முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » மீண்டும் யுத்தம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - மீண்டும் யுத்தம்
- கு. கண்ணன்
இலங்கையின் வடக்கு எல்லையையொட்டி இருக்கிறது பலாலி விமான நிலையம். இது இப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விமான நிலையத்தின் பிரதான பகுதியில் ராணுவம் இருப்பதால், பயணிகள் சென்றுவர ரன்வேயின் ஓரமாக தகரம் மற்றும் மரத்தால் ஆன தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்துள்ளார்கள். இங்கிருந்து ராணுவ உயர் பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள பகுதி வரைக்கும் பயணிகள் வாகனத்தை முன்னால் ஒரு வீரர் துப்பாக்கியுடன் நிற்க, ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே ஓட்டிக் கொண்டு வருகிறார். பிறகு டிரைவர் மாறிக்கொள்ள வண்டி யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்கிறது. சாலையின் இரு புறங்களிலும் தென்படும் ராணுவக்குவிப்பு, குண்டுகள் துளைத்து புள்ளி புள்ளியாக இருக்கும் சுவர்கள்... என எல்லாவற்றையும் பார்க்கும் போது யுத்த அழுத்தம் நம்மையும் பற்றிக் கொள்கிறது.
புதியதாக வரும் ஒருவருக்கு யாழ்ப்பாண நகரத்துக்குள் நுழைந்த பிறகு தான் இயல்புக்குத் திரும்ப முடியும். நகரமும் இயல்பாய் இருக்கிறது. ஆனால், இது தோற்றம் தான். இரண்டு நாட்களிலேயே நகரம் இயல்பாய் இல்லை என்பதும் தெரிந்து விடுகிறது.
யாழ்ப்பாணம், நகரம் என்று சொல்லப்பட்டாலும் பார்ப்பதற்கு நகரம் போல் இல்லை. கொஞ்சம் பெரிய கிராமம் அல்லது பல கிராமங்கள் ஒன்றாகச் சேர்ந்த பகுதி போல் தான் இருக்கிறது. பெரிய பெரிய ஓட்டு வீடுகள், வீட்டைச் சுற்றிலும் விஸ்தாரமான இடம், மரங்கள், சந்து சந்தாக செல்லும் தெருக்கள், உணவுப் பழக்க வழக்கம்... என்று பல்வேறு வகையிலும் கேரளாவை ஞாபகப் படுத்துகிறது யாழ்ப்பாணம்.
மன்மதராசா, சின்ன வீடா வரட்டுமா; பெரிய வீடா வரட்டுமா போன்ற தமிழ்நாட்டில் பாப்புலராக இருக்கும் சினிமா பாடல்கள் யாழ்ப்பாணத்தின் எப்பகுதிக்குப் போனாலும் கேட்கிறது. கடை பேனர்களில் விஜய், அஜித், ரஜினி, கமல், சிநேகா, மீனா படங்கள் என்று மொத்தத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இருப்பது போல் தான் இருக்கிறது. ஆனால், வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசிவிட்டால் போதும், அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்கள். டீக்கடையில் நுழைந்து 'ஒரு டீ' என்றதும், நீங்கள் இந்தியாவா? என்று பக்கத்திலிருப்பவர் கேட்கிறார். இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் யாழ்ப்பாணத்து மக்களுக்குக் கொஞ்சம் அதிருப்தி இருக்கிறது. இந்தியா எங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறார்கள். நம்மூரில் இருப்பதை விட அதிகம் தான். தெய்வத்துக்கு சமமான மரியாதை அடுத்த படியாக இந்திராகாந்தியை மதிக்கிறார்கள். இந்திராகாந்தியின் மரணம் தங்களது விடுதலைப்போராட்டத்துக்குப் பெரிய ஒரு பின்னடைவு என்ற எண்ணம் அவர்களிடம் இப்போதும் இருக்கிறது.
யாழ்ப்பாணம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நகரத்தின் முக்கியமான பகுதிகள், சந்திப்புகள், எல்லைப் பகுதிகள், சாலையோரங்களில் மணல் மூட்டைகளைச் சுற்றிலும் அடுக்கி உள்ளே துப்பாக்கியுடன் ராணுவ வீர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு தெரு முனையில் பத்து போலீஸ் குவிக்கப்பட்டாலே நமக்கு உதறல் எடுக்கும். ஆனால், இவ்வளவுக்கு நடுவிலும் யாழ்ப்பாண மக்களிடையே ஒரு இயல்பான வாழ்க்கை இருப்பது தான் ஆச்சர்யம்.
யுத்தம் எங்களை எந்தச் சூழ்நிலைக்கும் அனுசரித்துப் போக பழக்கிவிட்டது. கரண்டேயில்லாமல் வாழ்ந்திருக்கிறோம் என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள். மிதிவெடிகள் கவனம், தற்காப்பின்மை உங்களுக்கு மரணத்தை அல்லது உடல் அங்ககீனத்தைக் கொண்டு வரலாம், என்ற அறிவிப்புப் பலகையை பல்வேறு இடங்களிலும் பார்க்க முடிகிறது. புதியதாக யாராவது ஊருக்குள் வந்தாலும், பார்த்து நடங்கள்; கால் தடங்கள் இல்லாத எந்த இடத்திலும் கால் வைக்காதீர்கள், என்று ஊர்க்காரர்களும் எச்சரிக்கிறார்கள். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த குழுக்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் ஆயிரம் பேர் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆன பிறகும் முழுமையாக கண்ணி வெடிகளை அகற்ற இன்னும் இருபது வருடங்கள் ஆகும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
இப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருக்கிறது. இலங்கையின் தென்பகுதியில் தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதை வடக்கு எல்லைக்குள் கொண்டுவர, இடையே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியைக் கடந்து தான் வர வேண்டும். அது சாத்தியமில்லை என்று பெரிய ஜெனரேட்டரை இயக்கி யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்குகிறது அரசு. எனவே, மின்சாரத்தைத் தாரளமாகச் செலவழிக்க முடியாத நிலை. தெரு விளக்குகள் கிடையாது. இதனால் இருட்டியதும் ஊர் அடங்கிவிடுகிறது. ஆறரை - ஏழுக்கெல்லாம் கடைகளை மூடிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்குப் பதில் அதிகாலையிலேயே ஊர் சுறுசுறுப்பாகி விடுகிறது. காலையில் ஏழு மணிக்கெல்லாம் அன்றாட பணிகள் தொடங்கிவிடுகின்றன.
