முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » அமைதிக்கு உதவட்டும் அணுகுண்டு
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - அமைதிக்கு உதவட்டும் அணுகுண்டு
- தி. கண்ணன்
இந்தியா தானும் ஓர் அணு ஆயுத அரசுதான் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு ஐந்து ஆண்டுகளாகிவிட்டன.
1998 மே 11-ம் தேதி பிற்பகல் ராஜஸ்தானில் போக்ரானில் நடத்தப்பட்ட வெற்றிகரமான மூன்று சோதனைகளும் உலக நாடுகளுக்கு - முக்கியமாக அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன. ஏனெனில் 1995 டிசம்பரில் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அணு ஆயுதச் சோதனை நடத்தத் திட்டமிட்டதை அறிந்து அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள் தார் பாலைவனம் மீது எப்போதும் கண் வைத்திருந்தன. எனினும், நமது விஞ்ஞானிகள், படையினர், மற்ற அலுவலர்கள் ஆகியோரின் இடையறாத, ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக, 1998 மே 11-ல் சோதனை நடைபெற்ற தருணம் வரை அமெரிக்காவுக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ள முடிந்தது!
அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தியா மேலும் இரண்டு சோதனைகளை நடத்தியதும் அமெரிக்காவை மேலும் வியப்புக்குள்ளாக்கியது!
1996-ம் ஆண்டில் வெறும் 13 நாள் பிரதமர் என்றில்லாமல் குறைந்தது ஒரு மாதத்திற்காவது அடல் பிஹாரி வாஜ்பேயி நீடித்திருந்தால் அந்த ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டிருக்கும் என்பது அரசியல் மற்றும் அணு ஆயுதப் பார்வையாளர்களின் கணிப்பு.
ஏனெனில், பாரதீய ஜனதா கட்சி இந்தியாவுக்கு அணுகுண்டு தேவை என்பதை எப்போதுமே வெளிப்படையாக வலியுறுத்தி வந்திருக்கிறது. 1998-ல் மீண்டும் வாஜ்பேயி தலைமையேற்றவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கவனம் அணு ஆயுத சோதனையில் திரும்பியது. அந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முக்கியத் தலைவர்கள் கூறியதை மற்ற நாடுகளும், இந்தியாவிலேயே எதிர்க்கட்சிகளும் சரியாக எடைபோடத் தவறிவிட்டன என்றுதான் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த ஐந்தாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடைபெற்றால், இப்போது கூட்டணி அரசில் உள்ள தி.மு.க. கலந்து கொள்ளுமா என்று கவனிக்க வேண்டும். ஏனென்றால் தி.மு.க. 1998-ல் கூட்டணி அரசில் இல்லை. மறுபக்கம் அ.இ.அ.தி.மு.க. தனியாக ஏதாவது நிகழ்ச்சிகளை நடத்துமா அல்லது பா.ஜ.க. ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிளில் பங்கேற்குமா என்றும் பார்க்கவேண்டும்; இந்தியா அணு ஆயுத சோதனைகளை நடத்திய போது அஇஅதிமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது.
இது ஒரு புறமிருக்க, பகிரங்க சோதனை சாதித்தது என்ன? அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளின் கண்டனத்துக்குள்ளானது, ஒன்று; (சிறிது காலத்திற்கேனும்) பொருளாதாரத் தடைகளைச் சந்தித்தது, இரண்டு; பாகிஸ்தானும் சோதனை நடத்தி அணு ஆயுத அரசாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ள வைத்தது, மூன்று.
1974-ல் இந்திரா காந்தி காலத்திலேயே நாம் நடத்திய நிலத்தடி சோதனைக்குப் பிறகு இந்தியாவின் அணு ஆயுத வல்லமை பற்றி யாருக்கும் எந்த ஐயமும் இருந்ததில்லை; அணு ஆயுதங்களுக்குத் தேவையான மூலப்பொருள் இந்திய அணுசக்தி உலைகளிலிருந்து தயாரிக்கப்பட முடியும் என்பதும் தெரிந்த விஷயம். இந்தியாவிடம் எத்தனை ஆயுதங்களுக்குத் தேவையான மூலப்பொருள் இருக்கும் என்பதைப் பற்றி கடந்த பல ஆண்டுகளாகவே ஊகங்கள் வெளிப்படையாகப் பேசப்பட்டன, எழுதப்பட்டன. ஆகையால், 1998 மே மாதம் 11, 13 தேதிகளில் நடத்திய சோதனைகளால்தான் தனது அணுஆயுத அந்தஸ்தை இந்தியா வெளியிடவேண்டும் என்பதில்லை.
அதேபோல், பாகிஸ்தானிடம் அணுஆயுத வல்லமை இருக்கிறது என்பதும் தெரிந்த விஷயம். ஆனால், இந்தியா வெடித்தால் பாகிஸ்தான் சும்மா இருக்க முடியாதல்லவா? ஆகவேதான், அந்த ஆண்டு மே மாத இறுதியில் அந்நாடும் சோதனைகளைப் பகிரங்கமாய் நடத்தியது. இதில் ஓர் ஒற்றுமை. இந்தியா தனது மேற்குப் பகுதியான ராஜஸ்தானில் இந்தச் சோதனைகளை நடத்தியதென்றால் பாகிஸ்தானும், தனது மேற்குப் பகுதியான சகாய் குன்றுப் பகுதிகளில் சோதனைகளை நடத்தியது.
