முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » வகுப்பறை வன்முறைகள்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - வகுப்பறை வன்முறைகள்
- வே. வசந்தி தேவி
பள்ளிகள் அச்சம் அப்பிக் கிடக்கும் தண்டனைக் கூடங்களாகி வெகு காலமாகின்றன. ''அடியாத மாடு படியாது'' என்ற நம்பிக்கையே நமது பள்ளிகளை இயக்கும் கல்விச் சித்தாந்தம் குழந்தைகள் மாடுகளா? மாடுகளும் வதைக்கப்படலாமா? படிவதுதான் கல்வியா? அப்படிப் படிவதற்கும் அடி தேவையா?
வகுப்பறை உறவுகள் அதிகார உறவுகள், அதில் சிக்கிக் கொண்டு விட்ட வாயற்ற ஜீவன்கள் குழந்தைகள். அதிகார உறவுகாளகிவிட்ட வகுப்பறை உறவுகளில் குழந்தைகள் படும்வதை சொல்லித் தீராதது.
நமது கல்வி முறையில் பல்வேற கேவலங்களில் ஒன்று Corporal Punishment உடல் - மன ரீதியாக மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. கற்பித்தலின் தவிர்க்க முடியாத தொழில் தர்மமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. பெரும்பாலான பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் நாள்தோறும் அனுபவித்து மரத்துப்போன விஷயம்தான். இது சமீபத்தில் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
சமீப காலமாகத் தொடர்ந்து பள்ளிகளில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல சேவை நிறுவனங்களின் ஆய்வுகள், விசாரணைகள் மூலம் சமீபத்தில் ஒரு மக்கள் பொது விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு சென்னையில் ஜூன் 18ம் தேதி நடத்திய பொது விசாரனை நெஞ்சை உருக்குவதாக இருந்தது. குழந்தைகளுக்குப் பள்ளிகளில் அளிக்கப்படும் பல தண்டனைகள் ''சித்திரவதை'' என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சர்வதேச சித்திரவதைத் தடுப்பு நாளாகிய ஜூன் 26ம் நாள் அன்றும் பல சேவை நிறுவனங்கள் இந்த குற்றங்களை மக்கள் முன் வைத்தன.
மேலே குறிப்பிட்ட இரு நிகழ்வுகளிலும் வெளி வந்ததவை ஒரு சிலவே ஆனால், வெளிவராமல் புதைக்கப்பட்டவை ஏரளாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சுமார் 100 கொடூரமான உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக இந்தச் சேவை நிறுவனங்கள் கணக்கிடுகின்றன. தங்களின் இயற்€கான இயலாமையாலும், குற்றம் புரிந்தவர்கள் வயதில் மூத்தவர்கள், அதிகாரம் உடையவர்கள் என்பதாலும், அவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பெற்றோர்களிடமும் சொல்லாமல் நினைவும் நாவும், உறைந்துபோன குழந்தைகள். இத்துடன் அடியும் உதையும் இல்லாவிட்டால் குழந்தைகள் உருப்பட மாட்டார்கள். என்ற பரவலான நம்பிக்கை காரணமாகப் பெற்றோர்கள் பள்ளிகளுக்குக் கொடுத்திருக்கும் வதைக்தான் blank cheque ஆகியவையும் குற்றங்கள் வெளிவராததன் காரணங்கள்.
