முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » அக்பர் – பீர்பால் கதைகள் » மகா கஞ்சனிடம் பரிசு பெற்ற புலவர்
அக்பர் – பீர்பால் கதைகள் - மகா கஞ்சனிடம் பரிசு பெற்ற புலவர்
டில்லி நகரின் முக்கியமான ஒரு வீதியில் அகர்லால் என்னும் பெரிய பணக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் கஞ்சனுக்குக் கஞ்சன். உயிரே போனாலும் கூட பிறருக்கு ஒரு சல்லி காசுகூடக் கொடுக்க மாட்டான்.
ஒரு வேளை சமையல் செய்து மூன்று வேளைக்கு வைத்துக் கொள்வான். எப்பொழுதும் ஒரே உடையைத் தான் உடுத்துவான். அழுக்குப் போக சோப்புப் போட்டுத் துவைத்தால் துணி கிழிந்துவிடும் என்று துவைக்காமலேயே உடுத்திக் கொள்வான்.
மாளிகைப் போன்ற வீட்டைப் பராமரிக்க வேலையாட்கள் வைத்தால் பணம் போய் விடுமோ என நினைத்து எல்லா அறைகளையும் பூட்டிவிட்டு ஒரு சிறிய அறையில் மட்டும் வாழ்வான்.
ஒருநாள் – கன்னட தேசத்திலிருந்து விஷ்ணுவர்த்தர் என்னும் புகழ் பெற்ற புலவர் டில்லிக்கு வந்திருந்தவர் அந்தக் கஞ்சன் வீட்டு வீதியின் வழியாகச் செல்ல நேர்ந்தது.
அந்த தெருவில் கஞ்சனின் வீடு பெரியமாளிகையாக இருந்தமையால் இந்த வீட்டுச் செல்வந்தரைப் புகழ்ந்து கவி பாடினால் கணிசமானப் பரிசு கிடைக்கும் என எண்ணி கஞ்சன் வீட்டில் நுழைந்தார் புலவர் விஷ்ணுவர்த்தனன்.
தன்னை அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு கஞ்சனின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவனைப் புகழ்ந்து பாடல்கள் பாடி வாழ்த்தினார்.
புலவர் விஷ்ணுவர்த்தரின் பாடலின் மனம் மகிழ்ச்சி அடைந்தான் அகர்லால். ஆனால் அவருக்கு எந்தப் பரிசும் அளிக்கவில்லை.
புலவருக்கு ஒரு காசுகூட கொடுக்காமல் எப்படி வெளியே அனுப்புவது என்றெண்ணிய கஞ்சன்.
புலவரே தங்களின் பாடல்களினால் உள்ளம் மகிழ்ச்சியடைந்தமைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு ஏதாவது பரிசு அளிக்க வேண்டியது எனது கடமை. ஆகையினால் நாளைக்கு வந்தால் என்னால் இயன்ற பரிசை தருகிறேன் என்றான் கஞ்சன் அகர்லால்.
கஞ்சனின் சொற்படியே சென்று மறுநாள் வந்தார் புலவர் விஷ்ணுவர்த்தர்.கஞ்சன் புலவர் வந்ததைக் கண்டும் காணாமல் அங்கு வந்திருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான். பல மணி நேரம் கடந்தும் கவனியாத்து போல இருந்தான்.
சிறிதும் மனம் சஞ்சலம் இல்லாமல் கஞ்சனிடம் சென்று, ஐயா, தங்களின் சொல்படி வந்திருக்கிறேன். மறந்து விட்டீர்களா? என்று நினைவுப்படுத்தினார் புலவர் விஷ்ணுவர்த்தர்.
கஞ்சன் மறந்து விட்டவன் போன்று, ஓ…. தாங்கள் புலவரா? நேற்றைய விஷயத்தை மறந்து விட்டேன். இப்போது ஒருவரிடம் முக்கியமான விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போது எதுவும் செய்ய இயலாது. ஆகையினால் நாளைக்கு வாருங்கள் ஏதாவது பரிசு தருகிறேன். என்றான் அகர்லால்.
மனம் தளராது மறுநாளும் கஞ்சன் வீட்டிற்குச் சென்றார் புலவர்.புலவரைக் கண்டதும் கஞ்சனுக்கு கோபம் வந்து விட்டது. என்னைப் புகழ்ந்து பாடியதற்கு ஏதோ பரிசு தரலாம் என்று சொல்லி விட்டேன் என்பதற்காக தினசரி வந்து என்னைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? தருகிறேன் என்று சொன்னால் கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதாவது இருக்கிறதா? பரிசு ஒன்றும் தர முடியாது. இனி வந்து தொந்தரவு கொடுக்காதீர்கள் என்றான் கஞ்சன்.
ஒன்றும் பேசாமல் மன சஞ்சலத்துடன் புலவர் திரும்பி விட்டார். அடுத்த நாள் – பீர்பாலைச் சந்திக்கச் சென்றிருந்தார். ஏற்கனவே புலவர் விஷ்ணுவர்த்தரின் புகழைக் கேள்விப் பட்டிருந்தமையால் அவரை அழைத்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார் பீர்பால்.
பேச்சின் இடையே பீர்பாலிடம் கஞ்சன் அகர்லாலின் செய்கையைக் கூறி மனவருந்தினார் புலவர்.
