முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » காதலர் தினமும் டேட்டிங் கலாச்சாரமும்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - காதலர் தினமும் டேட்டிங் கலாச்சாரமும்
- எஸ். கே. முரளிதரன்
நாள், நட்சத்திரம் தேடி அலையும் இந்திய சமூகத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதுமான மனித குலத்திற்கும் ஒரு வருடத்தின் 365 நாட்களும் அல்லது ஓர் லீப் வருடத்தின் 366 நாட்களும் ஏதாவதொரு வகையில் முக்கியத்துவமான நாட்களாகவே இருக்கக்கூடும். சர்வதேச சமூகம் பொது உணர்வு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அவை, மனிதவள மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அதன் உறுப்பு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில் உலக உணவு நாள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள், உலக எய்ட்ஸ் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம் என சமூகப் பயன்பாட்டு நோக்கில் பல்வேறு நாள்களைப் பிரகடனப்படுத்தி வருகிறது.
இத்தகைய சமூகப் பயன்பாட்டு நோக்கத்தைக் கொண்டிருக்கும் பாவனையில் இவற்றிற்கு இணையாக வேறு சில நாள்களும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என்ற கொண்டாட்ட நாட்களின் உச்சம்தான் காதலர் தினம். சந்தைப் பொரளதாரமும் உலகமயமாக்கல கொள்கையும் தீவிரப்படுத்தப் பட்டுவரும் இக்காலகட்டத்தில் இக்கொண்டாட்டங்கள் குறித்தும் இவற்றின் அரசியல் பொருளாதாரப் பின்புலங்கள் குறித்தும் நாம் மாயைகளிலிருந்து விலகி புரிந்து கொள்ள வேண்டியவை ஏராளம்.
"வாலண்டைன் டே" என்று அழைக்கப்படும் காதலர் தினம் கடந்த 10 ஆண்டுகள் முன்புவரை பணக்கார அல்லது மேட்டுக்குடியின் இளம் பருவத்தினால் மட்டுமே இங்கு கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ பின்தங்கிய கிராமங்கள் பாமர மக்கள் தவிர அனைத்து மக்களிடமும் இக்கொண்டாட்டம் செல்வாக்குப் பெற்றுவிட்டது. இந்தியாவின் ரோஜா மலர் ஏற்றுமதியின் முக்கிய மண்டலமாக உள்ள பெங்களூரில் இந்த ஆண்டு மட்டும் வழக்கத்தை விட 300 டன் விலை கூடுதலாக ஏற்றுமதியானது.
இது சந்தைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்திற்கு காதல் உணர்வால் ஆன பயன்பாடு எனக் கொள்ளலாம். ஆங்கிலப் புத்தாண்டு தின நள்ளிரவு கொண்டாட்ட வரிசையில் வெள்ளையர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது இங்ஙனம் காதலர் தினம் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி இரண்டாம் வாரத்தின் இந்த கொண்டாட்ட நாள் இந்தியாவின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொடர்பு ஊடகங்கள் அனைத்திலும் ஒரு பலூனைப் போல ஊதிப் பெருக்கப்படும் பிரச்சாரம் தொய்வின்றி நடந்தேறி வருகிறது. இதற்கான காரண காரியங்கள் பரம ரகசியமானவை அல்ல.
