முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 235
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 235
12. இஸ்லாம் தந்த இலக்கியம்
இஸ்லாம் சமய நூல்கள்
இஸ்லாம் தமிழ் நாட்டில் பரவியபிறகு, அந்தச் சமயத்தைச் சார்ந்த பலர் தமிழ் கற்றுத் தமிழராகவே வாழ்ந்தனர். பழைய தமிழ் இலக்கியங்களைக் கற்று வல்லவராய்ப் புலவர்களாய்ப் புகழ் பெற்றவர் சிலர். அவர்களில் ஒரு சிலர் புதிய நூல்கள் பலவற்றைப் படைத்துத் தரவும் முற்பட்டார்கள். இஸ்லாமியச் சமயத் தொடர்பான நூல்கள் அவை. சீறாப்புராணம், முகைய்தீன் புராணம், நாயகர் புராணம் முதலான புராண நூல்கள் படைக்கப்பட்டன. தமிழ் இலக்கிய வகைகளாகிய அந்தாதி, உலா, பரணி, கலம்பகம், கோவை, தூது, பிள்ளைத்தமிழ், சதகம், வண்ணம் முதலியவற்றுள் ஒவ்வொரு வகையிலும் முஸ்லிம் புலவர்கள் நூல்கள் இயற்றியுள்ளனர். சைவம், வைணவம், சமணம் முதலிய சமயங்களுக்கு என்னென்ன வகையான இலக்கியங்கள் உண்டோ, அத்தனையும் இஸ்லாமியச் சமயத்திற்கும் ஏற்பட்டன. தாயுமானவரைப் பின்பற்றி அழகான தத்துவக் கருத்துகளை உடைய பாடல்கள் பாடப்பட்டன. அருணகிரிநாதரைப்போல் அழகான சந்தம் உடைய திருப்புகழ்ப் பாடல்களும் இயற்றப்பட்டன.
இந்த நூற்றாண்டில் உரைநடையிலும் பல நூல்கள் இஸ்லாமியப் புலவர்களால் இயற்றப்பட்டவை உள்ளன. சமயச் சார்பான நூல்களில் அரபுச் சொற்கள் பல கலந்துள்ளன. சமயக் கருத்துகளை விளக்குவதற்கு அவை தேவைப்படுகின்றன. சமயச் சார்பு இல்லாத சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் முஸ்லிம் குடும்பத்து உரையாடல்கள் வரும்போது, அரபுச் சொற்கள் கலந்திருக்கக் காண்கிறோம். பொதுவான கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ் நடையில் வேறுபாடு ஒன்றும் காணப்படவில்லை. உணர்ச்சியும் ஓட்டமும் அழகும் நிறைந்த நடையில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் பல உள்ளன.
சீறாப்புராணம்
சீதக்காதி (சையத் காதர்) என்ற முஸ்லிம் தமிழர் ஒருவர் பெரிய செல்வராய்ச் சிறந்த கொடையாளியாய்ப் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். வறியவர்களுக்கு வாரிக்கொடுத்து வாழ்வு அளித்துப் புகழ்பெற்றவர். அவர் பெற்ற பெரும்புகழ் இன்றும் படிக்காசுப்புலவரின் பாடல்களால் ஒளிவீசி நிற்கிறது. "சீதக்காதி மறுபடியும் வந்து மண்ணுலகத்தில் பிறந்தால்தான் புலவர்களின் வாழ்வு சீர்பட முடியும்" என்ற கருத்தோடு அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 233 | 234 | 235 | 236 | 237 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 235 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - நூல்கள், தமிழ், முஸ்லிம், இஸ்லாம்