தங்களை இழிவு படுத்தியவனை நான் சரியான பாடம் புகட்டுகிறேன். தயவு செய்து தாங்கள் அவனது இல்லத்திற்குச் சென்று.
இன்று இரவு பீர்பால் அவர்கள் வீட்டில் விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். தங்களை முக்கிய விருந்தினராக வரவேற்று அழைப்பதாகக் கூறுங்கள் என்றார்.
மறுநாள் புலவர் கஞ்சன் வீட்டிற்குச் சென்று பீர்பால் விருந்திற்கு அழைத்தச் செய்தியைக் கூறினார்.
பீர்பாலின் அழைப்பைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான். தன்னை மதித்து அழைப்பதினால் நமக்கு ஏதாவது சிறப்பு செய்து பெருமைப்படுத்துவார்கள் என்று நினைத்து விருந்திற்கு வருவதாகப் புலவரிடம் கூறினான் கஞ்சன்.
அன்று இரவு – கஞ்சன் விருந்திற்கு வருவதற்கு முன்னதாகவே பீர்பாலும் புலவரும் சாப்பிட்டுவிட்டு கஞ்சனின் வரவுக்காகக் காத்திருந்தனர்.
கஞ்சன் குறிப்பிட்ட நேரத்தில் பீர்பாலின் வீட்டிற்கு வந்தான். பீர்பாலும், புலவரும் அவனைப் பொருட்படுத்தாமல் சுவையாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
தன்னை வரச் சொல்லிவிட்டு தன்னைப் பொருட்படுத்தாமல் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பொறுமையிழந்தான் கஞ்சன் அகர்லால்.
பீர்பாலின் அருகில் சென்று, பீர்பால் அவர்களே, இன்று என்னை விருந்திற்கு அழைத்து விட்டு, என்னைப் பார்த்ததும் வரவேற்கவில்லை. அத்துடன் இங்கே விருந்து நடப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை, என்றான் கோபத்துடன் கஞ்சன்.
ஓ… நீங்களா? உங்களை புலவர் விருந்துக்கு வரும்படி அழைத்தார் அல்லவா? இதனை எல்லாம் அவரும் மறந்துவிட்டார். நானும் மறந்து விட்டேன். தயவு செய்து மன்னியுங்கள் என்று கூறிவிட்டு, அவன் இருப்பதையும் மறந்து விட்டவர்கள் போல் மீண்டும் பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு பீர்பாலின் வீட்டில் விருந்து என்பதினால் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் பசியோடு இருந்தான் கஞ்சன்.
மீண்டும் பீர்பாலிடம், நீங்கள் இருவரும் பேசிக் கொண்டேயிருந்தால் எப்படி? எப்போது விருந்துண்ண ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்? என்றான்.
இது என்ன பெரிய தொல்லையாகப் போய்விட்டதே, ஏதோ பேச்சுக்கு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்தால் அதை நம்பி புறப்பட்டு வந்து விடுவதா? விருந்துண்ண அழைத்தால் விருந்து வைக்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா? விவரம் தெரியாத ஆளாக இருக்கிறாயே, என்று பீர்பால் கடுமையுடன் கூறினார்.
எதற்காக நம்மை இப்படி ஏமாற்றினார்கள் என்று யோசனை செய்த கஞ்சனுக்கு அப்போதுதான் புலப்பட்டது. தான் புலவருக்குப் பரிசு தருவதாகக் கூறி, பல தடவை வரச்செய்து. கடுமையாகப் பேசி ஏமாற்றி அவமானப்படுத்தியதற்கு பீர்பால் தமக்குப் பாடம் புகட்டியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டான்.
உடனே கஞ்சன் அகர்லால், மதிப்பிற்குரிய பீர்பால் அவர்களே, புலவருக்கு செய்த தவறை மன்னியுங்கள். பெரும் செல்லவம் இருந்தும் பண்புள்ளம் இல்லாமல் இருப்பது பட்ட மரத்திற்குச் சமம் என்பதை உணந்து விட்டேன்.
புலவர் அவர்களே, தாங்களும் என்னை மன்னியுங்கள். நான் சொல்லியபடி எனது பரிசாக இந்த தங்க மோதிரத்தை அளிக்கிறேன். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தைக் கழற்றிப் புலவருக்கு அளித்தான் அகர்லால்.
பீர்பால் அவர்கள் கஞ்சனை நோக்கி ஐயா, இந்தக் குணம் பாராட்டத்தக்கது. இது போன்று நல்லவர்களுக்கு பரிசளித்து மேலும் சிறப்புற்று வாழுங்கள் என்றார்.
பின்னர் பீர்பால் கூறிய வண்ணம் – மோதிரம் பரிசளித்த அகர்லாலுக்கு விருந்தளித்து மனமகிழ்வுடன் அனுப்பி வைத்தார். அகர்லாலும் மனமகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகா கஞ்சனிடம் பரிசு பெற்ற புலவர் - அக்பர் – பீர்பால் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - கஞ்சன், புலவர், பீர்பால், அகர்லால், பேசிக், பரிசு, விருந்திற்கு, ஏதாவது, என்றான், மறந்து, சென்று, வந்து, விட்டேன், மனம், செய்து, பீர்பாலின், கஞ்சனின், மன்னியுங்கள், விருந்து, அவர்களே, இரவு, தருகிறேன், விஷ்ணுவர்த்தர், புகழ்ந்து, வீட்டில், தன்னை, புலவருக்கு