குழந்தைகளை வதைப்பதில்தான் எத்தனை விதம்? அதில் குழந்தைகள் அனுபவிக்கும் வேதனைகள் எத்தனை வகை? இவற்றில் ஒரு குறிப்பிட்ட வகை குழந்தைகள் சந்திக்கும் பாலியல் பலாத்காரங்கள். சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் 9 வயதான நான்காம் வகுப்பு மாணவி உடற்பயிற்சி ஆசிரியரால், பள்ளிவளாகத்திலேயே, வகுப்பு நடக்கும் நேரத்திலேயே கொடிய பாலியல் பலாத்காரத்திற்குப் பலமுறை பலியானது; +2 மாணவிக்குத் தாவரவியலில் அதிக மதிப்பெண் போடுவதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை காட்டி, பலமுறை பரிசோதனைக் கூடத்திலேயே உறவுகொண்டு அவளைக் கர்ப்பமாக்கித் தீக்குளித்து தற்கொலைக்குத் தள்ளிய ஆசிரியர்; 14 வயது மாணவியை வகுப்பறையைப் பெருக்கச் சொல்லி அழைத்து, பலாத்காரம் செய்து, தொடர்ந்து அச்சுறுத்தியே உறவு கொண்டு கர்ப்பமடையச் செய்த ஆசிரியர் என்று மாணவிகளைப் பாலியல் வேட்டையாடிய ஆசிரியர்கள்.
பள்ளியில் நடக்கும் பாலியல் விஷமங்கள், சில்மிஷங்கள், சீண்டல்கள், பலாத்காரங்கள் பெரும்பாலும் வெளிவருவதேயில்லை. குற்றவாளிகள் பெரும்பாலும் ஆசிரியர்தான். பரிசோதனைக் கூடங்களின் ஒதுக்குப் புறங்களில் மாலை நேர ஸ்பெஷல் க்ளாசில் பல்வேறு அத்துமீறல்கள் நடப்பதாகக் கேள்விப்படுகிறோம். குழந்தைகளின் தற்கொலை போன்று பெரும் துயரச் சம்பவங்கள் ஏற்பட்டால் மட்டுமே இவை வெளிவருகின்றன. மேலே குறிப்பிட்ட ஒரு கொடுமையில் மாணவி இறந்து, பிரேதப் பரிசோதனை செய்தபொழுது தான் அவள் கர்ப்பமாக இருந்தாள் என்பதே தங்களுக்குத் தெரிய வந்தது என்று பெற்றோர் சொல்லியிருக்கின்றனர். இவ்வாறு வெளிவராததற்குக் காரணம் காண ஆய்வு தேவையில்லை. நமது ஆண் ஆதிக்க சமுதாயத்தில் இளம் பெண்களின் உடலில் ஏற்ப்டும் எந்த விபத்தும் வெளியில் தெரிந்துவிட்டால் விளைவைச் சந்திக்க வேண்டியது பெண்தான் அவளுக்கு திருமண வாய்ப்புகள் அற்றுப் போகின்றன. திருமணத்தைத் தவிர பெண்ணுக்கு வேறு கதியும் நம் சமுதாயம் விதிக்கவில்லை. இந்தக் கதியற்ற நிலையைத்தான் ஆசிரிய வக்கிரங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
தண்டனை என்ற பெயரில் நடக்கும் குரூரங்கள் ஏராளம். ஆசிரியரின் அன்றைய ஆத்திரத்தின் கொதிநிலை, கையில் கிடைக்கும் ஆயுதம், மாணவனின் பலவீனத்தைப் பற்றிய கணிப்பு, பள்ளியில் வெளியில் நிலவும் கேட்பாரற்ற சூந்நிலை என்ற பல காரணிகள் தண்டனையின் தன்மையை நிர்ணயிக்கின்றன. ஆறு வயது மாணவியை அலமாரியில் அடைத்து வைத்து மயக்கமடையச் செய்தது; 4 வயது L.K.G. மாணவியை ஒரு எழுத்து சரியாக எழுதவில்லை என்ற குற்றத்திற்காக பிஞ்சு உடலைப் புரட்டி புரட்டி அடித்ததில், உடலும் மனமும் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் தொடர்ந்து படிக்க இயலாத நிலைக்கு ஆளானது, உச்சி வெயிலில் சூடு மணலில் முட்டி போட்டே பள்ளியைச் சுற்ற வைத்து கொப்பளமும், சீழுமாகக் குழந்தைகளைத் துடிக்க வைத்தது; ஆசிரியர் அடித்தபொழுது ரூலர் குத்திக் குழந்தையின் கண் பார்வையே போனது... இவை பொது விசாரணையில் வெளிவந்த சில கொடுமைகள்.
