தமிழ் இலக்கிய வரலாறு - முன்னுரை
இந்தியாவில் வடமொழியை விட்டால் மீதியுள்ள மொழிகள் எல்லாவற்றையும்விடத் தமிழே நீண்டதோர் இலக்கிய வரலாறு படைத்த மொழியாகும். பல்வகைப் பண்பாடுகளும் இனிதே இயைந்த கதம்ப மாலையெனச் சிறந்ததொரு நிலையினை இந்த வரலாறு விளக்கினாலும் திராவிட அடிப்படை என்று கூறக்கூடிய கூறுகளின் நறுமணம் இங்கே வீசுவதனை எல்லோரும் துய்த்தறியலாம். சங்க இலக்கியம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதனை உலகம் அறியும். சிலம்போ பலருடைய நெஞ்சைக் கவர்ந்து அள்ளிப் பறித்துள்ளது. திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்ப்பு வடிவிலுங்கூட ஆராய்ச்சியாளர் புகழ்ந்துள்ளார்கள். தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு என்ற இவற்றின் வழியேதான், சைவ சித்தாந்தத்தையும், வைணவத்தையும் விளங்கிக்கொள்ள முடியும். இன்ன பல காரணங்களால், தமிழிலக்கிய வரலாற்றின் இன்றியமையாமை புலனாகிறது.
தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் பணியைத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். மு. வரதராசனாரிடம் சாகித்திய அக்காதெமி ஒப்படைத்தது. இவர் ஆழ்ந்த புலமை பெற்றவர்; தமிழ் இலக்கியத்தின் அடிப்படைக் கருத்துகளை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் எளிதில் விளக்கும் பேராசிரியர் எனப் பேர் பெற்றுள்ளார். படைப்பாற்றல் பெற்ற எழுத்தாளர். தம்முடைய நாவலுக்குச் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றவர். தமிழில் உள்ள முற்கால இடைக்காலத் தற்கால இலக்கியங்களில் ஒரு சேரத் திளைக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். தமக்கே உரிய ஒப்பற்ற முறையில் தமிழ் இலக்கிய வரலாற்றை விளக்கியுள்ளார். மதிப்பதற்கரிய காணிக்கையாக இது விளங்குகிறது.
மதுரை தெ. பொ. மீனாட்சிசுந்தரன்
1-10-1970
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - (keyw)