முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 144
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 144
மறைவிலே உட்கார்ந்தனர். மற்றொரு பகுதியார், அந்த மரைக் கூட்டங்களைப் பின்புறமிருந்து வளைத்துக் கொள்வதற்காக இரு பிரிவாகப் பிரிந்து மெதுமெதுவாகச் சென்றனர். பின்னாலிருந்து வளைத்துக் கொள்ளச் செல்லும் கோஷ்டிக்கு, எதிர்காற்று அடித்துக் கொண்டிருந்தது. ஆகவே மரைகள் மனிதர்கள் வருவதை மோப்பம் பிடிக்க முடியாமல், மான் வால் போன்ற தங்களுடைய சிறிய வாலை ஆட்டிக்கொண்டு அலட்சியமாயிருந்தன. ஆனால் இரண்டு பிரிவும் நெருங்கி வருவதற்குள், நின்று கொண்டிருந்த பெரிய மரை தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு நிலையற்ற முறையில் இங்குமங்கும் வெறித்து வெறித்துப் பார்ப்பதைக் கண்ட மற்ற மரைகளும் எழுந்துவிட்டன. சிறிது நேரத்தில் தங்களுக்கு ஆபத்து நெருங்கி விட்டதாகக் கருதிய அவைகள் பெரிய மரையின் பின்னே ஓடத் தொடங்கிவிட்டன. ஆபத்தை அவைகள் கண்களால் பார்க்கவில்லை. ஆதலால் இடை இடையே தாமதித்துப் பின்னே திரும்பியும் பார்த்துக் கொண்டன. மறைந்திருந்த வேடர்களுக்குப் பக்கத்தே வந்துவிட்ட அந்த மரைகள் பின்னே திரும்பிப் பார்த்தபொழுது, பல விற்களிலிருந்து பாணங்கள் தொடுத்த சப்தம் கேட்டது. பெரிய மரையைக் குறிவைத்து பந்துலன் தன் குறி தவறாத அம்பை ஏவினான். அதையே மல்லிகா முதலிய சிலரும் குறி வைத்தனர். ஆனால் பந்துலனுடைய அம்புமாத்திரம் குறி தவறியிருந்தால் அந்தப் பெரிய மரை இவர்களுக்குக் கிடைத்திருக்கவே முடியாது என்பது நிச்சயம். பெரிய மரை அதே இடத்தில் விழுந்துவிட்டது.
தலைவனை இழந்த மற்றவை அங்குமிங்கும் சிதறி ஓடிவிட்டன. பந்துலன் நெருங்கிப் பார்க்கும்போது அப்பெரிய மரை தன் ஜீவனை விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதே இடத்தில் இரண்டு மரைகளுடைய ரத்தத் துளிகளைப் பார்த்த வேடர்கள், அந்த ரத்தத் துளிகளின் தடத்தைப் பின்பற்றிச் சென்றார்கள். சிறிது தூரத்தில் மற்றொரு மரையும் விழுந்து கிடந்ததைக் கண்ட இவர்களுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. பெரிய வெற்றிக் கொண்டாட்டம் இன்றைய வன போஜனம் இவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தைக் கொடுப்பதாய் இருக்கும்.
சிலர் பெரிய விறகுக் கட்டைகளைப் போட்டு நெருப்பு தயார் செய்தனர். பெண்கள் சமைப்பதற்குப் பாத்திரங்களையெடுத்தனர். வாலிபர்களில் சிலர் மரைகளின் தோலை உரித்து, மாமிசத்தைத் துண்டம் துண்டமாக நறுக்க ஆரம்பித்தனர். முதலிலே நெருப்பிலே சுட்ட ஈரல் துண்டங்களையும், மதுவையும் யாவரும் ருசி பார்க்கத் தொடங்கினர். பந்துலனுடைய இரண்டு கைகளும் மாமிசத்தை நறுக்குவதில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த மல்லிகா சுடப்பட்ட ஈரல் துண்டையும் மதுவையும் தன் கையால் அவனுக்கு ஊட்டினாள். சமையல் இன்னும் பூரணமாக முடியவில்லை. அதற்குள் சூரியன் அஸ்தமித்து விட்டான். ஆனால் ஜோதிமயமாய் எரியும் நெருப்பின் ஒளியிலே யுவ யுவதிகளின் ஆடல் பாடல்கள் ஆரம்பமாயின. குசீனாரா யுவதிகளின் தலைசிறந்த அழகியான மல்லிகா, வேட வேஷத்திலும் தன்னுடைய நாட்டியக் கலையின் நிபுணத்துவத்தைக் காண்பிப்பதிலே வெற்றிபெற்றாள். அகண்ட ஜம்புத்
தீவின் விலைமதிக்க முடியாத இந்த ரத்தினத்தை, அழகின் வடிவத்தை அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ள பந்துலனை, அவனுடைய நண்பர்கள் வாயாரப் புகழ்ந்து போற்றினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெரிய, ஆனால், மல்லிகா, குறி, அந்த, இரண்டு, பின்னே - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்