இவற்றின் தொடர்ச்சியாகச் சென்ற மாதம் வேளச்சேரியில் மிகவும் ஏழைப் பிள்ளைகள் பயிலும் ஒரு பள்ளியில் நடந்த சம்பவம். பள்ளியில் விற்கப்படும் நோட்டுப் புத்தகங்கள்தான் வாங்க வேண்டுமென்ற கட்டாயம். மார்க்கெட் விலையைவிட அதிகமாகக் கொடுத்து வாங்க இயலாத 9,10 வகுப்பு மாணவியர் வெளியில் வாங்கி விட்டனர். ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியை மாணவியரை வரிசையாக நிற்க வைத்த பிரம்பால், அடித்திருக்கிறார். அதிக விலைக்கு விற்கும் குற்றம் புரிந்தது பள்ளி நிர்வாகம்; அடி வாங்கியதோ வயது வந்த மாணவியர்.
நாவினால் சுடுதல் பள்ளிகளில் கை வந்த கலை. சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் அவமானப்படுத்தப்பட்ட மாணவன் தற்கொலை செய்தகொண்ட நிகழ்ச்சி மீடியா கவனத்தை அதிகம் ஈர்த்த ஒன்று. அந்தப் பள்ளியில் மாணவர்களைத் தண்டிப்பதற்காக அடைக்கும் cell ஒன்றும் உள்ளதாம். ஏகப்பட்ட பணம் செலவழித்துக் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பள்ளி இது.
ஆங்கிலச் செய்யுளை சரியாக ஒப்பிக்காவிட்டால் அசெம்பிளியில் நிர்வாணமாக நிற்க வைப்பேன் என்ற அச்சுறுத்தலுக்கப் பயந்து ஒரு மாணவன் தீக்குளித்துள்ளான். ஒன்பது வயது மாணவி இரட்டை ஜடை போடவில்லை என்பதற்காக வகுப்பு லீடர் அவள் பெயரை போர்டில் எழுதி, ஆசிரியரும் திட்டினார் என்பதற்காக தீக்குளித்து இறந்தாள்.
பல வகைப்பட்ட பள்ளிகளிலும் வன்முறைகள் நடக்கின்றன. அடி மட்டத்துக் குழந்தைகள் பயிலும், அரசுப் பள்ளிகள், கட்டணம் செலுத்திப் படிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மிகவும் வசதி படைத்த குழந்தைகள், படாத பாடுபட்டு அட்மிஷன் வாங்கும் செல்வாக்கு மிகுந்த பள்ளிகள் என்று அனைத்திலும் இந்த வன்முறைகள் நடக்கின்றன.
சரி. இந்த வன்முறைகளெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டவைதானா? தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் ''தமிழ்நாடு கல்வி விதிகள்'' (Tamil Nadu Education Rules) என்ற பெயரில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று மாணவர்களுக்கு எத்தகைய தண்டனைகள் அளிக்கப்படலாம் என்பதை விரிவாகச் சொல்கிறது. ''..... கையில் ஆறு அடி (பிரம்பால்) கொடுக்கலாம். ஆனால், தலைமை ஆசிரியராலோ அல்லது அவரது மேற்பார்வையிலோ தான் அளிக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் தண்டனைகள், அனைத்து விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியாத, என்றோ காலாவதியாகிவிட்ட இந்த விதி முறைகளே தேவலை என்கின்ற நிலைதான் இன்று நிலவுகிறது. இந்த விதிமுறைகளைப் புதுப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து ஒரு வருடமாகிறது. அதற்கான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பல வன்முறை தண்டனைகள் அளிக்கப்பட்டதன் விபரீத விளைவுகளைத் தொடர்ந்து. இப்பள்ளிகளின் ஆணையர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் இப் பள்ளிகளில் Corporal punishment முழுமையாகத் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவ்வாறு நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை பல ஆயிரம் பள்ளிகளைத் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வசதிகள் அந்த ஆணையத்திற்கு அளிக்கப்படவும் இல்லை.
