முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பெண்மொழி மனித மொழியாவது எப்போது?
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பெண்மொழி மனித மொழியாவது எப்போது?
- திலகபாமா
"தன் இயல்புதனை உணர்ந்து சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டித் திருத்த விரும்பும் முற்போக்குச் சிந்தனைகளை முன்னிறுத்தும் இலக்கியப் படைப்பாளிகளே. இன்னும் பெண் வாழ்வு ஆணைச் சார்ந்திருப்பதாய் மனச்சிந்தனையில் கொண்டிருப்பது ஆதிக்க மனோபாவங்களும், அடிமைச் சிந்தனைகளும் நமக்குள் புரையோடிப் போயிருப்பதை எடுத்துரைக்கும். "
இன்றைய நடைமுறையில் இருக்கிற ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பில் பெண் தனக்கான இயல்புகளோடு வாழ்வது ஒரு புறம் இருக்கட்டும், தனக்கான இயல்பு இதுவென்று உணரக்கூடிய தருணங்களையாவது சந்தித்திருக்கிறாளா? சிந்திக்கவாவது அவள் செய்திருக்கிறாளா? என்ற மிகப்பெரிய கேள்வி முதலில் நமக்குள் இருக்கின்றது. இயல்புகளை உணருகின்ற தருணங்களுக்குப் பிறகுதானே அதுபற்றியதான வாழ்வும், வாழ்வியல் பற்றிய சிந்தனைகளும்.
இந்தச் சமுதாயம் பெண்ணுக்கான இயல்புகள் என்று தீர்மானித்து வைத்திருக்கின்ற இயல்புகளை ஒட்டியோ, பின்பற்றியோதான் ஒவ்வொரு பெண்ணின் பாதைகளும் பயணங்களும் இருக்கின்றன. தன் பயணங்களைத் தன் இயல்பில் தீர்மானிப்பதும், பாதைகளைத் தேடிச் சேர்வதும் என்பது ஒரு பெண் சிந்திக்க இயலாததாகவே இருக்கின்றது.
முனையடிக்கப்பட்ட கயிற்றில் கட்டப்பட்ட செக்கு மாட்டுத்தனமான, யாராலோ தீர்மானிக்கப்பட்ட வாழ்வு மாறிய காலங்களிலும்கூட கயிறுகளின் நீளம்தான் கூடியிருக்கிறதே தவிர, கட்டப்பட்டிருக்கும் முனைகள் பிடுங்கப்படவில்லை.
குழந்தையாக இருக்கும் போதே குழந்தைக்கான இயல்புகள் மறக்க வைக்கப்பட்டு "பெண் குழந்தைக்கான" இயல்புகள் நம்முள் திணிக்கப்படுகின்றன.
முளை விடும் போதே அவளது மூளைக்குள் பெண் என்பதற்கான வித்துக்கள் முளைக்க வைக்கப்பட்டு விடுகின்றன. தன் இயல்புகளை உணரக் கூடிய தருணங்களை அறியாமலேயே தனக்கெதிரான தீர்மானங்கள் தன் முன்னே தனக்காகவென்று வைக்கப்படுவதையும் உணராது பெண்கள் இருப்பதே மிகக் கவலைக்குரிய விசயமாகும்.
குழந்தையாக இருக்கும் போதே இப்படியென்றால், பெண் பருவமடைந்த பின்னோ அவளது வட்டங்களின் ஆரம் இன்னமும் சுருங்கி விடுகின்றது. திருமணத்திற்குப் பின்னோ அவளது சுதந்திரம் யாரோ தரக்கூடியதாக மாறிவிடுகின்றது.
ஒரு பெண்ணின் வாழ்வென்பது அவளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிராது, யாரோ சிலரின் வாழ்க்கை சார்ந்த விசயமாகவே கணிக்கப்படுகின்றது. கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தின் இயல்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்களை விடுங்கள்.
