முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 122
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 122
சுதாஸ் எல்லா ஜனங்களுக்கும் - ஆரியர், ஆரியரல்லாதார் எல்லோருக்கும் சேவைபுரிய வேண்டுமென்ற திட சங்கல்பம் கொண்டிருந்தான். அதற்காக தெய்வநம்பிக்கையெனும் ஆழமான சேற்றுக் குழியில் அழுந்திக் கிடக்கும் அந்த ஜனங்களுக்கு முதலில் தங்கள் அரசன் சுதாஸின் மீது தேவதைகளின் பரிபூரண கிருபை இருப்பதாக மெய்ப்பிக்க வேண்டியிருந்தது. அவ்விதம் ருசுப்பிப்பதற்கு வழி மகரிஷிகள் இவனைப் புகழ்ந்து பாடுவதைத்
தவிர வேறில்லை. முடிவில் மகரிஷிகளின் புகழ் மாலையைப் பெறுவதற்காக அவர்களுக்குத் தங்கம், வெள்ளி, தான்யம், பசுக்கள், தாசிகள் முதலிய பொருள்களை ஏராளமாகக் கொடுக்க வேண்டி நேர்ந்தது. இளம் பசுங்கன்றுகளின் மாமிசத்தாலும், இனிமையான மதுவாலும் தங்கள் தொந்திகளைப் பெருக்க வைத்த சுதாஸ், உண்மையிலேயே அந்த மகரிஷிகளுக்கு சுதாஸ் (அளவற்ற தானம் கொடுப்பவன்) ஆக ஆகிவிட்டான். அந்த முகஸ்துதிக்கார மகரிஷிகள், சுதாஸினுடைய கொடையைப் புகழ்ந்து இயற்றியிருக்கும் எத்தனையோ ஸ்லோகங்கள் இன்றும் ருக் வேதத்தில் காணப்படுகின்றன. ஆனால், இந்தப் புகழ் துதிகளின் நாயகனான சுதாஸ் அவைகளைக் கேட்ட பொழுது, அவற்றை இயற்றியவர்கள் மீதி எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தான் என்பது யாருக்குத் தெரியும்.
சுதாஸைப் பற்றிய புகழ்ச்சிப் பாடல்கள் வட பாஞ்சாலத்தில் (ரஹில்கண்டு) மட்டுமில்லை. அதற்கப்பால் வெகுதூரம் வரை பரவியிருந்தது. எந்த ஆடம்பரமும் இன்றி வாழ்க்கையை நடத்தி வந்த சுதாஸ், தன்னால் முடிந்த அளவு உலக மக்களுக்கு நன்மை செய்து வந்தான்.
தந்தை இறந்த பல வருடங்களுக்குப் பிறகே அவனுடைய தாயார் இறந்தாள். மெதுவாக ஓடிக்கொண்டிருப்பதால் பழக்கப்பட்டுப் போய் விட்ட ரத்த ஓட்டம் திடீரென்று அதிகப்படுவதால் நரம்பு வெடிக்கும் நிலைமை ஏற்படுவது போல், அவனுடைய மனத்தின் ஆழத்திலே அடங்கியிருந்த அந்த எண்ணம் வெடித்து வெளிப்படும் நிலையை அடைந்தது. எந்த நேரமும்
அபாலா அவன் முன்னால் நின்று கொண்டு கண்ணீர் நிறைந்த கண்களுடன் துடிக்கும் உதட்டிலே, “நான் உனக்காக மத்ரபுரியிலே வழிபார்த்துக் காத்திருப்பேன்” என்று கூறுவது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தப் பிரிவின் வெப்பத்தை அவனுடைய கண்ணீர் குளிர்விக்க முடியவில்லை. இமயமலையில் வேட்டையாடச் செல்வதாகக் கூறிவிட்டு, சுதாஸ் ஒருநாள் பாஞ்சாலத்திலிருந்து கிளம்பினான்.
மத்ரபுரியிலே (சியால் கோட்) அபாலாவின் காதலி அவனுக்களித்த அந்த வீடு அப்படியே இருந்தது. ஆனால் அவன் காதலியோ, அவளுடைய தந்தையோ அங்கில்லை. இருவரும் இறந்து விட்டனர். அபாலா சென்ற வருடந்தான் இறந்தாள். அபாலாவின் காணாமல் போயிருந்த சகோதரனும் அவன் குடும்பமும் இப்பொழுது அந்த வீட்டிலேயே வசித்தனர். அவர்களோடு தன் நட்பைப் புதுப்பித்துக் கொள்ள சுதாஸுக்குத் தைரியம் உண்டாகவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 120 | 121 | 122 | 123 | 124 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுதாஸ், அந்த, அவன், அவனுடைய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்