முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பி.ஜே.பி. யுடன் தேனிலவு முடிந்தது
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பி.ஜே.பி. யுடன் தேனிலவு முடிந்தது
- ம.தி.மு.க நாஞ்சில் சம்பத் பேட்டி...
ஒரு அரசியல் இயக்கம் பல நேரங்களில் நெருக்கடியான காலகட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம் கட்சியின் முடிவுகளை நியாயப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மேடையெங்கும் முழங்கும் அக்கட்சியின் பேச்சாளர்கள்தான். ஏற்கெனவே முழங்கி வந்த கருத்தை மாற்றி, தற்போதைய முடிவுகளை நியாயப்படுத்தி, அதனை பொதுமக்களும், தனது கட்சியினரும் ஏற்றுக்கொள்ளச் செய்யும் பணி சிரமமான ஒன்றாகும்.
இந்த நிலையில் ம.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த கனல் பேட்டி இங்கே...
ம.தி.மு.க.வின் இன்றைய நிலைப்பாடு என்ன?
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் எங்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் வை.கோ.வை பழிவாங்கும் நோக்கோடு ஜெயலலிதா அரசு பொடாவில் கைது செய்துள்ளது. அதனை ரத்து செய்யாமல் இருந்ததோடு மட்டுமின்றி, வெளிப்படையாக ஜெயலலிதா அரசை பா.ஜ.க. விமர்சிக்கவில்லை. திராவிடக் கொள்கைகளுக்கு மாறாக ஆட்சி நடத்தும் அவருக்கு பா.ஜ.க.வின் ஒரு சில தலைவர்கள் உதவினார்கள். குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று அரியணை ஏறும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழகத் தலைவர் என்ற முறையில் கலைஞருக்கு அழைப்பு அனுப்பவில்லை. மாறாக ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுத்து கலந்து கொள்ள வைத்தார்கள்.
இன்று ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 1967ல் ராஜாஜியோடு அணி அமைத்து அண்ணா வெற்றிமாலை சூடியவுடன் பெரியாரைச் சந்தித்தார். "பெரியாரின் கருத்துக்கு விரோதமாக அணி அமைத்துச் செயல்பட்டுவிட்டு, இப்போது ஆசி பெறவந்துள்ளீர்களே?" என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அண்ணா, "ராஜாஜியுடன் தேனிலவு முடிந்துவிட்டது" என்றார். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையையே ம.தி.மு.க. முடிவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுநாள் வரை ம.தி.மு.க. மேடைகளில் வாஜ்பாயின் புகழைப் பாடிவிட்டு, வரப்போகும் தேர்தலில் எப்படி மாற்றிப் பேசுவீர்கள்? அது தர்மசங்கடமாக இருக்காதா?
நாங்கள் வாஜ்பாயை எந்த கட்டத்திலும் விமர்சிக்கப் போவதில்லை. இப்போதும் எப்போதும், "சரியான மனிதர், தவறான கட்சியில் இருக்கிறார்" என்ற நிலைப்பாடுதான் இருக்கிறது. அதைத்தான் வெளிப்படுத்தி வந்தோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு இணக்கமான சூழ்நிலை இருந்ததை உடைத்தது யார் என்பதையும், நாங்கள் எடுக்கும் முடிவுக்கு நியாயமான காரணங்களையும் பட்டியலிடுவோம்.
வெள்ளாட்டின் தலையைக் காட்டிவிட்டு, ஓநாயின் கறியை விற்கிறவர்கள் சிலரின் கையில் பா.ஜ.க. சிக்கியுள்ளது என்பதை இனிமேல் மேடைகளில் சொல்வது தான் எங்களது அணியின் பணியாக இருக்கும்.
கலைஞரை எதிர்த்து உருவான இயக்கம் ம.தி.மு.க. அதன் பிறகு அவர்களோடு தோழமையோடு பழகி சட்டமன்றத் தேர்தலில் சீட் பிரச்னையில் தி.மு.க. ஏமாற்றிவிட்டதாக குறை சொன்னீர்கள். தற்போது மீண்டும் அவர்கள் எடுத்த நிலைக்கு ஆதரவு தெரிவித்து, பா.ஜ.க. என்ற தேசியக் கட்சியை உதறுவீர்கள் போலிருக்கிறது. இம்முடிவை ம.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்வார்களா?
