முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » பொடாச் சிறை வாசத்திற்குப்பின் ... வைகோ பேட்டி
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - பொடாச் சிறை வாசத்திற்குப்பின் ... வைகோ பேட்டி
- சிறப்பு நிருபர்
பிப்ரவரி 7ந் தேதி வைகோ வேலூர் சிறையை விட்டு வெளியே நடந்து வந்த காட்சி, கவித்துவமாக இருந்தது. அவரது டிரேட் மார்க் கறுப்புத் துண்டு காலை நேர தென்றலில் அசைந்தாட, கையில் பழைய சூட்கேஸ•டன் நிபந்தனைக்குட்பட்ட விடுதலை பெற்று அவர் மெல்ல நடந்துவந்தார். தலை ஒரு பக்கம் சாய்ந்திருக்க, முகத்தில் சிறு புன்னகைக் கீற்று நிறைந்திருக்க, தத்துவார்த்த ரீதியாக தெளிவடைந்தவரைப்போல அவர் காணப்பட்டார். 19 மாத சிறை வாழ்க்கை அவருக்குள் இருந்த கனலை அணைத்து விட்டதோ என்று பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அவர் நெருங்கி வர வர அந்த சந்தேகமெல்லாம் காணாமல் போய்விட்டது. அவரது கண்களை உற்றுப் பார்த்தால் தீப்பொறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருப்பது தெரியும்.
ம.தி.மு.க பொதுச் செயலரும், பொடாவின் பிரபல கைதியும், தமிழ் ஈழத்தின் இணைபிரியா சகோதரரும், மாநில அரசால் வெறுக்கப்படுபவரும், கட்சித் தொண்டர்களால் அன்பு அண்ணன் என்று அழைக்கப்படுபவருமான வைகோ இப்போது தத்துவ ஆளுமையும் அரசியல் ஆளுமையும் கொண்ட வலுவான மனிதர். இது தான் அவரை ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் நட்சத்திரப் பிரச்சாரகராக ஆக்கும். ஆனால், தன்னை நட்சத்திரப் பிரச்சாரகர் என்று குறிப்பிடுவது வைகோவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் தான் பிரச்சார பீரங்கியாக இருக்கப் போகிறார். பொடா துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் விவகாரம் இந்தத் தேர்தலில் ஜ.மு.கூவின் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பெறும் போது 58 வயதான வைகோவைவிட வேறு யார் இந்தப் பிரச்சாரத்தை செய்ய முடியும்?
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கம் போல வைகோ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவார் என்று யாரும் நினைத்தால் அவர்கள் ஏமாந்துபோவார்கள். விடுதலைப்புலிகள் ஆதரவு, தனக்கு பல நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது வைகோவிற்குத் தெரியும். ஆனால் அந்த ஆதரவு தன்னை பெரும் பகுதி மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியுள்ளதும் அவருக்குத் தெரியும். யாழ்ப்பாணத்திற்கு ரகசியமாகச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்த வைகோ, தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அந்த விஷயத்தில் இன்று வரையிலும் அவர் பின்வாங்கவில்லை. நான் எப்போதும் தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கிறேன். அதற்காக விடுதலைப்புலிகள் மட்டுமே போராடி வருகிறார்கள், என்று கூறினார் வைகோ.
ஆனால் வைகோ தனது பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியையும் பா.ஜ.க முகமூடியணிந்து கொண்டு வி.இ.பவும் ஆர்.எஸ்.எஸ்ஸ•ம் செய்து வரும் மோசமான திட்டங்ளை அம்பலப் படுத்துவதும், முக்கிய இடம் பெறும் என்று கூறுகிறார். வைகோ ஜெயலலிதாவை குறிவைத்துத் தாக்குவார்; வாஜ்பாயி மீதான விமர்சனத்தில் நீக்குப் போக்குடன் நடந்துகொள்வார். பொடா பற்றி பேச்சு வரும் போது அதீத எச்சரிக்கை உணர்வுடன் நடந்துகொள்வார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு வைகோ தனது முதல் பொதுக் கூட்டத்தை பிப்ரவரி 19ந் தேதி அண்ணா நகரில் நடத்தினார். அதற்குப் பிறகு அவரது தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பிப்ரவரி 28ந் தேதி நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஜ.மு. கூட்டணியின் முக்கியப் பிரச்சாரகராக திகழப்போகும் அவர் திராவிடக் கட்சிகளுக்கும் பா.ஜ.கவிற்கும் இடையே ஏற்பட்ட உறவை விவரிப்பார். திராவிடத்தை உயிர்ப்பிப்பதற்கான தேவையை அவர் வலியுறுத்துவார். நாங்கள் தே.ஜ.கூவில் இருந்த போது பா.ஜ.கவால் தனது இந்துத்துவ செயல் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.கவை ஆதரிப்பது ஆபத்திற்கு அச்சாரமாகும், என்ற பாணியில் பிரச்சாரம் போகும். வைகோவின் பிரச்சாரத்தில் சென்டிமெண்ட், உணர்ச்சிகள், தர்க்கம் எல்லாமே இருக்கும். அவரை தி.மு.கவில் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால அவர் தான் இந்தத் தேர்தலில் வலுவான பேச்சாளர் என்பதை நாங்கள் உணர்கிறோம் என்கிறார் தி.மு.க தலைவர் ஒருவர்.
