முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » வாக்களிக்காத இந்திய இளைஞர்கள்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - வாக்களிக்காத இந்திய இளைஞர்கள்
- க.ச. மனுவேல் - அமெரிக்கன் கல்லூரி
"மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி"
சில வாக்கியங்களையும் வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் போது அவை தம் அர்த்தத்தை இழந்து விடுவது போல ஆபிரகாம் லிங்கனின் இந்த வாக்கியமும் தன் அர்த்தத்தை இழந்து நிற்கிறது. பேச்சாளர்களும், பேச்சுப் போட்டி மாணவர்களும் இந்த வாக்கியத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தாலும் இதன் உண்மையான அர்த்தத்தை நிறைய பேர் உணர்ந்திருப்பதில்லை, குறிப்பாக இளைஞர்கள்!
'ஏன் எதற்கெடுத்தாலும் இளைஞர்களை இழுக்கிறீர்கள்' என்று சிலர் ஆதங்கப்படலாம். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் எந்த ஒரு விசயத்திலும் இளைஞர்களின் பங்கு என்பது முக்கியமானது. ஏனெனில் இந்திய மக்கள் தொகையில் 54% பேர் இளைஞர்கள்.
இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்து வருகிறது. அதே நேரம் வாக்களிப்போரின் எண்ணிக்கை ஒரு புறம் குறைந்து வருகிறது. கணக்கிட்டுப் பார்த்தோமானால், வாக்களிக்காதவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாகத்தான் இருப்பர். இதற்குக் காரணம் என்ன என்பது ஆய்வுக்குரிய விசயம்.
இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்திருக்கும் இடத்தில், விவாதத்திற்கு வரும் பொருட்கள் எவை என்று பார்த்தால், மிகப் பெரிய பங்கை சினிமா பிடித்திருக்கும், அதற்கடுத்த பங்கை கிரிக்கெட் பிடித்திருக்கும், மிகக் குறைந்த நேரத்தின் நடுவே சில அரசியல் செய்திகள் கடந்து போவதுண்டு. இந்த செய்திகளும் 90% தம் பெற்றோர்களின் கண்ணோட்டத்திலோ, ஆசிரியர்களின் கண்ணோட்டத்திலோ தான் அமைந்திருக்குமே தவிர, தாமாக யோசித்து, ஆராய்ந்ததாக இருக்காது. காரணம், நம் இளைஞர்களுக்கு அரசியல் என்பது சினிமா அளவிற்கோ, கிரிக்கெட் அளவிற்கோ 'பெரிய' விசயம் ஒன்றுமில்லை.
"நாம் ஓட்டுப்போட்டுதான் ஆட்சி மாறப் போகுதாக்கும்" என்ற அலட்சியப் போக்கு இளைஞர்கள் சிலரிடம் இருப்பது வேதனைக்குரிய விசயம். சில காரணங்களால் ஓட்டுரிமை கிடைக்காமல் போகும் இளைஞர்கள் சிலர். அதை விண்ணப்பித்து பெறுவதற்கு அடுத்து முயற்சிகள் செய்வதே கிடையாது. "அடுத்த முறை, பார்த்துக் கொள்ளலாம்" என்று விட்டு விடுவதுண்டு.
"எந்த கட்சியும் சரியல்ல. அதனால ஓட்டுப்போடல" என்று சொல்லும் இளைஞர்கள் சிலரும் உண்டு. அவர்களின் சோம்பேறித்தனத்திற்கு இது ஒரு காரணமாகி விடுகிறது.
அனைத்துக் கட்சிகளுமே தங்களுக்கு என்று ஒரு கொள்கையை (நல்லதோ, கெட்டதோ) ஏற்படுத்திக் கொண்டு அதன்படியே செயல்படுகின்றன. அந்தக் கொள்கை எப்படிப்பட்டதென்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டியது இளைஞனின் பொறுப்பு. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிக் கொண்டே இருந்தால், யார் தான் இறங்கி அதை சுத்தப்படுத்துவது என்று பேரறிஞர் அண்ணா கூறுவார்.
எந்தக் கட்சியுமே, எந்த வேட்பாளருமே படிக்கவில்லையா? அதற்காக ஓட்டுப்போடாமல் இருந்துவிடக்கூடாது. அரசியல் சட்டத்தில் 49 '0' என்ற விதிமுறையின் கீழ், ஒருவனுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் அதையும் பதிவு செய்யலாம். வாக்குச் சாவடிக்கு சென்று, 17 A என்ற படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். எல்லா வாக்குச் சாவடிகளிலும் இது கண்டிப்பாக இருக்கும். ஓட்டுகளின் எண்ணிக்கையை விட இந்தப் பதிவு அதிகம் இருந்தால், பின்னர் இங்கு மறுதேர்தல் நடத்தப்படும்.
வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள், குறைந்தபட்சம் 17 A படிவத்தையாவது பூர்த்தி செய்தல் வேண்டும்.
