போதும் தன்னை இணைத்துக்கொள்ள தயாராகவும் அவற்றின் இன்னொரு வடிவமாகவும்தான் அந்த சபா நாடகங்கள் இருக்கின்றன. சென்னைக்கு வெளியே நடைபெறும் நாடகங்களுக்கும் சரி, தெருக்கூத்துக்கும் சரி, நவீன நாடகங்களுக்கும் சரி அந்த தன்மை இல்லை.
தீராநதி: ''சடங்கு, கேளிக்கை என்பதிலிருந்து மாறி நாடகக்கலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த கல்வியியல் வடிவமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது என்று சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற சாகித்ய அகாதமி கருத்தரங்கில் கூறியுள்ளீர்கள். எதனடிப்படையில் இதனைச் சொல்கிறீர்கள்?
வேலு சரவணன்: ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ''புதர்வீடுகளில் வாழும் காட்டு முயல் குட்டிகள் கும்மிருட்டுக்குப் பயப்படுகின்றன. அதனால் முயல்கள் வருந்துகின்றன. தூக்கனாங் குருவிக் கூட்டில் விளக்கெரிவதைப் பார்த்த முயல்கள், கொழுந்திலைகளில் தெளிந்த நீரைக் கொண்டு வந்து அதில் நிலவை எதிரொளிக்கச் செய்கின்றன. புதர்வீடுகளில் பொன்னொளி பரவுகிறது. குட்டிகள் பயம் மறந்து தூங்குகின்றன. ஒரு முறை இக்குட்டிக் கதையை நாடகமாகப் போட்டோம், அப்போது ஒளியின் வரலாற்றுப் பின்னணி என்ன, அதை யார், எப்படி கண்டுபிடித்தார் போன்ற கேள்விகளை குழந்தைகள் எழுப்பினார்கள். ஒளியின் நுண்மையான புதிர்களை கற்பனை செய்து விளங்கிக்கொள்ள அவர்கள் முயன்றார்கள். இப்படி நாடகத்தின் ஊடாக ஒளி பற்றிய அலாதியான அனுபவங்களை அவர்கள் பெற்றதை நான் உணர்ந்தேன். நுண்ணறிவு மிக்க செயல் அனுபவங்களே மனிதனின் வளர்ச்சிக் கூறுகள் அப்படியோர் செயலனுபவக் கல்வியை குழந்தைகள் நாடகம் தருகிறது.
பள்ளிக்கூடங்களும் அதன் வகுப்பறைகளும் சூட்சுமம் மிகுந்த புதிர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. தீராத கற்றல் வேட்கையோடு இளம் குழந்தைகள் கூடியிருக்கிறார்கள். எழுதுதல், படித்தல், வீட்டுப்பாடம், மனப்பாடம் என இயங்கும் ஏட்டுப் படிப்புக்காக மட்டும் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை மாறாக, பள்ளிக்கூடத்தில் தங்களுக்காக காத்திருக்கும் புதியவற்றுக்காகவும் ஒருவரை ஒருவர் சந்திப்பதுக்காகவும் வருகிறார்கள். அவர்களின் எண்ணற்ற மனத்திசைகளைத் தன்வயப்படுத்தி தன் கற்பித்தலை நிகழ்த்த ஆசிரியர்களுக்கு ஏராளமான திறன்கள் தேவைப்படுகின்றன. வெறும் மேடையில் தோன்றி அம்மேடையை கடலாகவும் மலையாகவும் தன்குரல், உடல் அசைவுகள் மூலம் மாற்றும் நாடகக் கலைஞனின் திறன்கள் பள்ளி ஆசிரியரின் கற்பித்தல் நிகழ்வைச் சிறப்படையச் செய்யும் சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கிறது. மாறாத சூழல்களால் குழந்தைகளை வெறுப்பேற்றும் பள்ளியும் வகுப்பறையும் அவரால் பல்வேறு தாள லயங்களைக் கொண்ட சூழல்களை அடையும். அப்போது அறிவியல் பாடம் அறிவியல் தன்மை கொண்டதாக, வரலாற்றுப் பாடம் வரலாற்றுக் காலச்சுழல் கொண்டதாக மொழிப்பாடம் கவித்துவம் கொண்டதாக மாறும். அவ்வாறான சூழல்களில் குழந்தைகளின் வளர் இதயம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடையும்.
