முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » தொடரும் தீண்டாமைக் கொடுமை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - தொடரும் தீண்டாமைக் கொடுமை
- கார்முகில்
''தீண்டாமைப் பழக்கத்தினால் இந்துக்கள் தங்கள் பிறவிப்பெருமையைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். தங்களை மேலான புனிதமான நிலையில் வைத்துப் புளகாங்கிதம் கொள்கிறார்கள். இந்துக்கள் தீண்டாமையை இன்னும் கைவிடாமல் இருப்பதற்கு இதுவே கூடுதல் காரணம்'' - அண்ணல் அம்பேத்கர்.
ஹரிஜன் என்று பெயர்சூட்டி ''கடவுளின் குழந்தைகள்'' என்று அதற்கொரு அர்த்தமும் சொன்னார் மகாத்மா காந்தி. கடவுளின் குழந்தைகள் என்று அவரால் அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை இன்னமும் ஒதுக்கி வைக்கிறார்கள்; தீண்டாமை இப்போதும் தொடர்கிறது என்று சொன்னால் நகர்ப்புறங்களிலேயே பழகியவர்களுக்கு விசித்திரமாயிருக்கும். மிகைப்படுத்துகிறார்கள் என்றுகூடத் தோன்றும், ஆனால் இன்னும் நீடிக்கிற தீண்டாமை அவலம் - நம்மைத் தலைகுனிய வைக்கிற உண்மை. தனித்தெரு, தனிப்பாதை, தனிக்கிணறு, தனிக்குவளை என்று எல்லாவற்றையும் தனியாக்கித் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைத்துக் கொடுமை படுத்தியதெல்லாம் அந்தக்காலம் என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்கெல்லாம் மிகச்சுலபமான பதில்: எல்லா கிராமங்களிலும் ஒதுக்கப்பட்டு தனியாகத்தான் இருக்கின்றன சேரிகள். அஞ்சலகம், கிராமக் காவலர் அலுவலகம், பஞ்சாயத்துத் தலைவர் அலுவலகம் போன்ற அலுவலகம் மற்றும் தகவல் தொடர்பு விசயங்களெல்லாம் ஊருக்குள்தானிருக்கின்றன.
இதெல்லாம் - எதற்காகவும் அவர்கள் நம்மிடம்தான் வரவேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடுகள் அல்லாமல் வேறென்ன?
''வீதியில் நடந்தால் தீட்டுப் பட்டுவிடும். அந்தப் பாதங்களைத் துடைக்க இடுப்பில் தெருக்கூட்டும் முறத்தைக் கட்டிக்கொண்டு போகவேண்டும். கோயில்களில் ஓதும் வேத மந்திரங்களைக் கேட்டால் மந்திரம் தீட்டாகிவிட்டதென்று காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்'' போன்ற பழைய காலத்து நிகழ்வுகளுக்குச் சற்றும் சளைத்ததில்லை இந்த நாட்டில் இப்போதும் நடக்கும் பல சம்பவங்கள்.
தீண்டாமைக் காரணமாக ''உன் தலைவிதிப்படி நீயோ உனது சந்ததிகளோ படிக்கக்கூடாது. பொதுத்தடத்தில் நடக்கக் கூடாது. நாளெல்லாம் வருசமெல்லாம் ''வெட்டிவேலை'' செய்து கிடக்க வேண்டும். கூலி வாங்க மாட்டுத்தொழுவத்தில் வந்துதான் நிற்கவேணடும். எந்தச் சாமி ஊர்வலமாக இருந்தாலும் சேரிக்குள் வராது. இழவு சொல்லவேண்டும். பிணம் எரிக்கவேண்டும். பொதுக்குளத்தில் நீரெடுக்கக் கூடாது. கையேந்தி தான் நீர் பருகவேண்டும். ஆதிக்கச் சாதியான் முன் உயரமாக உட்கார்வதோ, சத்தமாகப் பேசுவதோ கூடாது. செருப்பு போட்டு நடக்கக் கூடாது'' போன்ற நிகழ்வுகளெல்லாம் தீண்டாமை இன்னும் கொழுந்துவிட்டெரிவதையல்லாமல் வேறெதைக் காட்டுகின்றன?.