பல தனியார் பள்ளிகள் எந்த சட்ட திட்டங்களுக்கும் உட்படாமல் இயங்குகின்றன. ஒரு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான படிவத்தில் பெற்றோர் கையெத்திட வேண்டிய உறுதிமொழி, ''பள்ளியில் ஏற்படும் எந்தவித அசம்பாவிதத்திற்கும் பள்ளித் தலைமையோ நிர்வாகமோ பொறுப்பு ஏற்காது. என்ற சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்.'' பெற்றோர்களும் வாய் பேசாமல் கையெழுத்திட்டு பிள்ளைகளைத் தர்ப்பணம் செய்துவிடுகின்றனர்.
குழந்தைகளுக்கு தண்டனை அளித்தல் ஐ.நா. சபையின் குழந்தை உரிமை சாசனத்திற்கு (United National convention on the Rights of the Child) முரணானது. இந்த சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால் அதனைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அத்துடன் கோல்கத்தா, டெல்லி உயர் நீதிமன்றங்கள் குழந்தைகளைப் பிரம்பால் அடித்தல் போன்ற மற்ற வன்முறைகளையும் தடை செய்துள்ளன. ஆந்திரா, கோவாவிலும் இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் நம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் பள்ளிகளில் Corporal Punishment அளிப்பதை தடை செய்யக்கூடாது என்று துரதிருஷ்டவசமாகப் பரிந்துரை செய்துள்ளது. பள்ளிகளில் நடக்கும் கொடூரங்களை நியாயப்படுத்துவதாக இது அமைந்துவிட்டது. இந்த பரிந்துரை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியம். ஆனால், சட்டங்களுக்கு அப்பால், இந்தக் கொடூரங்களுக்குக் காரணமான கல்விச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு மட்டங்களில் நிலவுகின்ற கல்விச் சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். அடி மட்டத்துக் குழந்தைகள் பயிலுகின்ற அரசுப் பள்ளிகள் ஒரு பக்கமும், வசதி வாய்ந்த குழந்தைகள் கற்கின்ற பள்ளிகள் மறு பக்கமுமாக, பல மட்ட வர்க்கப் பிரிவு கொண்ட கல்வி அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகள், பஞ்சாயத்துப் பள்ளிகள் இன்று ஏழைகளின் ஏழைகளுக்கு மட்டுமே. இங்கு உதாசீனமும், பொறுப்புகளைக் கை கழுவிவிட்டு விலகிக் கொள்வதும் தான் அரசின் கொள்கையாக இருக்கிறது. அரசு, பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு ஈராசிரியருக்கு மேல் எங்கும் பணி நியமனம் இல்லை. பெரும்பாலான நாட்களில் அநேகமாக ஒரு ஆசிரியர் 5 வகுப்புகளைச் சமாளிக்க வேண்டிய அவல நிலை. இடைநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்குப் பாதி ஆசிரியர் கூட இல்லை. அத்துடன், பாடச் சுமையோ நாளக்கு நாள் கனத்து வருகிறது. அதிலும், முதல் தலைமுறை கல்வி பெறும் இப்பள்ளிக் குழந்தைகளால் கற்றுத் தேற இயலா வண்ணம் கனத்துக் கொண்டே வருகிறது பாடத் திட்டம். இந்நிலையில் ஆசிரியர் பிரம்பே உற்ற துணை என்று கருதுகிறார்.