பெப்சி கோகோ கோலா முதல் கம்ப்யூட்டர் அறிவு வரை அமெரிக்க மோகம் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இயற்கையான மனித உணர்வுகளையும் உறவுகளையும் கூட முதலாளித்துவம் தனது லாப வேட்கைக்குப்பயன்படும் கச்சாப் பொருள்களாக மாற்றும் என்பதற்கு காதலர் தினம் ஒரு முக்கிய உதாரணம். நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் அன்றாட அத்தியாவசியப் பண்டங்களின செலவினங்கள் 12 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
சினிமா, ரெஸ்ட்டாரண்ட், ப்யூட்டி பா‘லர், டிஸ்கொதெ கிளப்புகள், ஒயின் பார்கள் உள்ளிட்ட ஆடம்பர செலவினங்கள்தான் அத்தியாவசிய வகையினங்களுக்குள் ஊடுருவி நிற்கின்றன என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. நவீன நுகர்வு கலாச்சாரம் வழியாக இத்தகைய செலவீன வருமானத்தை கொண்டிருப்பவர்கள் இந்தியாவின் பெரு நகரங்களில் நேரடியாகவும் சிறு நகரங்களில் மறைமுகமாகவும் கடை விரித்திருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளும் வர்த்தக நிறுவனங்களுமே இத்தகைய நுகர்வுக் கலாச்சாரப் பின்னணியில் காதலர் தினம் போன்ற கொண்டாட்டங்கள் இது போன்ற நாட்களை ஒட்டி நடைபெறும் பரிசுப் பொருட்கள் வாழ்த்து அட்டைகள் மற்றும் கேளிக்கை விடுதியில் வியாபாரப் பெருக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இக்கொண்டாட்டங்களின் உண்மையான மார்க்கத்தை நாம் புரிந்த கொள்ள முடியும்.
காதலர் தினம் பிப்-14 அன்று கி.பி.498-ல் அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. பிரான்சிலும் இங்கிலாந்திலும் பறவைகளின் இணைசேரும் பருவகாலம் தொடங்குவது பிப்ரவரியின் பின்பாதியில் தான். அதனால் இந்நாடுகளில் பிப் 14 காதலர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சிறையில் ஒரு மன்னன் இறந்தபோது தனது மனைவிக்கு 1415-ல் அனுப்பிய காதல் வாழ்த்து அட்டை இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாம்.
பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்குப் பிறகு, 17 ஆம் நூற்றாண்டில் காதலர் தின கொண்டாட்டங்கள் அங்கு வழக்கமாகிப் போனது. தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகளை தங்கள் கைப்படவே செய்து தக்ககமது காதலர்களுக்கு அனுப்பும் வழக்கம் இக்கொண்டாட்டத்தின் பரவலாக்கத்திற்குப் பிறகு சந்தைமயமாகிப்போனது. 1840-ல் அஸ்தர் ஏ. ஹாவ்லண்ட் என்பவர் முதல் முதலில் வாழ்த்து அட்டைகள் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தார். இந்த அமெரிக்கர் தொடங்கிய சந்தை வியாபாரமே இன்று பன்னாட்டு முதலாளிகளின் சந்தைப்பொருளாதாரம் காதலர் தினத்தையும் உலகமயமாக்குவதற்கு வழிகோலியது.
காதலர் தினத்திற்கு நெருக்கமான மற்றொரு மேலைக் கலாச்சார இறக்குமதி "டேட்டிங்" இதன் பொருள் படித்த வர்க்கத்தினருக்குப் பரவலாகப் புரியும். இக்கலாச்சார வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஸ்பீட் டேட்டிங் இது முதன் முதலில் துவங்கியம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான். அமெரிக்காவில் ஸ்பீட் டேட்டிங் ஏற்பாட்டிற்கென பல ஏஜன்ஸிகள் உருவாகிவிட்டன.
அமெரிக்க - ஐரோப்பிய இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இக்கலாச்சாரம் மிக வேகமாகப் பரவி வருகிறது. அங்கு இந்தியர்களுக்கென ஆசியன் ஸ்பீட் டேட்டிங் என்ற ஏஜன்ஸியும் இயங்கிவருகிறது. இந்நிறுவனங்கள் காதல் உறவாட விரும்பும் ஆண்கள் பெண்களிடம் தலா 20 பவுண்ட் விண்ணப்பக் கட்டணம் பெற்றுக் கொண்டு எண்ணிக்கைக்கு ஏற்ப ஏதாவதொரு ரெஸ்டாரண்ட் அல்லது பாரில் இந்த இளைஞர்களைக் கூட்டுகின்றனர்.
ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து பேசிக் கொள்ளும் நேர அவகாசம் 3 நிமிடம் மட்டுமே. சந்தித்துக் கொள்ளும் ஆணும் பெண்ணும் எந்த நிலையில் இருந்தாலும், அழைப்பு மணி ஒலித்தவுடன் அடுத்த டேட்டை சந்திக்கப் போய்விட வேண்டும். தங்களுக்குத் தரப்பட்ட 3 நிமிட அவகாசத்திற்குள் ஆணோ, பெண்ணோ தாங்கள் சந்தித்த எதிர் பாலினம் பற்றிய மதிப்பீடுகளைக் குறித்துக் கொண்டு ஏஜன்ஸியிடம் தர வேண்டும். இந்திய சமூகத்திற்கென நடத்தப்படும் இத்தகைய டேட்டிங்குகளில் சந்திக்க விரும்பும் நபர்களைச் சாதி, மதம், ஜாதகம் மற்றும் இதர பார்ப்பனிய அம்சங்களைக் கணக்கில் கொண்டே இந்த ஏஜன்சியில் தேர்வு செய்கின்றனர்.
கலப்புத் திருமணங்கள் நடக்க வாய்ப்பு இல்லை என்று இந்த ஏஜன்ஸிகள் பெற்றோர்களுக்கு உத்திரவாதம் வேறு தருகின்றனர். மேற்கத்திய கலாச்சார சூழலுக்குள் வாழ நேர்ந்த போதும், தங்கள் குடும்ப உறவுகளில் மட்டும் இந்திய நிலவுடமை சாதிய முறைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்பட்டு விடாதவாறு இந்கியக் குடும்பங்கள் கவனமாக இருக்கின்றனர். கலாச்சார அடிப்படையில் எவ்வித மாற்றமும் நிகழாதவாறு, லாப நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்ட முதலாளித்துவ சமூக நிறுவனங்கள் காதல், திருமணம் போன்ற நிகழ்வுகளைக்கூட இந்திய சாதிய நிலவுடமைச் சமூகத்திற்கு ஏற்றவாறு நடத்தித் தருகின்றனர்.
ஆக பொருளாதார மாற்றங்கள் மட்டுமே சமூக உறவுகளை மாற்றிவிட முடியாது என்பது சமகால நிரூபணமாகிறது. கலாச்சார மதிப்பீடுகள் சீர்குலையாமலும் சாதிய உறவுகள் சீரழியாமலும இந்திய சமூகத்தில் காதல் திருமணம் போன்ற உணர்வுகளும் இன்றைய ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதாரத்தின் வர்த்தக மையத்தில் விலைபோக முடிகிறது என்பதைக் கருத்தில் கொண்டால், காதலர்தின போலிக் கொண்டாட்டங்களையும், டேட்டிங் போன்ற சில்லறை கலாச்சாரங்களையும் நாம் வரவேற்க வேண்டிய அவசியமிருக்காது.
காதலர் தினம் என்பது அன்னிய மோகம் கொண்டது. அது இந்துக்களின் புனிதத்திற்கு எதிரானது. எனவே அதை எதிர்க்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் தங்கள் போராட்டங்களை வெறித்தனமாக நடத்துகின்றனர்.
