முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » அகப்பை அறியாது குழம்பின் ருசி!
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - அகப்பை அறியாது குழம்பின் ருசி!
- நாஞ்சில் சம்பத்
எங்கள் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா. உரை ஆற்ற வந்திருந்தார் வாரியார் சுவாமிகள். விழாவிலே நன்றி உரையாற்றினேன் நான். கவிஞர் கண்ணதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டி, 'தந்தைக்கோர் மந்திரத்தைச் சாற்றிப் பொருள் விரித்து, முந்து தமிழில் முருகென்று பேர் படைத்து, அந்தத்தில் ஆதி, ஆதியிலே அந்தமென வந்த வடிவேலை வணங்குவதே என் வேலை என வாழ்கின்ற சோலை இளங்காற்றே! இன்பத் தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டில் கவி காளமேகத்தைப்போல் சிலேடைகளை வாரி, யார் சொல்லுகிறார்கள் வாரியார் சுவாமிகளைத் தவிர...? என்று சிலேடையாகப் பேசினேன். பொக்கைவாய் திறந்து தமிழ்க் கடல் வாரியார் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். இரவில் கந்தரலங்காரம் பேச வந்த வாரியார் சுவாமிகள், 'இன்று ஒரு ஞானச் சிறுவனைக் கண்டேன். வருகிற காலத்தில் என்னைப்போல் வருவான்' என்று வாழ்த்தினார்.
அவசர காலம் முடிந்த நேரம்... திருநெல்வேலிச் சீமையின் பாப்புலர் திரையரங்கில் உரையாற்ற வருகிறார் கலைஞர். 'நெருக்கடி நிலையில் நாம்' என்ற தலைப்பில் உரையாற்றுவதாக ஊரெல்லாம் விளம்பரம். என் கைபிடித்து என்னை அரசியல் களத்தில் இறக்கி விட்ட அண்ணன் ஜஸ்டிஸ், கல்லூரி மாணவனாக இருந்த என்னை அழைத்துக்கொண்டு கலைஞர் உரை கேட்கக் கூட்டிச் சென்றார். தேனடையில் தேனீக்கள் நிரம்பியிருந்தது மாதிரி கூட்டம். முண்டியடித்து, முன்வரிசையில் போய் உட்கார்ந்துவிட்டோம். கலைஞரை அழைத்துக்கொண்டு வைகோ மேடையேறுகிறார். கடவுளைக் கண்டு பரவசப்படுகிற பக்தனின் மனோநிலைக்கு ஆளானேன். கலைஞரும் வைகோவும் என்னை அன்று ஆட்கொண்டார்கள்.
கல்வியின் கரையைத் தொடுவது, கல்லூரிப் பேராசிரியராக வருவது என்ற கனவுகளை அன்றே கலைத்தேன். திசைமாறுகிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட கண்டிப்பு மிகுந்த அப்பா, 'இப்படியே இவனைவிட்டால் வீணாகிப்போய் விடுவான்' என்று எண்ணி, ஸ்டேஷனரி கடை வைத்துத் தந்தார். அப்பாவின் கட்டளையை மீற முடியாதவனாக அங்கே அமர்ந்தேன். உடல் மட்டும் தான் கடையில்... உள்ளம் எல்லாம் மேடையில், வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நாகர்கோவில் நகரத்திலும் திங்கட்கிழமை திங்கள் சந்தையிலும் தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடக்கும். கடையில் ஒரு பையனை வேலைக்கு அமர்த்திவிட்டு, பொதுக்கூட்டங்களில் வலிய வலியப் போய்ப் பேசினேன். 'நன்றாகப் பேசுகிறாய்!' என்ற கழக முன்னோடிகளின் பாராட்டு என்னை ஒரு புதிய உலகத்துக்கு இட்டுச் சென்றது.
இலங்கைத் தமிழருக்கான போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்துக்காக, நாகர்கோவிலுக்கு வந்தார் கலைஞர். எப்படியாவது கலைஞர் முன்னிலையில் பேச வேண்டும் என்று விரும்பினேன். மேடைக்குப் போனால் கலைஞர் மேடைக்கு வருவதற்கு முன்பே பேசச் சொல்லிவிட்டு கீழே இறக்கிவிடுவார்கள். அதனால், மேடைக்குப் போகாமல் ஒதுங்கி, ஒளிந்து நின்றேன். கலைஞரின் கார் மேடையருகே வந்தது. 'கலைஞர் வாழ்க!' என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. அந்தச் சந்தடியில் மேடையேறி ஒலிபெருக்கியைக் கைப்பற்றி, அலங்காரமான அடைமொழியோடு வாழ்த்துக் கோஷங்கள் எழுப்பினேன். கலைஞருடன் வைகோ, எஸ்.எஸ். தென்னரசு ஆகியோரும் மேடையில்.
கோஷம் போட்ட நான் தொடர்ந்து உரையாற்ற ஆரம்பித்துவிட்டேன். சந்தம் மாறாத தமிழில் சத்தம் போட்டுப் பேசி, வந்திருந்த கூட்டத்தை கட்டிப்போட்டேன். தொடர்ந்து அதற்குப் பிறகும் 20 நிமிடங்கள் பேசினேன். நினைத்ததைச் சாதித்துவிட்ட மன நிறைவு அப்போது.