பாடத் திட்டங்கள் யாரால், யார் தேவைக்காக நிர்ணயிக்கப்படுகின்றன? நமது நாட்டின் பாடத் திட்டங்களை நிர்ணயிப்பது மிகப் பெரும்பாலான குழந்தைகளின் தேவையோ, புரிந்து உள்வாங்கும் சக்தியோ, அவர்களது ஆற்றலின் எல்லையோ, சமுதாயத் தேவையோ அல்ல. உச்சாணிக் கொம்பிலே அமர்ந்திருக்கும் மிகச் சிறு எண்ணிக்கையிலான elite classes, உயர்மட்ட வகுப்பினோரின் தேவைக்கேற்ற வண்ணம் இவை நிர்ணயிக்கப்படுகின்றன. இவர்களது தேவையோ இந்த நாட்டின் மனித வள மேம்பாட்டுடன் தொடர்புடையதல்ல. உலகளாவிய போட்டிக்குத் தங்கள் குழந்தைகளை இவர்கள் தயாரிக்கிறார்கள். பிறந்தது முதல் தங்கள் அதீத கனவுகளை நிறைவேற்ற தங்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் இன்று CBSE, ICSE போன்ற பாடத் திட்டங்கள் மிக வளர்ந்த நாடுகளின் பாடத் திட்டங்களை விட சில வகைகளில் அதிகம் கற்றுத் தருபவை. இன்றைய உலகம் போட்டியில் கரையும் உலகம். மனிதனை மனிதன் விழுங்கும் கேவலமான போட்டிக்கு உயர் வர்க்கத்துக் குழந்தைகள் பிறந்தது முதல் தயாரிக்கப்படுகிறார்கள். சக மாணவனை எதிரியாகப் பார்த்து, அவனுடன் போட்டியிடும், போர் தொடுக்கும் மனப்போக்கு சமுதாய நெறி வளர்க்கப்படுகிறது.
உலகை வெல்லும் உயர் வர்க்க பயணத்தைத் தொடர்ந்து, மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம், இடைவெளி விட்டேனும் பின்தொடர வேண்டிய நிர்ப்பந்தம் மற்ற சாமான்யருக்கு ஏற்படுகிறது. இந்த நிர்ப்பந்தங்களில் வார்க்கப்படும் பாடத் திட்டம் பாவப்பட்ட குழந்தைகளுக்கு எம்பி எம்பிக் குதித்தாலும் எட்டாத உயரம்; எட்டவைத்தே தீர வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு, கண் மூடித்தனமாக அடித்தேனும், நாவினால் சுட்டேனும் எட்ட வைக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியரின் அரக்கத்தனங்களை நியாயப்படுத்தவில்லை, பிரச்சினையின் பின்புலம் இது.
மேல்தட்டுக் குழந்தைகள் மட்டம் தண்டனைகளிலிருந்து தப்புகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. வசதி படைத்த செல்லக் குழந்தைகளாக அவதரித்திருக்கும் இவர்களும் பல தண்டனைகளுக்கு, வன் முறைகளுக்கு இலக்காகின்றனர். காரணம் பெற்றோர்களின் வானுயரக் கனவுகளை நிஜமாக்குவது இவர்களது பிறவிப் பயன். இந்தக் குழதைகளின் வாழ்க்கையே செல்வாக்கு மிகுந்த பள்ளிகளில் இடம் பிடிப்பது. மார்க், முதல் ராங்க், இவற்றிற்கான ட்யூஷன், கோச்சிங் கிளாஸ் இவை அனைத்திலும் இடையறாத போட்டி, தங்கள், குழந்தைகள் முதல் பரிசுகளைத் தட்டிக் கொண்டு போவதற்காகப் பெற்றோர் செய்யும் தவம், தாய்மார்கள் நோற்கும் நோன்புகள், இவற்றில் பெரும் வெற்றி தரும் சமுதாய மதிப்பு... இதுவே அவர்கள் உலகம். இதில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள், புண்படுத்தல்கள், அவமானங்கள் இவையெல்லாம் பெற்றோர்களின் ஆன்ம ஜபம் பலிப்பதறகான தவிர்க்க முடியாத சோதனைகள்.