வெளித் தோற்றத்துக்கு ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிந்தாலும் யாழ்ப்பாணத்தின் உள் கட்டமைப்பு விடுதலைப்புலிகள் கையில் தான். பல்கலைக்கழகம் உட்பட அரசு அலுவலகங்கள் எல்லா இடத்திலும் இருக்கும் தமிழர்கள் புலிகள் ஆதரவாளர்கள் தான். எனவே, புலிகள் விரும்புவது அல்லது அவர்களது அனுமதி பெற்ற காரியங்கள் தான் சாத்தியம்.
எரிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தை அரசு புதுப்பித்து விட்டது. சிதைக்கப்பட்டதற்கான எந்தச் சுவடும் இல்லாமல் புத்தம் புதியதாக அழகாக இருக்கிறது நூலகம். ஆனால், பிரச்னையே இது தான். நூலகத்தைப் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்ட போது விடுதலைப்புலிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் சந்ததியினருக்கு எங்கள் மீது இழைக்கப்பட்ட அநீதியின் நினைவுச் சின்னமாக அது இருக்க வேண்டும். எனவே சிதைந்த நூலகத்தை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் புதியதாக நூலகத்துக்கு கட்டடம் கட்டிக் கொள்ளுங்கள். என்பது அவர்கள் வாதம். ஆனால், சிங்கள அறிவு ஜீவிகள் மட்டும் தான் மன்னிப்பு கேட்டார்கள். அரசு கேட்கவில்லை. அத்தோடு புதிய கட்டடம் கட்டும் யோசனையையும் அரசு ஏற்றுக் கொள்ளாமல் பழைய கட்டடத்தையே புதுப்பித்துவிட்டது. எனவே நூலகத்தை திறக்க விடுதலைப்புலிகள் அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள், என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
இது போல் மேலோட்டமான பார்வைக்கு இயல்பாகத் தெரியும். நகரத்துக்குள் எந்த நேரத்திலும் பற்றிக்கொள்ளலாம் என்பது போல் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. குறிப்பாக, மாவீரர் துயிலும் இல்லங்களிலுள்ள கல்லறைகளை அகற்றும் முயற்சியிலும் ஒரு முறை ராணுவம் ஈடுபட்டது. இப்போது சமாதான பேச்சுவார்த்தை நடப்பதாலும், உலக நாடுகளிடையே தங்கள் மீது நல்ல எண்ணம் ஏற்பட வேண்டும். என்பதற்காகவும் தான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் புலிகள் சும்மா இருக்கிறார்கள். ஆனால், நீண்ட நாட்களுக்கு இதை அனுமதிப்பார்கள் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். ஓரளவுக்கு அரசியல் போக்கைத் தெரிந்து வைத்திருப்பவர்கள்.
சமாதான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, இரண்டு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் படியான ஒரு தீர்வு ஏற்படும் என்பதிலும் யாழ்ப்பாணத்தவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இது போல் எத்தனை சமாதான முயற்சிகளைப் பார்த்துவிட்டோம், என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள்.
சிங்கள அரசியல் கட்சிகள் இரண்டும் ஒருமித்த கருத்துக்கு வரும் பட்சத்தில் தான் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் எந்த அரசியல் சட்டதிருத்தத்தையும் கொண்டு வர முடியும். அது நடக்கும் என்று தோன்றவில்லை. ரணில் ஒரு முயற்சி செய்தால் சந்திரிகா இழுத்தடிப்பார். சந்திரிகா முயற்சிக்கும் போது ரணில் இழுத்தடிப்பார். இப்படி வருடக்கணக்காக செல்வதை நிச்சயம் புலிகள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, யுத்தம் மீண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்கிறார், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயம் நாளிதழின் ஆசிரியர் வித்தியாதரன்.
யுத்தம் எந்த நேரத்திலும் வரலாம் என்று மக்களும் தயார் நிலையிலேயே இருக்கிறார்கள். பதுங்குக் குழிகள், அதற்குத் தேவையான பலகைகள், சிம்னி விளக்குகள், சைக்கிள்கள் என்று யுத்தச் சூழ்நிலையில் வாழத் தேவையான பொருட்கள் எல்லோரது வீட்டிலும் தயார் நிலையிலேயே இருக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீண்டும் யுத்தம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தான், இருக்கிறது, போல், பெரிய, அரசு, எந்த, விடுதலைப்புலிகள், கட்டுப்பாட்டில், புலிகள், பல்வேறு, புதியதாக, இருக்கும், அரசியல், மின்சாரம், யாழ்ப்பாண, வேண்டும், போது, நூலகத்தை, யுத்தம், சமாதான, மீது, பகுதி, யாழ்ப்பாணம், இல்லை, நகரம், இப்போது, அல்லது, சொல்கிறார்கள், இருப்பது, கொண்டு, இரண்டு