முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 65
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 65
4. நீதிநூல் காலம்
(கி. பி. 100 கி. பி. 500)
(கி. பி. 100 கி. பி. 500)
காதல் வீரம் கொடை முதலிய சிறந்த உணர்ச்சிகளிலும் இயற்கையின்பத்திலும் ஈடுபட்டிருந்த புலவர்களின் உள்ளம், அடுத்த சில தலைமுறைகளில் நீதிகளைப் பாடும் நிலைக்கு மாறியது. அந்தக் காலத்தைச் சங்கம் மருவிய காலம் அல்லது நீதிநூல் காலம் என்பர். அப்போது நாட்டில் பழைய சேர சோழ பாண்டியரின் அமைதியான ஆட்சியில் ஒரு கலக்கம் நேர்ந்தது என்றும், களப்பிரர் என்னும் சிலர் புகுந்து நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்தார்கள் என்றும் கூறுவார்கள். ஆகவே, வாழ்க்கை தரும் இன்பங்களைப் பாடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கையே ஒரு சிக்கல் ஆகிவிட்டமையால், சமுதாயத்தில் எப்படி எப்படி வாழவேண்டும், என்ன என்ன நீதிகளைப் போற்றவேண்டும் என்று எடுத்துரைக்க வேண்டிய கடமை புலவர்களுக்கு வந்துசேர்ந்தது. அந்தக் காலத்தில் (கி. பி. 100 முதல் கி. பி. 500 வரையில்) இயற்றப்பட்ட சில நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு என்று குறிப்பிட்டார்கள் (கீழ்க்கணக்கு என்பது அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்களைக் குறிக்கும்). சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு காவியங்கள் சமயங்களைச் சார்ந்த நீதிகளை அறிவுறுத்துவதற்காக அக்காலத்தில் இயற்றப்பட்டன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் நீதிநூல்கள் அல்ல. அவற்றுள் ஐந்து நூல்கள் காதல்பற்றியும் ஒரு நூல் போர்பற்றியும் உரைப்பவை. மற்றப் பன்னிரெண்டும் நீதிநூல்களே.
திருக்குறள்
நீதிநூல்களுள் தலையானது திருக்குறள். முதல் அடி நான்கு சீரும் இரண்டாம் அடி மூன்று சீரும் உடையதாய் வரும் இரண்டு அடி வெண்பாவுக்கு குறள்வெண்பா என்று பெயர். அந்தக் குறள் வெண்பாவால் இயற்றப்பட்ட நூலுக்குத் திருக்குறள் என்ற பெயரே நின்றது. முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து முதலான பெயர்கள் பழைய பெயர்களாகிவிட்டன. அதை இயற்றிய புலவரின் இயற்பெயரும் தெரியவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறும் தெரியவில்லை. திருவள்ளுவர் என்ற குடிப்பெயர் அல்லது தொழில்பெயர் இப்போது வழங்குகிறது. அவரைப்பற்றிப் பல கதைகள் அவ்வப்போது கட்டப்பட்டன. ஆராய்ச்சியாளர் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பல நூல்களைக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 65 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - திருக்குறள், அந்தக், காலம்