தி.மு.கவிலிருந்து பிரிந்து வந்த பிறகு பட்ட துன்பங்களை மறந்து விடாத வைகோ, தி.மு.கவும் ம.தி.மு.கவும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்கிறார். ஆனால் எங்களிடையே சகோதரத்துவம் நீடிக்கும் என்றார் அவர். வைகோ முக்கியப் பேச்சாளராக இருந்தாலும் அவர் தி.மு.க தலைவர் மு. கருணாநிதியின் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிக்கமாட்டார். வைகோ சென்டிமெண்டாக பேசுவார். கலைஞருக்கு அவருடைய வயதுக்குரிய மரியாதை கிடைக்கும். இந்த இருவர் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் பொருந்திப் போகும் என்கிறார் ம.தி.மு.க தலைவர் ஒருவர். வைகோ சிறைப்பட்டதால் கருணாநிதி-கைகோ இடையில் பாசப்பிணைப்பு கூடியுள்ளது. வைகோ விடுதலையான அன்று கருணாநிதி தி.மு.கவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் என்னை அறிந்து நீ அறிவாய்; இந்த உண்மை என்று எழுதியிருந்தார்.
கருணாநிதி - வைகோ கூட்டணியும் இடதுசாரிகளும் காங்கிரசும் சேர்ந்து ஜ.மு.கூட்டணியின் மதசார்பற்ற இமேஜூக்கு மெருகூட்டுகிறார்கள். விடுதலைப்புலிகள் விஷயத்தில் காங்கிரசுக்கும் ம.தி.மு.கவிற்கும் ஒத்துப் போகாது என்றாலும் ஜ.மு.கூவில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஜெயலலிதா எதிர்ப்பே இந்தக் கூட்டணிக்கு ஆதாரம். ஜ.மு.கூட்டணி வாகனத்தின் எரிபொருளாக, உந்து சக்தியாக வைகோ இருப்பார்.
வைகோ பேட்டி :
வேலூர் சிறையில் பொடா கைதியாக இருந்த வைகோவின் உற்ற நண்பர்களாக இருந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று: வாலிபால் ஆட்டம். இரண்டாவது: புத்தக வாசிப்பு. வாலிபாலில் வைகோ பந்தை எதிரணியின் பக்கம் அதிரடியாக நொறுக்கும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக்கொடுக்கும் "செட்டர்." இந்த ஆட்டம் போக மீதி சமயங்களில் பகவத் கீதை, பைபிள், குரான் உள்பட நிறைய புத்தகங்களை வாசித்தார் வைகோ. இதெல்லாம் வைகோவை மென்மையானவராக, தத்துவார்த்தமானவராக மாற்றியிருப்பது போலத் தெரிகிறது. ஆனால் வைகோ கோழையாகி விடவில்லை. கீதையின் சாரம் கைபந்தாட்டத்தின் நுணுக்கம் இரண்டும் கலந்த ஆக்ரோஷத்தை அரசியல் எதிரிகள் எதிர்பார்க்கலாம். இந்தப் போர்க்களத்தில் வைகோ தான் அர்ஜூனன் என்றால், சிறையில் சிந்தனை வயப்பட்டிருந்தவர் தான் கீதா உபதேச கிருஷ்ணன். "இந்த அரசை (ஜெயலலிதாவை) நிம்மதியாக தூங்கவிடமாட்டேன். அவரையும் (வாஜ்பாயி) நான் விட்டு வைக்கமாட்டேன். இந்தப் பேட்டியில் 'செட்ட'ரும் நானே; 'ஹ’ட்ட'ரும் நானே" என்று ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார் வைகோ. பிப்ரவரி 7ந் தேதி சிறையிலிருந்து வந்த பிறகு மீடியா ஒன்றுக்குத் தரும் முதல் முழுமையான பேட்டி இதுவே...
