முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » தமிழக-கேரள மேற்கு நதிநீர்ப் பிரச்சினைகள்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - தமிழக-கேரள மேற்கு நதிநீர்ப் பிரச்சினைகள்
- கே.எஸ். இராதாகிருஷ்ணன்
சமீபத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் தமிழக-கேரள நதிநீர்ப் பிரச்சினைகள் சம்பந்தமாகச் சென்னையில் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்புக்குப் பின் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் திருப்ப முடியாது என்று கூறியுள்ளார். அச்சன்கோவில்-பம்பை நதிகளை தமிழகத்தில் உள்ள வைப்பாற்றுடன் இணைக்கும் திட்டத்தை ஏற்க கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணியும் மறுத்துவிட்டார். தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்தை கடந்த காலங்களில் மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் ஆண்ட காங்கிரஸ் அரசுகள் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன. தேசிய ஒருமைப்பாடு என்றும், இமயம் முதல் குமரி வரை ஒன்று எனவும் சொல்லிவரும் காங்கிரஸ், வீணாகப் போகும் தண்ணீரை, நியாயமாக அண்டை மாநிலங்களுக்குக் கொடுப்பதில் முரண்டு பிடிப்பது வேதனை தரும் செயலாகும். தமிழகத்திலிருந்து மின்சாரம், அரிசி, மாட்டுத் தீவனங்கள் போன்றவற்றைக் கேரளம் பெற்றுக் கொண்டு, வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரைக் கொடுப்பதற்குத் தயங்குவதற்கு எந்தவித நியாயமும் கிடையாது.
தமிழகத்தின் வானம் பார்த்த தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வரை பயன்படும் வகையில் மேற்கு நோக்கிப் பாயும் கேரள நதிகளின் எச்ச நீரைத் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. நீர்ப்பாசனம் மட்டுமல்லாமல் குடிநீர்ப் பிரச்சினையும் இத்திட்டத்தினால் தீரும். இது குறித்து இக்கட்டுரையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து, அதன் மேல் முறையீடாக உச்ச நீதிமன்றத்தில், தேசிய நதிகளை காவிரி - தாமிரபரணி, குமரி வரை இணைக்க வேண்டும்; மேற்கு நோக்கிப் பாயும் கேரள நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும்; நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.
"பாலைவனங்கள் இயற்கையாக உருவானவை அல்ல. செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை'' என்பார் மாமேதை எங்கல்ஸ். தமிழகத்தில் நதி நீரால் 29%; கண்மாய், ஏரி குளங்களால் 30%; கிணறு மூலமாக 35% பாசன வசதி பெறுகிறோம். ஆயினும் மேற்சொன்ன தென் மாவட்டங்கள் வானம் பார்த்த கரிசல் மற்றும் செம்மண் அடங்கிய பகுதிகளாகும்.
கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதிகமான மலைப்பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தை விட அதிகமானதாகும். தமிழ்நாட்டின் நீர்வளம் சுமார் 1,350 டி.எம்.சி. ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி, அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல சுமார் 11 மடங்கு அதிகம்). கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் 85 நதிகள் உள்ளன. 1,98,000 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கின்றது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வீணாகச் செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்புவது பற்றி ஆராய மத்திய அரசு 1976 ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து இந்த நதிநீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது. அதன்பின்பு மத்திய, தமிழக, கேரள அரசுகள் சுமார் 20 முறை இதுபற்றிப் பேசியும் எவ்விதத் தீர்வும் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு, பாரதப்புழா, சாலக்குடி, பெரியாறு, ஆழியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தமிழகத்தில் உள்ளன. இந்த நதிகள் கேரள மாநிலத்தில் பாலக்காடு, மலப்புரம் ஆகிய இடங்களில் பாய்ந்து அந்தப் பகுதிகளுக்கு வளம் சேர்க்கின்றன. அதைப்போன்று கீழ்க்கண்ட நதிநீர்ப் படுகையிலிருந்து தமிழகத்திற்கு நீர் கொடுத்தால், தமிழகம் நிச்சயம் வளம் பெறும்.
சாலியாறுப் படுகை: இந்தப் படுகையில் உள்ள பாண்டியாறு, புன்னம்புழா, மோயாறு, சோழாத்திபுழா, பன்சிகல்ல ஆகிய நதிநீர் மூலம் கோவை மாவட்டம் பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 280 லட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி பெறலாம்.