நிலவுடமைச் சாதிய பிற்போக்கு குடும்ப உறவுகளைப் பாதுகாப்பதும் ஆணாதிக்கத்தை நிலை நாட்டுவதுமே இவர்களின் உண்மையான நோக்கமே தவிர, அந்நிய கலாச்சார எதிர்ப்பு என்பனவெல்லாம் போலியான முகமூடிகளே! தேவதாசி முறையை உருவாக்கி, தங்கள் காமப் பசியைக் கொடூரமாகத் தீர்த்துக் கொண்டு உடன்கட்டை ஏறுவதைப் புனிதம் என்கிற இத்தகைய சக்திகள் பெண்களின் ஜனநாயக விருப்பத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்துத்துவ சக்திகள் காதலர் தினத்தை எதிர்ப்பதற்கும், நாம் இந்நாளின் கொண்டாட்டத்தை மதிப்பிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமைச் சமூக அமைப்பும் அதன் கருத்தியலும் அதன் அடிப்படையிலான குடும்ப உறவுகளும் என்றென்றைக்கும் காதலுக்கு எதிரானதாகவே உள்ளன. இந்த வரைமுறைகளை மீறி ஆணும் பெண்ணும் காதலிப்பது என்பது இங்கு இந்த வரையறைகளுக்கு எதிரான போராட்டமாகவே அமைந்துவிடுகிறது.
ஆனால் திட்டமிட்டு இறக்குமதி செய்யப்படும் மேற்கத்திய கலாச்சார மதிப்பீடுகளும், ஏகாதிபத்திய சீரழிவுப் பண்பாடுகளும் காதலுக்கு மோசமான மதிப்பீட்டு அடையாளங்ளையே உருவாக்கி வருகின்றன. தங்கள் வாழ்க்கைக்கான பொருளாதார வாழ்வியல் தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்து கொள்ளும் பலம் படைத்தவர்கள் மட்டுமே வாழ்க்கையில் இணைய முடியும் என்பதுதான் சமூக யதார்த்தமாக உள்ளது.
இந்த யதார்த்தத்தை மீறி காதல் உணர்வை வளர்த்தெடுக்கும் எவ்வித நோக்கமும் ஏகாதிபத்திய கலாச்சார மதிப்பீடுகளில் காணக்கிடைக்கவில்லை. மாறாக, காதல் உணர்வையும் ஒரு பண்டமாக்கி, கடைச்சரக்காக பண்ணிக்கொண்டிருக்கின்றன முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சக்திகள்.
எவ்வித எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு, நீண்டகால வாழ்க்கை நோக்கிலான, பரஸ்பரம் இருபால் இனங்களுக்கிடையிலான ஆழ்ந்த மனிதநேயத்தை அடிப்டையாகக் கொண்டதுதான் காதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ். சமூகத் தேவைகளுக்கான உழைப்புக் களத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையின் இயல்பான போக்கில் காதல் உருவானால்தான் அங்கு எதார்த்தம் இருக்கிறது.
வாழ்வதன் தேவையும், குறிக்கோளுமின்றி தோன்றும் எந்தக் காதலும் போலியான பிம்பங்களைக் கொண்டே உருவாகிறது. இத்தகைய போலியான, மாயையான பிம்பங்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதும் காதல் வாழ்க்கைக் கதை சரியான மாற்றங்களை முன் வைப்பதும்தான் நமது நோக்கமாக இருக்க முடியுமே ஒழிய, ஏகாதிபத்திய வர்த்தக நிறுவனங்களின் லாப வேட்டைக்கு வழிவகுக்கும் காதலர் தின கொண்டாட்டங்களை ஊக்குவிப்பதில் அல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதலர் தினமும் டேட்டிங் கலாச்சாரமும் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - காதலர், தினம், காதல், கலாச்சார, தங்கள், இத்தகைய, இந்திய, வேண்டும், எவ்வித, சாதிய, வாழ்த்து, கொண்டு, சமூக, டேட்டிங், நாள், நாம், சக்திகள், கொள்ள, சந்தைப், ஏகாதிபத்திய, மட்டுமே, கொள்ளும், போலியான, குடும்ப, பெண்ணும், பொருளாதார, என்பது, வர்த்தக, வருகிறது, கொண்டிருக்கும், அல்லது, மனித, கொண்டாட்ட, இந்தியாவின், ஸ்பீட், அங்கு, இறக்குமதி, உள்ள, ஆணும்