நிறவெறி குறித்து இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி ஓங்கி ஓங்கி ஒலிப்பவர்களில் ஒருவர்கூட தீண்டாமை குறித்துப் பேசுவதில்லை. அப்படியே குரல் கொடுக்கிற பலர் சுய ஆதாயத்துக்காகவோ அல்லது தொடைநடுங்கியோ மழுங்கிப் போய்விடக்கூடிய சூழல் வந்துவிடுகிறது. ஆனால் கிராமங்களில் இதுதான் நம் பிறப்பென்றும் இதுதான் நம் படைப்பென்றும், தன் வேதனைகளையும் வயிற்றெரிச்சலையும் குடிசை மோட்டுவளை பார்த்துக் கண்ணீர் வடித்தும், உணர்ச்சி வசப்பட்டுத் தடுத்துக்கேட்டால் கொடூரமாகத் தண்டனை பெற்றும் காலத்தைத் தள்ளிக் கொண்டு விடுகிறார்கள்.
மேலும் அவர்களுடைய பொருளாதார நிலைப்பாடும் போதாத கல்வியறிவால் அறிந்து கொள்ளமுடியாத உலக விசயங்களும் அவர்களின் தன்னம்பிக்கை வேரையே தாழ்மைப்படுத்திவிடுகிறது. விளைவு.... .ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்து மடிகிறார்கள். பிறகு, பிள்ளைகள்... பேரன்கள் என தீண்டாமை ஆதிக்கம் தொடர்கிறது.
நகரங்களில் இது ஓரளவுக்குத் தணிந்திருக்கிறது. கிராமங்களைப் பொருத்தவரை அப்பட்டமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஒன்றிரண்டு மாவட்டங்களில் தீவிரமாக இருக்கிறது. மற்றபடி எல்லா மாவட்டங்களிலுமே பரவலாக இதைக் காணலாம். அண்மையில் நடந்த சில பிரச்னைகளைக் பார்க்கலாமா?
கடந்த சூன் மாத ஆரம்பத்தில் தூத்துக்குடி மாவட்டம் - எட்டயபுரம் சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ளது டி.சண்முகபுரம். ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கிற இப்பகுதியில் அருந்ததியர் குடும்பங்கள் ஐம்பது தான். இவர்கள் நாய் வளர்க்க - குறிப்பாக ஆண் நாய்கள் வளர்க்கத் தடை போட்டிருக்கிறது ஆதிக்கச்சாதிவெறி. அவர்கள் வீட்டு உயர்சாதி நாயோடு வீதிநாய் கூடினால் தீட்டு ஆகிவிடுமாம். அதனால் வளர்க்கக்கூடாதாம். மீறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டுமாம்.
இது இப்படியிருக்க இதே தூத்துக்குடியில் வேலாயுதம் பாளையத்தில் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு போஸ்ட் மாஸ்டர் வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவர் தாழ்ந்த சாதிக்காரர் என்பதால் அந்த ஊரில் எவருமே அஞ்சலகத்திற்கு வீடு தரவில்லை. பிறகு வழக்கு பதிவாகி..... கடைசியில் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டார் அந்த இளைஞர்.
மதுரை, திருமங்கலம் பிரச்னையோ படு வித்தியாசமாக உள்ளது. மேல உரப்பனூர் கீழ உரப்பனூர், நல்லிபிள்ளபட்டி உள்ளிட்ட 24 கிராமங்களை உள்ளடக்கியது ராஜதாணி ஊராண்ட பஞ்சாயத்து. இந்தப் பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றும் காலில் செருப்பு போடுவதில்லை. மது அருந்தத் தடை போடப்பட்டுள்ளது. விசேசங்களுக்கு மேளமடிக்கக்கூடாது. குடை பிடிக்கக்கூடாது. வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இங்கே இது தீண்டாமையாகப் பார்க்கப்படுவதில்லை. செருப்பு கிருப்பு போட்டால் இங்குள்ள தெய்வம் தண்டித்துவிடும் என்ற மறைந்த ஒரு மன்னரின் வாக்குப்படி நடப்பதாகத் தெரிகிறது. மக்களும் அதை நம்புகிறார்கள்.
