முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » நீதிபதி நியமனமே பொருத்தம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - நீதிபதி நியமனமே பொருத்தம்
மின்னணுச் சாதனமாகிய தொலைக்காட்சி வந்தபிறகு, மக்கள் தொடர்பு ஊடகங்களில் புரட்சிகர மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வானொலி பழைய மவுசை இழந்துவிட்டது. பத்திரிகைத் துறையும் ஓரளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக அரசியல் கட்சிகளின் பிரசாரக் கருவியாகவும் தொலைக்காட்சி மாறிவருகிறது.
இப்போதைய போக்கு நீடிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் - தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகளின் பிரதான பிரசாரக் கருவியாகத் தொலைக்காட்சி மாறுவதைத் தடுக்க முடியாது. தற்போதைய தேர்தல்களுக்கு - எல்லாக்கட்சிகளுக்குமே பண பலமும் ஆள் பலமும் விளம்பர பலமும் அவசியமாகியிருக்கிறது. இந்தப் பட்டியலில் தொலைக்காட்சியும் சேர்ந்து கொள்வது தவிர்க்க முடியாதது.
இந்நிலையில் தொலைக்காட்சிகளை நெறிப்படுத்தி ஒழுங்கு படுத்துவதற்காக மத்தியில் சட்டபூர்வமான அமைப்பு நிறுவப்பட இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொழில்நுட்ப ரீதியாக மேற்பார்வையிடுவதற்கான இந்த அமைப்புக்கு, மக்கள் தொடர்பு ஊடகத் தொழில்முறையில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க அரசு விரும்புகிறது.
இத்தகவலை பாட்னாவில் செய்தியாளரிடையே மத்திய தகவல்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது பத்திரிகைகளை நெறிமுறைப்படுத்த - ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் பத்திரிகைக் கௌன்சில் இயங்கிவருகிறது. அதே பாணியைத் தொலைக்காட்சிகள் விஷயத்திலும் மத்திய அரசு கடைப்பிடிப்பதுதான் பொருத்தமானது.
இந்த அமைப்பை நிறுவுவது சில முக்கிய நோக்கங்களுக்காக. செய்திகள், வணிக நிகழ்ச்சிகள், பொழுது போக்கு அம்சங்கள் போன்றவற்றைத் தரப்படுத்துதல்; நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய மற்றும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள், கலாசார உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவை இப்புதிய அமைப்பின் பொறுப்பாகும்.
இத்தகைய அம்சங்களைப் பரிசீலிக்கவும் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் தொழில் அனுபவம் உடையவர்கள் தேவையே. ஆயினும் அமைப்பின் தலைவராக - ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்துவிட்டு அவருக்கு உதவியாக அடுத்த பதவியில் தொழில்அனுபவம் உடைய திறமையாளரை நியமிக்கலாம். அப்படியின்றி உத்தேச அமைப்பின் உச்ச பதவியில் தொழில் அனுபவம் கொண்டவரை நியமிப்பது என்றால் - இதில் அரசு செய்யக்கூடிய முடிவில் அரசியல் குறுக்கிடக்கூடும் என்ற சந்தேகத்துக்கு இடமில்லாமல் போகாது.
மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பெரிய கட்சிகளுக்கிடையே எதிர்காலத்தில் உக்கிரப் போட்டி தவிர்க்க முடியாதது. அத்தகைய சூழலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமாக எத்தகைய நிர்பந்தத்துக்கும் நீதிபதியினால் ஈடுகொடுத்து நிற்கமுடியும். தொழில்முறை அனுபவஸ்தர்களை நியமித்தால் அது முடியுமா என்பது சந்தேகமே.
அதோடு, கலாசார உணர்வுகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனவா என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு, மிகுந்த முக்கியத்துவம் உடையது. எந்தவிதமான வகுப்பு உணர்ச்சிக்கும் அரசியல் பார்வைக்கும் இடம் தராமல் விருப்பு வெறுப்பின்றித் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை இது. அப்படியிருக்க, சர்ச்சைக்கு உள்ளாகக்கூடிய பிரச்சினையில் சுயேச்சையான முடிவு செய்யக்கூடிய மனப்பாங்கு நீதிபதிகளுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும். எனவே பத்திரிகைக் கௌன்சிலுக்கு நீதிபதியை நியமித்து வருவதற்கான அதே காரணங்கள் தொலைக்காட்சிகளின் பொறுப்புக்கான மத்திய நிறுவனத்துக்கும் பொருந்தக்கூடியவையே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீதிபதி நியமனமே பொருத்தம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தொலைக்காட்சி, அரசியல், நிகழ்ச்சிகள், அமைப்பின், மத்திய, அனுபவம், பலமும், அரசு