பள்ளிகளின் தரத்திற்கான ஒரே அளவுகோல். எத்தனை மாணவர் மருத்துவ - பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வில் நல்ல ராங்க் பெற்றார்கள் என்ற ஒன்றே. வினோதமான பள்ளிகளெல்லாம் முளைத்திருக்கின்றன. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 11 & 12 வகுப்புகள் மட்டுமே உடைய பள்ளிகள், அனைவரும் விடுதியிலேயே தங்கிப் படிக்க வேண்டும்; ஏகப்பட்ட பணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு நடப்பது கற்பித்தல் அல்ல, teaching அல்ல, coaching. மானவர்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். அளிக்கப்படும் தண்டனைகள் வெளி வராமல் அமுக்கப்படுகின்றன. இங்கு கொண்டு போய் சேர்த்துவிட்டால் பெற்றோருக்குப் பெரும் நிம்மதி. மகன் எப்படியாவது நல்ல ராங்க் வாங்கி விடுவான். அவன் உடலும் மனமும் ரணமானால்தான் என்ன!
கல்விச் சூழலின் இந்திச் சீரழிவுக்கு ஒரு முக்கிய காரணம் வாய்ப்பளிக்கும் கல்வி ஒரு சிலருக்கே உரியதாகக் குறுகிவிட்டது. போட்டி வலுத்துவிட்டது. இடைவெளி பெருகிவிட்டது. சமுதாய பிரமிடின் உச்சி கூர்ந்து, அடித்தளம் பரந்து கிடக்கிறது. உச்சியின் நுழைவாயிலைக் காவல் காக்கும் பூதம் காவு கேட்கிறது. குழந்தைகளும் இளைஞர்களும் பலியாகின்றனர். உச்சியை எட்டிவிட்டவன் உலகாள்கிறான். சிலிகான் வாலியும் நம் நாட்டில் கால் பதித்துவிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் வெற்றி வீரனைத் தழுவிக் கொள்ளக் காத்திருக்கின்றன. அங்கு அவனது ஒரு நாள் வருமானம் சராசரி இந்தியனின் ஓராண்டு வருமானத்திற்கும் அதிகம்.
இந்த வாழ்க்கைப் பயணம் வன்முறைப் பயணம். பெரும்பாலானவரைத் தகுதியற்றவர் என்ற முத்திரை குத்தி, பாதையிலிருந்து பாதாளத்தில் தள்ளிவிடும் பயணம். இந்த வன்முறை வகுப்பறையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு நாட்டின் தலைவிதி அதன் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறதாம். இதோ நாட்டின் தலைவிதி, வகுப்பறையின் தலைவிதி.
நன்றி: உயிர்மை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகுப்பறை வன்முறைகள் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - குழந்தைகள், பள்ளிகளில், பள்ளிகள், பள்ளியில், வேண்டிய, தண்டனைகள், வேண்டும், பாடத், ஆசிரியர், தொடர்ந்து, கல்வி, வயது, புரிந்து, அதில், கல்விச், வகுப்பு, கொண்டு, பாலியல், இல்லை, நமது, கொள்ள, பெரும்பாலான, நாட்டின், தங்கள், நடக்கும், பிரம்பால், கட்டாயம், பள்ளி, அரசுப், வசதி, அதிகம், உயர், சமுதாய, ராங்க், பயணம், தலைவிதி, உலகம், அல்ல, படிக்க, இங்கு, தேவையோ, இன்று, மட்டுமே, பொது, சேவை, தமிழ்நாடு, சென்னையில், ஒன்று, சமீபத்தில், corporal, அளிக்கப்படும், தண்டனை, முடியாத, ஏற்றுக், நாள், குறிப்பிட்ட, தான், பெற்றோர், காரணம், வெளியில், punishment, பெரும், உரிமை, எத்தனை, மாணவி, மாணவியை, இந்தக்