முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » புலிகள்: அமெரிக்காவின் புதிய பார்வை
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - புலிகள்: அமெரிக்காவின் புதிய பார்வை
விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்த புதிய பார்வையைப் பிரதிபலிக்கக்கூடிய கருத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதத்தைக் கைவிட்டுவிட்டு, இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வுகாண விடுதலைப்புலிகளின் அமைப்பு முன்வரும் பட்சத்தில் அதன் மீதுள்ள தடையை நீக்குவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக, அவர் கூறியிருக்கிறார்.
தற்பொழுது வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள் பலவற்றை, பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அப்பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலத்தில் புலிகளின் கண்ணோட்டத்திலும் பார்வையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம், வாஷிங்டனில் எதிரொலித்திருக்கிறது. உண்மையான அரசியல் அமைப்பாக மாறுவதற்குப் புலிகள் தயாராய் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. பயங்கரவாத உத்தியைக் கைகழுவி விட்டு, அரசியல் அமைப்பாக மாற விரும்புவதற்கான அடையாளங்களைப் புலிகள் அமைப்பு தனது நடத்தையின் மூலம் காட்டும் பட்சத்தில், வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து புலிகள் அமைப்பை நீக்குவது குறித்து அமெரிக்கா ஆராயும் என்ற அறிவிப்பு அமெரிக்காவின் கொள்கையைப் பொறுத்த அளவில் குறிப்பிடத்தக்க மாற்றமே.
இதற்கு, இருவேறு முனைகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் காரணமாகும். முதலில் ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா இயக்கத்தின் பயங்கரவாதத்துக்கு எதிராக புஷ் அரசு உலகளாவிய போரைத் தொடர்ந்த பிறகு, சர்வதேச சூழ்நிலையே புரட்சிகரமாக மாறிவிட்டது. மனித குலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய இப் பிரம்மாண்டமான போரிலிருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய உள்நாட்டுப்போர் எந்த நாட்டிலும் நடைபெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அடுத்து, புலிகளின் போராட்டம், அடிப்படையில் இலங்கையின் சிறுபான்மை இனத்தின் அரசியல் ரீதியான உரிமைப் போர் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கிறது. ஆயினும், நியாயமான கோரிக்கைகளுக்காகக் கூட பயங்கரவாத உத்தி கடைப்பிடிக்கப்படுவதை அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆர்மிடேஜ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் புதிய கண்ணோட்டத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. அது அண்மையில் புலிகளின் நோக்கிலும் போக்கிலும் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம். இவ்வளவுகாலம் சுதந்திரமான தனி ஈழக் கோரிக்கையை எழுப்பிவந்த புலிகள் - இலங்கையின் கூட்டாட்சிக்கு உட்பட்டு - பூரண சுயாட்சி உரிமையுடைய ஈழ மாநிலத்துக்கு இசைந்திருப்பதை மிக முக்கிய மாற்றமாக வெள்ளை மாளிகை கருதுகிறது. எனவேதான், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையிலும் புதிய ரேகை தென்படத்தொடங்கியுள்ளது.
அதேசமயத்தில் இப்பிரச்சினையில் இலங்கை அரசுக்குள்ள பொறுப்பையும் வற்புறுத்திக்கூற ஆர்மிடேஜ் தயங்கவில்லை. இலங்கை ஆட்சியாளரைப் பொறுத்த அளவில் சிறுபான்மையினரின் (ஈழத் தமிழரின்) நியாயமான உணர்வுகளுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு ஈடுதரக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது கடமையாகும். இல்லங்களில் தங்கிவாழும் உரிமை, எந்தத் தொல்லையும் இன்றித் தொழில் நடத்தும் வாழ்வுரிமை போன்றவை மட்டுமன்றி, மனித உரிமைகளும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். இப்பொறுப்பு இலங்கை அரசைச் சார்ந்தது என்பதையும் ஆர்மிடேஜ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அமெரிக்காவின் இப்புதிய கண்ணோட்டம் ஏற்கெனவே சோர்ந்து போயுள்ள அதிபர் சந்திரிகாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தீர்க்கமான அரசியல் திட்டத்தைப் பிரகடனப்படுத்தி, ஜனநாயக நாடுகளின் பரிவைத் திரட்டுவதில் புலிகள் அமைப்பு சுணக்கம் காட்டக் கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலிகள்: அமெரிக்காவின் புதிய பார்வை - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - புலிகள், அரசியல், அமெரிக்கா, ஆர்மிடேஜ், அமெரிக்காவின், பயங்கரவாத, அமைப்பு, இலங்கை, புலிகளின், ஏற்பட்டுள்ள