மேற்கத்திய நாடுகள் உட்பட உலகில் பல்வேறு நாடுகளில் பள்ளிகளில் குழந்தைகள் நாடகத்துக்கு என்று தனித்துறைகள் இருக்கின்றன. அதற்கென ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு கோமாளி நம் குழந்தைகளிடமும் வேண்டும். கரடுமுரடான கல்விப் பாட வேளைகளை இதமான உணர்வுகளால் கோமாளியால் எளிதாக்க முடியும். தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆசிரியர் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் குழந்தைகள் ஒரு கோமாளியையே எதிர்பார்க்கிறார்கள். அரசவைகளில் விகடகவிகள் இருந்தது போல பள்ளிக்கூடங்களில் ஒரு கோமாளி நாடக ஆசிரியர் இருந்தால் நல்லதுதானே.
தீராநதி: பெரியோர்களுக்கான நாடகங்களில் இருந்து குழந்தைகளுக்கான நாடகத்தை எப்படி வேறுபடுத்துகிறீர்கள்?
வேலு சரவணன்: குழந்தைகள் வளமான எண்ணங்களில் இயங்குபவர்கள். அதற்கேற்ப குழந்தைகளுக்கான படைப்புகளும் நிகழ்வுகளும் வண்ணமயமாக இருக்க வேண்டும். அறிந்த சைகைகள், ஒலிகள், உடலசைவுகள், சிலை வடிவ உடல் நிலைகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் ஊடாக பாத்திரமாக மாறுவது பெரியோர்களின் நடிப்பியல். குழந்தைகளின் நடிப்பு இதிலிருந்து மாறுபட்டது. அவர்களின் இயல்போடு இயல்பாக நிகழ்வது. இங்கே மெய்ப்பாடுகள் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டாலும் உயிரோட்டமான வாழ்வியல் இயக்கத்துக்கு திரும்பி விடும் குழந்தைகளின் மனவியல்பால் வேறுபடுகிறது. உயரத்திலிருந்து குதித்து விழுந்து, புரண்டு, தாவி, நீந்தி, சிரித்து, அழுது மீண்டும் தன்னிலைக்குத் திரும்பி மகிழ்வதே குழந்தைகள் நடிப்பின் பொதுவான குணம்.
குழந்தைகளின் மொழி உச்சரிப்பே கவித்துவமானது. அது உணர்வுகளின் ஒலி நயங்களை இசைப்பதாக வெளிப்படுகிறது. சொற்களின் பொருளை விட அதை உச்சரிக்கும் குரலோசை குழந்தைகளுக்கு இன்பத்தைத் தருகிறது. எனவே அதன் அடிப்படையிலேயே குழந்தைகள் நாடகத்துக்கான மொழி உருவாகிறது.
குழந்தைகள் குழுமியிருக்கும் வகுப்பறைக்குள் வேடிக்கையான உடலசைவுகளுடன் விதவிதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டு போர்வை போர்த்திய ஒருவன் நுழைகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் குழந்தைகளை தன் போர்வைக்குள் அழைக்கிறான். அவர்களிடம் சங்கேத மொழியில் பேசுகிறான். பிறகு போர்வையை விலக்கி, 'ஒரு காலத்தில் வானம் தரையோடு இருந்ததாகவும் மனிதரும் மற்ற உயிரினங்களும் பெரும் சிரமப்பட்டதாகவும் ஒளவை என்ற பாட்டி துடைப்பத்தால் அடித்து வானத்தை உயரே விரட்டியதாகவும்' வேடிக்கையாக கூறுகிறான். அப்போதே குழந்தைகள் அக்கதையின் பாத்திரங்களாகி நடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதனால்தான் குழந்தைகள் நாடகத்தை எளிதாக இயக்க முடியும். குழந்தைகளின் அன்புக்குறியவர்களிடமும் சில ஆசிரியர்களிடமும் அப்படியோர் மனிதனைப் பார்க்க முடியும்.
தீராநதி: உங்களுடைய அரசியல் என்ன?
வேலு சரவணன்: குழந்தைகள்தான் என்னுடைய அரசியல். என் குழந்தை படுப்பதற்கு இரண்டு தலையணைகள் கேட்கிறது. குழந்தையின் தேவையை விமர்சிப்பது பெரியவர்கள் அரசியல் என்றால் இரண்டு தலையணைகள் கேட்பது குழந்தையின் அரசியல். அதில் சிறு சமரசம் செய்துகொண்டாலும் தங்களுடைய தேவையை எட்ட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இரண்டு தலையணைகள் தராமல் வேறு எப்படியும் அவர்களுடைய தேவையை நிறைவேற்றவும் முடியாது.
தீராநதி: தொடர்ந்து குழந்தைகளுடன் புழங்கி வருவதன் அடிப்படையில் கேட்கிறோம். அவர்களைப் பற்றிய உங்களது கவனிப்பு என்ன? பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, அவர்கள் வைக்கும் சுமைகள், கல்விச் சூழல் தரும் நெருக்கடிகள், விளையாட்டுகளும் கேளிக்கையும் இல்லாத வீட்டுக்குள் அடைக்கப்பட்ட வாழ்க்கை போன்றவை குறித்து அவர்களுக்கு வருத்தங்கள் இருக்கிறதா?
