முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » மாறவேண்டும் அணுகுமுறை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - மாறவேண்டும் அணுகுமுறை
- ஏ. ஆராவமுதன்
அரசுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து பல்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இன்று உலகத்தையே தனது பொருளாதார வளர்ச்சியினால் பிரமிக்க வைத்துள்ள சீனா, எவ்வித தொழிற்சங்க உரிமையையும் ஆதரிக்கவில்லை. தற்பொழுதுள்ள உலகமயம், உலக வர்த்தக நிறுவன வழிமுறை, மற்ற நிர்பந்தங்களை எதிர்நோக்கி இருக்கும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் வேலை நிறுத்தம் என்ற உரிமையில் ஒரு சமுதாயக் கண்ணோட்டம், பொதுநலநோக்கு இருக்க வேண்டும்.
லட்சக்கணக்கான இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பிற்காக ஏங்கி நிற்கின்றனர். மற்றொருபுறம் மாற்றத்தை எதிர்நோக்காத, மாறாத மற்றும் போட்டிகளைச் சமாளிக்க முடியாத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கும் பரிதாப நிலை! இதில் பொதுத்துறையும் விதிவிலக்கல்ல.
சமீபத்தில் 9-5-2003 அன்று உச்ச நீதிமன்றத்தில் பிகார் மாநில அரசை எதிர்த்து ஒரு பொதுநல வழக்குப் போடப்பட்டது. பிகார் அரசுக்குச் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்களில் 1992/93 முதல் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை; அதாவது ஏறத்தாழ 10 ஆண்டுகள் சம்பளம் கொடுக்கப்படவில்லை; பணியாளர்கள் பலர் வறுமையினால் இறந்துள்ளனர். இதை அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால் மாநில அரசாங்கம் பல காரணங்களை முன்வைத்து சம்பளம் கொடுக்க மறுத்தது. மாநில அரசுதான் பொறுப்பு; மூடப்பட்ட கம்பெனிகளின் சொத்துகளை விற்றாவது பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கே இந்தக் கதி.
தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நமது அரசியல் சட்டம் அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த உரிமையினால் பல்வேறு சலுகைகள் பணியாளர்களுக்குக் கிடைத்துள்ளன. ஆனால் பொதுமக்களைப் பாதிக்கும் வேலைநிறுத்த உரிமை கொடுக்கப்படவில்லை.
அரசுப் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களைப்போல் நிர்வாகப் பணியாளர் என்ற உறவுக்கு அப்பாற்பட்டவர்கள். தொழிற்தகராறு சட்டம் மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்குப் பொருந்தும் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை வற்புறுத்த முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசாங்க ஊழியர்கள் - பொதுமக்களது ஊழியர்கள். அரசாங்கம், தனியார் நிறுவனங்களைப் போல் லாபநோக்கத்தோடு செயல்படுவதில்லை. அவர்களது வாடிக்கையாளர்கள் பொதுமக்கள்.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலை நிறுத்தத்துக்கு உரிமை உள்ளது போல், நிறுவனமும் பிரச்சினை ஏற்பட்டால், பணியாளர்களுக்குச் சட்டப்பூர்வமாக வேலை கொடுக்க மறுத்து லாக் அவுட் செய்ய முடியும். பொதுமக்களுக்காகச் செயல்படும் எந்த அரசுத் துறையோ, பிரிவோ, அதன் பணியாளர்கள் பிரச்சினைக்காக, பொதுமக்களின் நலத்தை அலட்சியப்படுத்திவிட்டு கதவடைப்பு செய்யச் சாத்தியமில்லை.
வேலை செய்யமாட்டோம் என்று ஒரு பிரிவினர் வெளியில் இருக்க, தாற்காலிக வேலையாவது கிடைக்காதா என்று ஏங்கி வந்த மற்றொரு கூட்டம் கூடிய காட்சியைச் சமீபத்தில் நாம் தமிழ்நாட்டில் பார்த்தோம். அமைப்பு பூர்வமாகப் பணியாளர்களுக்குத் தொழிற்சங்க உரிமைகள் என்பது பணியாளர்கள் நலம் மட்டுமன்றி, நுகர்வோர்கள், சமுதாயம் ஆகியோரையும் முன்வைத்துச் செயல்படவேண்டும். தொழில் இல்லை என்றால் வேலை ஏது? தொழிற்சங்க உரிமைதான் ஏது?
ஆகவே நிர்வாகத்துக்கு எதிராகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் மட்டும் செயல்படாமல் தொழில்வளர்ச்சிக்காக, புதிய வேலை உருவாவதற்காகத் தற்போதைய தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
பொருளாதாரம் வளர்ந்து, அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து, பற்றாக்குறை பட்ஜெட் இல்லாமல் இருந்தால் தான் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால் பருவமழை பொய்த்து, தனியார் கம்பெனிகள் நொடிந்து, வருமானம் குறைந்தால், எந்த அரசாங்கமும் நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்க முடியாது. இது மத்திய மற்றும் எல்லா மாநில அரசுகளுக்கும் பொருந்தும். ஆகவே தான் தாமாக ஓய்வு பெறும் திட்டம் அரசாங்கத் துறைகளுக்கும் வந்துவிட்டது. கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அரசுப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து எதையும் சாதிக்கவில்லை. ஆகவே பொதுமக்களைப் பாதிக்கும் எந்தப் போராட்டத்தையும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் பொதுநல நோக்கோடு, அணுகவேண்டும்.
வேலை இழந்தவர்கள் மற்றும் வேலை கிடைக்காதவர்கள் நமது சமுதாயத்தைவிட்டு மறைந்துவிடவில்லை. அவர்களைத் தொடர்ந்து விரக்தியிலும் வேதனையிலும் வைத்திருப்பது நமது சமுதாயத்துக்கு நல்லதல்ல. ஆகவே வேலைநிறுத்த உரிமை இருந்தால்தான் தொழிற்சங்க உரிமை இருக்கும் என்ற கருத்து தவறானது. நுகர்வோர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தொழிற்சங்கங்களும் ஆக்கபூர்வமாக உரிமைகளைப் பெற வாய்ப்புண்டு.
தொழில் அமைதி என்பது நல்லுறவு அடிப்படையில் வருவது. சட்டத்தின் மூலம் கிடைப்பதில்லை. காலம் மாறிவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாறவேண்டும் அணுகுமுறை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேலை, பணியாளர்கள், மாநில, தனியார், கொடுக்க, உரிமை, தொழிற்சங்க, வேண்டும், ஆகவே, முடியாது, சம்பளம், உச்ச, அரசுப், அரசாங்கம், நமது