முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 250
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 250
நறுமணத்தால் நிரப்பிக் கொண்டிருந்தன. அந்த ராணிகளைத் தவிர்த்து ஐம்பதுக்கும் அதிகமான இளம் வேலைக்காரப் பெண்களும் அங்கிருந்தனர். இவர்களில் சிலர் விசிறி வீசிக்கொண்டிருந்தனர். சிலர் கண்ணாடி, சீப்புக்களைக் கையிலேந்தி நின்றனர். மற்றும் சிலர் மதுப் பாண்டங்களையும் தங்கக் கிண்ணிங்களையும் ஏந்தி நின்றனர். கொஞ்ச தூரத்தில் சில யுவதிகள் மிருதங்கம், வீணை, குழல் முதலிய வாத்தியங்களை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். சில பெண்கள் கையிலே சுவர்ண தடம் ஏந்திக் காவல் காத்து நின்றனர். அங்கு அரசனையும், மித்ரபாதரின் சிஷ்யன் சுபாகர் பிக்ஷு வையும் தவிர, மற்ற எல்லோரும் பெண்கள்- அழகிய யுவதிகள். பிக்ஷு மகாராஜாவிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான். அரசனும் ராணிகளும் எழுந்து நின்று வணங்கி அனுப்பினர். இப்பொழுது பெண்களால் சூழப்பட்ட அரசன் தனித்திருந்தான். ஜெயசந்திரன் கிழவனாகி விட்டானாயினும்
அவனுடைய பாதி நரைத்த நீண்ட தலைமயிரை அவன் வகுப்பெடுத்து வாரி முடிந்திருப்பதையும், அவனுடைய பெரிய பெரிய மீசைகளை எண்ணெயிட்டு முறுக்கி விட்டிருப்பதையும் அவனுடைய ஆடையாபரண அலங்காரங்களையும் பார்த்தால் அவன் தனது இளமை என்றும் முடிவு பெறாதது என்று கருதுவதாகத் தோன்றும். அவனுடைய குறிப்புணர்ந்து ஒரு வேலைக்காரி மதுக்கிண்ணத்தைத் தலைவணங்கி நீட்டினாள். அரசனுக்கு முன்னால் மது நிறைந்த அந்தக் கிண்ணத்தை ஒரு ராணி வாங்கி, அரசனுடைய வாயருகே கொண்டு சென்றாள். அரசன், “ராஜ்யலெட்சுமி! என் நட்சத்திரமே! உன் எச்சில் படாமல் நான் எப்படி அதைப் பருக முடியும்?” என்றான்.
ராணி தனது உதடுகளையும், நாக்கையும் நனைத்து விட்டுக் கொடுத்தாள். அரசனும் அந்தப் பிரசாதத்தை ஆவலோடு பருகினான். பிறகு அவனுடைய ஒவ்வொரு நட்சத்திரமும் அவ்விதமே பிரசாதம் அளித்தார்கள். அவனுடைய கண்கள் சிவந்து விட்டன. முகத்திலே புன் முறுவலும், மகிழ்ச்சியும் பொங்கின. அரசனின் பெரிய சரீரம் தலையணையிலே சாய்ந்தது. அவனது இரண்டு கரங்களும் இரு ராணிகளை அணைத்துக் கொண்டன. மற்றொருத்தியின் மடியிலே அவன் தலை இருந்தது. இன்னொருத்தியின் மார்பு, அவனது தோளைத் தழுவிக் கொண்டது. கள்ளும் காமமும் அரசாட்சி செலுத்தின. நாட்டியம் தொடங்கும்படி அரசன் உத்தரவிட்டான். வாத்தியம் முழங்கிற்று, வரிந்து கட்டிய விநோத ஆடைகளுடன், அழகிய யுவதியர் நடனமாடத் தொடங்கினர். கள் வெறியிலே மூழ்கிய அரசன் யுவதியரை நிர்வாணமாக நடனமாடும்படி
உத்தர விட்டான். நாட்டியக்காரிகளின் ஆடையாபரணங்கள் யாவும் கழற்றப்பட்டன. நிர்வாண நடனம் நடந்தது, அரசனைச் சுற்றி காமத்தின் ஆட்சி. எதிரே நிர்வாண நாட்டியம்; நாட்டியப் பெண்களில் யாருடைய நிர்வாண உருவம் அரசனைக் கவர்ந்ததோ, அவளைத் தன்னிடம் வரும்படி உத்தரவிட்டான். அந்த ஸ்தானத்தில் மற்றொருத்தி நிர்வாணமாக வந்து நின்றாள். மதுவெறி அரசனை முழுவதும் நிலைகுலையச் செய்துவிட்டது. மதியிழந்து உளறத் தொடங்கினான் “து...ரு...க்...க...நா...ய்...க...ள்...எ...ன் இ...ந்...தி...ர...பு...ரி...யி...லே... எ...ந்...த... ரா...ஸ்...க...ல்... வ...ரு ...கி...றா...ன்... பா...ர்...ப்...போ...ம்... எ...ல்...லோ...ரு...ம்... நி...ர்...வா...ண...மா...க ஆ...டு ...ங்...க...ள் ... என்று உளறிக் கொட்டினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 248 | 249 | 250 | 251 | 252 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவனுடைய, அரசன், பெரிய, நிர்வாண, அவன், நின்றனர், சிலர், கொண்டு - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்