முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » வைரமணியைக் கல்லாக்கும் ரசவாதம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - வைரமணியைக் கல்லாக்கும் ரசவாதம்
சில நாள்களுக்கு முன்னால் சென்னைத் தொலைக்காட்சியில் பார்வையாளர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் "தெரியுமா உங்களுக்கு'' என்ற நிகழ்ச்சியில் "வாக்காளர் உரிமை'' பற்றி பேசினேன். இந்த நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பார்வையாளர்கள் கேள்வி கேட்பார்கள். படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் படித்தவர்களே வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் இரண்டு பார்வையாளர்கள் கூறினர். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. இதை ஏற்க முடியாது என்றும் விளக்கினேன்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வயது வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்று விதித்திருப்பது மிகச் சிறப்பானது. முறையான கல்வி பெறாவிட்டாலும் நம் மக்கள் அனுபவபூர்வமான அறிவு பெற்றிருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தித் தேர்தலில் வாக்களிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்திய நாட்டில் ஏற்பட்ட பல முக்கிய அரசியல் திருப்பங்கள் இவ்வாறு முறையான கல்வி பெறாத வாக்காளர்களால்தான் ஏற்பட்டுள்ளன. முறையான கல்வி பெற்ற வாக்காளர்களின் பங்களிப்பு, வாக்களிப்பதில் குறைவே.
பட்டப்படிப்பு படித்தவர்கள்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் இந்தியாவில் இன்றும் 7 சதவிகிதத்தினருக்கே கல்லூரிப் படிப்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் 18 முதல் 23 வயது வரை உள்ள 64 லட்சம் இளைஞர்களில் 6 லட்சம் பேரே கல்லூரிகளில் தற்போது உள்ளனர். எனவே, வேட்பாளராக நிற்கும் உரிமையை மக்களில் 90 சதவிகிதத்தினருக்கு மறுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.
கல்லூரிப் படிப்பு படிக்காமலேயே, அரசியலில் திறமைசாலிகளாகவும் சிறந்த நிர்வாகிகளாகவும் பலர் விளங்க முடியும் என்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
தற்போது நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர் பள்ளியிறுதித் தேர்வும் அதற்கு மேலும் படித்தவர்கள்தான். நமது முதல் நாடாளுமன்றத்திலேயே (1952) 277 பட்டதாரிகள் இருந்திருக்கிறார்கள். தற்சமயம் 543 மக்களவை உறுப்பினர்களில் சுமார் 450 பட்டதாரிகள் இருக்கலாம். அவர்களில் முதுநிலைப் பட்டதாரிகள் சுமார் 150. டாக்டர், இன்ஜினியரிங் போன்ற பட்டம் பெற்றவர்கள் சுமார் 30.
தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் 1957-ல் 51 பட்டதாரிகள் இருந்தார்கள். இது படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. தற்சமயம் 234 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவையில் 100 பேருக்கு மேல் பட்டதாரிகள் உள்ளனர். பள்ளியிறுதியும் அதற்கு மேலும் என்று எடுத்துக் கொண்டால் மொத்த உறுப்பினர்களில் சுமார் 85% இந்தக் கல்வித் தகுதியைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, படித்தவர்கள் அரசியலில் அதிகம் இல்லை என்று கூறுவது சரியானதாகத் தோன்றவில்லை.
தனிப்பட்ட முறையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பண்பானவர்களாகவும் பல விஷயங்களையும் நன்கு தெரிந்து புரிந்து வைத்திருப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஒரு சிலர் சிறந்த புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் மேடை, அரசியல் பேச்சு, அரசியல் செயல்பாடு என்று வரும்போது அவை நாம் பாராட்டுகிற வகையிலே இருப்பதில்லை. இதற்கு தற்கால நடைமுறை அரசியல் பாணியும், பந்தாவும் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.
தற்கால அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசியல் பந்தாவிற்கென்று சில வழிமுறைகள் உருவாகியுள்ளன. இதிலே முதலாக வருவது கட்சித் தலைமைக்குத் தனிப்பட்ட முறையில் மிக விசுவாசமாக இருப்பதாகும். இது ஏறக்குறைய தனி நபர் வழிபாடாகவே - கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர - பல கட்சிகளிலும் உருவாகியுள்ளது. பெரிய கல்விமான்கள் அரசியலுக்கு வந்தாலும் "அனைத்து நிலைகளிலும் கட்சித் தலைமையின் சொற்படியும் கட்டளைப்படியும் வழிகாட்டுதலுடனும், விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வேன்'' என்று உறுதிமொழி எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த விசுவாசத்தையும் அடிக்கடி அனைவருக்கும் தெரியும்படி வெளிக்காட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளது. சுவரொட்டிகளும், சுவர் எழுத்துகளும், பேனர்களும், பத்திரிகை விளம்பரங்களும் இந்தப் போக்கை நாள்தோறும் பறைசாற்றுகின்றன.
தன் கட்சித் தலைமையிடம் காட்ட வேண்டிய இந்த அளப்பரிய விசுவாசம், எதிர்க்கட்சியினரை எதிரிகளாகக் கருதக் கூடிய மனப்பான்மையையும் உருவாக்கியுள்ளது. ஜனநாயகத்தில் இன்றியமையாத சகிப்புத்தன்மையும் மற்ற கருத்துகளை மதிக்கின்ற தன்மையும், இதனால் மறைந்து விடுகின்றன. எதிர்க்கட்சியினரை அவமானப்படுத்துவது தன் கட்சித் தலைமைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்ற எண்ணத்தில் இது வரம்பு மீறவும் செய்கிறது.