பிரபல விஞ்ஞானியும், ஏவுகணை மனிதர் என்று அடையாளம் காணப்பட்டவருமான நமது குடியரசுத் தலைவர், டாக்டர் அப்துல் கலாம், 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க டைம் வார ஏட்டிற்கு அளித்த பேட்டியில், இரு அண்டை நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவுக்கு வேறு வழியில்லை; நாட்டின் பாதுகாப்பிற்காக அணு ஆயுதச் சோதனைகளை நடத்த வேண்டியதாயிற்று என்று கூறினார்.
பாகிஸ்தான் அணு ஆயுதத்திட்டத்தின் தந்தை என்று கூறப்படும் விஞ்ஞானி, டாக்டர் அப்துல் காதர்கான், இந்த ஆண்டு மார்ச் மாதம் கராச்சியில் பேசும்போது, 1984-லேயே பாகிஸ்தானின் அணுகுண்டு தயாராயிருந்தது என்று கூறினார். ஆனால், 1998 மே இறுதி வரை இது அதிகாரபூர்வமாக மறுக்கப்பட்டுவந்தது என்றும் யுத்தம் என்று வந்தால் தில்வியையும் மும்பையையும் பாகிஸ்தான் ஐந்து நிமிஷங்களில் அழித்துவிட முடியும் என்றும் கூறினார் (ஆனால் அதன்பிறகு, பாகிஸ்தான் மிஞ்சுமா என்பது பற்றி டாக்டர் அப்துல் காதர்கான் எதுவும் கூறவில்லை!).
1945 ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஜப்பானின் ஹ’ரோஷிமாவில் நேசநாடுகள் போட்ட முதலாவது அணுகுண்டினாலும் அதையடுத்து ஒன்பதாம் தேதி நாகசாகியில் போடப்பட்ட இரண்டாவது அணுகுண்டினாலும் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னமும் மீளவில்லை; அந்தப் பேரழிவின் விளைவுகளை ஆயிரக்கணக்கான ஜப்பானிய மக்கள் இன்னமும் அனுபவித்து வருகிறார்கள்.
1945-க்குப் பிறகு எந்த அணு ஆயுத நாடும் போரில் மற்ற நாட்டின் மீது இந்தப்பேரழிவு ஆயுதத்தைப் பிரயோகிக்கத் துணிந்ததில்லை. 1961-ல் கியூபா நெருக்கடியின் போது கூட அமெரிக்காவும் அப்போதைய சோவியத் யூனியனும் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு வழிகளைக் கையாண்டன.
இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லரசுகள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுத நாடுகள் கிளப் எப்போதோ மூடப்பட்டுவிட்டது. அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதநாடுகள்; 1967-ம் ஆண்டோ அதற்கு முன்னரோ இந்த வல்லமை பெற்ற நாடுகள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும்; மற்றவர்கள் இதில் கண்டிப்பாய்ச் சேர முடியாது.
அது எப்படியோ போகட்டும், இப்போது நமது எண்ணமெல்லாம் - பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் - தப்பித்தவறிக்கூட எந்த நெருக்கடியும் எந்த எல்லைத் தகராறும், ஏன் காஷ்மீர் பிரச்சினையே கூட, அணு ஆயுதப் பிரயோகத்தில் முடிந்துவிடக்கூடாது என்பதிலேயே லயித்திருக்க வேண்டும்.
சென்னை எங்கோ இருக்கிறது; கோவை தள்ளியே இருக்கிறது; குமரிமுனைக்குக் கவலை இல்லை என்றெல்லாம் ஒருபோதும் எண்ணிவிட வேண்டாம்.
ஹத்ஃப், கோரி போன்ற ஏவுகணைகள் பாகிஸ்தான் வசமிருந்தால், பிருத்வி, நாக், ஆகாஷ், அக்னி போன்ற ஏவுகணைகளை நாம் தயாராக வைத்திருக்கிறோம்.
ஆனால், அணுகுண்டை ஏவுவதற்கோ, எடுத்துச் செல்வதற்கோ ஏவுகணை வேண்டாம்; போர் விமானம் வேண்டாம்; மாட்டு வண்டிகூட போதுமானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் உதவிச் செயலர் ராபின் ரஃபேல் முன்னொரு பேட்டியில் கூறினார்.
எனினும் இருநாடுகளிடமும் உள்ள அணு ஆயுதங்களே அவை பிரயோகிக்கப்படமாட்டா என்ற உத்தரவாதத்தை அளிக்கக்கூடும். எந்தக் கருத்து வேற்றுமையாயிருந்தாலும் நேருக்கு நேர் பேசித் தீர்த்துக் கொள்வதைப் போன்ற விவேகமான செயல் வேறொன்றுமில்லை என்பதை அணு ஆயுதங்கள் இருநாடுகளுக்கும் உணர்த்துமானால் அவற்றுக்கு ஆன, தொடர்ந்து ஆகும், ஆகப்போகும் செலவு பயனுள்ளதுதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அமைதிக்கு உதவட்டும் அணுகுண்டு - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஆயுத, இந்தியா, சோதனைகளை, பாகிஸ்தான், சோதனை, இப்போது, கூறினார், எந்த, ஆண்டு, தனது, முடியும், மாதம், இதில், நாடுகள், வேண்டாம், அப்துல், டாக்டர், பற்றி, இருக்கிறது, என்றும், மற்ற, இரண்டு, நமது, அமெரிக்க, ஐந்து, அந்த, அணுகுண்டு, நடத்திய, பாகிஸ்தானும், அரசில், வேண்டும், கூட்டணி, வல்லமை