பொதுவாக, கிராமப்புற இளைஞர்கள் ஓட்டுப் போடாமல் இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் ஒரு கட்சிக்காவது ஆதரவாக இருப்பர். ஆனால் நகர்புறங்களில் இருக்கும் உயர்மட்ட வர்க்க இளைஞர்கள்தாம் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. சில இளைஞர்கள்தான் ஓட்டுப் போடுவதில்லை என்பதை பெருமையுடன் கூறிக் கொள்வதும் உண்டு.
வாக்களிக்கச் செல்லாத, உயர்மட்ட வர்க்க இளைஞர்களிலும், குறிப்பாக பெண்கள் பற்றி சொல்லியாக வேண்டும். ஆண்களை விட, உண்மையாகவே, பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகமாக உள்ளதை நாம் கவனிக்கலாம்.
இளைஞர்களின் இத்தகைய நிலைக்கு உளவியல் ரீதியான ஒரு காரணத்தை நாம் அறியலாம். நாம் சிறுவயதிலிருந்தே வரலாறு, குடிமையியல் போன்ற அரசியல் பாடங்களைப் படித்து வந்தாலும், அவற்றை ஏகமனதாக வெறுத்தும் வந்திருக்கிறோம். ஏனெனில் அவற்றின் பாடத்திட்டம் நடத்தப்பட்ட விதமும் அப்படி! வரலாற்றிலும், குடிமையியலிலும் அதிக ஆர்வம் கொண்ட இளைஞன் ஒருவன் ஓட்டுப்போடாமல் இருந்ததாக வரலாறே கிடையாது.
மாணவர்கள் எங்கெல்லாம் கொதித்து எழுந்துள்ளமை, எங்கெல்லாம் புரட்சி ஏற்படுத்தினர் என்பதை இளைஞன் அறிந்திருந்தால், அவன் ஓட்டுரிமையின் மகத்துவத்தையும் கண்டிப்பாக அறிந்திருப்பான். மக்களாட்சி என்பது எத்தனை பெரிய போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் என்பது இளைஞன் யோசித்ததே கிடையாது.
1980-களில் அஸ்ஸாமில் ஏற்பட்ட இளைஞர் புரட்சி காரணமாக, அவர்கள் நினைத்ததை எல்லாம் சாதித்ததும், உடனடியாகவே அரசியலில் குதித்து, இந்தியாவிலேயே முதன் முறையாக 40 வயதே நிரம்பிய ஒருவரை முதலமைச்சராக ஆக்கியதும் நாம் அறிந்த நிகழ்வே. அந்த நிகழ்விற்கு முக்கியக்காரணமே அனைத்து இளைஞர்களும் அந்தப் புரட்சிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டதே ஆகும்.
நான் இப்படி இருப்பதற்குக் காரணம் நான்தான் என யோசிப்பவன் சாதாரண மனிதன். நான் இப்படியிருக்க வேறு சிலரும் காரணம் என யோசிப்பவன் சீர்திருத்தவாதி.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலேயும் அரசியல் பாதிப்பு உள்ளது. நாம் காலையிலிருந்து மாலைவரை வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையிலும், அரசியலின் பங்குண்டு. அதே போல நம்முடைய வருமானம் உயரவோ, உயராமலோ, குறையவோ, குறையாமலோ இருப்பதற்குக் கூட அரசியல்தான் காரணம். அரசாங்கம் என்பது வேறொன்றுமன்று. நமக்கு பிடித்தோ, பிடிக்காமலோ இருக்கும் அரசியல்வாதிகள் தாம் அவர்களைத் தேர்ந்தெடுக்காமல், அதாவது அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பது என்பது நம்முடைய முட்டாள்தனம்.
அரசியல்வாதிகளின், ஆட்சியாளர்களின் ஒவ்வொரு சிறு செயலும் நம்மையும் பாதிக்கிறது என்பதை ஆழச் சிந்தித்துப் பார்க்கும் போது தான் நாம் உணர முடியும். அவர்களின் ஆட்சியையே பாதிக்கக் கூடிய வாக்குரிமை ஒன்று நம்முடைய கைகளில் இருக்கிறது. ஒவ்வொருவருமே வாக்கைக் கையில் வைத்திருக்கும்போது அரசியல்வாதிதான். வாக்களிப்பது நம் உரிமை என்ற கருத்திலிருந்து சற்று மேம்பட்டு வாக்களிப்பது நம் கடமை என்ற கருத்திற்கு வருவோம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாக்களிக்காத இந்திய இளைஞர்கள் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நாம், இளைஞர்கள், என்பது, அரசியல், காரணம், எந்த, ", என்பதை, ஓட்டுப், இளைஞன், ஒவ்வொரு, நம்முடைய, இருக்கும், அர்த்தத்தை, பெரிய, விசயம், தான், இளைஞர்களின், கிடையாது, வேண்டும்