வேலு சரவணன்: எந்த வருத்தங்களும் அவர்களுக்கு இல்லை. ஆனால் கிராமத்தில் வளரும் குழந்தைகளுக்கு நகரச் சூழலில் வளரும் குழந்தைகளைப் பார்த்து ஏக்கம் இருக்கிறது. அவ்வளவுதான் பொதுவாக வருத்தங்களும் சோகங்களும் பெரியவர்களுக்குத்தான். வயலும் நதியும், இன்றைய நகர குழந்தைகளுக்கு இல்லையே என்று நாம்தான் வருந்துகிறோம். அந்த வருத்தத்தை நான் கலையாக மாற்றுகிறேன். வருத்தம் பொழுதுபோக்காக மாறுகிறது. குழந்தைகளை வளர்ச்சி இல்லாதவர்கள் என்று பார்க்கிற பார்வைதான் பெரியவர்களிடம் உள்ளது. அவர்களை நாடு கடத்துவதுக்கான வேலைகளைத்தான் இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் செய்கிறார்கள். குழந்தைகளை வழி நடத்துவது தேவையில்லாதது அவர்களே முடிவெடுப்பார்கள்.
தீராநதி: ஒரு இயக்குநராக நடிகர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான நடிப்பை எப்படி பெறுகிறீர்கள்?
வேலு சரவணன்: என்னுடைய நடிகர்கள் குழந்தைகள் என்பதால் எனக்கு சிக்கல்கள் மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயம் உண்மை. உண்மையாக இருப்பவர்களை அவர்கள் உடனே பின்பற்றுவார்கள் அன்பாகிவிடுவார்கள். அவர்களது நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவார்கள். அதிலிருந்து அவர்களது படைப்பாக்கத்தை வளர்த்தெடுப்பார்கள். அவர்களது வளரும் கற்பனையும் நமது கற்பனையும் சேர்ந்து புரியும் விளையாட்டுகள் தான் குழந்தைகள் நாடகம். நான் விழுந்தால் உண்மையாக விழுவேன். சிரித்தால் உண்மையாக சிரிக்கிறேன்.
தீராநதி: அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?
வேலு சரவணன்: முதலில் குழந்தைகளுக்கான ஒரு நாடகப் பள்ளி தொடங்க விரும்புகிறேன். அடுத்து ஒரு திரைப்படம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறேன். இந்தியாவில் குழந்தைகளின் பொழுதுபோக்குக்கு ஏற்ற திரைப்படங்கள் இல்லை. கார்ட்டூன் மாதிரி அல்லது பெரிய குழந்தைகளுக்கான படங்கள் தான் இருக்கிறது. என் படம் இவற்றிலிருந்து மாறுபட்டிருக்கும் பிரமாண்டமான சினிமாஸ்கோப் படமாகவும் அது இருக்கும்.
நன்றி: தீராநதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
பள்ளிதோறும் ஒரு கோமாளி வேண்டும் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நான், வேலு, குழந்தைகள், சரவணன், தீராநதி, நாடகம், அவர், எனக்கு, குழந்தைகளின், நாடகங்கள், போது, இல்லை, அந்த, வேண்டும், பெரிய, எப்படி, இருக்கும், நாடக, முடியும், தொடர்ந்து, நாடகக், கதையை, இருக்கிறது, மிகவும், என்ன, முடியாது, அப்போது, எங்கள், தாத்தா, இப்போது, பள்ளி, முதலில், வாழ்க்கை, மிகப்பெரிய, நாடகத்தை, நவீன, மாதிரி, நாடகங்களுக்கும், எல்லா, அதில், அரசியல், சென்று, காரணமாக, பல்வேறு, ஒருவர், நாடகத், கொண்டு, பிறகு, குழந்தைகளை, குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான, உண்மையாக, மனிதர்கள், வாழும், அவர்களது, நாடகத்தின், தருகிறது, கொண்டதாக, தேவையை, செய்கிறார்கள், தலையணைகள், பிடித்த, இருக்கின்றன, இரண்டு, தொடர்பு, வளரும், இயங்கிக், வேறு, மாணவர்கள், திரைப்படம், இந்திரா, பார்த்தசாரதி, அங்கே, என்னை, மிகச், நாடகங்களை, நல்ல, வழித், இயக்குநராக, இருந்தார், பற்றி, திரும்பி, நாடகப், பற்றிய, இருந்துதான், சென்னை, சேர்ந்து, இருந்து, நாடகத்துக்கான, தந்தது, என்னுடைய, கதைகளை