முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 19
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 19
தந்த வடிவம் என்று கொள்ளப்பட்டமையால், திராவிடம் என்ற சொல் அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை. திருநாவுக்கரசர் (கி. பி. ஏழாம் நூற்றாண்டில், சிவபெருமான் எல்லாம் ஆனவன் என்று பாடும் இடத்தில், ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று இந்தியாவின் கலைவழிப்பட்ட பாகுபாட்டை இரண்டு இனமாகவே குறிப்பிட்டார். சிவபெருமானின் தமருகத்தின் ஒரு பக்கத்திலிருந்து பிறந்த ஒலி தமிழ் ஆயிற்று என்றும், அந்தத் தமருகத்தின் மற்றொரு பக்கத்தில் பிறந்த ஒலி வடமொழி ஆயிற்று என்றும் புராணக் கதை வழங்கத் தொடங்கியது. சிவன் வடமொழியைப் பாணினிக்கும் தென்மொழியாகிய தமிழை அகத்தியர்க்கும் கற்றுக்கொடுத்து இரு மொழிகளையும் வளரச் செய்தான் என்று வழங்கும் புராணக் கதையின் அடிப்படையும் இதுவே ஆகும்.
வடமொழியார் தொடர்பு
கி. பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழியிலிருந்து சைனர்கள் சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் தழுவியும் எழுதத் தொடங்கினார்கள். கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டில் தமிழ் அரசர்களாகிய சேரரும் சோழரும் பாண்டியருமே ஆண்டுவந்தார்கள். பிறகு ஒரு குழப்பம் ஏற்பட்டு, காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பல்லவர்களின் ஆட்சி தலையெடுத்தது. பல்லவர்களில் சிலர் வடமொழியை நன்கு கற்றவர்கள். பல்லவ அரசன் மகேந்திரவர்மன் வடமொழியிலேயே மத்தவிலாசம் என்ற நாடக நூல் இயற்றியவன். பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளுக்கும் அவற்றைச் சார்ந்த கலைகளுக்கும் ஆதரவு கிடைத்து வந்தது. காஞ்சிபுரம் வடமொழிக் கல்விக்கு உரிய பெரிய நகரமாக விளங்கியது. வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய தண்டி முதலான பெரும் புலவர்கள் வாழ்ந்து வடமொழிக்குத் தொண்டு ஆற்றினார்கள். ஆகவே நாட்டில் இருமொழிகளையும் கற்றுத் தேர்ந்த புலவர் பரம்பரையுடன், வடமொழிமட்டுமே கற்ற புலவர்களும் தமிழ்மட்டுமே கற்ற புலவர்களும் வாழ்ந்து வந்தா£க்ள். சங்கரருடைய அத்வைதக் கொள்கையும் இராமானுசருடைய விசிஷ்டாத்வைதக் கொள்கையும் பரவத் தொடங்கியபோது, வடமொழி படித்தவர்கள் தொகை பெருகியது. வடமொழிப் புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அந்த நிலையில் தமிழறிவு ஒரு புறமும் வடமொழி அறிவு மற்றொரு புறமும் தனித்து இருப்பதை உணர்ந்த அறிஞர் சிலர் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டார்கள். சம்ஸ்கிருதச் சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் கலந்த ஒரு மொழிநடையைப் படைத்து மணிப்பிரவாளம் என்று பெயரிட்டு எழுதத் தொடங்கினார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 19 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - வடமொழி, தமிழ்