"தேர்தலிலே நமது கட்சி வெற்றி பெற வேண்டும். எதிரிக் கட்சியினர் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்'' என்ற போக்கும் வளர்ந்து வருகிறது. வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல், வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்றுதல் ஆகியவை அதிகரித்து விட்டன. தேர்தலில் பண பலம், ஆள்பலம் ஆகியவற்றின் தாக்கம் அதிகரித்துவிட்டன. தேர்தலுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும், கட்சி நடத்துவதற்காகவும் எந்த வகையிலும் பணம் திரட்டப்படலாம் என்ற எண்ணம், அனைத்து நிலையிலும் பெருத்த அளவில் ஊழலை வளர்த்துவிட்டது. கட்சியின் பெயரைச் சொல்லி தனது சொந்த வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் வழிவகுத்துவிட்டது. ஆரம்பக் கட்டத்தில் கட்சித் தலைமை இதைச் சகித்துக் கொண்டாலும், பிறகு அதை ஊக்குவித்து, அதன் பின் ஏன் பணம் திரட்டவில்லை என்று கண்டிக்கும் அளவுக்கும் போய்விட்டது.
அதிகப் பணம் திரட்டியது அருவருப்பான ஆடம்பரத்திற்கும், ஆரவாரத்திற்கும் வழிவகுத்துவிட்டது. தேர்தலிலே வேட்புமனு தாக்கல் செய்யவே ஆர்ப்பாட்டத்துடனும் அமர்க்களத்துடனும் வேட்பாளர் செல்வது வாடிக்கையாய் உள்ளது.
மேற்கண்ட செயல்பாடுகளிலேயே அக்கறை கொள்வதால் முக்கியமான பிரச்சினைகளில் - குறிப்பாக நீண்ட காலப் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைகளில் அலட்சியப் போக்கு வந்துவிட்டது. மக்களை வெகுவாகப் பாதிக்கும் முக்கியமான சட்டங்கள், திட்டங்கள் எந்த விவாதங்களும் இல்லாமல் சட்டப் பேரவையில் ஏற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அரசியலமைப்புச் சட்ட 73-ம் திருத்தத்தின் கீழ் மாநில அரசு உருவாக்கிய புதிய பஞ்சாயத்து சட்டம் சட்டசபையில் எந்த விவாதமும் இல்லாமல் ஒரே நாளில் ஏற்கப்பட்டது. விவாதங்கள் நடைபெறும் பொழுதும் அவை பெரும்பாலும் தரமானதாக இருப்பதில்லை.
இவை அனைத்தும் சேர்ந்து அரசியலுக்கும் அதில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கும் மக்களிடையே மதிப்பும் மரியாதையும் இல்லாத நிலையை உருவாக்கிவிட்டன.
தற்போதைய அரசியல் பாணியும் பந்தாவும் தொடருமானால் பெருவாரியான மக்கள் அரசியலில் அக்கறை கொள்ளாமல் அதை வெறுத்து ஒதுங்கிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
தேர்தலில் வாக்களிப்பு கணிசமாகக் குறைந்து கொண்டே வருவது இதையே சுட்டிக்காட்டுகின்றது. வருங்காலத்தில் கட்சி உறுப்பினர்களும், கட்சி அனுதாபிகளும் மட்டுமே வாக்களிக்கும் சூழ்நிலை உருவானால் மக்களாட்சி மக்களுடைய, மக்களுக்காக, மக்களின் ஆட்சி என்பது மாறி, கட்சிகளுடைய, கட்சிகளுக்காக, கட்சிகளின் ஆட்சி என்ற நிலை ஏற்படலாம்.
இதைப்பற்றி எல்லா கட்சிகளிலும் உள்ள பண்பாளர்கள் கவலைப்பட வேண்டும். ஆரோக்கியமான அரசியலுக்கான வழிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அரசியல் கட்சியின் செயல்பாடுகளிலும் தேர்தல் நடைமுறைகளிலும் சீர்திருத்தம் வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தையே நாட வேண்டிய நிலை உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவை மூலம் திருத்தங்களும் தீர்வுகளும் கிடைக்காமல், நீதிமன்றங்கள் மூலமே அவை கிடைக்கும் என்ற நிலை, மக்களுக்கும், மக்களாட்சிக்கும், மக்களவைக்கும், பெருமை தராது. மாறாக மக்கள் மனப்பாங்கை உணர்ந்து கட்சிகளே தேவையான திருத்தங்களை கொண்டு வருவதே பெருமை சேர்க்கும்.
"கல்லை வைரமணியாக்கல்'' என்ற வரத்தைக் கோரினான் பாரதி. காந்திய சகாப்த அரசியலில் சாதாரண பாமர மக்களும் சத்தியத்தையும் அகிம்சையையும் கடைப்பிடித்தனர். கல்லும் வைரமணியாக ஒளிர்ந்தது. ஆனால் தற்சமய அரசியல், வைரமணியையும் கல்லாக்கி விடுகிறது. இந்த ரசவாதம் மாற வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வைரமணியைக் கல்லாக்கும் ரசவாதம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - அரசியல், வேண்டும், ", கட்சித், பட்டதாரிகள், அரசியலில், உள்ளது, கட்சி, எந்த, சுமார், தேர்தலில், கல்வி, பணம், நிலை, வேண்டிய, என்றும், அதற்கு, நமது, மக்கள், உறுப்பினர்களும், முறையான