முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஜனநாயகத்தின் வேர்மூலம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஜனநாயகத்தின் வேர்மூலம்
- எம்.சி. ராஜா
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நம் நாட்டின் பெருமைக்கும் புகழுக்கும் பல்வேறு கூறுகள் காரணமாய் அமைந்திருந்தாலும் உலகமே வியப்பதென்பது வேற்றுமையில் ஒற்றுமை என்னும் விழுமியப் பண்புதான்.
நிலத்தோற்றத்தால் - காலநிலையால் - தாவரவகையால் ஒரு கண்டத்துக்குரிய தகுதிகளைப் பெற்றுத் திகழ்கிற இந்தியத் துணைக்கண்டம், மதத்தால், இனத்தால், மொழியால், பண்பாட்டால், பழக்கவழக்கத்தால், கலாசாரத்தால் மாறுபட்டிருப்பினும் ஒற்றுமையாய், ஒரு கூட்டுக் குடும்பமாய் கூடிவாழும் உணர்வுதான் நமக்குக் கௌரவத்தை உலகம் வழங்கக் காரணமாயிருக்கிறது.
வெள்ளை ஆதிக்கம் வேரறுக்கப்பட்டதற்குப் பின்னால் நம்மை நாமே எப்படி நிலை நிறுத்திக் கொள்வது என்கிற வினாவுக்கு விடைகாண அன்றைய அரசியல் நிர்ணய சபை அறிவாளர்கள் ஆய்ந்து எடுத்த அற்புத முடிவுதான் இன்று மக்களாட்சிக் குடியரசாக இந்திய மண்ணில் மலர்ந்து மணம் பரப்பி வருகிறது. சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவத்தோடு கூடிய மக்களாட்சிக் குடியரசு இந்த மண்ணில் பதியம் வைக்கப்பட்டு, பாதுகாப்பாய்த் தன் விழுதுகளை இறக்கி விருட்சமாய் வியாபித்து நிற்கிறது.
ஆனால் இப்போது மாறிவரும் மனித மனங்களால் அதன் வேர்மூலத்திற்கே வேட்டுவைத்து விடுவார்களோ எனும் அச்சம் எழுகிறது. "அரசியல் என்றாலே சாக்கடை'' எனும் அடைமொழி எல்லோர் மனத்திலும் பதிந்துவிட்டது. அதன் புனிதத்தன்மை புதைந்து போய்க்கொண்டிருக்கிறது.
மதத்தின் பெயராலும் - இனத்தின் பெயராலும் - சாதியின் பெயராலும் வட்டாரப் பிரிவினையை வளர்க்கும் விதமாக, நம்மைப் பாளம்பாளமாக வெடிக்க வைத்து வேடிக்கை பார்ப்பதில் சில தலைகளுக்கு என்ன ஆனந்தம் என்றே தெரியவில்லை!
மனிதம் மறைந்து மதம் பற்றிக்கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை பல மடங்குகளாய்ப் பெருகி வருகிறது. குறுகிய நோக்கினில் குறுநிலப் பிரபுக்களாய் உருவெடுப்போர் பலர்; சாதித்தலைவர்களாய் முகம் காட்டி, அரசியல் கட்சிகளிடம் கரந்து தங்களின் அடிவருடிகளுக்கு ஆனந்தத் தீர்த்தம் தெளிப்போர் சிலர்!
பாமர மக்கள் பள்ளத்தில் இருந்தால் இந்த மேடு தமக்கு நிரந்தரம் என எண்ணித்திரிவோர் சிலர்..... இப்படி அரசியலில் அவலம் நீளுகிறது.
எல்லா வண்ணங்களும் கட்சிக்கொடிகளாய் வானைநோக்கி உயர்ந்து வர்ணஜாலம் புரிந்தாலும், கொள்கைகளும் கோட்பாடுகளும் குழிக்குள் ஆழமாய்ப் புதைந்து கொண்டிருக்கின்றன.
அரசியலில் மேற்கண்ட அவலங்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் இந்திய வாக்காளர் தன் கடமையைச் சரிவரச் செய்யாததுதான்.
அரசியல் ஆடம்பரங்களை - ஆர்ப்பாட்டங்களை - பேரணிகளை பொதுக்கூட்டங்களைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களிடம், இன்று எட்டி நின்று ஜன்னலை மூடிக்கொள்ளும் மனோபாவம் வந்துவிட்டது.
அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவங்களை உணராத பாமர மக்களோ அன்றைய தின ஆனந்தத்தை மட்டுமே பெரிதாய் எண்ணி விலைபோய்க் கொண்டிருக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினரோ, நாட்டைப்பற்றிய நாட்டமில்லாது உள்ளனர். மேல்தட்டு மக்களோ, வரிசையில் நின்று வாக்களிப்பதைக் கௌரவக் குறைச்சலாய்க் கருதுகின்றனர்.
இந்தியக் குடிமகன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறினால், அந்த உரிமையை இழப்பது மட்டுமல்ல, அடிமை வாழ்வு வாழத் தயாராகிவிட்டான் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.
நாகரிகமான அரசியல் நடத்தவேண்டும் என்று நினைப்பவரோ, நாட்டை தலை நிமிர்த்தவேண்டும் என்று கருதுபவரோ களத்திற்கு வரமுடிவதில்லை. விரும்புவதுமில்லை. அந்த அளவுக்கு அரசியலை வெறுத்து ஒதுக்குகிறபோக்கு அரங்கேறிவிட்டது. இதுவேறு விதமாய் மாறி, ஜனநாயகத்தின் விழுதுகளையே வீணடித்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க - பிரிவினை வாதத்தை வேரறுக்க - வட்டாரப் பிரிவினையை வளர்த்துவிட்டு தங்களை வளர்த்துக்கொள்பவர்களையும் சாதியின் பெயரால் சதி செய்வோரையும் ஆடம்பர அநாகரிக அரசியல் புரிவோரையும் அடையாளம் கண்டு தீர்ப்பளிக்கும் ஒரு வேள்வியாகக் கருதி, அனைவரும் வாக்களிப்போம்; ஜனநாயகத்தின் வேர்மூலம் காப்போம். இந்திய ஜனநாயகம் எந்நாளும் பொலிவோடு பூத்துக்குலுங்க நீர்வார்த்து, நெறிப்படுத்திடும் பண்பாளர்களாய் நாமிருப்போம்.
(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக்கழக சட்டத்துறை ஆராய்ச்சியாளர்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜனநாயகத்தின் வேர்மூலம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அரசியல், நின்று, இந்திய, பெயராலும்