முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஆராயாத ஆராய்ச்சி
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஆராயாத ஆராய்ச்சி
- பி.என். ராஜேஷ்
ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்டின் சாண்டியாகோ நகரில் ஜனவரி இரண்டாவது சனிக்கிழமையில் தொடங்கி 5 நாள்கள் சர்வதேசக் கருத்தரங்கு - தாவர மற்றும் மிருக ஜீனோம் நடைபெறும். இதுவரை 11 கருத்தரங்குகள் நடந்து முடிந்துவிட்டன. உலக அளவில் இந்தத் துறையில் பணிபுரியும் மாணவர்களில் இருந்து, வளர்ந்து வரும் விஞ்ஞானிகள் உட்பட, பழம் தின்று கொட்டை போட்ட பேராசிரியர்கள் வரை அனைவருக்கும் இந்தக் கூட்டம் ஒரு கும்ப மேளா. உயிரியல் உலகம் எந்தத் திசை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் திசைக் கருவி. அந்தக் கூட்டத்தில் இந்திய அறிவியல் வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட பிர€யாகப் பங்கேற்றால் புலப்படும் பல விஷயங்களில் சில கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஆராய்ச்சி என்பதைப் பல பேர் உள்ளிட்ட கூட்டுச் செயல்பாடாகத் தான் கருதுகிறார்கள். அதனால் தான் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பல, பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களின் பெயர்களுடன் பதிப்பிக்கப்படுகின்றன. அறிவியல் என்பது கடல் போன்றது. அதில் ஒவ்வொருவரும் செய்யும் ஆராய்ச்சி ஒரு சின்ன மீன் போன்றது. அந்த மாதிரியான பல மீன்கள் சேர்ந்தால் தான் ஒரு கடல் வாழிடத்தை அமைக்க முடியும் என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக் கொண்ட ஆராச்சியின் ஒவ்வொரு பிரிவையும் கூட்டு ஆராய்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுத்து, கடைசியில் அனைத்தையும் சேர்த்து அணிகலனாகச் சேர்த்துப் பார்க்கும் ஒருவித பொற்கொல்லர்களாகத்தான் பணி புரிகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் இல்லை. இந்தியாவில் குறைந்த வசதிகளுடன் தானே எல்லாம் செய்யவேண்டும் என்ற பரவலாகக் காணப்படும் குறுகிய எண்ணம், வெறும் கையில் முழம் போடுவதற்குச் சமானம். அப்படியே கூட்டு ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தாலும், அன்னிய நாட்டினருடன் கூட்டு சேர்ந்து இரண்டாம் நிலையில் இருக்க முன்வருகிறார்களேயொழிய, இந்தியாவிலேயே ஆராய்ச்சியாளர்களிடம் கூட்டுச் சேர முன் வருவதில்லை. இந்திய விஞ்ஞானிகளிடம் கூட்டு ஆராய்ச்சி குறைவாகவே உள்ளது.
விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி செய்ய பல வசதிகள் தேவை; அவை அனைத்தையும் ஒருவரிடம் அமைத்துக்கொள்வது என்பது சாத்தியமானது அல்ல. எனவே நம்மிடம் உள்ள வசதிகளை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவோம். அதே போல் அடுத்தவர்களிடம் உள்ள வசதிகளை நாமும் பயன்படுத்திக்கொள்ளோம் என்ற பரந்த மனப்பான்மை அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் தனது பொருள் தனக்கே என்ற சுயநலம் தான் பரவலாகக் காணப்படுகிறது. ஆராய்ச்சி என்பதை ஒரு வித ரகசிய விஷயமாகத்தான் கருதுகிறார்கள். ஓர் ஆய்வகத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி அடுத்த ஆய்வகத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. அமெரிக்காவில் தனது ஆராய்ச்சியின் விடைகளை மட்டும் தான் பதிப்பாகும் வரை ரகசியமாக வைத்துள்ளார்கள். தான் என்ன செய்கிறோம் என்பதைப் பொதுவாக வைத்துள்ளார்கள்.
