சத்ய சோதனை - பக்கம் 101
சுய நலமற்றது. பல மாணவர்கள் அவருடைய ஆலோசனையை நாடுவார்கள். உத்தியோகங்களுக்கும் அவரிடம் மனுச் செய்து கொள்ளுவார்கள். அவரும் வேண்டியதைச் செய்வார். நான் அவரைச் சந்தித்துப் பேசியதை என்றுமே மறக்க முடியாது. ஒரு நண்பனாகவே என்னை அவர் வரவேற்று முகமன் கூறினார். எனக்கு இருந்த நம்பிக்கைகளை நான் சொல்லக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். “ஒவ்வொருவரும் பிரோஸ்ஷா மேத்தாவாக இருக்க வேண்டும் என்று நீர் நினைக்கிறீரா? பிரோஸ்ஷாக்களும் பத்ருதூன்களும் அபூர்வமாகவே இருப்பார்கள். சாதாரண வக்கீலாக இருப்பதற்கு அசாதாரண ஆற்றல் எதுவும் அவசியமில்லை என்பதை நிச்சயமாக நம்பும். பொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜீவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும். வழக்குகள் எல்லாமே சிக்கலானவை அல்ல. பொது அறிவை வளர்த்துக்கொள்ளுவதற்கு எந்த அளவு படித்திருக்கிறீர்? அதைச் சொல்லும், பார்ப்போம்” என்றார்.
என்னுடைய சொற்பமான படிப்பை நான் அவருக்குத் தெரிவித்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார் என்பதைக் கண்டேன். ஆனால், அந்த ஏமாற்றம் அவருக்குக் கணத்தில் மாறிவிட்டது. உடனே அவர் முகத்தில் அழகிய புன்னகை மலர்ந்தது. அவர் கூறியதாவது: “உமக்குள்ள கஷ்டத்தை நான் அறிகிறேன். உமது பொது அறிவுப் படிப்பு மிகக் கொஞ்சம். ஒரு வக்கீலுக்கு இன்றியமையாததான உலக ஞானம் உமக்கு இல்லை. இந்தியாவின் சரித்திரத்தைக் கூட நீர் இன்னும் படிக்கவில்லை.மனித சுபாவத்தையும் ஒரு வக்கீல் அறிந்திருக்க வேண்டும். முகத்தைப் பார்த்தே ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்ள அவரால் முடியவேண்டும். ஒவ்வோர் இந்தியரும் இந்திய சரித்திரத்தை அறிந்திருக்க வேண்டும். வக்கீல் தொழிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. என்றாலும், இதை நீர் அறிந்திருப்பது அவசியம். 1857 சிப்பாய்க் கலகத்தைக்குறித்துக் கேபியும் மாலிஸனும் எழுதியிருக்கும் சரித்திரத்தைக்கூட நீர் படித்ததில்லை எனக் காண்கிறேன். அதை உடனே படிப்பதோடு, மனித சுபாவத்தை புரிந்து கொள்ளுவதற்கு மற்றும் இரு புத்தகங்களையும் படியும். லவேட்டரும் ஷெம்மல் பென்னிக்கும் முகபாவங்களைக் குறித்து எழுதியிருக்கும் புத்தகங்களே அவை இரண்டும்.”
மதிப்பிற்குரிய இந் நண்பரிடம் நான் மிகுந்த நன்றியறிதல் உள்ளவனானேன். அவர் முன்னிலையில் எனக்கு இருந்த பயமெல்லாம் பறந்து ஓடிவிட்டதைக் கண்டேன். ஆனால், அவரை விட்டு வந்ததுமே திரும்பக் கவலைப்பட ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குத் திரும்புகையில் அவ்விரு புத்தகங்களைப்பற்றி நான் எண்ணியபோது, ‘ஒருவனுடைய முகத்தைக்கொண்டே
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், அவர், நீர், வேண்டும் - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்