தன் இயல்புதனை உணர்ந்து சமுதாயச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டித் திருத்த விரும்பும், முற்போக்குச் சிந்தனைகளை முன்னிறுத்தும் இலக்கியப் படைப்பாளிகளே இன்னும் பெண் வாழ்வு ஆணைச் சார்ந்திருப்பதாய் மனச் சிந்தனையில் கொண்டிருப்பது ஆதிக்க மனோபாவங்களும், அடிமைச் சிந்தனைகளும் நமக்குள் புரையோடிப் போயிருப்பதை எடுத்துரைக்கும்.
சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் ஞானக்கூத்தன் பேசும்போது, பொது வாழ்வில் கலைஞர்களாகும் பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை என்றும், அதற்கு உதாரணமாய் ஒளவையைக் குறித்தும் பேசுகிறார்.
முற்போக்குச் சிந்தனைகளைப் பதிவு செய்யும் இவர்கள் கூட, பெண் வாழ்க்கை என்பது ஆணைச் சார்ந்திருப்பதாய் நினைவில் இருத்திக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய விசயமே.
இது ஆண்களை மட்டும் சுட்டுவிரல் நீட்டும் விசயமல்ல; பெண்களும் கூட இந்தச் சார்ந்திருப்பில் ஒரு சுகம் கண்டு பழகி விட்டனர்.
ஒரு பெண் கவிஞர், தன் கவிதைத் தொகுப்பு தயாரிப்பைப் பற்றி பேசும் போது "எனது கவிதைகள் ஒரு பிரபல கவிஞரிடம் திருத்தங்களுக்காகக் கொடுக்கப் பட்டிருக்கின்றது" என்கிறார்.
தன் இயல்பின் சிந்தனைகளை அதன் ஓட்டம் கெடாமல் யாரால் திருத்த இயலும். தன் இயல்பின் மேல், தன் சிந்தனைகளில் மேல், தன் கொள்கைகளின் மேல், தன் படைப்பின் மேல் நம்பிக்கையற்றவர்களின் படைப்பு எப்படி சமுதாயத்தின் பிரதிபலிப்பாய் இருக்க இயலும்.
பெண் என்று தீர்மாணிக்கப்பட்டுவிட்ட வாழ்வுக்குள் தன்னைத் திணித்துக்கொள்வதாலும், சார்ந்திருப்பதாலும் தமக்குள் விளைவிக்கும் உணர்வுச் சிதைவுகளை உணரக் கூட சக்தியற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
சின்ன உதாரணம் ஒன்று, "தாய் வீடு செல்வதும், செல்லாமலிருப்பதும் இரண்டுமே தண்டனைகளாக ஆண்கள் மத்தியில் மட்டுமன்றி பெண்களே கருதக்கூடிய நிலை இருந்து வருகின்றது.
அம்மாவீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என்பதும், அம்மா வீட்டாரோடு சந்திப்பு கூடாது என்பதும், பெண்களை மிரட்டிப் பணியவைக்கப் பயன்படும் வாக்கியங்களாக இருந்து வருகின்றன.
இதைப்பற்றிப் பேசும்போதே "பெண்களே பெண்களுக்கு எதிரி" என்கின்ற சொல்லாடலும் நம்மிடமிருந்து வந்து விடுகின்றது.
ஒன்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வீட்டில் இருக்கின்ற மாமியாரும், மருமகளும் அந்த வீட்டின் தலைவனைச் சார்ந்து இருக்க இந்த சமுதாயத்தால் பழக்கப்பட்டு இருக்கின்றனர். இங்கே யார் முதன்மைப் படுத்தப்படப்போகிறார்கள் என்கிற கேள்வி இவர்கள் சார்ந்திருப்பதன் பலனாக விளைகின்றது. அதனால் வலுவானவர்கள் கையில் ஆதிக்கமும், இளைத்தவர்கள் கையில் அடிமைத் தனமும் தங்கி விடுகின்றது.
சார்ந்திருப்பை அகற்றி இயல்புகளை உணரப் பழகிவிட்டால் ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனம் என்ற இரண்டுமே விலகிவிடும்.