அதே மேடையில் கலைஞர் பேசும் போது, ஈழத் தமிழரின் உரிமைப் போராட்த்தை விளக்கிவிட்டு, 'நான் ஒன்றும் தனிநாடு கேட்கமாட்டேன். ஆனால், எனக்கு முன்னால், இங்கே உணர்ச்சிவசப்பட்ட வாலிபத்தம்பி சம்பத் போன்றவர்கள் கேட்டால், என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியாது என்று மத்திய - மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்' என்று பேசினார். என் சொற்பொழிவுக்கு மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. என்னை மேற்கோள் காட்டி கலைஞர் பேசிய பேச்சு, அடுத்த நாள் முரசொலியில் வந்திருந்தது. ஈன்ற குழந்தையை எடுத்து மகிழும் தாயைப்போல அந்த முரசொலியை அனைவரிடமும் காண்பித்துப் பூரித்துப்போனேன். என் பெயரை எல்லோரும் எழுத்துக் கூட்டத் தொடங்கினார்கள். கடையில் இருப்புக்கொள்ள வில்லை. வேலைக்கு அமர்த்திய பையன் திருடத் தொடங்கினான். கடை, மூடவேண்டிய நிலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது. அப்பாவின் கடுமையான கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன். தீ வைத்துக் கொளுத்தினாலும் இவன் திருந்தப்போவதில்லை என்று சபிக்கப்பட்டேன்.
வியாபாரத்தில் தோல்வி, அரசியல் வாழ்க்கையிலும் பெரிய உயரம் போக முடியாத நிலை. பேச்சுக்கலை தெரிந்த எனக்கு சக அரசியல்வாதிகளிடம் அரசியல் பண்ணத் தெரியாமல் போனது. அவமானத்தால் புதைந்து கொண்டு இருந்த நான், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன்.
இலங்கைத் தமிழர் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. கலைஞர் கைது செய்யப்பட்டார். கலைஞர் கைதைக் கண்டித்து நாடு தழுவிய மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டேன். வீட்டில் எல்லோரும் கதறி அழுதார்கள். எங்கள் ஊரில் பொதுவாழ்வுக்கு வந்த முதல் ஆள் நான்தான். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று எல்லோரும் கவலைப்பட்டார்கள். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன். வைகோவை அருகில் சந்திக்கிற பாக்கியம் கிடைத்தது. அப்போது மாலையில் சிறையில் தினசரி பேச்சுப் பயிற்சி தருவார் வைகோ. என் உரை கேட்டு திருப்தியுற்ற வைகோ சில இடங்களில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கித் தந்தார். வாழ்க்கை திசை மாறியது. சென்னையில் பேசவும் வாய்ப்புகள் கிடைத்தன. வீட்டை மறந்தேன். ஒரு வாலிபனுக்குரிய எந்த ஆசாபாசமும் என்னிடத்தில் இல்லை. எப்போதும் படிப்பது, படித்ததைப் பதிவு செய்வது என்றே பொழுதுகள் கழிந்தன. அறிவாலயத்தில் இருக்கிற நூலகத்தை அதிகம் பயன்படுத்தியவர்களில் நானும் ஒருவன்.
85-ல் வீட்டை விட்டு வெளியேறிய நான், 88-ல் தான் வீட்டுக்குச் சென்றேன். 89-பொதுத்தேர்தல்... திருநெல்வேலியில் மாலை பிரசாரத்தைத் தொடங்குகிற கலைஞர், அருப்புக்கோட்டைத் தொகுதி காரியாப்பட்டியில் பிரசாரத்தை முடிக்க வேண்டும். நான் கலைஞர் மேடைக்கு வருவதற்கு முன்னால் ஒவ்வொரு ஊராக பேசிக்கொண்டே போனேன். காரியாப்பட்டி மேடையில் கலைமாமணி முத்துக்கூத்தனின் பொம்மலாட்ட நிகழ்ச்சி 10 மணிக்கு முடிந்தாலும், கலைஞர் வருகிற வரை தம்பி சம்பத் பேசுவார் என்று மறைந்து போன பண்பாளர் அண்ணன் தங்க பாண்டியன் அறிவித்தார். இரவு 10 மணிக்கு பேசத் தொடங்கி நான் அடுத்த நாள் காலை 7.30 மணி வரை பேசினேன். அப்போதுதான் கலைஞர் வந்தார். அந்த ஒன்பதரை மணி நேரப் பேச்சின் இடையில் சோடாவோ, தண்ணீரோகூட அருந்தவில்லை. கலைஞர் பேசும்போது, 'தொடர்ந்து பல மணி நேரம் சைக்கிள் மிதிப்பார்கள் வித்தை காண்பிப்பார்கள். ஆனால், தேர்தல் பிரசார மேடையில் இடைவிடாமல் ஒன்பதரை மணி நேரம் பேசுவது என்பது அரிய சாதனை. இந்தச் சாதனையை நிகழ்த்திய தம்பி சம்பத்தைப் பாராட்டுவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. செயல்பாடுகள்தான். உதயசூரியன் சின்னத்தில் முத்திரை இடுங்கள் என்று மூன்றே நிமிடத்தில் பேசி முடித்தார்கள். அடுத்த நாள் இது செய்தியாக வந்தபோது பாராட்டாத நெஞ்சங்களே இல்லை.