கே: ஜெயலலிதா அரசு உங்களை பொடாவில் கைது செய்ய முடிவெடுத்திருந்த சமயத்தில் இது ஒரு ஆர்வமூட்டும் அனுபவமாக இருக்கும் என்று கூறினீர்கள். சிறையிலிருந்த இந்த 19 மாதங்கள் எந்த அளவு ஆர்வமூட்டுவதாக இருந்தது?
ப: என்னை கைது செய்வதற்கு முன்பே அந்த ஆர்வமூட்டும் அனுபவம் தொடங்கிவிட்டது. லண்டனில் இருந்து சிகாகோவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். திடீரென மனதில் மின்னல் போல ஒரு காட்சி வெட்டிச் சென்றது; நிச்சயம் அது கனவு அல்ல. நான் சிறைவசப்பட்டிருப்பது போன்ற காட்சி மனதில் ஓடியது. அப்போது என் மீது குற்றச்சாட்டு சுமத்தி, கைது செய்யும் வேலைகள் நடப்பது இம்மியளவு கூட எனக்குத் தெரியாது. அதனால் அந்த நினைப்பு எனக்கு வினோதமாகத் தோன்றியது. என்னை எதற்காக கைது செய்ய வேண்டும்? எனது கட்சி தே.ஜ.கூ அரசில் அங்கம் வகிக்கிறது. எனினும் சிகாகோ விமான நிலையத்தில் காலடி வைத்ததும் என்னை கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதா துணைப் பிரதமர் அத்வானிக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஒரு தொலைபேசித் தகவல் கிடைத்தது. ஆனால் அப்போதும் கூட கைது செய்யப் பட்டால் நிறைய புத்தகங்கள் வாசிக்க, ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும் என்று தான் நினைத்தேன். நினைத்தது போல இந்த சிறைவாசம் எனக்கு ஒரு பெரிய வரமாக இருந்தது. என்னால் நிறைய புத்தகங்களை வாசிக்க முடிந்தது. வாழ்க்கையைப் பற்றி அசைபோட முடிந்தது.
கே: நீண்டகால சிறைவாசத்தால் தொண்டர்களுக்கும் உங்களுக்கும் இடையே இடைவெளி விழுந்துவிட்டதா?
ப: இல்லை. தொண்டர்களுக்கு இன்னும் நெருக்கமாகியிருக்கிறேன். சிறையிலிருந்தபடியே கட்சியை நடத்தினேன். கட்சி ஊழியர்களுக்கு 15,000த்துக்கும் அதிகமான கடிதங்கள் எழுதினேன். கட்சிக் கூட்டங்களில் வாசிக்கச் சொல்லி உரைகளை எழுதி அனுப்பினேன். நான் சிறையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்தக் கடிதங்களுக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி பூர்வமான மதிப்பு கிடைத்திருக்காது.
கே: இப்போது நீங்கள் ரொம்பவும் மென்மையாகிவிட்டதாகத் தெரிகிறது. சிறையில் கிடைத்த வாசிப்பும் ஆத்ம விசாரணையும் தான் இதற்குக் காரணமா?
ப: சிறையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அறையில் பூட்டப்பட்டிருந்தேன். இந்த 12 மணி நேரத்தில் நான் தூங்கியது என்னவோ 4 மணி நேரம் தான். மற்ற சமயங்களில் நிறைய யோசித்தேன்... நான் செய்த தவறுகள், என் பலவீனங்கள், வாழ்க்கையே வெறும் மாயைதானா என்பது போன்ற தத்துவார்த்த சிந்தனைகள் எல்லாம் மனதில் வந்து போயின. கடைசியில் என் மனதை சலவை செய்தது போன்ற அனுபவம் கிடைத்தது.
கே: ஆன்மீகத்தில் பற்று வந்துவிட்டதா?
ப: அப்படி சொல்ல முடியாது. நான் ஒரு பகுத்தறிவாளன். ஆனால் வித்தியாசமான பகுத்தறிவாளன். நான் எந்த மதத்தையும் விமர்சித்ததில்லை; குறிப்பாக இந்து மதம் பற்றி விமர்சித்துப் பேசியதில்லை. மூடநம்பிக்கைகளை வெறுக்கிறேன். ஜோதிடம், எண்கணிதம் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இயற்கை, மனிதனை விட பெரிய மகாசக்தி என்பதை உணர்ந்திருக்கிறேன். இயற்கையின் சக்தியையே பல்வேறு வடிவங்களில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
கே: அப்படியானால் 'அனல் பறக்கும் பேச்சாளர்' வைகோவை தொண்டர்கள் பார்க்க முடியாதா?