கோயம்புத்தூர் - காளப்பட்டியில் கடந்த சிலமாதங்களுக்கு முன்புவரை கடைகளில் இரட்டைக் குவளைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. எதிர்த்துக் கேட்டுப் பிரச்சனை செய்தபோது 74 அப்பாவி மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுப் பெரும் கலவரமாக உருவெடுத்தது. திருபுவனத்தை ஒட்டிய சொட்டத்தட்டி ஊரில் சுதந்திர தினத்தன்று தேசியகொடி ஏற்றியதற்காக, செருப்பாலேயே அடித்துத் தாக்கப்பட்டார் ஒரு தாழ்த்தப்பட்டவர்.
வடதமிழ்நாடு என்று வரும்போது தென்பகுதிகளைவிட பிரச்னைகள் குறைவாக இருந்தாலும், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் குறிப்பிடும்படியான பல நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன.
விழுப்புரத்தில் - துரும்பர்கள் பெரும்பலாக வசிக்கும் பகுதி. துரும்பர் - வண்ணான், சேரி வண்ணான், ஊர் வண்ணான் என்று சிலசமயம் சேரிமக்களாலேயே தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவதும் உண்டு. இப்பகுதியைச் சேர்ந்த மடியம்பட்டு மலையம்மாள் தன் மகள், குழந்தைகளோடு போய்க்கொண்டிருக்கும் போது பூவா தலையா எனக் காசைக் சுண்டிப்போட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள். மிகவும் தாழ்ந்த குரலில் இவர் தடுத்துக் கேட்க பிரச்சனை பெரிதாகி ஊரைவிட்டே அடித்துத் துரத்திவிட்டார்கள். நான்கு வருடமாகிவிட்டது அவர் வந்து.
2003 ன் தொடக்கம். செஞ்சி - மொடையூர் கிராமத்தில் கன்னியப்பன் சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார். எதிரே இரண்டு பசுமாடுகளைப் பிடித்தபடி இன்னொரு உயர்சாதிக்காரரின் மகள் வர - சைக்கிளில் மாடு மோதி இருவரும் விழுந்துவிட்டார்கள். பையன் மனிதாபிமானத்தில் அந்தப் பெண்மணியைத் தூக்கிவிட்டதுதான் தாமதம். கீழ்சாதிக்காரன் என்னைத் தொட்டுத் தூக்குவதா - என்று உரைக்கூட்டி, சுமார் இருபது பேர் அவரைத் தாக்கி அத்தோடு மட்டுமல்லாது பஞ்சாயத்தையும் கூட்டி பத்தாயிரம் அபராதத்தையும் விதித்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்துக்குப் பக்கத்திலிருக்கிறது கூத்திரம்பாக்கம் கிராமம் பொதுக்குளத்தில் நீரெடுக்கக்கூடாது. சாமி ஊர்வலம் சேரிப்பகுதிக்குள் வராது... இப்படிப் பல பிரச்னைகள். நெடுநாட்களாகவே இருந்து வந்துள்ளன. எப்படிப் போராடியும் நியாயம் கிடைக்காத பட்சத்தில் மதம் மாறப் போவதாக பாதிக்கப்பட்டோர் சொன்ன பிறகு பலரும் தலையிட்டுப் பேசினார்கள், சங்கராச்சாரியார் உட்பட. கடைசியில் 11 பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்த நிலையில் 32 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
மிகச் சமீபமாக உடுமலை வட்டம் - மானுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். டீக்கடைகளில் இரண்டு டம்ளர்கள் இருப்பதை எதிர்த்துப் புகார்கொடுத்துள்ளார். போலீசும் வந்து பா‘த்துப்போயிருக்கிறார்கள். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழகம் நெடுக அண்மைக்காலத்தில் நடந்த சில பிரச்னைகள். இப்படியிருக்கின்றன. ஏற்கனவே தனித்தெரு, தனிக்கிணறு, தனி டம்ளர் என்று இருந்த பகுதிகள் தற்போது எப்படியிருக்கின்றன என்றால் பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை.