அமெரிக்காவில் ஒரு மாணவனுக்குத் தனது ஆசிரியரை, மேலதிகாரியைப் பெயர் சொல்லி அழைக்கும் அன்யோன்யம் காணப்படுகிறது. அதில் அவர் மீதுள்ள மரியாதை உள்ளடங்கி உள்ளது. அந்த நிலை, அவர்களிடமிருந்து அவரின் ஞானத்தைப் பெற வழிவகுக்கிறது. ஆனால் இந்தியாவில் சார் என்று அழைப்பதில் மட்டும்தான் மரியாதை காணப்படுகிறது. இந்த அன்னியத் தனம் இரு சாராருக்கும் இடையே ஒரு வித தடுப்புச் சுவராக அமைந்து விடுகிறது.
போட்டி மற்றும் தொழிலில் பாதுகாப்பின்மை இவை இரண்டும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான கருவிகள். ஒரு கருத்தரங்கில் ஓர் ஆண்டுக்கு முன்பு மிக அதிகமாகப் பேசப்பட்ட உயிரியல் ஆராய்ச்சி அடுத்த ஆண்டில் சிறுத்து விடுகிறது. போட்டியில்லாமல் எதுவும் சாத்தியமாகாது. பொறாமையை விட போட்டிகளே தலையோங்கியிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள பல மாநிலப் பல்கலைக்கழகங்களில், பேராசிரியர்களுக்குக் கூட 12 மாத ஊதியம் கிடையாது. கோடை விடுமுறைகளில் அவர்கள் அடுத்த பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வேலை செய்து சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்த நிலை அவர்களை 60 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. ஆனால் இந்தியாவில் அரசாங்கம், தனது பொருளாதாரம் சீர்குலைந்தாலும், தனது பிரஜைகள், அவர்களின் குடும்பங்கள் சீர்குலைந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அனைவரின் வேலைகளுக்குத் தரும் உத்தரவாதம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு, நாம் உண்மையாக உழைக்கிறோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு இந்தியாவில் ஓர் ஆண்டு அவகாசம் எடுக்கும் ஆராய்ச்சியை, அமெரிக்காவில் 3 மாதங்களில் செய்து விட முடியும். இதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் புலப்படும் விஷயங்கள்: இந்தியாவில், ஓர் ஆய்வு செய்யத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் விகிதம் மற்றும் அதைப் பெற, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளினால் ஆகும் கால தாமதம் போன்றவை இந்தியாவைப் பின்னடையச் செய்துவிடுகின்றன.
இந்தச் சூழலிலும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி சீரழிந்து விடவில்லை. இந்த நிலையிலும் விஞ்ஞானிகளின் முயற்சியால், ஏவுகணைகளை இந்தியா தயாரிக்க முடிகிறது; அணு ஆராய்ச்சி செய்ய முடிகிறது; முக்கியமாக, அண்டை நாடுகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருக்க முடிகிறது. உலக அறிவியல் வரலாற்றில் 3 இந்தியர்கள் நோபல் பரிசு பெற்றவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடது. பல சர்வதேசப் பதிப்புகளில் இந்திய ஆராய்ச்சிக்கிடமில்லாமல் போய்விடவில்லை. ஆனால் மிகக் குறைந்த பதிப்புகளே, அதுவும் விரல் விட்டு எண்ணும் அளவிலான பல்கலைக்கழகங்களிலிருந்தே இவை வருகின்றன என்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது. ஆனால் இந்தியர்களின் ஆராய்ச்சி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்தே வெளியாவது, வளர்ச்சிக்குத் தேவையான எதையோ இந்தியா இழந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இந்த நிலையை மாற்றியமைக்கும் உரிமை அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு இருந்தாலும், மேல்தளத்தில் இருப்பவர்களிடம் உள்ள அதிகாரம் மற்றும் ஈடுபாடுகள் இல்லாமல் நடக்காது. ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான் என்ற தாரக மந்திரம் வார்த்தைகளில் மட்டும் இருக்க வேண்டுமா? இல்லை இந்தியர்களின் வாழ்க்கையில் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
(கட்டுரையாளர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மரபியல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆராயாத ஆராய்ச்சி - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஆராய்ச்சி, அமெரிக்காவில், இந்தியாவில், உள்ள, தான், தனது, என்பதை, இந்திய, இருக்க, செய்ய, அறிவியல், கூட்டு, ஜெய், நாம், முடிகிறது, அடுத்த, காணப்படுகிறது, உள்ளது, என்பது, நிலை