பம்பையாறு: இதில் மொத்த நீர்ப்பிடிப்பு சுமார் 230 டி.எம்.சி. ஆகும். இதில் எஞ்சிய நீர் சுமார் 180 டி.எம்.சி. ஆகும். இதில் திருப்ப வேண்டிய அளவு 25 டி.எம்.சி. ஆகும். இதனால் தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் பெறும்.
அச்சன்கோவில் ஆறு: இதில் செல்லும் நீரின் அளவு 77 டி.எம்.சி. ஆகும். இதில் கிடைக்கும் எஞ்சிய நீரில் சுமார் 9 டி.எம்.சி. அளவு தமிழகத்திற்குத் திருப்பினால் திருநெல்வேலி, குமரி மாவட்டங்களின் சில பகுதிகள் பயன்பெறும்.
பெரியாறு படுகை: இதில் ஆனைமலை, இடுக்கி, கல்லாறு போன்ற மூன்று ஆறுகளிலிருந்து நீர் செல்லும் அளவு சுமார் 380 டி.எம்.சி. ஆகும். இதில் உள்ள எஞ்சிய நீரில் சுமார் 320 டி.எம்.சி.யைத் தமிழகத்திற்குத் திருப்பினால் கோவை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகள் பயனடையும். இதனால் மதுரை மாநகருக்குக் குடிநீர் வசதி பெற வாய்ப்புள்ளது.
நெய்யாறு: இதில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. ஒரு கால்வாய் 1956-ல் கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டுள்ள சில பகுதிகளின் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி செய்ய அமைக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் நீர் கொடுக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இதனால் சுமார் 9,000 ஏக்கர் நிலம் வீணாகிறது.
இப்படுகையில் கல்லட, அட்டிங்கல், கரமன ஆகிய ஆறுகளில் நீர் செல்லும் அளவு சுமார் 160 டி.எம்.சி. ஆகும். இதில் எஞ்சிய நீரான சுமார் 110 டி.எம்.சி.யில் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டிய அளவு வெறும் 16 டி.எம்.சி.தான். இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெற முடியும்.
இந்தப் பிரச்சினையில் கேரள அரசு சரியான ஒத்துழைப்பு நல்கவில்லை. மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகும் நீரைத் தமிழகத்திற்குத் திருப்பினால் கேரளத்தில் மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கப்படும் என்ற விநோதமான காரணம் கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்திற்கு வெறும் 82 டி.எம்.சி. அளவு நீர்தான் தேவைப்படுகிறது. இதனால் கேரளத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லாவியா கேரள மாநிலத்தினைப் போன்று மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமேனியாவுக்கு யூகோஸ்லாவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரைக் கொடுத்து உதவும்போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்திற்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது. இதைப்போன்று சோவியத் நாட்டின் முன்னாள் துருக்மேனியா மாநிலத்திலுள்ள கேரிகம் கால்வாய் அண்டை மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. சோவியத் நாட்டிலுள்ள வடமாநிலங்களில் பாயும் நதிநீர் தென் மாநிலங்களுக்குத் திருப்பப்பட்டுள்ளது.
கல்பாக்கம் மின்சாரத்தினைக் கேட்கும் கேரள அரசு, அம்மாநிலத்திலுள்ள எஞ்சிய நீரைத் தமிழகத்திற்குக் கொடுக்க ஏன் மறுக்கிறது என்று தெரியவில்லை. ஆற்று நீர் வளத்தை நாட்டின் பொதுவுடைமையாக ஆக்கும் நாள் விரைவில் வரவேண்டும்.
நன்றி: தினமணி
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக-கேரள மேற்கு நதிநீர்ப் பிரச்சினைகள் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - சுமார், கேரள, இதில், நீர், எஞ்சிய, அளவு, தமிழகத்திற்குத், ஆகும், பாயும், நோக்கிப், இதனால், மேற்கு, திருப்ப, நீரைத், வசதி, வேண்டும், பாசன, ஆகிய, கேரளத்தில், அரசு, செல்லும், திருநெல்வேலி, திருப்பினால், தமிழகத்தில், பாதிப்பும், பெறும், தேசிய, வளம், நீரில், உள்ள, பகுதிகள், அண்டை, தமிழக, மதுரை, தூத்துக்குடி, தென், நதிகள், நதிகளை, நதிகளைத், நீரைக், நீர்வளம், மாவட்டங்கள், குமரி