மதுரையில் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இது இன்னும் தொடர்கிறது. போலீசில் இதையெல்லாம் புகார் சொல்வதிலும் இந்தப் பகுதி மக்களிடம் ஒருவிதப் பயம் நிலவுகிறது. காரணம் ஆதிக்கச் சாதியைச் சார்ந்திருக்கவேண்டிய பொருளாதாரச் சூழல்தான். அவர்களை அண்டி வாழவேண்டிய சூழல்தான் அவர்களை அண்டியே பிழைப்பை நடத்த முடியும் என்கிற நிலைப்பாடுதான்.
வெள்ளமலைப்பட்டி, உத்தப்பநாயக்கனூர் முதலான பகுதிகளில் இன்னும் செருப்புப் போட முடியாது. குலத்தொழில் என விதிக்கப்பட்டத் தொழிலுக்கு மாறாக எதுவும் செய்யமுடியாது. தோளில் துண்டு போடுவதோ, பொதுக்கடைகளில் முடிவெட்டுவதோ முடியாது.
தமிழகத்திலேயே ரெட்டைக்கிளாஸ் முறை அதிகமிருக்கும் பகுதியாகத் திண்டுக்கல்லைச் சொல்லலாம். வேடசந்தூர் பகுதி குறிப்பிடத்தகுந்தது. வேடசந்தூர் அதையொட்டின பி.புதுக்கோட்டை, வெள்ளணம்பட்டி, பூத்தாம்பட்டி, மாதினிப் பட்டி, கச்சத்தூர், தொட்டணம்பட்டி என்று பல இடங்களில் தனி கிளாஸ், மற்றும் பொது சலூனில் முடி வெட்டமுடியாதது போன்ற விசயங்கள் தென்படத்தான் செய்கின்றன. எழுந்த பல பிரச்னைகளையொட்டி இப்போது வீரியம் குறைந்துள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
சாதி மோதல்களாயிருந்தாலும் சரி, தீண்டாமைப் பிரச்னையாக இருந்தாலும் சரி ராமநாதபுரம் மாவட்டம் மிக முக்கியமானது. இங்கே, இந்த மாவட்டங்களில் எழுந்த பல கலவரங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீண்டாமைப் பிரச்சனைதான் பின்னணியாக இருந்திருக்கிறது. சாயல்குடி, மாரியூர், நரிப்பூர், வேம்பார் இந்தப் பகுதிகள் முக்கியமானவை. இந்த மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை என்பது அரிசனங்களுக்கு மட்டுமில்லை. அது ஒருசில உயர்சாதியினரைத்தவிர மற்ற பல சமூகத்தவர்களையும் பாதித்திருந்தது. இப்போது குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தணிந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
தீண்டாமை சார்ந்த பிரச்சனைகள் இப்படியிருக்கின்றன என்றால் இதனை அடியொற்றி எழுந்த வன்கொடுமை நிகழ்வுகளையெல்லாம் வெறும் சாதிய வன்கொடுமை என்று ஒதுக்கிவிடமுடியாது. அப்படியொரு போக்கும் இங்கே நிகழ்கிறது.
