முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » தமிழ் அடையாளம் - அழிப்பும் மீட்பும்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - தமிழ் அடையாளம் - அழிப்பும் மீட்பும்
- இராசேந்திரசோழன்
"சாதி மத அடையாளங்கள் ஒரு மனிதனுக்கு இருந்துதான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை."
மனித இருப்பு, அடையாளம் சார்ந்தே அறியப்படுகிறது. அடையாளம் சாராத மனித இருப்பு இல்லை. அடையாளங்கள் பல தரப்படலாம். எனினும், மனிதன் உயிர் பெறும் புவியியல், இயற்கைச் சூழல் சார்ந்து அமைபவை, வாழும் சமூகம் சார்ந்து அமைபவை என சாரத்தில் அவற்றை இரு வகைப்படுத்தலாம். உடல் கட்டமைப்பு, தோற்றம், நிறம் ஆகியன இயற்கை சார்ந்தவை. பெயர், மொழி, சாதி, மதம் ஆகியன சமூகம் சார்ந்தவை. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
புவிப் பகுதிகளின் தனித்தன்மை, நிலவும் தட்ப வெப்பம், இவற்றுக்கேற்ப இயற்கை அடையாளங்கள் அமைகின்றன. இதை வைத்தே, மனிதன் திராவிடன், ஆரியன், மங்கோலியன், நீக்ரோ என மரபினமாக வகைப்படுத்தப்படுகிறான். இம்மரபினமே, வரலாற்று வளர்ச்சிப்போக்கு மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக பல்வேறு கலப்புகளுக்கு உட்பட்டு பேசும் மொழி சார்ந்தும், வாழும் நிலம் சார்ந்தும் தனித்து ஒரு மக்கள் சமூகமாக பரிணமிக்கிறது. இதுவே, தேசிய இனம் எனப்படுகிறது. வரலாற்று வளர்ச்சியால் உள்வாங்கப்படாத சில சிறு சிறு பழங்குடிகள் தவிர, உலகில் வாழும் மக்கள் சமூகம் அனைத்தும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி, மரபினமாக அல்ல. இவ்வாறே தமிழ்ச் சமூகமும், தமிழ்த் தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இதற்கு மொழியும், வாழ்நிலமும் முதன்மையான காரணிகளாய் அமைகின்றன. ஐரோப்பா முழுவதுமுள்ள கிறித்துவர்கள், மேற்கு ஆசியா முழுவதுமுள்ள இஸ்லாமியர்கள், இந்தியாவிலுள்ள இந்துக்கள் மற்றும் பல்வேறு சாதியினர் எவருமே மத அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கவில்லை. மாறாக, தேசிய இன அடிப்படையிலேயே ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
எனவேதான் ஒடுக்கு முறையானாலும் உரிமைப் போராட்டங்களானாலும், மக்கள் சமூகங்களுக்கிடையே நிகழும் மோதல்களானாலும், பெரும்பாலும் அவை தேசிய இன அடிப்படையிலேயே நிகழ்கின்றன. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் நடைபெற்றிருக்கும் போராட்டங்களை, கலவரங்களை நோக்கும் போது இந்த உண்மையை உணர முடியும். இதில் விதி விலக்காக சில அமையலாம். இது பொதுப் போக்குஅல்ல. எந்த ஒரு தேசிய இனத்தையும் அடிமைப்படுத்த மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும், அதன் அடையாளத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது ஆதிக்க சக்திகளின் கோட்பாடாக இருக்கிறது. ஒரு சமூகத்திற்குத் தேவையான உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து தரும் சாதனங்கள், எவருக்குச் சொந்தமாய் இருக்கின்றனவோ, அவர்களே அச்சமூகத்தின் கருத்துகளையும் உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்; தங்கள் நலன் காக்க உற்பத்தி செய்யும் கருத்துகளை இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் காக்கும் கருத்து போல பிரச்சாரம் செய்து, அதையே பரந்துபட்ட மக்களையும் நம்பிச் செய்து வருகின்றனர் என்பது, சமூக அறிவியல் மெய்ப்பிக்கும் உண்மைகள்.
