முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » காஷ்மீரில் வெறியாட்டம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - காஷ்மீரில் வெறியாட்டம்
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானின் விசுவாச சக்திகள் பலமிழந்து வருகின்றன. அத்துடன் பிரிவினைவாத சக்திகளின் கதம்பக் கூட்டணியான ஹூரியத் மாநாடு தற்பொழுது மிதவாதிகளின் தலைமையில் இயங்கி வருகிறது. காஷ்மீரில் அமைதியை மீட்கவும் காஷ்மீர்ப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணும் நோக்கத்துடனும் இந்திய அரசுடன் அது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரத்தில் ஹூரியத் தூதுக்குழு ஒன்று தில்லிக்கு வந்து துணைப் பிரதமர் அத்வானியுடன் நடத்திய இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் சுமுகச் சூழலில் - தாராளக் கருத்துப் பரிமாற்றத்துடன் நடைபெற்றிருக்கிறது. மூன்றாவது கட்டப் பேச்சுகளை மக்களவைத் தேர்தல்கள் முடிந்த பிறகு ஜூன் மாதம் மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதே சமயத்தில், வெகு விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல்கள் காஷ்மீர் மக்களைப் பெரிதும் வசீகரித்துள்ளன. காஷ்மீரில் ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியினரும் - முதல்வர் முப்தி முகம்மது சய்யீத்தும், அதைப் போலவே பிரதான எதிர்க்கட்சியான பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் முழு வேகத்துடன் ஈடுபட்டிருக்கிறார்கள். 2002-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களைப் புறக்கணித்து ஒதுக்குமாறு செய்வதில், பாகிஸ்தான் ஆதரவு அரசியல் சக்திகளும் தீவிரவாதக் குழுக்களும் செய்த முயற்சிகள் ஓரளவுக்குப் பலிக்காமல் போகவில்லை.
ஆனால் இப்பொழுது சர்வதேச அளவிலும், காஷ்மீருக்குள்ளும் நிலவரங்கள் வெகுவாக மாறிவிட்டிருக்கின்றன. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லாப் பிரச்சினைகளிலும் சமரசத் தீர்வு காண முயலுமாறு பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரஃபை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. காஷ்மீரிலோ சய்யீத்தின் அரசு ஏற்பட்ட பிறகு காஷ்மீர்ப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் ஜனநாயக ஆட்சியை ருசித்து வருகிறார்கள். முதல்வர் சய்யீத் - பிரிவினைவாத சக்திகளில் இதமான வட்டாரங்களின் நட்புறவைப் பெற்றவர் என்பதையும் மறப்பதற்கில்லை.
இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்று வருவதையும் அதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதையும் தீவிரவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலும். அதனால் இப்பயங்கரவாதிகள் திடீரென வெறியாட்டத்தில் தலைவிரிகோலத்துடன் இறங்கியிருக்கிறார்கள். காஷ்மீரில் எல்லையோர நகரமாகிய யூரி என்ற இடத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த வெறிக்கூட்டம் வீசிய கையெறி குண்டுகள் தாக்கியதால் 10 பேர் பலியாகி இருக்கிறார்கள். மாநிலத்தின் இரு அமைச்சர்கள் உள்பட 80 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதையும்விட இப்பேரணியில் பங்குகொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முதல்வரின் புதல்வியுமான மெஹ்பூபா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார். இச்சம்பவம் ஸ்ரீநகரை மட்டுமன்றி புதுதில்லியையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பிரதமர் வாஜ்பேயியும் முதல்வர் சய்யீத்தும் இந்த வெறியாட்டத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். காஷ்மீரில் அமைதி மீள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகளே இந்தக் கொடுமைகளைச் செய்திருக்கின்றன என்று சய்யீத் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இச்சமயத்தில் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் மாநில அரசும் மத்திய அரசும் திடசித்தத்தைக் காட்டுவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மட்டுமன்றி, அவர்களுடைய சூத்திரதாரிகளுக்கும் சரியான பாடத்தைப் புகட்ட முடியும். ஒருபுறம் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முழுவீச்சில் முடுக்கிவிட தில்லி தயங்கக் கூடாது. மறுபுறம் தேர்தல்களை நடத்துவதில் பவித்திரமான முனைப்பைக் காட்டுவதும் அவசியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஷ்மீரில் வெறியாட்டம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - காஷ்மீரில், மக்கள், தேர்தல், முதல்வர், ஜனநாயகக், வருகிறது, நடத்தி