இதற்கு ஒரு வரலாற்றுச் சம்பவத்தை பதிலாகத் தருகிறேன். இந்தியா-பாகிஸ்தான் போர் காலத்தில் யுத்தநிதி பெறுவதற்காக அப்போதைய பிரதமர் நேருவின் மகள் இந்திராகாந்தி தமிழகம் வந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் வரவேற்க வேண்டியது மரபு.
இதற்காக கலைஞர் திருச்சியிலிருந்து காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் விமான நிலையம் வருவதற்கு முன்பாகவே, இந்திரா வந்த விமானம் வந்துவிட்டது. ஆனால் முதல்வர் கலைஞரின் கார் விமான நிலையத்திற்கு வராத நிலையில் இரண்டு, மூன்று முறை வானில் வட்டமிட்டுவிட்டு, இந்திராவை வரவேற்க கலைஞர் வந்துவிட்டார் என்பது தெரிந்த பின் தான் விமானம் தரையிறங்கியது.
கலைஞர் வரவேற்க வேண்டும், அவர் வந்து சேர வேண்டும் என இந்திராகாந்தி காத்திருந்த வரலாற்றுச் சம்பவம் அது. அதேபோல, வேலூர் சிறையில் வைகோவைப் பார்க்க விரும்பிய கலைஞர், ஒரு சனிக்கிழமையன்றே தலைமைச்செயலர் மூலமாகத் தகவல் கொடுத்துவிட்டு வேலூர் வந்தார். ஆனால் சனிக்கிழமையன்று வைகோவை சந்திக்க தடை விதித்தார்கள். அன்றும் அடுத்த நாளும் வேலூரிலேயே தங்கியிருந்து திங்கள்கிழமையன்று தான் வைகோவை கலைஞர் சந்தித்துவிட்டுத் திரும்பினார்.
இந்திரா காத்திருந்து தரிசித்த தலைவரான கலைஞர், தனது தம்பிக்காக இரு நாட்கள் வேலூரில் தங்கியிருந்து சந்தித்தார். அதைப் பார்த்து ம.தி.மு.க. தொண்டர்கள் நெகிழ்ந்தார்கள். அவருக்கு வைகோவின் மேல் எவ்வளவு அன்பு, பாசம் என்பதை அன்று நன்றாக உணர்ந்தோம். எனவே திராவிட இயக்கத்தின் கொள்கைகளின் மூலகர்த்தாவான கலைஞரின் வழியில் வை.கோ. செல்வது காலத்தின் கட்டாயம்.
ம.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாற்றி மாற்றி தடாலடி முடிவுகளை எடுப்பது கட்சியின் இமேஜை பாதிக்காதா?
அ.தி.மு.க.வின் வெள்ளிவிழா மாநாட்டில் வைகோ கலந்து கொண்டபோது, அதில் அத்வானியும் கலந்துகொண்டார். சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் அதை ம.தி.மு.க. எதிர்க்கும் என்ற எங்களது நிலைப்பாட்டை அம்மாநாட்டில் வெளிப்படுத்தி, அத்வானியின் வாயிலிருந்தே அந்த உறுதிமொழியைப் பெற்றோம்.
பொது சிவில் சட்டம், பொடா சட்டம் போன்றவற்றை கூட்டணியில் இருந்த போதும் எதிர்த்தோம். இப்படி ம.தி.மு.க.விற்கு என்று உள்ள நீர்த்துப்போகாத கொள்கைகளைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம்.
ஒரு அரசியல் இயக்கத்தில் சில நேரங்களில் தவிர்க்க முடியாத முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. அதே நேரத்தில் எந்தக் கூட்டணிக்காகவும், எந்த லாபத்திற்காகவும் எங்களின் அடிப்படைக் கொள்கைகளை இழக்கவில்லை என்பதால் தான் இன்று வளர்ந்த, பலம் பொருந்திய இயக்கமாக ம.தி.மு.க. திகழ்கிறது. எங்களின் இமேஜ் குறைந்திருந்தால் இந்த வளர்ச்சி வந்திருக்காது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பி.ஜே.பி. யுடன் தேனிலவு முடிந்தது - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கலைஞர், தான், ", வின், வரவேற்க, விமான, நாங்கள், மாற்றி, முடிவுகளை