ப: (சிரிக்கிறார்) அந்த ஜூவாலை என்னுள் இன்னும் இருக்கிறது. அந்த அக்கினிக் குஞ்சு என் உயிரோடும் உடலோடும் ஒட்டிப் பிறந்தது; யாராலும் அதை அணைக்க முடியாது. ஆனால் நான் யார் மீதும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் தேக்கி வைக்க மாட்டேன். நான் வன்முறைக்கு எதிரானவன். எனினும் ஈழத் தமிழர்களின் நலன்களை ஆதரிக்கிறேன். விடுதலைப்புலிகள் அந்த நலன்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
கே: உங்களுக்கும் கலைஞருக்குமான உறவில் நிகழ்ந்த உணர்வுபூர்வமான மறுமலர்ச்சி திராவிடக் கொள்கைக்கு புத்துயிர் தருமா?
ப: கலைஞருக்கு என் மீது அளவு கடந்த பாசம் உண்டு. அவர்தான் என் குரு. அவர் என்னை சிறையில் சந்தித்த போது இருவருமே உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டோம். நீங்கள் சொல்வது போல திராவிட இயக்கம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பது உண்மைதான். அதன் கொள்கைகள் சற்று நீர்த்துப் போய்விட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கத்தான் நாங்கள் கைகோர்த்திருக்கிறோம். இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிய கம்யூனிஸ்டும் இணைந்திருப்பது போல.
கே: தி.மு.க. ம.தி.மு.க இணைப்பு சாத்தியமா?
ப: அதற்கு வாய்ப்பே இல்லை. ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து இந்தக் கட்சியை வளர்த்திருக்கிறோம். இந்தக் கட்சிகளின் இணைப்பு என்றுமே நடக்கப் போவதில்லை. எங்கள் பொது எதிரிகளுக்கு எதிராகப் போராட இந்த சகோதரத்துவம் தொடரும்.
கே: யார் உங்கள் பொது எதிரி?
ப: திராவிடக் கொள்கைகளை அழிக்க நினைப்பவர்கள் எல்லோரும் எங்கள் எதிரிதான். ஜெயலலிதாவை எங்கள் நிரந்தர பொது எதிரியாக நாங்கள் கருதவில்லை. அவர் இந்தத் தேர்தலில் தோற்றுத் திரும்பப் போவது உறுதி. கொடுங்கோல் ஆட்சிகள் என்றுமே நிலைத்ததில்லை. ஆனால் திராவிடக் கொள்கைகளுக்கு வேறு நிரந்தர எதிரிகள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இப்போது ஜெயலலிதாவுக்கு பின்னே அணிவகுத்து நிற்கிறார்கள்.
கே: பா.ஜ.கவுடன் கூட்டு சேர்ந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?
ப: அரசியல் ரீதியாகப் பார்க்கும் போது அது ஒரு தவறே அல்ல. அன்றைய சூழ்நிலையில் அப்படி ஒரு முடிவெடுத்தோம். ஆனால் அப்போது எங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. அவர்களின் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. வாஜ்பாயி சேது சமுத்திர திட்டம் போன்ற நல்ல விஷயங்களை முன்வைத்த போதெல்லாம் அந்த நடவடிக்கைகளை புகழ்ந்து பேசியிருக்கிறேன். அதே நேரத்தில் தே.ஜ.கூவின் பொதுத் திட்டத்தில் இருந்து பாதை மாறுவதை தீவிரமாக எதிர்த்தேன். எனினும் பொடா மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக குற்ற உணர்வில் தவிக்கிறேன்.
கே: அதற்காக வருத்தப்படுகிறீர்களா...