இந்த அடிப்படையிலேயே, ஆதிக்கச் சக்திகள் தமிழ்ச் சமூகத்தின் மொழி, நிலம் சார்ந்த அடையாளங்களை, அது பற்றிய கருத்தாக்கங்களை அழித்து, தங்கள் அடையாளங்களையும், அது சார்ந்த கருத்தாக்கங்களையும் நிறுவி வருவதைக் காண முடியும். எடுத்துக்காட்டாக, பல தேசிய இன நாடாக விளங்கும் இந்தியாவில், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை இல்லை. இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி; ஆங்கிலம், துணை ஆட்சி மொழி. தமிழ் உள்ளிட்ட பிற அனைத்து மொழிகளும், வட்டார மொழிகள். இதன் வழி இந்தி படித்தால், இந்தியா முழுக்க வேலைக்குப் போகலாம்; ஆங்கிலம் படித்தால், உலகம் முழுக்க வேலைக்குப் போகலாம் என்கிற கருத்தாக்கம், மக்கள் நலன் காக்கும் கருத்தாக்கம் போல் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், தமிழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அனைத்து நிலைகளிலும் மொழி அடையாள அழிப்பு முயற்சி நடந்தேறி வருகிறது. அடுத்ததாக, இந்திய ஆட்சிப் பரப்புக்குள் வாழ்பவர்களையெல்லாம், 'இந்தியன்' என்று அழைப்பதன் வழி, தமிழர்கள் தங்கள் தாயகமான தமிழகத்தை மறந்து, இந்தியாவையே தங்கள் தாயகமாகக் கொள்ளக் கற்பிப்பதன் மூலம், தமிழனின் நில அடையாளத்தையும் அழிக்க முயன்று வருகிறது.
இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது, 'இந்திய தேசியம்', 'மத்திய அரசு' என்னும் சொல்லாடல்கள் இடம் பெற்றிருக்கவில்லை. அப்படிப் போடுவதற்கு அப்போது கடும் எதிர்ப்பு இருந்தது. எனவே, 'இந்திய ஒன்றியம்', 'ஒன்றிய அரசு' என்ற சொற்கள் மட்டுமே இடம்பெற்றன. இப்போது அவை திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்டன. இவ்வாறே, 'கூட்டாட்சி ரயில்வே' என்பது, 'இந்திய ரயில்' என்றும், 'கூட்டாட்சி நீதிமன்றம்' என்பது, 'உச்ச நீதிமன்றம்' எனவும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. அந்தந்த தேசிய இனமக்களின் நீதி நிர்வாக அதிகாரங்கள் அழிக்கப்பட்டு, அனைத்தும் தில்லியில் குவிக்கப்பட்டுள்ளன. இதன்வழி, எல்லா நிலைகளிலும் தில்லியே உயர்வானது, மேலதிகாரம் படைத்தது என்பதான கருத்து கட்டமைக்கப்பட்டு, தமிழ், தமிழன், தமிழ்தேசம் சார்ந்த உரிமைகள், அதிகாரங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
கருத்தியல் ரீதியாக இந்த அடையாள அழிப்பு முயற்சிக்கு மக்கள் உட்படாது, விழிப்புற்று தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க முனையும் போது, ஆதிக்க சக்திகள் அவர்கள் மீது நேரடி நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பிராந்திய வெறியர்கள், குறுகிய நோக்குடையோர்கள், பிரிவினைவாதிகள் என்னும் சொல்லாடல்களால் அழைத்து, அவர்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களை ஏவுகின்றன. சிறைப்படுத்தி ஒடுக்குகின்றன. தேவைப்பட்டால், 'மோதல் கொலைகள்' என்கிற பெயரில் தீர்த்துக்கட்டவும் செய்கின்றன. ஆதிக்கங்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்களை, மக்கள் தங்கள் நலன் காக்கும் கருத்தாக்கங்கள் போல் நம்பி, அது சார்ந்த மதிப்பீடுகள், அபிப்ராயங்களை தாங்களும் கைக்கொண்டு, ஆதிக்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதுடன், சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினரோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலான 'மேல் நிலையாக்க உளவியலுக்கும்' ஆட்பட்டு அதற்குப் பலியாகி வருகிறார்கள்.
தேனீரை விட காபி உயர்வானது; சர்பத்தைவிட கோகோ கோலா, பெப்சி ஒஸ்தி; நீராகாரம், சோறு வடிநீர் அல்பம்; போர்ன்விட்டா, பூஸ்ட்தான் கௌரவம். மனிதத் தோலின் நிறத்தில் கறுப்புத்தோல் மட்டம்; சிகப்பே உயர்வானது, பெருமைக்குரியது. கடைநிலையிலிருந்து, இட ஒதுக்கீட்டில் கற்றுத் தேறி, உயர் பதவிகளுக்குப் போய் வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள் மேல்தட்டுப் பிரிவினரோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முனைப்பில், அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகளைப் பின்பற்றுபவர்கள், சொந்த பந்த நடைமுறைகளை இழிவாகக் கூறுவதும், எளிமையான இயல்பான வாழ்முறையை இளப்பமாகக் கருதி படாடோபமான பகட்டு வாழ்க்கையில் பெருமை கொள்வதும்... இதுபோன்ற மேல்நிலையாக்கச் சிந்தனைகளே. இதே உணர்வுதான், தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் பேசுவதையே தாழ்வானதாகக் கருத வைக்கிறது.
