முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » 44 உயிர்களும் அரைப்படி நெல்லும்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - 44 உயிர்களும் அரைப்படி நெல்லும்
- மணா
கீழ்வெண்மணி.
36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்வே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம்.
1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். பார்த்ததும் மனசைக் கவ்வுகிறது அந்த இடத்தில் கொத்தாக எழுந்த மரணக்குரலில் கொடூரம். பல உயிர்கள் கரிந்த இடத்தில் கல்லில் முளைத்த தீப்பிழம்பு மாதிரியும். வாழை மொட்டு மாதிரியும் நிமிர்ந்து நிற்கிறது நினைவுச் சின்னம் ஜாலியன் வாலாபாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும்.
ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி. நினைவுத் தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள்.
தஞ்சை மண்ணில் '' பண்ணையாள் முறை '' ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரிக் கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத்தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தைகூடப் பேச முடியாது.
அவர்களிடமும் வந்தது விழிப்பு '' நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே... கண்ணைத் திற ஊமையாக இருக்காதே - பேசு'' என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும், சீனிவாசராவும்,. சங்க உணர்வை உருவாக்கினார்கள் பிரச்சாரப் பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக்கேட்கிற குரல்.
அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கி விட்டது. '' தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது '' என்று கண்டுபிடித்து சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கதை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இயக்கச் சொன்னார்கள. அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள்.
ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியைச் சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப்பொறி.
1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச் சவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக்குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர். கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல் நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஒடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு போரையும். ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம்.
நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழுந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் ''விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது. நாட்டுக்கே அவமானம்' என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள்.
106 பேர் கைதானார்கள். தி.மு.க. ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். '' இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல் '' என்று சொன்னது போலீஸ். ''அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல'' என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை.
'' செங்கொடியை இறக்கு. மஞ்சள் கொடியை ஏத்துன்னு சொன்னாங்க. அதை மறுத்ததற்காகத்தான் துப்பாக்கியோடு வந்து சுட்டாங்க. என்னோட உடம்பிலிருந்த சில குண்டுகளை எடுத்தாங்க. இன்னும் சில குண்டுத் துகள்களை எடுக்க முடியலை''. என்ற உடம்பைக் காட்டியபடி சொல்கிறார் கீழ்வெண்மணியில் வசிக்கிற 70வயது முனியன், இதே மாதிரி உடம்பில் சில குண்டுத்துகள்களை ஏந்திய சிலரை இன்னும் பார்க்கமுடிகிறது.
முழுக்க தலித்துகள் வசிக்கும் அந்தப் பகுதியில் வசிக்கும் பலரை இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகும் உக்கிரத்துடன் பாதித்திருக்கிறது இந்தச் சம்பவம். அரைப்படிக் கூலி உயர்வுக் கோரிக்கைக்காக உயிரையே கொடுத்த இடத்தில் உருவான கட்டிட உச்சியில் படபடத்துப் பறக்கிறது செங்கொடி.
பலியான பிறகு அரைப் படி கூலி உயர்ந்தாலும் அந்த உயர்வுக்காக 44 உயிர்கள் கருகிப்போயிருக்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
44 உயிர்களும் அரைப்படி நெல்லும் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அந்த, இடத்தில், பேர், உயிர்கள், வெளியே, கட்டி, கம்யூனிஸ்ட், விவசாயிகள்