கொடுத்தக் காசை திருப்பிக் கேட்டதற்காக அடித்துக்தள்ளிக் கம்பியைக் காய்ச்சிக் சூடு போட்டுக் காய்ந்த மலத்தை வாயில் திணித்த திண்ணியத்தையும், மதுரை - திருமங்கலம் கீழ உரப்பனூர் கிராமத்திலுள்ள முத்துமாரி - பிச்சை என்கிற தாழ்த்தப்பட்டோர்கள் மீது மலத்தைக் கரைத்து வாயிலும் உடல் முழுவதிலும் ஊற்றியதையும், திண்டுக்கல் - கவுண்டம்பட்டி - சங்கனை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்திக் கிடத்தி வாயில் சிறுநீரை விட்டதையும் வெறும் சாதிய மோதல்கள் என்று ஒதுக்கி விட முடியாது. இதுவும் தீண்டாமையின் உச்சக்கட்டப் பரிமாணம்தான். இப்படி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமை வன் கொடுமைகள் இன்னும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பல பிரச்னைகளில் உற்றுப்பார்த்தால் பாதிக்கப்பட்டோர் ஆதிக்கச் சாதிக் கொடுமையாளர்களைக் கண்டு பயப்படுவது தெரியும். காரணம் அவர்களுடைய நிலமில்லாமையும், பொருளாதார வசதியின்மையும், வளமான கல்வி, வேலைவாய்ப்புகள் இல்லாமையும்தான். இதனால்தான் கொடுத்த கேசை வாபஸ் வாங்குவது, எத்தனை வேதனைகள் வந்தாலும் பேசாமல் இருந்துவிடுவது போன்ற நிலைமைகளுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
கொஞ்சம் பின்னோக்கிச் சொல்வோம். பல்வேறு வகையில் முன்பு ஒதுக்கப்பட்ட நாடார் சமூகம் அந்தத் தடைகளை உடைத்து வெளியேற மேற்கொண்ட வழி முறைகள் எந்தச் சமூகத்திற்கும் பொருந்தக்கூடியது. மது அருந்துவது கூடவே கூடாது. வீண் செலவுகள் கூடாது. கால் காசிலும் சேமித்து வைப்பது தங்களுக்குள் குறைந்த சதவிகிதத்தில் வட்டிப் பரிமாற்றங்களை வைத்துக்கொள்வது போன்று பல கட்டுப்பாடுகளை அமைத்துக்கொண்டார்கள். இதையெலலாம்விட கல்வியில், தொழிலில் தன்னை முன்னேற்றிக்கொள்ள அந்தச் சமூகத்தின் கூட்டு உழைப்பு அதிகம். தீண்டாமைக்கு ஆட்படுகிற எந்த சமூகமானாலும் சரி இப்படிப்பட்ட சில நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் பொருளாதார ரீதியிலான சிக்கல்கள் தணியும். அப்புறம் படிப்படியாக எல்லாம் சரியாகிவிட நேரும் இதைத்தான் ''அவர்களை சட்டை செய்யாமல் ஒடுக்கப்பட்டோர் வாழக்கூடிய சூழல்தான் அவர்கள் மீதான இழிசெயல்களின் வேர்களை அறுக்கும்'' என்றிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்
இது பொருளாதார சிக்கல்தீர வழி என்று கொண்டாலும் அரசியல் ரீதியான, உரிமை, சமபங்கு போன்ற விசயங்களுக்கு என்ன செய்வது. அரசியல் அதிகாரத்தில் எப்படி பங்கெடுப்பது என்ற நிலைப்பாடுகளைப் பற்றியும் யோசிக்கத்தான் வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளில்தான் இவர்களின் விடுதலை என்பது விரைவாகக் கூடும். காத்திரமான சிந்தனை ஆவேசம்கொண்ட இளைஞர்கள், படித்தவர்கள், தீவிர சமூக அக்கறையாளர்கள், தன்னார்வத் தொண்டாளர்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஏனோ தானோவென்றில்லாது தீண்டாமை நிலவுகிற பகுதி மக்களோடு கூடித் தீவிரமாக விவாதிக்கலாம்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கள் போன்றவற்றைப் பற்றிய வகுப்புகள் எடுக்கலாம். வசதி வாய்ப்புகளை உருவாக்கித்தரலாம். கடன்உதவிகளைப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கித்தரலாம். இதெல்லாம் பெருகப்பெருக தீண்டாமை, சாதிய மோதல் போன்ற நடவடிக்கைகள் எல்லாம் படிப் படியாக விலகிப்போய்விடும். தலித்துகள் இயக்கங்களாய் ஒன்று சேர்வதுதான் இந்தத் தளைகளிலிருந்து விடுபடுவதற்கான முதல் வழி.
நன்றி - புதிய பார்வை
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொடரும் தீண்டாமைக் கொடுமை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தீண்டாமை, கூடாது, இன்னும், ஆதிக்கச், பகுதி, பகுதிகளில், பொருளாதார, பிரச்னைகள், சூழல்தான், வண்ணான், முடியாது, சாதிய, எல்லாம், எழுந்த, சொல்லலாம், அடித்துத், அவர்களை, உரப்பனூர், என்கிற, அலுவலகம், தொடர்கிறது, காரணம், இருந்தாலும், செருப்பு, இந்தப், தீண்டாமைப், பிறகு, இங்கே