முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » தொழில் துறையில் பெண்கள் ஈடுபாடு குறைவு
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - தொழில் துறையில் பெண்கள் ஈடுபாடு குறைவு
உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு, பொருள் உற்பத்திக்கான முறைகளை எளிமைப்படுத்துதல் போன்றவை மூலம் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் தற்போது அதிகரித்து இருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் மட்டுமே உண்மையான வளர்ச்சியை ஒவ்வொருவரும் அடைய முடியும். குறிப்பாக பொருளாதார முன்னேற்றம் தற்போதைய நிலையில் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய சமுதாய சூழலில் தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பெண்கள் வேலை பார்ப்பதைவிட பாதுகாப்பானது சுய தொழில். ஆனால், இதில் எந்த அளவிற்கு பெண்களால் தைரியமாக செயல்பட முடிகிறது என்று கேட்டால், மிகப் பெரிய கேள்விக் குறிதான் மிஞ்சும்.
இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் சரிசமமான உரிமைகள் கொடுத்தால் மட்டும் போதாது. பெண்களின் தன்னிச்சையான பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான வாய்ப்புகளையும் தர வேண்டும் என்றும் அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.
ஆனால், இந்திய மக்கள் தொகையில் சரிசமமாக இருக்கும் பெண்களுக்கு போதுமான அதிகாரங்கள், வாய்ப்புகள் கிடைக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் கூற வேண்டும். சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் இந்திய சமுதாயம் ஆணாதிக்க சமுதாயமாகவே இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு தர வேண்டும் என்று கூறுகிறது. 15வது பிரிவு பாலியல், மதம், ஜாதி ஆகியவற்றில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு கிடையாது என்று கூறுகிறது. 16வது பிரிவில் சம வாய்ப்பு எல்லா நிலையிலும் பெண்ணுக்கு தர வேண்டும் என்று கூறுகிறது.
பாரம்பரியமாக குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்கள் இன்னும் பொருளாதார நிலையில் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.
எல்லா தடைகளையும் மீறி பெண் சுய தொழில் செய்ய முன் வந்தால், தொழிலில் சந்திக்கும் சவாலை விட பத்து மடங்கு சவால்களையும் பிரச்னைகளையும் சமுதாயம், குடும்பம் போன்ற பல பிரிவுகளில் இருந்து சந்திக்க வேண்டியிருக்கிறது. சுய தொழில் செய்யும் ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு, பாரம் கிடையாது. ஆனால், அதே தொழிலை ஒரு பெண் செய்தால், தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்ப பொறுப்பையும் சுமக்க வேண்டிய நிலைமை பெண்ணுக்கு இருக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் குடும்ப பொறுப்பில் சம பங்கு இருக்கிறது என்பதை சமுதாயத்தில் எந்த மட்டத்தில், நிலையில் இருக்கும் ஆண்களும் புரிந்த கொள்வதில்லை. ஏதோ குடும்பம் என்றால் அது முழுக்க பெண்களின் பொறுப்பு என்ற மிக தவறான எண்ணம் ஆண்களுக்கு இருக்கிறது.
பொருளாதாரத்தில் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் உழைப்பதற்கு, சவாலை சமாளிபதற்கான தைரியத்தை, திறமையை பெற்றிருந்தாலும் எந்த விஷயத்திலும் சுயமாக முடிவு எடுக்க முடிவதில்லை. பெற்றோர், உறவினர், கணவர் என்று பல பேரின் முடிவுகளின்படியே செயல்பட வேண்டியிருக்கிறது. மிக முக்கியமான தருணங்களில் பெண்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களின் விருப்பத்தின் படிதான் செயல்பட வேண்டியிருக்கிறது. இது குடும்ப விஷயங்களில் மட்டுமல்லாது தொழில் சார்ந்த விஷயங்களிலும் எதிரொலிப்பதால் பெண்களால் தொடர்ந்து வெற்றிகரமாக தொழில் செய்ய முடிவதில்லை.
அப்படி என்றால் இவ்வளவு பெண் தொழிலதிபர்கள் இருக்கிறார்களே என்றால், ஒன்று அவர்கள் ஒரே விஷயத்தில் ஆண்களை விட பல மடங்கு அதிகமாக உழைத்திருப்பார்கள் அல்லது அதிர்ஷ்டவசமாக குடும்ப ஆண்களின் முழு ஒத்துழைப்பும் வெற்றி பெற்ற பெண்களுக்கு கிடைத்திருக்கும்.
ஆண்களைப் போல பெண்களும் திறமையில் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று முழுமனதுடன் நம்பினால் மட்டுமே நிறைய வெற்றிகளை பெண்கள் சுய தொழிலில் பெற முடியும்.
பொருளதார நிலையில் பெண்கள் முன்னேற்றம் அடையாத சமுதாயம் நாகரீகமான சமதாயமாக இருக்க முடியாது. இந்த உணர்வு இப்போது தான் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு தான் மகளிர் தொழில் வாய்ப்புக்கான திட்டங்களும், அறிவிப்புகளும், அந்த உதவிகளால் பெண்கள் இப்போது பெருமளவில் தொழிலில் சுயமாக நிற்கத் துவங்கியுள்ளனர். மத்திய அரசு மட்டுமல்ல; மாநில அரசுகளும் இப்போது பெண்கள் நலனிலும், பெண்கள் தொழில் முனைவதிலும் அதிக அக்கறை காட்டத் துவங்கி விட்டன. குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஏழைப் பெண்கள் சொந்தக் காலில் நிற்க துணை புரிந்து வருகின்றன.
இதுபோன்ற திட்டங்களும், சலுகைகளும் நிறைய இருப்பதை தெரிந்து கொண்டு ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்க முன் வரவேண்டும்.
நன்றி: தினமலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொழில் துறையில் பெண்கள் ஈடுபாடு குறைவு - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பெண்கள், தொழில், இருக்கிறது, வேண்டும், குடும்ப, பொருளாதார, கூறுகிறது, நிலையில், பெண், செயல்பட, பெண்களுக்கு, எந்த, இந்திய, இப்போது, என்றால், பெண்களும், ஆண்களுக்கு, குடும்பம், இருக்கும், தான், சமுதாயம், தொழிலில், வேண்டியிருக்கிறது