என் சரித்திரம் - பக்கம் - 141
அடிக்கடி பாராட்டிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தவ பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களையும், அவர் நீராடும் பொருட்டு அமைக்கப் பெற்ற நடை வாவிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.
பல தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புஸ்தகங்களையும் விருத்தாசலரெட்டியார் தொகுத்து வைத்திருந்தார். எழுதா அநேக ஏட்டுச் சுவடிகளை ஸித்தமாக வைத்திருப்பார் தம்மிடம் இல்லாத அரிய தமிழ் நூல்கள் கிடைத்தால் அவற்றில் எழுதிக் கொள்வார். ஏட்டுச் சுவடியில் விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். எனக்காகச் சில தமிழ் நூல்களை ஏட்டுச் சுவடியில் எழுதித் தந்திருக்கிறார். சில சமயங்களில் நானும் அவரும் ஒரே சமயத்தில் ஒரு நூலைப் பிரித்துக் கொண்டு தனித்தனியே பிரதி பண்ணுவோம்.
படித்தலும், பாடம் சொல்லுதலும், வந்தவர்களிடம் சம்பாஷணை செய்தலுமின்றி வேறு ஒரு காரியத்திலும் அவர் புத்தியைச் செலுத்துவதில்லை. மிகுதியான பூஸ்திதி உள்ளவர் அவர். அவற்றை அவருடைய பிள்ளைகளும் காரியஸ்தருமே கவனித்து வந்தனர். இவ்வாறு அவர் இருத்தலில் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் மிக்க வருத்தம் இருந்தது. அதனை ரெட்டியார் உணர்ந்தும் சிறிதும் கவலை கொள்ளவில்லை.
நல்லப்ப ரெட்டியார்
நான் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடம் கேட்ட காலத்தில் அவருக்குச் சற்றேறக் குறைய ஐம்பத்தைந்து பிராயத்திற்கு மேல் இருக்கும். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூத்தவராகிய நல்லப்ப ரெட்டியாருக்கு ஸ்ரீதன வருவாய் மிகுதியாக இருந்தது. பெண்மணிகளுக்கு அதிக ஸ்ரீ தனம் வழங்குவது அந்த ஜாதியினருடைய வழக்கம். அதனால் பெண்மணிகள் சுதந்திரமும் விவேகமும் கணவர்களிடத்தில் மரியாதையும் உடையவர்களாக இருப்பார்கள்.
நல்லப்ப ரெட்டியார் நல்ல தியாகி. தமிழிலும் பயிற்சியுள்ளவர். உத்தமமான குண முடையவர். என் தந்தையாரிடம் பேரன்பு பூண்டிருந்தார். அவர் தனியே எங்களுக்குச் செய்து வந்த உதவிகள் பல.
யாப்பருங்கலக் காரிகையைப் பாடம் கேட்டது
நல்ல வேளையில் நான் காரிகை படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கணத்தைப் பற்றிச் சிறிதும் அறியாத நிலையில் இருந்தேன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 139 | 140 | 141 | 142 | 143 | ... | 761 | 762 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 141 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - அவர், ஏட்டுச், நல்லப்ப, ரெட்டியார், பாடம், நான், தமிழ்