அன்றாட வாழ்வே நமக்கானதாய் இல்லாதிருக்கும் போது கலை, இலக்கியம் பெண்களுக்குள் எவ்வகையான பாதிப்புகளையும் நிலைப்பாட்டையும் உருவாக்கியிருக்கின்றது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
1. பண்டைய இலக்கியங்கள் ஏற்படுத்தி வைத்துள்ள நிலைப்பாடுகள்.
2. இன்றைய இலக்கியமும் பெண்களும்.
பண்டைய இலக்கியங்கள் ஏற்படுத்தி வைத்துள்ள நிலைப்பாடுகள் பற்றிப் பேசும்போது, இன்றைய விசயத்திற்கு வருவோம் என்று அதை விட்டு விட முடியாது. நமது இதிகாசங்கள், பழங்கதைகள் நமக்குள் பல விசயங்களை வேரோடிப் போகச் செய்திருக்கின்றன. கற்பு, ஒழுக்கம், இருப்புப் பற்றி பண்டைய இலக்கியங்கள் விதைத்து விட்டுப் போன உணர்வுகளைக் கடந்துவிட முடியாதவர்களாகவே ஒவ்வொருவரும் பயணிக்கின்றோம்.
பெண்ணுக்குள் அடிமைத் தனங்களை விதைத்தது போல் ஆணுக்குள் ஆதிக்க மனோபாவங்களையும் விதைத்துள்ளன. அதற்கான பழமையான விசயங்களைத் தூக்கி எறிவது புதுமையல்ல. அவற்றை இன்றைய காலகட்டங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப புணரமைப்பதும் நம் கடமையாகிறது. பழமைகள் நம் செல்வங்கள்; வைத்துப் பூட்டிப் பாதுகாக்காமல் நல் வழியில் அவற்றைச் செலவிட வேண்டும்.
அகலிகைகள் வேண்டும்; சந்தேகப்படும் கணவனைச் சாபமிடும் அகலிகைகள் வேண்டும். பாஞ்சாலி வேண்டும்; பாண்டவர் வெற்றியில் கூந்தல் முடியாது தன் வெற்றியைத் தேடிப் புறப்படும் பாஞ்சாலிகள் வேண்டும்.
இந்தப் புணரமைப்புகள் பெண் மொழியில் சொல்லப்பட வேண்டும். அது என்ன பெண் மொழி? இதுவரை படைக்கப்பட்ட எல்லா படைப்புகளுமே ஆணின் குரலாகவே பதிவாகி இருக்கின்றது.
இராமன் சந்தேகத்திற்கு தீக்குளிக்கச் சொன்னது ஆண்குரல், பெண் குரலாயிருந்தால் நிச்சயமாய் சம்மதித்திருக்க மாட்டாள்.
பண்டைய இலக்கியங்கள் மட்டுமல்ல, இன்றைய முதலாம் வகுப்புப் பாடப் புத்தகங்களில் குடும்பம் பற்றி வரும் படங்களில் கூட ஆண்குரல்தான் பதிவாகியுள்ளது. தந்தை அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பதையும், தாய் சமையல் வேலை செய்வதையும் படம் சித்தரிக்கிறது.
ஆண், பெண்ணின் நிலைப்பாடுகள் சிறுசிறு விசயங்கள் என நாம் கருதும் பல விசயங்களில் நமக்குள் வைக்கப்படுகின்றது. இன்றைய இலக்கியத்தில் பெண் கவிஞர் அ. வெண்ணிலா தன் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார்.
"கீரைக்காரி வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
செய்தித்தாள் வந்தால்
அப்பாவிடம் கொடுக்கவும்
யாரும் சொல்லித் தராமலேயே
கற்றுக் கொள்கிறது குழந்தை"
என்று, இதனையே நாம் பெண் மொழி என்கிறோம். பெண் என்பதற்காக நாம் சந்திக்க நேர்கின்ற உணர்வுச் சிதைவுகளைப் பெண்களே சொல்லும் போது இதுவரை வந்த குரலிலிருந்து அது மாறுபட்ட அதீத அழுத்தங்களோடு நமக்குள் பதிவாகின்றது.