ப: ஆம். அந்த முடிவெடுத்ததற்காக வருத்தப்படுகிறேன். அதற்கு தண்டனையாக எனக்கு இந்த 19 மாத சிறைவாசம் சரிதான். பொடாவின் சில பிரிவுகளை கடுமையாக எதிர்த்து வாதிட்டது நான் தான். பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான பிரிவு 8க்கு எதிராக வாதிட்டேன். அவர்கள் அதை நீக்குவதற்கு சம்மதித்தார்கள். ஜனநாயகத்திற்கு குழி தோண்டக்கூடிய பிரிவு 21ஐ எதிர்த்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. மிசாவின் கீழ் மிகக் கடுமையான சிறைவாசம் அனுபவித்த நீங்களே இப்படிப்பட்ட கொடுமைக்கார சட்டத்தைக் கொண்டு வரலாமா என்று அடல்ஜியிடமும் அத்வானியிடமும் கேட்டேன். எனினும் கடைசியில் அதற்கு ஆதரவாக ஓட்டளித்தேன். கூட்டணி அரசியலில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டியதானது. அது மிகப் பெரிய தவறு.
கே: சோனியா காந்தி பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவது பற்றி உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையா?
ப: சோனியா பிரதமராவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
கே: நீங்கள் உயர்வாக மதிக்கும் வாஜ்பாயியை விமர்சித்துப் பேசுவது உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்குமா?
ப: அரசியலில் இதனைத்தவிர்க்க முடியாது. அப்படி பேசும் போது என் மனம் வேதனைப்படும். ஆனால் எனது போராட்டத்தை நான் நடத்தியே ஆகவேண்டும்.
கே: வாஜ்பாயியை விமர்சிக்கும் போது கவனமாக பேசுவீர்களா?
ப: அவரை விட்டு வைக்கமாட்டேன். இந்தப் போராட்டத்தில் அவரை விட்டு வைத்தால் நான் என் கடமையில் தவறியது போலாகிவிடும். அதனால் தான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் முதலில் அவருக்கு எதிராகப் பேசினேன். தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்று அவர் ஒரு அநியாயமான பொய்யைச் சொல்லியிருக்கிறார். தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் நலன்களை நாசம் செய்துள்ளார் என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
கே: உங்களது பிரச்சாரத்தில் எந்த விஷயங்களைத் தாக்கிப் பேசுவீர்கள்?
ப: குத்துச் சண்டையில் முதலில் எதிரியை குத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். எனது எதிரிக்கு நான் எப்படி தாக்கப் போகிறேன் என்பதைத் தெரியவிட மாட்டேன்.
கே: விசாரணையின் போது நீங்களே உங்கள் வழக்குக்காக வாதாடி கோர்ட் அறையை உங்கள் பிரச்சார மேடையாக மாற்றினீர்கள்.
ப: நான் அந்த வழக்கிற்காக மிகவும் கவனமாக ஆயத்தங்களைச் செய்தேன். சரியாக வாதாடுவேனா என்று சின்ன கவலை இருந்தது. ஆனால் சிறப்பாகவே வாதிட்டேன். வழக்கறிஞராக நான் பல முறை கோர்ட்டில் ஆஜராகியுள்ளேன். இந்த முறை நானே எனக்காக வாதாடியது வித்தியாசமாக இருந்தது.
கே: நீங்கள் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் உண்டா?
ப: நான் இந்த வழக்கைப் பற்றி பேசக்கூடாது. அவ்வளவு தான். நான் தமிழர்களுக்காகவும் அவர்களுக்காக போராடுபவர்களைப் பற்றியும் பேசுவேன்.
கே: நீங்கள் தொடர்ந்து விடுதலைப்புலிகளைப் பற்றி பேசினால் அரசு மீண்டும் நெருக்கடி தரும் என்று நினைக்கிறீர்களா?
ப: அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்ன செய்ய முடியும்? என்னை சிறையில் அடைக்க முடியும். நான் எனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. எந்த சக்தியாலும் என்னை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. ஜெயலலிதா அரசை நிம்மதியாகத் தூங்கவிடமாட்டேன். எனது வலுவான தாக்குதல், தேர்தலுக்குப் பிறகு தான் வரும். இந்த மாநிலத்திற்கு சாபமாக இருக்கும். அரசிற்கு எதிராக நான் மக்களைத் திரட்டுவேன். அது பற்றிய விவரங்களை இப்போது சொல்லமாட்டேன். சிறையிலிருக்கும் போதே நான் இவற்றைத் திட்டமிட்டுவிட்டேன்.
கே: தேர்தலின் போது நீங்கள் முக்கியமாக மாநில அரசைக் குறிவைப்பீர்களா? அல்லது தே.ஜ. கூட்டணியைக் குறி வைப்பீர்களா?