இதனால் சாதாரண மக்களிடையே கூட, சரளமான ஆங்கில வார்த்தைகள் புழக்கம். தங்கள் குழந்தைகள் ஆசையோடு அம்மா, அப்பா என்ற அழைப்பதை வெறுத்து, மம்மி, டாடி என்னும் அழைப்புக்காக ஏங்குதல்; எளிய தமிழ் சித்த மருத்துவத்தைப் புறக்கணித்து, சிக்கலான ஆங்கில மருத்துவ மோகத்துக்கு ஆட்படுதல்; ஆங்கிலப் புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடுதல்... எனப் பல்வேறு வழிகளில் இம்மேல் நிலையாக்கச் சிந்தனை செயல்படுகிறது.
மக்கள் தாங்கள் பாதுகாக்க வேண்டிய அடையாளங்களை அழிக்கவும், அழிக்க வேண்டிய அடையாளங்களைப் பாதுகாக்கவுமான தவறான உளவியலுக்கும், உணர்வுகளுக்கும் உள்ளாகி வருவதால், இவ்வடையாளங்கள் சார்ந்து, விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது, இது சார்ந்து இயங்குபவர்களுக்கு முன்னால் உள்ள முக்கியப் பணியாக இருக்கிறது.
ஆனால், சில அடையாளங்கள் மனிதனுக்குத் தேவையற்றவை, மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை என்பது பற்றிய கவனமும் தேவை. எடுத்துக்காட்டாக, சாதி மத அடையாளங்கள் ஒரு மனிதனுக்கு இருந்துதான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இவை மனிதர்களுக்குள்ளே பகைமையையும், மோதலையும் தூண்டி, அப்பாவி மக்கள் பலரை பலி கொள்கின்றன என்பதைத் தான் நடைமுறையில் பார்க்கிறோம். மொழி அடையாளம்கூடத்தான் பல நேரங்களில் மோதலை உருவாக்குகிறது; ஆகவே, அதையும் அழித்து விடலாமா என்று சிலருக்குக் கேட்கத் தோணலாம். இதற்கு மனித அடையாளங்கள் குறித்து வேறு சில உண்மைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
மனிதனை அறியப் பயன்படும் தோற்ற அடையாளம், பெயர், மொழி என்பவை இழக்கச் சாத்தியமற்றவை. ஒன்றை மாற்றினாலும், இன்னொன்று வாய்த்தே தீரும். ஆனால், சாதி, மதம் இல்லாமலும் மனிதன் வாழ முடியும். பலர் வாழ்ந்தும் கொண்டிருக்கிறார்கள். எனவே, மொழி அடையாளத்தை சாதி மத அடையாளத்துக்கு நிகரானதாகக் கொள்ள முடியாது. இன்னொன்று, அடையாளங்களின் வீச்செல்லை வகைப்பட்டும் அதை மற்றொரு நோக்கில் அணுகலாம். பெயர் அடையாளம் - குடும்ப உறுப்பினர்கள் அல்லது குடியிருப்பவர்களை மட்டும் உட்படுத்துவது; ஊர், ஒன்றிய, வட்ட, மாவட்ட அடையாளமும், அதனதன் பரப்பெல்லைக்கு உட்பட்டது. ஆனால் மொழி, இப்படிப்பட்ட தனித்த அடையாளங்களை யெல்லாம் ஒன்றுபடுத்தி, ஒரு தேசிய இனத்தைச் சுட்டும் அடையாளமாகவே இருந்து வருகிறது.
