முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » பட்டினத்தார் வரலாறு
அர்த்தமுள்ள இந்துமதம் - பட்டினத்தார் வரலாறு
காளஹஸ்தி – காளத்திநாதன் கண்கொள்ளாக் காட்சியில் வீற்றிருக்கும் சிவஸ்தலம்.
இன்றைக்கு ஆயிரம் வயதைக் கடந்து விட்ட அந்தத் திருக்கோயிலைப் பாடிப் புகழாத ஞானிகளே இல்லை!
மாலவன் குன்றத்துக்கு அருகிலேயே காளத்திநாதன் தன் ஆலய பீடத்தை அமைத்துக் கொண்டுள்ளான்.
சேர, சோழ, பாண்டிய பல்லவ நாடுகளில் இருந்து வரும் சைவர்களும், வைணவர்களும், ஓரிடத்தில் சந்தித்த பின்புதான் வைணவர்கள் திருப்பதிக்கும், சைவர்கள் காளஹஸ்திக்கும் செல்ல வேண்டி இருக்கும்.
புரவியும், தேரும், பல்லக்கும், மாட்டு வண்டிகளும் மட்டுமே இருந்த அந்தக் காலத்தில், குமரி முனையில் உள்ள பக்தன் கூட காளத்திநாதனையும், கார்மேக வண்ணனையும் தரிசிக்க ஓடோடி வருவது வழக்கமாயிருந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்…
காளத்திநாதர் சந்நிதி களைகட்டிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான புரவிகளும், ரதங்களும் கோயிலைச் சுற்றியுள்ள சோலைகளில் காணப்பட்டன. கச்சையணிந்த இளம் மங்கையரும், கட்டிய சேலையாலேயே மார்பை மூடிக் கொண்டிருக்கும் மாதரரும், கையது கொண்டு மெய்யது பொத்தி ஆண்டிகளும் கூட்டம் கூட்டமாகக் காணப்பட்டார்கள்.
ஆலயத்தின் உள்ளேயிருந்து கம்பீரமான ஒரு குரல் வெளிவந்தது. இனிமையான சாரீரத்தில் அது சில விருத்தப் பாக்களைப் பாடிற்று.
`பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி
முத்தும் பவளமும் பூண்டு ஓடிஆடி முடிந்த பின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம் பிணங்கள்
கத்துங் கணக்கென்ன? காண்கயி லாபுரிக் காளத்தியே!
பொன்னால் பிரயோசனம் பொன்படைத்தார்க்குண்டு; பொன்படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு: அத்தன்மைபோல்
உன்னால் பிரயோசனம் வேணதெல்லாம்உண்டு உனைப்பணியும்
என்னால் பிரயோசனம் ஏதுண்டும் காளத்தி ஈச்சுரனே!
வாளால் மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்த
நாளாறில் கண் இடத்து அப்பவல் லேன்அல்லன்; நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?
முப்போது அன்னம் புசிக்கவும் தூங்கவும் மோகத்தினால்
செப்போது இளமுலை யாருடன் சேரவும் சீவன்விடும்
அப்போது கண்கலக்கப்படவும் வைத்தாய், ஐயனே
எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி ஈச்சுரனே!
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரயோசனம், லேன்அல்லன் - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்