முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஜானு - ஆதிவாசிப் பெண் போராளி
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஜானு - ஆதிவாசிப் பெண் போராளி
- இந்திரா
சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் நாகரீக வளர்ச்சி இல்லாதவர்கள், அறிவு குறைந்தவர்கள், கரடுமுரடானவர்கள், தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அரைகுறை உடையுடன் கூட்டமாய் நடனமாடுபவர்கள் மேற்கத்தியர்களுக்கோ மனிதர்களைப் பலி கொடுப்பவர்கள், மனித மாமிசம் தின்பவர்கள்.
கேரள அரசு ஒருபடி மேலே போய் விலங்குகளுக்குக் கொடுக்கும் மரியாதையைக்கூட அவர்களுக்கு கொடுக்கவில்லை. கேரள அரசு முத்தங்காவில் ஆதிவாசிகள் சிரமப்பட்டு பண்படுத்திய காட்டு நிலத்திலிருந்து அவர்களை அடித்து வெளியேற்றிவிட்டு, விலங்குகளுக்கு சரணலாயம் அமைத்துள்ளது. அதற்கு மாற்றாக நிலம் தருவதாகக்கூட உறுதியளிக்கவில்லை அரசு. மண்ணில் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக்கி பட்டினியால் இறக்கவிட்டது ''நாகரீக'' சமூகம். வழக்கம்போல ''நாகரீக'' அரசியல் கட்சிகள் தங்கள் திருகல் வேலைகளை காண்பித்து இப்பிரச்சினையை வெளியுலகிற்கு மறைத்து விட்டனர்.
ஜானுவின் தலைமையில் 2 வருடம் முன்பு திருவனந்தபுரத்தில் அரசு செயலகத்தின் முன்னால் குடிசைகளை எழுப்பி குடியேறி, அதில் பல சிரமங்களுடன் 47 நாட்கள் போராடினர். அதன்பிறகே கேரள ஏ.கே. ஆண்டினி அரசு நிலம் தருவதாக உத்திரவாதம் அளித்து, குடிசைகளை நீக்க வைத்துள்ளது. அந்த உத்திரவாதமும் வழக்கமபோல ஏமாற்றுதான் என்று உணர்ந்து, 2003 ஜனவரி 3ம் தேதியன்று முத்தங்கா வனப்பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட குடிசைகளை போட்டு குடியேறினர். தங்கள் எல்லைக்குள் வனத்துறையினர் நுழையக்கூடாது என எச்சரித்தனர். அதை மீறி உள்ளே நுழைந்த ஒரு காவலரையும் வனத்துறை ஊழியரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை நிர்ப்பந்தித்தனர்.
ஆனால், பிப்.19 அன்று போலீஸ் பெரும்படையுடன் நுழைந்து எதிரிநாட்டு ராணுவத்தினரை தாக்குவதுபோல் ஆதிவாசிகளை தாக்கி, வனப்பகுதியைக் கைப்பற்றியது அரசு. இதில் ஒரு ஆதிவாசியும் ஒரு காவலரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. போராட்டத் தலைவர் ஜானு, ஆதிவாசி கோத்ர மகாசபா அமைப்பின் வழிகாட்டியான கீதானந்தன் மற்றம் பலர் கைது செய்து சிறையிலடைக் கப்பட்டனர். ஜானு தற்போது பிணையில் வெளிவந்துள்ளர்.
கயமை நிறைந்த நாகரீக அரசியல் கட்சிகளின் தலைமையிலன்றி, பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரே, தலைமையேற்று நடத்திய வீரமிக்க போராட்டத்தால் அதிவாசிகளின் 30 வருட காலப் பிரச்சினைகள், கோரிக்கைகள் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. வனப்பகுதியை ஆதிவாசிகளிடமிருந்து கையகப்படுத்தி உள்ளதற்கு அரசம், சுற்றுச் சூழலியலாளர்களும் சொல்லும் காரணம். இயற்கை வளங்களை / வனங்களை / விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்பதுதான். நம் மக்களும் சரிதானே? ஆதிவாசிகளிடம் காட்டைவிட்டால் அழித்து மொட்டையாக்கி விடுவார்களே (!) என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அரசு இதுவரை எந்தளவிற்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறது? இயற்கை வளங்களைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள், திட்டங்கள் ஆமுலில் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் அவற்றிற்குக் புறம்பாக அணைகள் கட்டுவது. மரங்களை வெட்டுவது, மலைகளைப் பிளப்பது, சுரங்கங்கள் தோண்டுவது, போக்குவரத்து சாலைகள் அமைப்பது என்று எதிர்கால அபாயங்கள் பற்றிய அந்த அறிவோ, கவலையோ இல்லாமல் லாபநோக்கோடு இயற்கை வளங்களை அழித்து தீர்த்துவிட்டார்கள். கடும் புயல், வெயில் வறட்சி, நிலநடுக்கம் எல்லாமே இந்த நாகரீக அரசுகள் இயற்கை வளங்களைப் பாதுகாத்த லட்சணத்தின் விளைவுதான். இன்று கொஞ்ச நஞ்சம் மிஞ்சி நிற்கும் வனம், வன உயிரிகள், இயற்கை வளங்களுக்காக நாம் அதிவாசிகளுக்குத்தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆதிவாசிகள் காடுகளோடு உடலாலும் மனதாலும் உணர்வாலும் பின்னிப் பிணைந்தவர்கள். காடுகள் அவர்களது வாழ்வில் ஓர் அங்கம். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மண்வளம், பருவநிலை மாற்றம் குறித்த அவர்களுடைய அறிவின் முன் நம் நாகரீக ''இயற்கை வளம் காக்கும்'' பல்கலைக்கழக அறிவுக் கொழுந்துகள் வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் இன்னும் இருக்கிறது. தாவர வகை பிரிப்புத்துறையில் பட்டம் பெற்றுள்ளவர்களை விட ஆதிவாசி மூலிகை மருத்துவர்களின் தாவரவியல் ஞானம் அசாதாரணமானது. நாம் பேசும் நாகரீக மொழியில் பிற மொழிக் கலப்பின்றி பல தாவரங்களின் பெயர்களை சொல்ல முடிவதில்லை. ஆனால் அவர்களின் மொழி நூற்றுக்கணக்கான தாவரங்களை பிறமொழிக் கலப்பின்றி ஓற்றைச் சொல்லில் குறிப்பிடுமளவிற்கு இயற்கை வளமிக்கதாய் இருக்கிறது. நாகரீக சமூகந்தான் பல நல்ல தாவர மரவகைகளை அழித்ததோடு மொழியின் இயற்கை குறித்த சொல்லாடல்களையும் அழித்துவிட்டது. ஆதிவாசிகள் ஒரு போதும் மருந்துக்காகப் பயன்படும் மூலிகைகளை வேரோடு அழிப்பதில்லை. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வேரோடு வெட்டி எறிந்து விட்டு, மழையே பொழிய முடியாத நிலைக்கு இயற்கையை ஆளாக்கி. அதன்பின் மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வைக் பிரச்சாரம் (!) செய்யத் தெரியாது ஆதிவாசிகளுக்கு.
சரியாகச் சொன்னால், இயற்கையின் மொழியைப் புரிந்து கொள்ளும் திறனும் அறிவும் அவர்களுக்கு மட்டுமே உண்டு. இயற்கையின் செழிப்பான காலங்களையும் பற்றாக் குறையையும். அவர்களால் அறிந்து கொள்ளமுடியும். அதற்கேற்றாற் போல் வாழவும் தெரியும். அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள்போல் பூமியை இரண்டாய் பிரிக்குமளவிற்கு பல்லாயிரம் அடிகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டி பூமியின் நீரை கடைசிச் சொட்டு வரை உறிஞ்சத் தெரியாது, உயிரினச் சுழற்சி - பெருக்கம் என்றெல்லாம் படிக்காவிட்டாலும், கர்ப்பமாய் இருக்கும் விலங்குகளை ஒரு போதும் வேட்டையாட மாட்டார்கள். அடை காத்துக் கொண்டிருக்கும் பறவைகளுக்கு விலை பேசமாட்டார்கள். இயற்கை வளப் பாதுகாப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்களை விட, சாதாரண ஆதிவாசி ஒருவர் அனைத்து இன பறவைகளின் முட்டையிட்டு அடைகாக்கும் காலம், விதம் தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி, பாதுகாத்து வளர்க்கும் விதம் பற்றிய நிறைய தகவல்களை தன் அனுபவத்தின் மூலம் கற்று வைத்திருப்பார்.
விவசாயம் செய்யும்போது சூழல் பாதுகாப்பு (Ecology) மண்வளம் என்று நாம் இன்று புதிதாய் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருப்பவற்றை அவர்கள் செவ்வனே கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆதிவாசிகள் காடுகளைப் பயன்படுத்துவது சந்தையில் விற்று, பொருளீட்டி, காங்கரீட் கட்டிடங்களில் ஏ.சி., இன்டர்நெர் என்று வாழ்வதற் காக அல்ல, தங்கள் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்தான். விலங்குகளும் உயிர்வாழ்வதற்கு மட்டும்தான் இயற்கையைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இயற்கையைப் புரிந்துகொண்ட, அறிவின் மூலம் அதைப் பாதுகாக்கும் பொறுப்புடன் செயல்படும்போது மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபடுகிறான். இயற்கையின் முன் எந்த உயிரினங்களுக்கும் இல்லாத (இயற்கை பாதுகாக்கும்) பொறுப்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து வாழும் ஆதிவாசிகளே உண்மையில் மனிதர்கள். அவர்கள்தான் வரலாற்று ரீதியாக இயற்கை வளங்களின் பாதுகாவலர்கள். அவர்களிடம்தான் இயற்கை வளங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து, ஆதிவாசிகளிடம் அவர்களின் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த வரலாற்று உரிமையை மறுக்கும் அரசுக்கு எதிராக, ஆதிவாசிகள் நடத்தும் போராட்டங்களுக்குத் துணை நிற்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜானு - ஆதிவாசிப் பெண் போராளி - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - இயற்கை, நாகரீக, அரசு, ஆதிவாசிகள், தங்கள், இயற்கையின், வளங்களைப், ஆதிவாசி, நாம், குடிசைகளை, வளர்ச்சி, கேரள, அந்த, உணர்ந்து