எம்மொழி பேசும் மனிதன் என்பதே ஒருவனை உலகப் பொது மனிதனிலிருந்து தனியாகப் பிரித்து, அடையாளப்படுத்தி, அவனது சமூக இருப்பை வெளிப்படுத்துகிறது. மனிதனைக் குறிப்பாகச் சுட்டுவதே மொழி அடையாளம். ஆதிக்கங்கள் - பாதுகாக்க முயலும் அடையாளங்களை அழிப்பதிலும், அழிக்க முயலும் அடையாளங்களை அழிப்பதிலும், அழிக்க முயலும் அடையாளங்களைப் பாதுகாப்பதிலுமே மனித விடுதலை அடங்கியிருக்கிறது என்னும் வகையில், தமிழ்ச் சமூகத்தின் தமிழ் அடையாளத்தை மீட்பதற்கான தேவை மிக அவசியமான ஒன்றாகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு' என தங்களுக்கென்று தனித்த மொழி அடையாளத்தையும், நில அடையாளத்தையும் கொண்டு, வாழ்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம், உலகின் தொன்மையான எந்த மொழிக்கும், குறைவு படாத இலக்கிய வளமும், இலக்கணச் செப்பமும் வாழ்வியல் நெறிகளும் கொண்டு, மனித நாகரிகத்திற்கே எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்த சமூகம் இது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தொழில்நுட்பத்தை, கலைத் திறத்தை காவிரியின் கல்லணையும், தஞ்சைப் பெரிய கோயிலும், சித்தன்ன வாசல் குகை ஓவியங்களும் என்றென்றைக்கும் சான்று பகர்வன. இதையெல்லாம் குறிப்பிடுவது பழம் பெருமை பேசி மகிழவும், கடந்த கால ஏக்கங்களின் மன வெளிப்பாட்டிற்காகவும் அல்ல. மாறாக, எப்படிப்பட்ட மொழியின், மரபின் , பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம் என்கிற நமது அடையாளத்தை உணர்த்தவும், அதற்காகப் பெருமிதம் கொள்ளவும், அந்த அடையாளத்தை நவீனகால சமூக வளர்ச்சிற்கேற்ப மீட்டெடுக்கவும், பாதுகாக்கவுமான உணர்வைப் பெற வேண்டும் என்பதற்காகவே.
வெள்ளை ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த கறுப்பின மக்கள், ஒரு காலத்தில் தாங்கள் கறுப்பர்கள் என்பதற்காக, தங்கள் கறுப்பு நிறத்துக்காக கவலைப்பட்டார்கள். ஆதிக்கக் கருத்தியலுக்கு ஆட்பட்டு, அதை இழிவாகக் கருதி, தாழ்வுற்று, தலைகுனிந்து, வெள்ளையினத்துக்கு சேவகம் செய்து அடிபணிந்து கிடந்தார்கள்.
ஆனால், பின்னாளில் விழிப்படைந்து, தன்னம்பிக்கை பெற்றபோது, கறுப்பு என்பதையே தங்கள் இனத்தின் வண்ணமாக, மண்ணின் வண்ணமாகப் பிரகடனம் செய்தார்கள். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்று, இன்று தங்கள் சொந்த மண்ணில், சொந்த அடையாளங்களுடன் சுயேச்சையான அரசுகளை அமைத்து, சுதந்திர தேசங்களாக வாழ்ந்து வருகிறார்கள். கறுப்பு என்றால், கலசம், வீரம், உறுதி என்பதாக அச்சொல்லுக்கு புதிய பொருள் எழுதப்பட்டு, பெருமிதப்படுத்தப் பட்டுவிட்டது. கறுப்பு இலக்கியம், கறுப்பு அரசியல், கறுப்பர் பண்பாடு என்பது உலக அரங்கில் நிராகரிக்க முடியாத மாபெரும் சக்தியாக உருவெடுத்து, புவியெங்கும் விடுதலையின் குறியீடாக, சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காவும் போராடுபவர்களுக்கு உத்வேகமூட்டும் போர்ப் பரணியாகவும் மாறியுள்ளது.
ஐரோப்பிய அறிவியலின் பார்வையில், 'இருண்ட கண்டம்', என்று அழைக்கப்பட்ட ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்கு, இந்த விடுதலை, அடையாளக் காப்பு சாத்தியம் என்றால், மூவாயிரம் ஆண்டு காலத்தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு இது ஏன் சாத்தியப்படாது என்பதைத் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் அடையாளம் - அழிப்பும் மீட்பும் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - மொழி, தங்கள், மக்கள், தேசிய, என்பது, தமிழ், சமூகம், அடையாளம், அடையாளங்கள், தமிழ்ச், அழிக்க, சாதி, சமூகத்தின், கறுப்பு, இந்திய, அடையாளங்களை, அடையாளத்தை, மனித, என்கிற, நலன், செய்து, சார்ந்து, சார்ந்த, மனிதன், இல்லை, என்னும், சார்ந்தும், சமூக, அடையாளத்தையும், வருகிறது, முயலும், சொந்த, உயர்வானது, பாதுகாக்க, காக்கும், பல்வேறு, முடியும், அடிப்படையிலேயே, வேண்டும், பெயர், நிலம், வாழும், உற்பத்தி, அனைத்து