முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » அக்பர் – பீர்பால் கதைகள் » அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அக்பர் – பீர்பால் கதைகள் - அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அக்பரின் அரசவையில் இருந்த பீர்பாலின் புகழ் இந்திய நாடு தவிர அயல்நாடுகளான பாரசீக நாட்டிலும் பரவியிருந்தது. ஆதலின் பாரசீக மன்னர் பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி மன்னர் அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.
மன்னர் அக்பரும் சில பரிசு பொருட்களுடன் பீர்பாலை பாரசீக நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பரிசு பொருட்களுடன் பாரசீகம் சென்ற பீர்பாலை ராஜமரியாதையோடு வரவேற்பளித்து விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர் பாரசீக அதிகாரிகள்.பீர்பாலின் அறிவாற்றலை சோதிக்க விருப்பம் கொண்ட பாரசீக மன்னர். பீர்பாலும் இதுவரையில் பாரசீக மன்னரை நேரில் பார்த்ததும் இல்லை. ஆதலின் அரசவையில் அரசரை சந்திக்க ஆவலுடன் காத்திருந்தார் பீர்பால்.
மறுநாள் – பீர்பாலை மிக மரியாதையுடன் அரசவைக்கு அழைத்துச் சென்றார் அதிகாரிகள்.
அரசவையில் அரசர் அமர்வதற்காகப் போடப்பட்டுள்ள ஆசனங்கள் ஐந்து போடப்பட்டு, ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர்கள் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.அரசவைக்குச் சென்ற பீர்பாலுக்கு ஆச்சர்யமாகி விட்டது. அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்துலிம் அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இந்த ஐவர்களில் எவர் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார்.
பின்னர் ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆனசத்தின் அருகே சென்று மேன்மை மிகு பேரரசே! தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள்.
பாரசீக மன்னருக்கு பெரும் வியப்பாகி விட்டது. தான் தான் மன்னர் என்பதை எப்படி உடனடியாக பீர்பால் அறிந்து கொண்டார் என்று பீர்பாலைப் பார்த்து, எப்படி நான்தான் மன்னர் என்பதை அறிந்து கொண்டீர்கள்? என வினவினார்.
மேன்மைமிகு மன்னர் பெருமானே! இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. அது மட்டுமின்றி அவர்களின் பார்வையில் ஒருவித மிரட்சி இருப்பதைக் கண்டேன்.
ஆனால் தாங்கள் மட்டுமே அரசர்களுக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டு வணங்கினேன். அதுமட்டுமின்றி என்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய செயல்கள் முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார் பீர்பால் அவர்கள்.
பீர்பால் கூறியதைக் கேட்ட அரசர், அவரது பேராற்றலைப் பாராட்டி பரிசுகள் வழங்கி, சில நாட்கள் அரச விருந்தினராக இருக்கச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார் பாரசீக மன்னர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - அக்பர் – பீர்பால் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - மன்னர், பாரசீக, அரசர், பீர்பால், பீர்பாலை, அறிந்து, என்பதை, தான், ஐந்து, அரசவையில், அனுப்பி, அமர்ந்திருந்த