பெண்கள் தங்கள் இயல்பில் தாங்கள் வலியென்றுணர்ந்ததைச் சொல்ல வேண்டும். ஆனால் இன்று "பெண் மொழி" என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், தொடர்ந்து "உடல் மொழி" என்ற சொல்லாடலையும் உடன் வைக்கின்றனர்.
இன்றைய இலக்கியம் படைக்கும் பெண்கள் கூட தனக்கு முன்னால் இருந்து கொண்டிருக்கும் ஆண்படைப்பாளிகளைச் சார்ந்தும், அவர்களின் வழி நடத்தலிலும் தான் இருக்கின்றார்கள் என்பதற்கு இந்தச் சொல்லாடல் நல்லதொரு உதாரணம்.
பெண்ணியம் பேசும் இவர்கள் பெண் விடுதலை என்பது எந்தவிதக் கட்டுபாடுகளும் அல்லாத தான்தோன்றித் தனங்களைச் செய்வதும், இதுவரை யாரும் பேசாத விசயங்களைப் பேசுவதும்தான் பெண்ணியம் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. மறுபடியும் அவர்கள் ஆணியப் பார்வையில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த விதமான பொருளியல் முன்னேற்றங்களும் பெண்ணுக்குள் தற்சார்புதனை விதைத்து விடவில்லை. இன்னும் சொல்லப்போனால் கயிறுகளில் நீளம் தான் கூடியிருக்கின்றதே தவிர முனைகள் பிடுங்கப்படவில்லை.
பெண்ணியம் என்கின்ற சொல்கூட மீண்டும் நமக்குள் பேதங்களைத்தான் உணர்த்தி நிற்கின்றது. பேதங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், பெண்களுக்கான உரிமை என்றல்லாது, சக மனிதத்திற்கான உரிமைகள் என்கிற வகையில் நமக்குள் இருக்கின்ற ஆதிக்க அடிமை மனோபாவங்களைத் தகர்த்தெறிய வேண்டும். பெண், ஆண்போல் மாறுவது சுதந்திரமல்ல; அவரவர் அவரவராக இருப்பதுவே சுதந்திரம் - சுதந்திரம் பற்றியப் பேச்சு எழும்போது விட்டுக் கொடுத்தல் போய்விடுமோ என்கின்ற பயம் பலருக்குள் இருக்கின்றன. நீ எனக்காக விட்டுக் கொடுக்கலாம். நான் உனக்காக விட்டுக் கொடுக்கலாம். இருவரும் சமுதாயத்திற்காக விட்டுக் கொடுக்கலாம். ஆனால் பெண் என்பதற்காக விட்டுக் கொடுக்க நேருமானால் எதிர்ப்பு குரல்களைப் பலத்து ஒலிப்போம். பெண் மொழி, உடல் மொழி எல்லாம் போய் "மனித மொழி" பேசப்பழகுவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெண்மொழி மனித மொழியாவது எப்போது? - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பெண், வேண்டும், ", நமக்குள், இன்றைய, விட்டுக், இயல்புகளை, மேல், பெண்கள், இலக்கியங்கள், பண்டைய, ஆதிக்க, மொழி, கொடுக்கலாம், நாம், பெண்ணியம், பற்றி, போது, பெண்களே, என்கின்ற, இவர்கள், நிலைப்பாடுகள், மொழி", இதுவரை, இருந்து, அவளது, வாழ்வு, ஆணைச், சார்ந்திருப்பதாய், இன்னும், சிந்தனைகளை, திருத்த, முற்போக்குச், கொண்டிருப்பது, சிந்தனைகளும், என்பது, போதே, விடுகின்றது, பெண்ணின், இயல்புகள், இருக்கின்றது, இந்தச், சுதந்திரம்