முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » மகளிர் ஒதுக்கீடு: நழுவும் கட்சிகள்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - மகளிர் ஒதுக்கீடு: நழுவும் கட்சிகள்
- ருத்ரன்
நான்கு சக்கர வாகனங்களின் புகையும் புழுதிக்காற்றும் கிராமங்களைத் திணறடிக்கின்றன. எளிய மற்றும் ஏழை விவசாயிகளைப் பார்த்து வெள்ளுடை வேந்தர்கள் கும்பிடு போடுகின்றனர்.
சாதாரண சுவரெழுத்துகள் மட்டுமன்றி, ஆடம்பரமான பாலிதீன் டிஜிட்டல் பேனர்களும் நகரங்களின் தெருக்களை ஆக்கிரமித்துள்ளன. ஒரு மக்களவைத் தொகுதிக்கான செலவுத் தொகையாகத் தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கும் ரூ. 25 லட்சத்தை, இப்போதே பூர்த்தி செய்துவிட்டதைப் போன்ற தோற்றம், ஊடகங்களில் தென்படுகிறது.
இத்தகைய திருவிழா குதூகலத்தில், அரசியல் கட்சிகளால் கைவிடப்பட்ட குழந்தையாக, மகளிர்க்கான அங்கீகாரம் தவிக்க விடப்பட்டதை அநேகமாக அனைவரும் மறந்தே போயினர்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில், மகளிர்க்கு 33 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதை அனைத்துக் கட்சிகளும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளன. இக்கருத்தில், ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என்னும் பேதத்தைக் காண முடியாது. இருப்பினும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமைக்கு பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்ளும் அவலம் தொடர்கிறது. இது, மசோதாவிற்கு எதிர்த்திசையில் அரசியல் கட்சிகளின் மனசாட்சி இயங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகும்.
சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கும்போது, மகளிர் இடஒதுக்கீடு குறித்து கட்சிகளின் அக்கறை உண்மையானதா என்னும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. வெளியிடப்பட்டிருக்கும் வேட்பாளர் பட்டியல்கள் அச் சந்தேகத்தைக் கூட்டுவதாகவே அமைந்துள்ளன. இந்தியா என்னும் பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல, தமிழகம் - புதுவை அளவில் பார்ப்போம்.
இங்கு 33 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. அவற்றில் 11 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் தென்சென்னை, வந்தவாசி ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.
15 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க, திருச்செங்கோடு, ராமநாதபுரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய மூன்று தொகுதிகளை மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. ஆனால், ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளை பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய காங்கிரஸ், தான் போட்டியிடும் 10 தொகுதிகளில், ராசிபுரம் தொகுதியை மட்டுமே பெண்ணுக்கு வழங்கியிருக்கிறது.
7 தொகுதிகளில் நிற்கும் பா.ஜ.க, புதுவையை மட்டும் பெண்ணுக்குக் கொடுத்திருக்கிறது. குறைந்தபட்சம், தமிழகத்திலும் ஒரு தொகுதியை ஒதுக்கியிருக்க வேண்டும்.
பா.ம.க.வின் 6 தொகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டும், ம.தி.மு.க.வின் 4 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒன்றும், 2 தொகுதிகளைக் கொண்டிருக்கும் சி.பி.ஐ., சி.பி.எம் ஆகியவைகளில் தலா ஒன்றும் பெண்களுக்கென்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழவில்லை. இந்நான்கு கட்சிகளும் பெண்களை முற்றாகப் புறக்கணித்துள்ளன.
தலித்துகள், அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் கூட்டணி அமைத்திருப்பதாகச் சொல்லும் தொல். திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும் இதுவரை அறிவித்திருக்கும் வேட்பாளர் பட்டியல்களும் பெண்களின் அரசியல் அங்கீகாரத்தை ஏற்கும் விதத்தில் இல்லை.
33 சதவீதம் அல்ல, மகளிர்க்கு 50 சதவீத இடங்களை அளிக்க வேண்டுமென்று தாராளமாக வாய் திறக்கும் அரசியல் கட்சிகள், தமது அதிகாரத்துக்கு உட்பட்ட வேட்பாளர் தேர்வுகளில் 33 சதவீதத்தைத் தருவதற்கும் கூட மனம் திறப்பதில்லை.
இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கானல் நீராகி வருவதற்கு வேறு காரணங்களைத் தேட வேண்டியதில்லை.
மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள் பெண்களாக இருந்திருப்பார்களேயானால், மசோதா அவசியமின்றியே நாடாளுமன்றத்தில் 33 சதவீதத்தில், பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக வீற்றிருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்வதற்கு கட்சிகளுக்கு விருப்பமில்லை; திராணியும் இல்லை!
தேர்தலுக்குப் பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய தலைதெறிக்கும் வாதங்களும் விவாதங்களும் நாடாளுமன்றச் சுவர்களில் மோதும். அத்தகைய கூத்துகளைப் பெண்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் வரையிலும், கட்சிப் பெண்களும் அந்நாடகங்களில் பங்கேற்கும் வரையிலும், அரசியல் கட்சிகளின் போலி முகம் கிழிபடப் போவதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகளிர் ஒதுக்கீடு: நழுவும் கட்சிகள் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தொகுதிகளில், வேண்டும், அரசியல், குறைந்தபட்சம், மகளிர், மட்டுமே, மசோதா, என்னும், கட்சிகளின், வேட்பாளர்