கலைஞர் முதலமைச்சரான பிறகு, என் திருமணம். என் திருமணத்துக்காகவே நாகர்கோவில் வந்தார் கலைஞர். பட்டம், பதவிகளை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளை ஆக்கிரமிக்கிற இளைஞர்களுக்கு மத்தியில் எதையும் எதிர்பார்க்காமல் லட்சிய தாகத்தோடு பணியாற்றுகிற தம்பி சம்பத், இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரி! என்று பாராட்டினார்.
தி.மு.க.வில் பணியாற்றுகிறவரை கட்சியிலும் எந்தப் பதவியும் எனக்கில்லை. அதற்காக நான் கவலைப்படாமல், இளைஞர் அணியின் ஆக்கப் பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டன். தலைமையின் கருத்தறிந்து கடமை ஆற்ற வேண்டும் என்பதில் கவனமோடு இருந்தாலும், நான் தி.மு.க.வில் இருந்தவரை அண்ணன் ஸ்டாலினின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெறவே முடியவ்லலை. கலைஞர் என்னை அங்கீகரித்த அளவுக்கு, ஸ்டாலின் கடைசி வரை பாராமுகமாகவே நடத்தினார். ஒருவேளை என் பேச்சும் செயல்பாடும் சுறுசுறுப்பும் இளைஞர்களைக் கவரும் பாங்கும் ஸ்டாலினைக் கவரவில்லையோ என்னவோ...? அந்தக் கேள்விக்கான விடை தெரியாமலே தி.மு.க.வை விட்டு வெளியேற நேர்ந்தது.
காலம் போட்ட கோலத்தில் வைகோவுடன் ஐக்கியமானேன். ம.தி.மு.கவுக்காக பத்தாண்டு காலமாக ஓய்வறியாது சுற்றி வருகிறேன். எப்போதும் போலவே இப்போதும் அடக்குமுறை அரசை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு வருகிறேன். 33 வழக்குகள் என்மீது. 2002 ஜனவரி 4-ல் என் வீடு தகர்க்கப்பட்டது. வீடு தரை மட்டமாக்கப்பட்ட அன்றும் மதுரையில் ஒரு மேடையில் நின்றிருந்தேன். எம்.எல்.ஏ. அல்லது எம்.பி போன்ற கனவுகள் எதுவும் என்னிடம் இல்லை. அந்த ஆசையும் இல்லை. கடந்த தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் நின்ற வைகோ, வற்புறுத்தியபோது கூட மறுத்துவிட்டேன். நான் பொதுக்கூட்டம் பேசும் நாட்களைவிட, பேசிய பேச்சுக்காக கோர்ட்டுக்கு அலையும் நாட்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறது இந்த ஆட்சியில். இதிலும் ஒருவசதி, எந்த ஊருக்கு கோர்ட்டுக்குப் போகிறேனோ, அதே ஊரில் பெரும்பாலும் ஒரு பொதுக்கூட்டமும் அமைந்துவிடுகிறது.
வீதியெல்லாம் விடிய விடியப் பேசினாலும், அதிகாரம் செலுத்துகிற இடத்துக்கு வர முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் கொஞ்சமும் இல்லை. நான் ஒரு கருவி. அவ்வளவு தான்! கருவிக்கு ஏது கவலை? அது கடமையை மட்டுமே செய்யும். குழம்பில் கிடந்தாலும் அகப்பை அறியாது, குழம்பின் ருசி. நானும் அதுமாதிரிதான் அரசியலில் இருந்தாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்ததேயில்லை.
திராவிட இயக்க வரலாற்றைத் தொடர்ந்து 24 மணி நேரம் பேசி முத்திரை பதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன். காலம் அந்தக் கடமையைச் செய்ய அனுமதிக்கும் என்றே நம்புகிறேன்.
இந்த வாழ்க்கை பழகிவிட்டது. கல்லறையைத் தேடி கண்கள் மூடுகிற காலம் வரையிலும் இந்த வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருந்தால் போதுமானது.
தன் சுவடு எதையும் பதிக்காவிட்டாலும் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. அதுபோல் நான் பேசிக்கொண்டே இருப்பேன்!
நன்றி: ஆனந்தவிகடன், 28.11.'04.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகப்பை அறியாது குழம்பின் ருசி! - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கலைஞர், நான், என்னை, இல்லை, மேடையில், வைகோ, தொடர்ந்து, வேண்டும், சம்பத், அரசியல், வாரியார், காலம், பேசினேன், நேரம், அந்த, தம்பி, எல்லோரும், நாள், வாழ்க்கை, தான், அண்ணன், வந்த, கடையில், வந்தார், பேசி, அடுத்த