ப: இரண்டையும் குறிவைப்பேன். பா.ஜ.கவை முகமூடியாக்கிக் கொண்டு வி.இ.ப.வும் ஆர். எஸ்.எஸ்ஸ•ம் செய்துவரும் தீய முயற்சிகளை எதிர்ப்பேன். ஜெயலலிதாவின் அடக்குமுறையையும் எதிர்ப்பேன்.
கே: தமிழ்நாட்டில் நடக்கும் மக்களைத் தேர்தல் ஜெயலலிதா மீதான தீர்ப்பா? அல்லது வாஜ்பாயி மீதான தீர்ப்பா?
ப: இது சிக்கலான கேள்வி. இதனை தீர்ப்பு என்று சொல்லமாட்டேன். தீர்ப்பு என்பது எந்த சக்தியும் இல்லாமல் நடைபெறும். இங்கே ஆளும் கட்சி தனது பணபலத்தையும் படை பலத்தையும் பயன்படுத்தும். ஆனால் நாங்கள் எங்கள் தொண்டர் பலத்தோடு அவர்களோடு போராடுவோம். எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கே: ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முக்கிய பலம் என்ன?
ப: இடதுசாரி, மதசார்பற்ற மற்றும் முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்திருப்பது முக்கிய பலம். இந்த அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு மற்றொரு பலம். ஜெயலலிதா அவமானகரமான தோல்வியைச் சந்திப்பார்.
கே: சிறையிலிருக்கும் போது நீங்கள் கற்றுக்கொண்ட பெரிய பாடம் என்ன?
ப: (நீண்ட மௌனம்). நான் தத்துவார்த்தமாக யோசிக்கிறேன் (மீண்டும் மௌனம்). நான் சில சிறிய தவறுகளைச் செய்திருக்கிறேன். எனது மறைவுக்குப் பிறகு மக்கள் என்னைப் பற்றி நல்லதையே பேச வேண்டும்.
கே: நீங்கள் ரொம்பவும் உணர்ச்சி வசப்படும் நபராகியிருக்கிறீர்களா?
ப: வாழும் புரட்சியாளராக கருதப்படுபவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிடுவார். உங்களிடம் ஈரம் இருந்தால் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகத்தான் இருப்பீர்கள். என்னிடம் கருணை உண்டு. அதே சமயம் நான் உறுதியானவன். எது நடந்தாலும் அஞ்சு மாட்டேன்.
கே: ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முன்னணி பிரச்சாரகர் நீங்கள் தானே?
ப: இல்லை இல்லை. நான் என்னை நட்சத்திரப் பிரச்சாரகராகக் கருதவில்லை.
கே: கைப்பந்தாட்டத்தில் ஆடுவதைப் போல் பந்தை அடிப்பதற்கு எடுத்துக் கொடுப்பீர்கள். ஆனால் அடிக்கமாட்டீர்கள்; அப்படித்தானே?
ப: அரசியலில் நான் பந்தை அடிப்பதற்கு எடுத்தும் தருவேன்; அடிக்கவும் செய்வேன். 'செட்ட'ரும் நானே; ஹ’ட்ட'ரும் நானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொடாச் சிறை வாசத்திற்குப்பின் ... வைகோ பேட்டி - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நான், வைகோ, அவர், தான், அந்த, போது, நீங்கள், பற்றி, என்னை, நாங்கள், சிறையில், இல்லை, எந்த, எனது, எங்கள், ஜெயலலிதா, பிறகு, கைது, பிரச்சாரத்தில், பெரிய, எனக்கு, தனது, கூட்டணியின், இருக்கும், திராவிடக், கூட்டணி, பிப்ரவரி, நிறைய, எனினும், முடியாது, அதற்கு, வேண்டும், மீது, தலைவர், ரும், நானே, பந்தை, வாஜ்பாயி, இந்தப், செய்ய, இப்போது, முக்கிய, பொடா, வந்த, தேதி, விட்டு, அவரை, விடுதலைப்புலிகள், காட்சி, மனதில், தமிழ், கட்சி, அவரது, இருந்த, தெரியும், முதல்வர், வெளியே, அரசியலில், என்ன, பலம், உங்கள், பொது, அப்படி, மாட்டேன், நலன்களை, சிறைவாசம், ஜனநாயக, முடியும், சிறையிலிருந்து, யார், பெறும், மீதான, தேர்தல், என்பது, கொண்டு, வரும், ஜெயலலிதாவை, என்கிறார், கருணாநிதி, முற்போக்குக், ", ஆதரவாக, வலுவான, நட்சத்திரப், இந்தக், தேர்தலில், இந்தத், தன்னை, அரசியல்